காரை கமிஷ்னர் ஆபிஸ் வெளியே நிறுத்திவிட்டு வேகமாய் வந்து அவன் பக்க கதவை திறந்து விட்டார் நடேசன்.
பேன்ட் பாக்கெட்டில் இருந்து இன்னுமொரு பொட்டலத்தை எடுத்து வாயில் சரித்துக்கொண்டே அவன் அந்த கட்டடத்தில் கண்ணை வைக்க, நடேசன் விவரமாய் இம்முறை மூச்சை ‘தம்’ கட்டி பிடித்துக்கொண்டார்.
‘வரவேற்ப்பா?’ என விழித்தவர், “எல்லாரும் உங்களுக்காக தான் உள்ள வெயிட் பண்ணிட்டு இருக்காங்க சார்!” என்றிட,
“அட என்னய்யா நீ… ஒரு கரகாட்டம், ஒயிலாட்டம்… அட்லீஸ்ட் தப்பாட்டமாவது இருக்கும்ன்னு நினைச்சா… இப்படி இருக்கீங்களே! இங்க நான் எப்படி இனிமே தங்குவேன்!?” சின்ன குழந்தை புது பள்ளியில் சேரும்போது சிணுங்குவதை போல அவன் சொல்ல, நடேசனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அவரை அவனிடம் இருந்து காப்பாற்ற ஒருவர் கூட அங்கே இல்லை. எப்போதும் வெளியே நின்று வெட்டிக்கதை பேசும் அவரது தோஸ்துகள் கூட அப்போது இல்லாமல் போக,
‘எங்கேயடா தொலைந்தீர்கள்? லகுட பாண்டிகளா?’ என கத்த வேண்டும் போல இருந்தது நடேசனுக்கு.
“ஏன்யா ஒரு மாலை கூடவா போட மாட்டீங்க?” அவன் அப்போதும் அதிலேயே நிற்க, ‘இவர் என்ன சினிமா போலிஸ் மாறி நினைச்சுக்கிட்டாரா?’ என குழம்பிய நடேசன்,
“சார், இங்க அந்த மாதிரி இதுவர எந்த நடைமுறையும் இருந்ததில்லை!” என்று சொல்ல, பதிலுக்கு அவன் பேசும் முன்னே, தடதடவென ஐந்து ஜோடி ஷூ கால்கள் அவனிடம் விரைந்து வந்து விறைப்புடன் சல்யூட் வைத்தது.
“வெல்கம் சார்!” என்றான் அதில் ஒருவன்.
ஐவரையும் பார்த்தவன், “லேடீஸ் டிபார்ட்மென்ட் எங்க? ஏன் அவங்க சார்புல என்னை அழைக்க யாரும் வரல?” என்றான்.
சில மணி நேரமாய் அவனிடம் சிக்கிக்கொண்டு நடேசன் முழித்த முழியை, இப்போது வந்த புது முகங்கள் தங்களுக்கு சொந்தமாக்கிகொண்டது.
“என்னய்யா எந்த கேள்வி கேட்டாலும் ‘பெக்க பெக்கன்னு’ முழிக்குறீங்க?” என்றவனோ,
“என்ன நடேசன், அப்போ நான் உள்ள போட்டுமா?” என்றான் அவரிடம் திரும்பி.
வெடவெடத்து போனார் நடேசன்!
“சொல்லுங்க நடேசன்… நீங்க சொன்னா தான் நான் போவேன்!”
அவருக்கோ, ‘இதென்ன என்னிடம் கேட்டுக்கொண்டு நிற்கிறார்?’ என்ற பதற்றம் வர, அந்த ஐவரும் இவரை குறுகுறுவென பார்ப்பதாய் வேறு தோன்ற,
“சார்… என்கிட்ட போய்… என்ன சார் நீங்க?” என்றார் நடேசன்.
“உன்கிட்ட கேட்காம வேற யார்கிட்ட கேட்பேன் சொல்லு? நீதானேய்யா இங்க இருக்குறதுலையே மரியாதை தெரிஞ்ச ஆளு!” என்று அவர் தோளில் ‘சொத்’தென தட்ட,
அந்த அடியில் ஒரு ஆட்டம் ஆடி நின்ற நடேசன், “ஐயா, நேரமாச்சு! உள்ளே போய் கையெழுத்து போடுங்க!” என்றார் பதவிசாய்.
“ரைட்டு! நீ சொல்லிட்டல்ல… நான் போறேன்!” என்றவன்,
நடேசனை முறைத்துக்கொண்டு நின்றிருந்த ஐவரிடமும், “பின்னால வந்து தொலைங்க!” என்றுவிட்டு உள்ளே சென்றான். அவன் சொன்னது போல அவர்கள் பின்னால் போக, நடேசனுக்கு இப்போது தான் நிம்மதி மூச்சு வந்தது.
ஆசுவாசமாய் காரின் மீது சாய்ந்து நின்றவரிடம் வந்த ஒருவர், “ஏய் நடேசா! யோகக்காரன்டே நீ! முதல் நாளே கமிஷ்னரை கைக்குள்ள போட ஆரம்பிச்சுட்ட போலயே!” என்று சிரித்ததும்,
“யோவ்… போயா பேசாம!” என்றார் அயர்ந்துப்போய்!
“அதானே! பெரிய இடத்துக்கு போகப்போற நீங்க இனியும் எங்கக்கிட்ட எல்லாம் பேசுவீங்களா? உங்களுக்கு எல்லாம் இனி கிராக்கி’யா தான் இருக்கும்” தன்போக்கில் அவர் பேசிக்கொண்டு செல்ல,
‘ஆண்டவா! என்னை மட்டும் காப்பாத்துப்பா!’ என நடேசனின் மனது கடவுளிடம் அவசர அவசரமாய் பெட்டிஷன் போட்டது.
உள்ளே சென்றவன், தான் பதவியில் சேர்ந்ததற்கு அத்தாட்சியாய் ஆவணங்களில் ‘ரகுநந்தபூபதி’ என கையொப்பமிட்டான்.
அவனது அறையை ஒருவன் காட்ட, வேகமாய் சென்றவன், ஒரு நொடி நின்று, “எங்க என் நேம் போர்ட் இல்ல?” என்றான் உடன் வந்தவனிடம்.
“சார், ஆர்டர் குடுத்துருக்கோம்! ரெண்டு நாள்ல வந்துடும்!” என்று சொல்ல,
“ஓ! அப்போ போர்ட் வர வரைக்கும் நான் மொட்டைப்பயலா உட்காந்துருக்கணும்! அப்படிதானே?” என்றான்.
அவன் என்னவோ பகடி போல தான் சொல்கிறான்! ஆனால், எதிரே நின்று கேட்பவருக்கு தான் ‘திக்கு, திக்கு’ என்றிருக்கிறது.
உள்ளே நுழைந்து தன் சுழல் இருக்கையில் அமர்ந்தவன் அறையை முழுவதுமாய் ஒருமுறை நோட்டமிட்டான்.
என்ன என்ன இருக்கிறது என்பதை கவனிக்கும் சாதாரண பார்வை தான் அது! ஆனாலும், அந்த ஷூ கால்’காரன்களுக்கு ‘என்ன சொல்ல போகிறானோ!?’ என்ற பதைப்பு!
ஒருமுறைக்கு இருமுறை பார்த்து முடித்தவன், எதிரே இருந்தவர்களிடம், “இங்க எந்த ஹோட்டல்’ல ‘பேம்பூ பிரியாணி’ நல்லா இருக்கும்?” என்று வினவ, ஐவரும் ஒரு முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்.
“யோவ்! தெரியாம தான் கேட்குறேன்! ஒரு பிரியாணி எங்க நல்லா கிடைக்கும்ன்னு கூட தெரியாத நீங்க, திருடன், கொலைகாரனை எல்லாம் எப்படிய்யா விசாரிச்சு கண்டுப்பிடிப்பீங்க?” என்றான் அந்த ரகுநந்தபூபதி!
‘பிரியாணிக்கும் கொலைகாரனுக்கும் என்ன சம்பந்தம்!?’ என்ற கேள்வியே அந்த ஐவரும் மூளையிலும் உதிக்க, வாய் மட்டும் இறுக்கமாய் மூடி இருந்தது.
“இப்படி வயசு பொண்ணை பாக்குற மாறி வெறிக்க வெறிக்க பார்த்துட்டே நிக்காதீங்கடா! வெறியாகுது! போய் எவன்க்கிட்டயாவது விசாரிச்சு ரெண்டு பிரியாணி வாங்கிட்டு வாங்க போங்க!” என்று சொல்ல,
ஐவரும் ஏதோ தயங்குவதை போல தெரிந்ததும், “சிட்டி கமிஷ்னர் முதல் முதல்ல உங்களுக்கு ஒரு டாஸ்க் குடுத்துருக்கேன்! உடனே துள்ளிகுதிச்சு போய் அதை செஞ்சுட்டு வந்து நல்ல பேர் எடுப்போம்ன்னு இல்ல… இப்படி மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்களே! என்ன பண்ணலாம் உங்கள?” என்று தீவிரமாய் அவன் கேட்டதில், அவர்கள் திருதிருவென முழிக்க,
“எனக்கு முதல்ல யாரு டேஸ்டியான பேம்பூ பிரியாணி வாங்கி தரீங்களோ, அவங்க தான் என்னோட பர்ஸ்ட் கேஸ்’ல ‘அஸ்சிஸ்ட்’ பண்ணப்போறீங்க! பாப்போம் யாரு அதுன்னு! யுவர் டைம் ஸ்டார்ட்ஸ்….” வாட்சை பார்த்து,
“நவ்!!” என ரகுநந்தன் சொன்னதும்,
‘இதோ போறோம் சார்!” என்றவர்கள் வேகவேகமாய் வெளியே ஓட, எதிரே வந்த ஷைலஜா,
“எங்க போறீங்க எல்லாரும்!?” என்றாள் அவர்கள் வேகத்தை கண்டு!
“பிரியாணி வாங்க போறோம் மேடம்!”
“வாட்?” திகைத்தாள்.
“கமிஷ்னர் ஆர்டர்!” என்றவர்கள் அதற்குமேல் அங்கே நிற்கவில்லை.
“வாட் தெ ஹெக்?” நம்பமுடியாத திகைப்பில் நின்றவள், புது கமிஷ்னருக்கு தன்னை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளே நுழைந்தாள்.
“எக்ஸ்யூஸ் மீ சார்!”
“அட பார்ரா! அதுக்குள்ள பிரியாணி வந்துடுச்சா?” என திரும்பியவன், வாயிலில் ஒரு பெண் நிற்ப்பதை கண்டு, “வாவ்! நியூ என்ட்ரி’யா? ஆனா, சோ சாரி! அந்த பிரியாணி ஆஃபர் முடிஞ்சு போச்சு! நீங்க வேணுனா புதுசா ‘ஷவர்மா’ ஆஃபர்’ல பார்ட்டிசிபேட் பண்ணுங்களேன்!” என்றவன்,
“உங்களுக்கு ஹாப்’ன் ஆர் டைம்! நல்ல பார்பெக்யூ ஷவர்மா வாங்கிட்டு ஓடி வாங்க, போங்க போங்க!!” என்றான்.
உண்மையில் அதீத எரிச்சல் ஆனாள் அவள்.
இதுவரை அவனை பற்றிய செவிவழி செய்தியாக பலவற்றை கேட்டு அவன் மீது ஒரு அதீத மரியாதை இருந்தது அவளுக்கு.
முன்னால் கமிஷ்னர் சொன்னது போல அவன் ஒருகாலத்தில் அவளது ‘ரோல் மாடல்’! அவனை பார்த்து தான் தானும் அப்படி படித்து ரேன்க் எடுக்க வேண்டும் என்று கூட நினைத்திருந்தாள். அதை செய்தும் இருந்தாள்.
ஆனால், இப்போது அவன் நடந்துக்கொள்ளும் முறைக்கண்டு, ‘சல்யூட்’ வைக்கக்கூட கை வரவில்லை அவளுக்கு.
“அய்யய்ய! இதென்ன சென்னை போலிஸ்’க்கு வந்துருக்குற புது வியாதியா? நான் எப்போ பேசுனாலும் இப்படி ‘ஸ்டன்’ ஆகி நின்னுடுறீங்க?” என்றான் ரகுநந்தன்.
மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன் செய்தவள், ஒரு சல்யூட் வைத்து, “அசிஸ்டன்ட் கமிஷ்னர் ஷைலஜா ரிப்போர்டிங் சார்!” என்றாள்.
அப்போதும் அவள் அப்படியே நிற்க, “ஓ! உனக்கு சிரிப்பு வராத வியாதி வேற இருக்கா? ம்ச்! பாவமே! சரி விடு சரி பண்ணிடலாம்!” என்றவன்,
“அப்பறம்… நீ மட்டும் தான் லேடி போலீசா?” என்றான்.
ஷைலஜாவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை.
ஒரு போலிஸ்… அதிலும் மாநகர கமிஷ்னர்… இப்படியெல்லாம் பேசுவானா? அந்த காக்கி உடை மட்டும் இல்லையென்றால்….!
“உப்ப்ப்!” மூச்சை இழுத்து விட்டாள்.
அதைக்கண்டவன், “வீசிங்’ ப்ரோப்ளம் வேற இருக்கா?” என்றிட, அவள் முகத்திலேயே தன் கடுப்பை கொட்டியதும்,
“இல்ல… அடிக்கடி இப்படி இழுத்துக்குறியேன்னு கேட்டேன்!” என்றான் அவளை போலவே செய்துக்காட்டி.
ஷைலஜா’விற்கு அதற்குமேல் அங்கே நிற்கவே பிடிக்கவில்லை.
மீறி நின்றால், கமிஷ்னர் என்பதை கூட மறந்து ஏதேனும் திட்டிவிடுவோமோ என்று அஞ்சி, “சார், ஐ’யம் லீவிங்!” என்று சொல்ல,
“அதென்ன கைல?” என்று அவளை நிறுத்தினான் அவன்.
இத்தனை நாளாய் அவளிடம் ஒப்புவித்து அதை முடிக்க முடியாமல் அவள் திணறும் வழக்கு! அதைக்கொண்டு தானே அவன் இங்கே வந்திருப்பதே!
எப்படியும் வந்ததும் முதல் வேலையாய் அதைப்பற்றி தான் பேசுவேன் என்று எண்ணி அவள் அவனுக்கு முன்னே முந்திக்கொண்டு ‘ஃபைல்’லோடு வர, அவன் எங்கே அதெல்லாம் பேசினான்?!
“இது நீங்க ஹேண்டில் பண்ணப்போற கேஸ்!” என்று அவன் முன்னிருந்த மேசையில் வைத்தாள் கோப்புகளை.
“ஓ!” என்றவன், “இதுக்கு முன்னாடி யார் பார்த்தது?” என்றான்.
லேசாக உள்ளே போன குரலில், “நான் தான்!” என்றவள் சொல்ல,
“ஆஹான்! ஓகே தென்… எக்ஸ்ப்ளைன் மீ!” என்றுவிட்டான்.
வழக்கை ஆதி முதல் அந்தம் வரை சொல்வதில் அவளுக்கு எந்தவித மறுப்புமில்லை. ஆனால், ஏனோ அவனிடம் சொல்ல தோன்றவில்லை.
கையில் ஒருமுறை அதை தூக்கி மேலோட்டமாய் பார்த்தவன், “ம்ச்! எனக்கு எழுத படிக்கவே தெரியாது! இது வேற குட்டி தலைகாணி மாறி இருக்கு! தூங்கிடுவேனே!” என்றான் பாவமாய்.
அவள் பொறுமையும் தன் எல்லைக்கோட்டை நெருங்கிக்கொண்டிருந்தது.
உயர் அதிகாரி கேட்கையில் மறுக்க முடியாது என்பதால்,
“தமிழ்நாடு நிதியமைச்சர் பாஸ்கரன் மகனோட கொலை கேஸ்! சரியா மூணு மாசம் முன்ன சென்னைக்கு அவுட்டர்’ல என்.எச் பக்கமா ஒரு கார் ‘க்ரேஷ்’ ஆகி கிடைந்தது. ஒரு ஆண், பெண்’ன்னு இரண்டு உடல்கள் இருந்ததா அந்த நேரம் அங்க போன ஆபிசர் ரிபோர்ட் பண்ணாரு!
விசாரிக்கும்போது தான் அது அமைச்சர் மகன்’ன்னு தெரிய வந்துச்சு! அவரை யார் கொன்னாங்க? எதுக்கு கொன்னாங்கன்னு தான் கண்டுப்பிடிக்க முடியல!” என்றாள்.
அவள் சொன்னதை உள்வாங்கியவன், “வாட் அபௌட் தட் கேர்ள்?” என்றான்.
“ஷி இஸ் அலைவ்!” என்றதும், அவன் கண்களில் ஒரு வினோத ஒளி!
“ஆனால், கோமா ஸ்டேஜ்! எப்போ ரெக்கவர் ஆவாங்கன்னு சொல்ல முடியாது!” என்றாள் ஷைலஜா.
“வேர் இஸ் ஷீ?”
“அமைச்சரோட ப்ரண்ட் ஹாஸ்பிட்டல்ல யாருக்கும் தெரியாம ட்ரீட்மென்ட் போய்க்கிட்டு இருக்கு! அவ உயிரோட இருக்கிறது தெரிஞ்சா அவளையும் கொல்ல வாய்ப்பு இருக்குன்னு மீடியா’ல அவ இறந்துட்டான்னு சொல்லிட்டோம்!
ஷி இஸ் தி ஒன்லி ஐ’விட்னஸ் அப் திஸ் கேஸ்!”
ஷைலஜா சொல்லிமுடிக்க அவன் பேப்பர் வெயிட் உருண்டையை தீவிரமாய் உருட்டினான்.
ஷைலஜாவிற்கு கொஞ்சமும் நம்பிக்கை இல்லை அவன்மீது.
‘இவன் இந்த கேஸை முடிச்சுடுவான்னு நம்பி கேரளா’ல இருந்தவனை இங்க இறக்கிவிட்டுருக்காங்க பாரு! ஹும்! ஒரு குண்டூசியை கூட கண்டுப்பிடிக்க மாட்டான்!’