அவளோ, “ஓகே சார்!” என்று சிரிக்க, இதைக்கண்ட ஷைலஜா பேந்த பேந்த விழித்தாள்.
‘பத்து நிமிஷம் தானே டா நான் உள்ள போனேன்! அதுக்கே இப்படியா?’ என்று தோன்ற வைத்தது.
அது வேறு அவளுக்கு கடுப்பை கொடுக்க, “போலாமா?” என்றாள் பல்லைக்கடித்து.
“நான் எந்த பொண்ணுக்கிட்ட பேசுனாலும் உங்க மேடம்’க்கு பிடிக்காது!” என்று போறப்போக்கில் சொல்லிவிட்டு போனான் அவன்.
‘தலைவலி!’ என்று முனகியவள் அவன் பின்னே போக, இருவரையும் பார்த்த துர்காவிற்கு ‘சீக்கிரமே நல்லது நடக்கணும்!’ என்று தோன்றியது.
***
ரகுநந்தபூபதியின் அறையில் நின்றிருந்தான் விக்கி.
“நைட் ரெண்டு மணிக்கு மேல ஒரே ஒருத்தர் மட்டும் தான் அங்க நின்னுருக்காங்க சார்! ஷைலஜா மேடம் விசாரிச்சுட்டு இருக்காங்க!” என்றான்.
பூபதி தலையாட்ட அங்கிருந்து சென்றான் அவன்.
சற்று நேரத்திற்க்கெல்லாம் மீண்டும் அவன் முன்னே வந்து நின்ற விக்கி, “சார், அந்தம்மா ஒன்னுமே பாக்கலைன்னு சொல்லுது! திருப்பி அனுப்பிடலாம்ன்னு மேடம் சொல்றாங்க!” என்று சொல்ல, லேப்டாப்பை ‘டப்’பென மூடியவன், சேரை உந்தித்தள்ளிவிட்டு எழுந்த வேகத்திலேயே அவன் கோவம் புரிந்தது.
விறுவிறுவென விசாரணை அறை நோக்கி சென்றவன் பின்னே பாய்ச்சலாய் நடந்தான் விக்கி.
ரெக்கார்டிங் அறையில் இருந்த ஆட்களிடம் சென்றவன், “என்ன ஆச்சு?” என்று கேட்க, திரையில் ஷைலஜா ஒரு பெண்மணியுடன் பேசுவது தெரிந்தது.
அங்கிருந்தவன், “மேடம் விசாரிக்குறாங்க!” என்றான் திடீரென பூபதியை கண்ட பயத்துடன்.
“நவுரு!” என்றவன், அங்கிருந்த மைக்கில், “ஷைலஜா, கம் அவுட்!” என்று சொல்ல, ஸ்பீக்கரை எரிச்சலுடன் பார்த்தவள், எதிரே இருந்த பெண்ணை முறைத்துவிட்டு வெளியே வந்தாள்.
பூபதி அங்கிருந்த ஆட்களை வெளியே போக சொல்லி அனுப்பினான்.
ரெக்கார்டிங் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக்கொண்டிருந்தவன் முன்னே வந்த ஷைலஜா, அமைதியாய் நிற்க, அவளை கண்டதுமே,
“என்ன நினச்சுட்டு இருக்க நீ? இந்த கேஸ் நான் முடிக்கவே கூடாதுன்னு நினைக்குறியோ?” என்றான்.
“நான் ஏன் அப்படி நினைக்கணும்?”
“அப்படி நினைக்கலன்னா இந்நேரம் கேஸ் இப்படி தேங்குன குட்டை மாதிரி நின்னுக்கிட்டு இருக்காது! கேஸ்’ல எல்லா லீடும்’ நான்தான் எடுத்து குடுக்குறேன்! அதை சரியா விசாரிச்சா கூட கேஸ் சால்வ் பண்ணிடலாம்!” என்று காய,
“இப்போ அதை தானே செஞ்சுட்டு இருக்கேன்!” என்று எகிறினாள் அவள்.
“என்ன செஞ்சுட்டு இருக்க நீ? அந்த பொம்பளை எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லுவா! அப்படியாம்மா? சரி’ம்மா!னு கேட்டுட்டு அனுப்பி வைக்கபோற… அதானே?”
“தெரியாதுன்னு சொல்றவங்களை என்ன செய்ய முடியும்? வீ டோன்ட் ஹேவ் ப்ரோபர் எவிடென்ஸ்!”
“வீ ஹேவ் டு கிரியேட் தட் எவிடென்ஸ்… யூ ஷிட்!!!!” கடுகடுவென அவன் கத்த, அவனுக்கு சரியாய் முறைத்துக்கொண்டு நின்றாள் அவள்.
“தள்ளு மொதோ!” அவளை நகர்த்திவிட்டு அவன் விசாரணை அறை நோக்கி செல்ல,
“எங்க போறீங்க?” வேகமாய் தடுத்தாள் அவள்.
“நீ தள்ளு, நான் விசாரிக்குறேன்!”
“நான் வரேன்!” என்றவள் உடன் வர,
“ஷைலு, ஸ்டே ஹியர்! நான் தனியா பேசிக்குறேன்!” என்றான் கோபத்தை அடக்கி.
“உள்ளே இருக்கிறது ஒரு லேடி! அவங்கள விசாரிக்கும்போது ஒரு லேடி போலிஸ் அஸ்சிஸ்ட் பண்ணணும்! அதைக்கூட கமிஷ்னர்’க்கு நான் சொல்லனுமா என்ன?”
இப்படி கேட்டவளை இடுப்பில் கைவைத்து நின்றுக்கொண்டு முறைத்தவன், “ரூல்ஸ் பேசுறியா? இங்க எல்லாமே ரூல்ஸோட தான் நடக்குதா?” என்றான்.
“எல்லாம் நடக்குதான்னு தெரியாது! நான் ரூல்ஸ்’ப்படி தான் பண்றேன்! பண்ணுவேன்!”
“நீ என்ன கருமமோ பண்ணு! நான் இருக்க இடத்துல நான் வச்சது தான் ரூல்ஸ்! புரியுதா?” என்றவன்,
“ரெக்கார்டிங் ஆஃப் பண்ணு!” என்றுவிட்டு முன்னேற, அவன் கையை இறுக்கமாய் பற்றி நிறுத்தினாள் ஷைலஜா.
“ஆம்பளைங்களுக்கு சமமா எல்லாமே செய்ய முடியும்ன்னு நினைக்குறியா? உங்களுக்குன்னு ஒரு லிமிட் இருக்கு!” அவன் நிதானத்தை இழுத்துப்பிடித்துக்கொண்டு பேச,
“என்ன லிமிட்? எங்களுக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை!” என்று கண்மூடித்தனமாய் பேசினாள் ஷைலஜா.
பூபதி இருந்த கோபத்தில் வேகமாய் கையில் கிடைத்ததை என்னவென்று கூட பாராமல் எடுத்து அவள் மீது செலுத்த, அவளது சட்டை பொத்தான்கள் மூன்றை பரபரவென அறுத்திருந்தது அந்த பேனாகத்தி!
உள்ளே கையில்லாத டி’ஷர்ட் மீது சட்டை அணிந்திருந்தாள். இப்போது பொத்தான்கள் கழண்டு டீஷர்ட் தெரிந்தது. ஆபாசம் ஒன்றும் இல்லை தான். ஆனாலும்,
“இப்படியே போ வெளில! உங்களுக்கும் எங்களுக்கும் தான் வித்தியாசம் இல்லல?” என்றான் அவன் மிகுந்த எரிச்சலில்.
ஷைலஜா அத்தனை நேரம் கொதித்த கொதிப்பு கூட அப்போது இல்லை! திறந்து கிடந்த தன் சட்டையை குனிந்து பார்த்தவள்,
“இதானே உங்க ஆம்பளைங்களால செய்ய முடியும்!? இத ஒன்ன வச்சு தானே காலாகாலமா பொம்பளைங்களை அடிமைப்படுத்திட்டு இருக்கீங்க?” என்றவள்,
“ஆம்பளைங்க நீங்க சட்டை இல்லாம கூட வெளில போவீங்க… ஆனா, பொம்பளைங்களால அது முடியாது… ஏன்? எதனால? வெளில ஆம்பளைன்னு சொல்லிக்கிட்டு திரியுற உங்களை மாதிரி கேடுக்கெட்டவங்களுக்கு பயந்து தானே? கடவுள் மனுஷனை படைச்சப்போ சட்டை துணி, புடவை துணின்னு எதையும் கொடுத்து அனுப்பலையே! ஹும்!” என்று முகத்தை திருப்பினாள்.
அலுத்துப்போய் ‘உப்ப்ப்’ என பெருமூச்சு விட்டான் பூபதி.
“இந்த ‘மானம்’ங்குற ஒன்ன ஆயுதமா வச்சு தானே பொண்ணுங்கக்கிட்ட விளையாடிட்டு இருக்கீங்க! அதைத்தாண்டி பேசவோ, செய்யவோ ஒண்ணுமே இல்ல உங்க ஆம்பளைங்க கிட்ட!” அழுத்தம் திருத்தமாய் அவள் பேச, கீழே போட்டிருந்த பேனாகத்தியை வேகமாய் தேடி எடுத்து அவளிடம் நீட்டியவன்,
“யம்மா தாயி, என் சட்டையை பட்டனை வேணுனா அறுத்து விட்டுடு! ஆனா, தயவுசெஞ்சு பேச மட்டும் செய்யாத!” என்றான் கும்பிடு போட்டு!
அதற்கு இன்னமும் வேகமாய் முகத்தை திருப்பினாள் அவள்.
“அய்யய்ய! என்ன நீ? அடிச்சு பாக்கலாம் வா’ன்னாலும் வரமாட்டேங்குற! அவுத்து பாக்கலாம் வா’ன்னாலும் வரமாட்டேங்குற? வேற என்ன தான் செய்யணும்? பக்கம் பக்கமா வசனம் மட்டும் தான் பேசுவியோ?”
இப்படி கேட்டவனை அசூயையுடன் பார்த்து முகம் திருப்பியவள், ‘ராஸ்கல்!’ என்று முனக,
“பார்ரா! சொல்லிக்கோ… சொல்லிக்கோ! ஆனா, கொஞ்சம் மரியாதையோட ‘மிஸ்டர்’ சேர்த்து சொல்லிக்கோ!” என்றவன் நைசாக விசாரணை அறைக்குள் நுழைந்திருந்தான்.
“ரெக்கார்ட் ஆஃப் பண்ணிடு!” என்ற அவன் குரல் கேட்டதும் தான் அவன் உள்ளே நுழைந்துவிட்டான் என்பதே உரைத்தது அவளுக்கு. கதவை தள்ளினால், அது உள்பக்கமாய் தாழிட்டிருந்தது.
“யூ இடியட்! ராஸ்கல்!” என்று திட்டி தீர்த்தவள், மானிட்டரை பார்க்க, அங்கே கேமரா புறம், இருவிரல்களை கத்தரிகோல் போல காட்டி, ‘கட் ஆஃப் தி கேமரா!’ என்று சிக்னல் கொடுத்தான் அவன்.
விசாரணையின் போது கேமராவை அணைத்து வைக்க கூடாதே!
‘ரூல்ஸ்’ல இருக்கு!’ என்று மானிட்டரை பார்த்து அவனிடம் பேசுவது போலவே சொன்னவள், அதை அணைக்காது பார்த்துக்கொண்டிருக்க, அறைக்குள் கேமரா இயக்கத்தில் இருப்பதற்கான சிவப்பு ஒளி இன்னமும் இருக்க அதையே பார்த்துக்கொண்டு நின்றான் பூபதி.
‘இவளை…!’ என்று பல்லைக்கடித்தவன், சட்டை பொத்தான்களை விறுவிறுவென கழட்டினான்.
விசாரணைக்கு வந்திருந்த ‘அந்த மாதிரி’ பெண்ணிற்கு அதனால் பெரிய பாதிப்பு இல்லை.
ஆனால், திரையில் கண்டவளுக்கு ‘வாட் தி ஹெக்!’ என்று கண்கள் விரிந்தது. சட்டையை கழட்டி போட்டவன் கேமராவை பார்த்தான். இன்னமும் சிவப்பு ஒளி அணையவில்லை.
சில வினாடிகள் தாமதித்தவன், அடுத்ததாய் பேன்ட் பெல்ட்டை கழட்டிவிட்டு, கொக்கியில் கையை வைக்க, படக்கென அணைந்துப்போனது அந்த ஒளி.
இங்கே இவன் சிரித்துக்கொண்டு சட்டையை அணிந்தபடி விசாரணையை துவங்க, அங்கே அவள் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ‘மனுஷனா இவன் எல்லாம்!?’ என்ற சந்தேகத்தில்.
கொலை நடந்த என்.எச் ரோட்டில் அன்றாடம் போய் வரும் ஆட்களை விசாரணைக்கு அழைத்து வர, யாரிடமும் பெரிதாய் எந்தவித தகவலும் கிடைக்காமல் இருந்தது.
அப்போது பூபதி தான் ‘டார்ச்லைட்’ வசம் இரவில் சாலையோரம் நிற்கும் பெண்களை விசாரிக்க சொல்லியிருந்தான். ஒரு வார தேடுதலுக்கு பின் கொலை நடந்த நேரத்தில் அங்கே ஒருத்தி நின்றிருந்தாள் என்று தெரிய வர, அந்த ‘விலைமாது’வை விசாரிக்க தான் இன்றைய நாள் ஆரம்பமானது.
ஷைலஜாவிற்கு இதில் கிஞ்சித்தும் நாட்டமில்லை. இவர்கள் மூலம் என்ன தெரிந்துவிடும் என்ற அவளது அசட்டை தான் அவளை சரியாய் விசாரிக்க தூண்டாமல் விட்டுவிட்டது. ஆனால், இதுவே கொலையை நேரில் பார்த்த சாட்சியாக இருக்கும் என்று அவள் கனவில் கூட எதிர்ப்பார்த்திருக்கவில்லை.