யுக்தா அப்படிச் சொல்லி விட்டுச் சென்றதும் “இவளுக்கு என்ன ஆச்சு?”, என்று ஒரு நொடி குழம்பிய யுவன் பின் அவள் நடிக்கும் இடத்துக்கு சென்று அவளைப் பார்வை யிட ஆரம்பித்தான். இது எப்போதும் நடப்பது தான். அவள் எது சரியாக செய்கிறாள், என்ன தவறு செய்கிறாள் என்பதை கவனித்து அவளுக்குச் சொல்லுவான். நெருக்கமான காட்சி வந்தால் அந்த இடத்தில் இருக்க மாட்டான்.
இன்றும் அவளுக்கும் அந்த படத்தின் நடிகருக்கும் நெருக்கமான காட்சி வர அதை நடிக்க யுக்தா வெகுவாக தடுமாறினாள் என்றால் யுவனோ என்ன உணர்ந்தான் என்று சொல்ல முடியாது. அந்த நடிகரின் கை அவளது இடையில் பதிய அவன் கண்களும் அங்கே பயணித்தது. அது தவறு என்று புரிய கிடைத்த சிறு இடைவெளியில் அவளிடம் சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
அது பொறாமையா, இல்லை யுக்தா அப்படி நடிப்பது அவனுக்கு பிடிக்க வில்லையா என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதற்கு பின் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக நாட்கள் கடந்தது. அப்படி இருக்கும் போது ஒரு நாள் அம்மா மகள் இருவரையும் ஒரு கோவிலுக்கு கிளம்பச் சொன்னார் செல்வம்.
“இப்ப எதுக்கு கோவிலுக்கு கூப்பிடுறீங்க? அது மட்டுமில்லாம உங்களுக்கு தான் சாமி நம்பிக்கையே கிடையாதே?”, என்று கேட்ட தாமரை செல்வத்தை ஆராய்ச்சியாக பார்த்தாள்.
“எப்ப பாத்தாலும் சும்மா எதிர் கேள்வி கேட்டுட்டு இருக்காத. கிளம்புன்னா கிளம்பு”,என்று மனைவியிடம் சுள்ளென்று எரிந்து விழுந்தவர் “யுக்தா, உனக்கு காதுல விழலையா? கிளம்பு”, என்று சத்தம் கொடுத்தார்.
“சரிப்பா”, என்ற ஒற்றைச் சொல்லோடு கிளம்புவதற்காக போனாள் யுக்தா.
யுக்தா அங்கிருந்து சென்றதும் “அவ என்னைப் பாத்து எப்படி பயப்படுறா? உனக்கு தான் குளிர் விட்டு போச்சு, அப்படி தானே?”, என்று கேட்டார் செல்வம்.
“என்னை கொன்னுருவேன்னு சொல்லித் தானே அவளை அப்படி மிரட்டி வச்சிருக்கீங்க? எதுக்கு இப்படி எல்லாம் பண்ணுறீங்க? எங்களை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடக் கூடாதா? என் வாழ்க்கை தான் நாசமா போச்சு. அவளையாவது நிம்மதியா இருக்க விடலாம்ல?”
“யுக்தா ஒரு பணம் காய்க்கிற மரம். அவ்வளவு சீக்கிரம் அவளை என் கைக்குள்ள இருந்து விட்டுற மாட்டேன் தாமரை”
“சொத்து தான உங்களுக்கு முக்கியம்? அதை வாங்கிட்டு தூரப் போக வேண்டியது தானே? அப்புறம் எதுக்கு அவளை சினிமால சேத்து விட்டீங்க? அவ இன்னொரு குடும்பத்துல வாழப் போறவ? சினிமால நடிக்கிற அவளுக்கு எப்படி வரன் வரும்னு எனக்கு கலக்கமா இருக்கு?”
“அது அவ தலையெழுத்து. எனக்கும் அது தான் வேணும். அவ அழகுக்கு நீ நான்னு போட்டி போட்டு வரன் வரக் கூடாதுன்னு தான் அவளை படத்துலே நடிக்க வச்சேன். இப்ப எந்த நல்ல குடும்பத்துல இருந்து வந்தாலும் அவளை கல்யாணம் பண்ண யோசிப்பாங்க”
“சீ நீயெல்லாம் ஒரு மனுசனா? பெத்த பொண்ணு வாழ்க்கையை இப்படி சீரழிக்கிறீயே?”
“அவளுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன் தாமரை. கவலைப்படாதே. ஆனா நான் தான் அவளுக்கு மாப்பிள்ளை பாப்பேன். நான் சொல்ற மாப்பிள்ளையை தான் அவ கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்கப்புறம் அவ சொத்து எனக்கு தானா வரும்”
“எதுக்கு இப்படி பணம் பணம்னு அலையுறீங்க? இத்தனை நாள் அவ வாங்கின சம்பளத்தையும் நீங்க தான் எடுத்துகிட்டீங்க? பாவம் யுக்தா”
“பணம் இல்லாம கஷ்டப் பட்டிருந்தா இப்படி ஒரு கேள்வி கேட்டுருக்க மாட்ட தாமரை. என் குடும்பம் பணம் இல்லாம எப்படி கஷ்டப் பட்டுச்சு தெரியுமா? பணம் ஒரு தெய்வம் டி”
“நீங்க சொல்றதைக் கேக்க சாத்தான் வேதம் ஓதுற மாதிரி இருக்கு. பணம் தெய்வம் தான். ஆனா நீங்களும் உங்க குடும்பமும் செய்யுற திருட்டு தனத்துக்கு பணம் எப்படி ஒட்டும். அதான் ஆண்டவன் உங்களுக்கு அவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்துருக்கார். இன்னும் நீங்க அனுபவிப்பீங்க”
“எனக்கு பணத்தை ஒட்ட வைக்க தான் நீயும் உன் மகளும் இருக்கீங்களே? அதனால தான் இன்னும் உங்களை துரத்தி விடாம வச்சிருக்கேன். உங்க ராசி என் கூடவே இருக்கணும் டி. பேசினது போதும். ஒரு முக்கியமான ஆளைப் பாக்கப் போறோம். என்னை டென்ஷன் பண்ணாம வாயை மூடிட்டு கிளம்பு போ”, என்று செல்வம் சொன்னதும் இதற்கு மேல் அவரிடம் பேசி வீண் என எண்ணி கிளம்ப ஆரம்பித்தாள் தாமரை. ஆனால் அவள் மனது மட்டும் எதுவோ தவறாக நடக்க போகிறது என்று சொல்லியது.
இவர்கள் கோவிலுக்கு சென்ற போது அங்கே இன்னொரு குடும்பம் இவர்களுக்காக காத்திருந்தது. யுக்தா குழப்பத்துடன் அவர்களைப் பார்த்தாள். அவர்கள் குடும்பத்தில் இருந்த ஒரு இளைஞன் யுக்தாவையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். செல்வம் அவர்களிடம் பேசுவதில் இருந்தே அவர்கள் யார் என்று தாமரைக்கு முழுவதும் புரிந்தது. அதிர்ச்சியுடன் செல்வத்தைப் பார்த்தாள்.
“இவன் தான் நான் உன் பொண்ணுக்கு பாத்திருக்குற மாப்பிள்ளை. என்ன பையன் நல்லா இருக்கானா?”, என்று தாமரையிடம் நக்கலாக கேட்டார் செல்வம்.
தாமரைக்கோ அவனைக் கண்டு அருவருப்பாக இருந்தது. அவர்கள் தமிழ் நாட்டுக் காரர்கள் போல கூட இல்லை. மாப்பிளை பார்க்க வெகுளி போல இருந்தாலும் அவன் கண்கள் அவனது கயமைத் தனத்தைக் எடுத்துக் காட்டியது. கூடவே மொத்த குடும்பமும் பாக்கு போட்டு அவர்கள் வாயெல்லாம் சிவப்பாக இருந்தது. அவர்கள் நிச்சயம் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று தாமரைக்கு புரிந்தது.
“கடவுளே கல்யாணம் அப்படீங்குற பேர்ல பொண்ணுங்களை விக்கும் கூட்டத்தைச் சேந்தவங்களா இருக்குமோ?”, என்று எண்ணி பயந்து போனாள்.
தன்னுடைய மகளுக்கு இவன் மாப்பிள்ளையா என்று கொதித்துப் போன தாமரை இதற்கு ஏதாவது முடிவு எடுத்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தாள். யுக்தாவுக்கோ அவன் தான் மாப்பிள்ளை என்றதும் மனது எல்லாம் வலித்தது. ஏனோ யுவனிடம் ஆறுதல் தேடச் சொல்லி அவள் மனம் துடித்தது. ஆனால் தாமரை மற்றும் யுவனின் உயிருக்காக செல்வம் பேச்சைக் கேட்க தயாரானாள். ஆனால் தாமரை இதை நிறுத்தியே ஆவது என்று தெளிவாக இருந்தாள்.
கோயிலில் வைத்து எதையும் பேச வேண்டும் என்று எண்ணிய தாமரை வீட்டுக்கு வந்ததும் கணவனிடம் சண்டை போட ஆரம்பித்தாள். வார்த்தை தடித்து செல்வத்திடம் இருந்து தாமரைக்கு அடி விழுந்தது.
அன்னை வாங்கும் அடியைத் கண் கொண்டு காண முடியாமல் “ஐயோ அம்மாவை விடுங்க. நான் அவனையே கல்யாணம் பண்ணிக்கிறேன். அம்மா நீயும் இந்த பேச்சை இதோட விடு மா”, என்று சொன்ன யுக்தா அழுது கொண்டே அறைக்குள் சென்று விட்டாள்.
“உன் மகளே சொல்லிட்டா, இதுக்கு மேல என்ன டி? ஒழுங்கு மரியாதையா உன் மகளை கல்யாணத்துக்கு தயார் செய். கல்யாணம் மட்டும் முடியட்டும், நான் யாருனு காட்டுறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார் செல்வம்.
இதற்கு மேல் அமைதியாக இருக்க கூடாது என்று எண்ணிய தாமரை அன்று முழுவதும் ஏதோ தீவிர யோசனையில் இருந்தாள். யுக்தாவோ அழுதே அன்றைய நாளை ஓட்டினாள். யுவனின் அழைப்பைக் கூட அவள் எடுக்க வில்லை.
அவள் எடுக்காததால் குழப்பத்தில் இருந்த யுவன் யுக்தாவின் டிரைவருக்கு அழைத்து என்ன விஷயம் என்று கேட்டான்.
அவனுக்கும் முழு விவரம் தெரியாது என்றான். கூடவே செல்வம் வீட்டில் இல்லை என்று சொன்னதும் உடனே தாமரைக்கு அழைத்தான் யுவன்.
அதை எடுத்த தாமரை “சொல்லுப்பா”, என்றாள்.
“என்ன ஆச்சு ஆண்ட்டி குரல் ஒரு மாதிரி இருக்கு. ஏதாவது பிரச்சனையா? யுக்தா வேற என்னோட போனை எடுக்க மாட்டிக்கா”
“சரி ஆண்ட்டி அவளைப் பாத்துக்கோங்க, நான் வைக்கிறேன்”, என்று சொன்ன யுவன் குழப்பத்துடன் போனை வைத்தான்.
தாமரையோ தன்னுடைய போனில் இருந்து ஒரு எண்ணுக்கு அழைத்து சில விசயங்களைப் பேசினாள். அவள் நினைப்பது நடக்குமா என்று தெரியாது. ஆனால் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டாள். –
அடுத்த நாள் காலை சீக்கிரம் எழுந்த தாமரை கோவிலுக்கு போவது போல வெளியே சென்றாள். பின் ஒரு அரை மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்தவள் யுக்தாவை வெளியே கிளம்பச் சொன்னாள்.
அழுது வீங்கிய முகத்துடன் இருந்த மகளைப் பார்த்து தாமரைக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் மகள் யுவனை நினைத்து தான் அழுதிருக்கிறாள் என்று தாமரைக்கு தெரிய வில்லை.
“அம்மா, நீ மட்டும் போயிட்டு வா. நான் வரலை”, என்றாள் யுக்தா.
“அம்மா சொன்னா கேப்பியா மாட்டியா யுக்தா? கிளம்புன்னா கிளம்பு. உன் அப்பா இப்ப தான் வெளிய போனார். அதனால எந்த தடையும் வராது. கிளம்பு பாப்பா”
“எங்க மா?”
“கோவிலுக்கு?”
“கோவிலுக்கு வந்தா என்னால நிம்மதியா சாமி கும்பிட முடியாது மா. எல்லாரும் என்னையே பாத்துட்டு இருப்பாங்க. அடிச்சு பிடிச்சு போட்டோ எடுக்க வருவாங்க”
“இன்னைக்கு அப்படி எல்லாம் நடக்காது. நீ வா”, என்று சொல்லி மகளை கிளப்பி அவளுடன் கீழே வந்தாள். டிரைவரை தவிர்த்து விட்டு மகளையே காரை எடுக்கச் சொன்னாள்.
சொன்ன வழியே காரைச் செலுத்திய யுக்தா தாமரை சொன்ன இடத்தில் வண்டியை நிறுத்தினாள். அது ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்தது.