கலைவாணி “வாங்க” என்று சொன்னதோடு சரி.
கார்த்திகேயன் அதை கூட சொல்லவில்லை.
விக்ரம் ஒரு நண்பனை போல அவன் தோள் மீது கை போட்டுக் கொண்டு அவனுடன் நன்கு பேசி பழகினான்.
“சரி தாலி சரடை எடுத்துட்டு வாங்க.” என்று ஒரு வயதான சுமங்கலி கூற சஞ்சுளா அவர் கையில் வைத்திருந்த பத்து பவுன் தாலி சரடை எடுத்து வந்து கொடுத்தார்.
“என்ன உன்னோட மாமியார் வரலையா?” என்று சாதனாவை பார்த்து அந்த வயதானவர் கேட்டார்.
‘தான், சுகன்யாவின் விசேஷத்தில் நேரத்தில் கலந்து கொள்ளாததால் மாமியார் வரவில்லை’ என்று நினைத்ததை சொல்லமுடியாமல் என்ன சொல்வது?’ என்று விழித்துக் கொண்டிருக்கையில்
சஞ்சனா
“அவங்க பொண்ணு முழுகாம இருக்காங்க. வாமிட் ரொம்ப வருவதால் அவங்கள விட்டுட்டு வர முடியாதுன்னு கூடவே இருக்காங்க. அதனால தான் சாது மாமியார் வரல.” என்று சமாளித்தாள்.
சுகந்தனுக்கு அவளது சமாளிப்பு பிடித்திருந்தது. அவனே யோசித்து இருந்தாலும் இப்படி சமாளித்து இருக்க மாட்டான் . அவளுக்கு மனதிற்குள் நன்றி சொல்லிக் கொண்டான்.
ஆனால் கார்த்திகேயன் சுகந்தனிடம் வந்தார்.
“ உங்க அம்மா அவ்வளவு பிஸியா? மருமகள் பங்ஷனுக்கு கூட வர நேரம் இல்லையா? இல்லை மனசு இல்லையா? இல்லை எங்களை எல்லாம் பார்க்க பிடிக்கலையா?” என்று குத்தலாக கேட்டார்.
சுகந்தன் பொங்கி வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர முயற்சித்தான்.
ஆனால் அவர் விடவில்லை.
“அப்படி என்கிட்ட இருந்து போயிட்டா சரியா போச்சா? தாலி சரடு எங்க?” என்று கேட்டார்.
சுகந்தன் கையில் இருந்த 3 பவுன் தாலி சரடை எடுத்து அவரிடம் கொடுத்தான்.
அதனை அவர் கையில் தூக்கி பார்த்து
“என்ன வெயிட் ரொம்ப கம்மியா இருக்கு. எத்தனை பவுன்?” என்று கேட்டார்.
“மூன்று” என்று அவன் சொல்லவும்
“ரொம்ப வெயிட்டா தான் வாங்கிட்டு வந்துட்டீங்க!” என்று நக்கலாக அவனிடம் சொல்லிவிட்டு அதை எடுத்துவந்து அந்த பாட்டியிடம் கொடுத்தார்.
“நீங்களும் தான் எங்க அப்பாவையும் சேர்த்து கூப்பிட்டு இருக்கலாம்.” என்றான் பொறுமையை இழுத்து பிடித்து.
“கூப்பிட்டா மட்டும் 15 பவுன் நகையுடன் உங்க அம்மா அப்பா எல்லோரும் வந்து இருப்பாங்க இல்ல? “
இப்படி பதிலுக்கு பதில் பேசுபவரிடம் என்ன சொல்றது என்று நினைத்த அவன்
“அப்படி இல்ல. சுகன்யா கிட்ட வேலை இருந்தது. அதான் சஞ்சனா சொன்னாங்க இல்ல? அதுதான் காரணம்.” என்றான் அமைதியாக.
“அதுதான் காரணமா? இல்லை….. “என்று அவன் கண்களை ஊடுருவிப் பார்த்து கேட்டார் .
‘இப்ப எதுக்கு தேவையில்லாம இவர் இப்படி பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்காரு? பேசாம நேரடியா முகத்தை பார்த்து கேட்கலாமா?’ என்று யோசித்தவன் சாதனாவை பார்த்தான்.
சாதனா ஏதோ சஞ்சனாவின் காதுகளில் சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் இப்படி மனம் விட்டு சிரித்து அவன் திருமணத்திற்கு முன்பு தான் பார்த்தான். அதற்குப் பிறகு இப்போதுதான் இப்படி பார்க்கிறான். அந்த சிரிப்பு தன் கோபத்தால் கெட்டுவிடக் கூடாதே என்று அமைதி காத்தான்.
பெண்கள் அதில் தாலியில் கோர்க்க வேண்டிய தங்கத்தினால் சின்னதாக செய்யப்பட்டிருந்த அண்ணாச்சி பழம், குண்டுமணிகள், லக்ஷ்மி இவற்றையெல்லாம் கோர்த்து அந்த தாலி சரடை இரு பெண்கள் கழுத்திலும் கட்டினர்.
தனக்கு பழக்கம் இல்லை என்றாலும் தாமரையுடன் சேர்ந்து வீட்டு வேலைகளை தன்னால் முடிந்தவரை செய்து கொண்டிருப்பாள் சாதனா. வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலை இரண்டையும் சமாளித்து இரவு சோர்வாக உறங்கிக்கொண்டிருக்கும் சாதனாவை பலமுறை பார்த்து இவளை இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து தவறு செய்து விட்டோமோ என்று நினைத்திருக்கிறான்.
ஓரளவு வசதியான பிறகு திருமணம் செய்திருக்கலாம் என்று நினைத்தது கூட உண்டு. அலுவலக வேலை அவளுக்கு பிடித்தமானது என்பதற்கும் மேலாக இன்றியமையாதது. அதை புரிந்து அந்த வேலையை விடும்படி ஒருநாளும் சுகந்தன் சொன்னது கிடையாது. ‘அவளுக்கு பிடிச்சிருந்தா பண்ணட்டும்.’ என்று தான் நினைத்திருந்தான். மேலும் வீட்டில் வேலை செய்ய ஒரு நல்ல ஆள் தேடிக் கொண்டு இருந்தான். அலுவலகம் மற்றும் வெளி வேலைகளை செய்து கொண்டிருந்த சுகந்தனால் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யவும் முடியவில்லை.
அன்று வீட்டில் நடந்த விசேஷத்தின் போது அவன் தான் சாதனாவுக்கு தேவையான உணவினை முன்பே எடுத்து வைத்து இருந்தான். எனினும் அவள் தாமதமாக வராததை அவனிடம் முன்பே தெரிவிக்காததில் கோபம் அடைந்தான். எனவே எடுத்து வைத்திருந்த உணவை அவனே கொடுக்காமல் தங்கை மூலம் கொடுக்க செய்தான்.
அவள் வீட்டுக்குள் நுழையும் போதே தங்கை மூலம் தாமரை அவளை எதுவும் பேசி விடாமல் தடுத்தான் . சுகன்யா
“இதையெல்லாம் நீயே பண்ண கூடாதா?” என்று கேட்க தான் செய்தாள். ஆனால், அப்படி அவன் செய்தால் அவனது தாயின் கோபம் சாதனாவின் மீது அதிகமாகும். அதனால் தான் அவன் மறைமுகமாக செய்தான். இப்போது கூட இவரிடம் எதிர்த்து பேச வேண்டும் என்றுதான் அவளுdக்கு தோன்றியது. எனினும் அது சாதனாவுக்கு பிடிக்காது என்ற காரணத்தினால் பொருத்து போனான்.
இவரைப் பற்றி எந்த குறையும் அவன் அவளிடம் சொன்னது கிடையாது. அப்படியே சொன்னாலும் அவள் நம்ப போவதும் கிடையாது. ஒரு வேளை நம்பினாலும் அது அவளை காயப்படுத்தும். அதனை விரும்பாத காரணத்தினால் சுகந்தன் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டான்.
பெண்கள் தங்கள் குறைகளை வெளிப்படையாக கணவன், தாய், தங்கை தோழிகள் போன்றவர்களிடம் சொல்லி விடுகின்றனர். ஆனால் ஆண்கள் அப்படி வெளிப்படையாக சொல்ல முடிவதில்லை.
‘தான்தான் சம்பளம் வேண்டாம்’ என்று சாதனாவிடம் சொன்னதை ஏற்கனவே சுகந்தன் தாயிடம் தெரிவித்து இருந்தான்.
இருந்தாலும் “நீ அப்படி சொன்னா என்ன? அதை அப்படியே கேட்டு அவள் நடக்கணுமா? எடுத்துட்டு வந்து என்கிட்ட கொடுக்கறதுக்கு என்ன?” என்று அவர் கேட்டதை இவளிடம் சொல்ல முடியாமல் அவன் மாற்றி பேசினான்.
இப்படி எல்லாவிதத்திலும் கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் தவறாக நினைத்துக் கொண்டிருந்தனர்.
எனினும் அவர்களுக்குள் இருந்த காதல் அவர்களை ஒன்றாகவே வாழ வைத்துக்கொண்டிருந்தது