“உனக்கு விருப்பம் இல்லைன்னா விட்டுரு யுவன். இதெல்லாம் கட்டாயப் படுத்த கூடாதுன்னு எனக்கு புரியுது. ஆனா என் மகளுக்காக தான். ஆனா உனக்கு விருப்பம் இல்லைன்னா வேண்டாம். நீ உன் வழியை பாத்துட்டு போய்க்கிட்டே இருப்பா”
“இல்லை ஆண்ட்டி, வீட்ல என்ன சொல்லுவாங்கன்னு யோசிச்சேன்? வேற ஒண்ணும் இல்லை”
“என்னை மன்னிச்சிரு பா. என் மகளைப் பத்தி யோசிச்சு உங்க வீட்டைப் பத்தி யோசிக்காம விட்டுட்டேன். கண்டிப்பா உன் வீட்ல சம்மதிக்க மாட்டாங்க தானே? அதுவும் ஒரு சினிமா நடிகையை யாரு மருமகளா ஏத்துக்குவாங்க? கடவுளே இவ அப்பா இப்படி ஒரு கொடுமையை இவளுக்கு செஞ்சிட்டாரே? நீயும் அவ நடிகைன்னு தான் தயங்குறியா யுவன்?”
“சே சே, இல்லை ஆண்ட்டி. யார் என்ன சொன்னாலும் பரவால்ல. இப்போதைக்கு எனக்கு யுக்தா தான் முக்கியம் ஆண்ட்டி. எங்க வீட்ல நான் பேசிக்கிறேன். நான் யுக்தாவை கல்யாணம் பண்ணிக்கிறேன். வாங்க உள்ள போகலாம்”, என்று சொல்லிக் சாமி முன்பு போய் நின்றான். அப்போது அங்கே யுக்தாவும் வர அவளை கையைப் பற்றி அழைத்துக் கொண்டு அவன் அருகே நிற்க வைத்தாள் தாமரை.
யுக்தா குழப்பமாக பார்க்க “மருது அண்ணன் பூஜையை ஆரம்பிச்சிட்டார். சாமி கும்பிடு. உன்னைப் பிடிச்ச சனியன் எல்லாம் போகட்டும்னு வேண்டிக்கோ பாப்பா”, என்று சொன்னாள் தாமரை. கடவுளை வேண்ட ஆரம்பித்தாள் யுக்தா. அப்போது சாமி பாதத்தில் இருந்து எடுத்து வந்த மாங்கல்யத்தை யுவன் கையில் கொடுத்தார் மருது.
தாமரை கண்ணீர் மல்க அவனிடம் கை கூப்பி வேண்ட தாலியை வாங்கி அவள் கழுத்தருகே கொண்டு சென்றான். யுக்தா என்ன நடக்கிறது என்று உணர்வதற்கு முன்னே அவள் கழுத்தில் தாலியைக் கட்ட ஆரம்பித்தான் யுவன்.
கழுத்தில் எதுவோ ஊர்வது போல இருக்கவும் கண் விழித்துப் பார்த்தாள் யுக்தா. நடப்பதைக் கண்டு அவள் அதிர்ந்து விழிக்க அவனோ மனதில் எழுந்த குழப்பத்தில் அவள் முகத்தைக் கூட பார்க்க வில்லை. கட்டி முடித்ததும் அவன் அமைதியாக சாமியைப் பார்க்க அவளோ தாலியையும் அவனையும் திரும்பி திரும்பிப் பார்த்தாள்.
“பாப்பா எதையும் சொல்லிறாத டா. உன்னைக் காப்பாத்த எனக்கு யுவன் கிட்ட கெஞ்சுறதை தவிர வேற வழி தெரியலை. யுவன் மேல எந்த தப்பும் இல்லை. என் கட்டாயத்தில தான் அவன் உன் கழுத்துல தாலி கட்டினான். அவன் மேல கோபப் படாத யுக்தா”, என்று அவசரமாக சொன்னாள் தாமரை.
யுக்தா யுவனை தவறாக நினைக்க கூடாது என்று எண்ணி அவனைக் காப்பாற்ற தான் தாமரை அப்படிச் சொன்னாள். ஆனால் யுவன் மனதில் தான் இல்லை என்றும் அவன் தன்னை இப்படி எல்லாம் நினைக்க கூட மாட்டான் என்றும் யுக்தாவுக்கு தான் தெரியுமே? அதனால் அவளுக்கு ஒரு விரக்தி புன்னகை தான் வந்தது. கூடவே வெகுநாள் அவள் ஆழ் மனதில் இருந்த போராட்டம் முற்று பெற்றது போலவும் நிம்மதியாக இருந்தது.
மருது மற்றும் தாமரை கால்களில் விழுந்து இருவரும் ஆசீர்வாதம் வாங்கினார்கள். அதன் பின் மூவரும் எதுவும் பேசாமல் கோவிலை விட்டு வெளியே வந்தார்கள். யுக்தாவோ ஏதோ பிரம்மையில் நடப்பது போல மௌனமாக நடந்து வந்தாள். அடுத்து என்ன செய்ய என்று தடுமாறிய யுவன் தாமரையைப் பார்த்தான். “இது நம்ம இடம் தான் யுவன். உன் வண்டி இங்கயே நிக்கட்டும். மருது அண்ணன் பாத்துப்பார். நாளைக்கு வந்து எடுத்துக்கலாம். நாம கார்ல வீட்டுக்கு போகலாம். முதல்ல உங்க வீட்டுக்கு போகலாம். நான் உங்க அம்மா அப்பா கிட்ட பேசுறேன்”, என்று சொல்லி காரில் ஏறிய தாமரை யுக்தாவையும் ஏறச் சொன்னாள்.. யுவன் தான் காரை ஓட்டினான்.
யுவனின் வீட்டுக்கு வந்ததும் அனைவருக்குமே பயத்தில் வியர்த்து ஊற்றியது, யுவனுக்கே சிறிது நடுக்கம் தான். யுக்தாவோ தாமரையின் கையை பற்றிக் கொண்டு மௌனமாக நின்றாள்.
கதவைத் திறந்த சுந்தரி அவர்களை அந்நேரம் எதிர்பார்க்கவே இல்லை. அவளுக்கு அதிர்ச்சி தான் என்றாலும் அவன் திருமணம் செய்திருப்பான் என்றெல்லாம் நினைக்கவில்லை. அதனால் இவங்களை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்கான் என்று எண்ணி தான் அவர்களை பார்த்த படி நின்றாள்.
அப்போது தான் யுக்தா கழுத்தில் இருந்த தாலி சுந்தரியின் கண்ணில் விழுந்தது.
“இவளுக்கு எப்ப கல்யாணம் ஆச்சு? படம் நடிச்சிட்டு இருக்கும் போதே கூட்டிட்டு வந்துட்டானா? தாமரை வேற எதுக்கு வந்திருக்கா?”,என்று அவள் அதிர்ச்சியாக அனைவரையும் பார்த்த படி சுந்தரி நிற்க ஈஸ்வரன் தான் அவர்களை உள்ளே அழைத்தார்.
உள்ளே சென்றதும் யார் என்ன பேச என்று தெரியாத நிலை. யுவன் தான் பேச்சை ஆரம்பித்தான். “அப்பா, என்னை மன்னிச்சிருங்க. எனக்கும் யுக்தாவுக்கும் கல்யாணம் முடிஞ்சிருச்சுப்பா”, என்று யுவன் சொன்னது தான் தாமதம் அங்கே குண்டூசி விழும் அளவுக்கு கூட சத்தம் இல்லை.
ஈஸ்வரன் குற்றவாளி போல மகனை பார்த்தார் என்றால் சுந்தரியோ கொலைவெறியுடன் மகனைப் பார்த்தாள்.
“இதுக்கெல்லாம் காரணம் நான் தான். எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க”, என்று ஆரம்பித்த தாமரை நடந்த அனைத்தையும் சொல்ல ஈஸ்வரனோ என்ன சொல்ல என்று தெரியாமல் விழித்தார். அவர் நியாயவாதி என்பதால் அவருக்கு தாமரை பக்கம் இருக்கும் நியாயம் புரிந்தது. ஆனால் அவருக்கு அவர்களின் திருமணத்தை நினைத்து தான் கலக்கமாக இருந்தது.
திருமணம் செய்யும் அளவுக்கு இருக்கும் ஆசையோ உணர்வுகளோ யுக்தா மீது யுவனுக்கு இல்லை என்று அவருக்கு தெரியுமே? அப்படி இருக்க இவர்கள் எப்படி ஒன்றாக வாழ்வார்கள் என்று அவருக்கு குழப்பமாக இருந்தது. அதனால் அமைதியாக இருந்தார். அந்த அமைதியைப் பார்த்த சுந்தரி அவருக்கு இந்த திருமணம் பிடிக்க வில்லை என்று எண்ணி யுக்தாவையும் தாமரையையும் வாய்க்கு வந்த படி பேச ஆரம்பித்தாள்.
சுந்தரி திட்டும் போது யுவனும் சிறிது நேரம் தான் செய்தது தப்பு என்பதால் அமைதியாக இருந்தான். ஆனால் சுந்தரி கொஞ்சம் அதிகமாக பேசவும் “அப்பா அம்மாவை வாயை மூடச் சொல்லுங்க. தேவை இல்லாம பேசுறாங்க. நான் பண்ணினது தப்பு தான். வேற வழி இல்லாம நடந்துருச்சு. திருப்பி திருப்பி ஆண்ட்டியையும் யுக்தாவையும் தப்பா பேசினா எப்படி? என் கல்யாணத்தை என் விருப்ப படி செய்ய எனக்கு உரிமை இல்லையா? அதுக்காக நான் செஞ்சது சரின்னு சொல்லலை. தப்பு தான். மன்னிப்பும் கேட்டாச்சு. இனிமே தான் நிறைய பிரச்சனை வரும்னு எனக்கும் தெரியும். நானே குழப்பத்துல தான் இருக்கேன். இதுல இவங்களும் இப்படி பேசினா நான் என்ன செய்ய?”, என்று கேட்டான்.
அவன் மனநிலை ஈஸ்வரனுக்கு நன்கு புரிந்தது. தவறை உணர்ந்த மகனை கண்டிக்க முடியாமல் மனைவியை ஒரு பார்வை பார்த்தார். சுந்தரி வாய் மூடிக் கொண்டது. ஆனாலும் அவள் கண்கள் கனலைக் கக்கியது.
“நடந்தது நடந்துருச்சு. இனி எதையும் மாத்த முடியாது. இது தான் நடக்கணும்னு இருந்துருக்கோ என்னவோ? யுக்தா இனி எங்க வீட்டு மருமக தான்”, என்றார் ஈஸ்வரன்.
“ரொம்ப நன்றி அண்ணா”, என்றாள் தாமரை.
“தாமரை”
“சொல்லுங்கண்ணா”
“அடுத்த வாரம் இவங்க கல்யாணத்தை லீகலா ரிஜிஸ்டர் பண்ணலாம். அதுக்கான ஏற்பாடு எல்லாம் நான் பண்ணுறேன். அது வரைக்கும் எங்க மருமக உங்க வீட்லயே இருக்கட்டும். பெரிய அளவுல இல்லைனாலும் எல்லாம் முறைப்படி நடக்கணும். அது தான் நியாயம். அது வரைக்கும் யுக்தா அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம். நான் என்னைக்குன்னு சொல்றேன். அது மட்டுமில்லாம அன்னைக்கே ரிசப்ஷன் மாதிரி வச்சிக்கலாம்”, என்றார் ஈஸ்வரன்.
அவர் சொன்னதைக் கேட்டு சுந்தரி அவரை முறைக்க தன் வீட்டு பிரச்சனை சரியாகி விட்டது என்று எண்ணி யுவன் நிம்மதியாக மூச்சு விட்டான். பின் யுவனே அவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றான். காரில் இருந்து இறங்கும் முன் யுக்தாவின் தாலியை உடைக்குள் ஒழித்து வைத்தாள் தாமரை.
வீட்டின் முன்னே இறங்கியதும் யுவனின் வண்டியை எடுப்பதற்காக டிரைவரை யுவனுடன் அனுப்பி வைத்தாள் தாமரை. யுவனும் யுக்தாவை நிமிர்ந்து கூட பார்க்காமல் அங்கிருந்து சென்றான். யுக்தாவோ போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதும் போல் இப்போதும் மகள் மனது புரியாமல் அவளுக்கு ஆறுதல் சொல்லிய படி அவளை உள்ளே அழைத்துச் சென்றாள் தாமரை.
யுவன் வீட்டுக்கு வந்த விஷயம் கேள்விப் பட்ட செல்வம் வீட்டுக்கு வந்து தாம் தூமென்று குதித்தார். வரும் வழியில் யுவனுடைய வண்டி பஞ்சர் ஆனதால் தான் அவனை காரில் அனுப்பி வைத்தோம் என்று சமாளித்தாள் தாமரை.