நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தாயையும் மனைவியிடம் விட்டுக் கொடுக்க முடியாமல் மனைவியையும் தாயிடம் விட்டுக்கொடுக்க முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்துக் கொண்டிருந்தான்.
இருவரையும் சமாளித்து குடும்பத்தை நடத்துவது கயிற்றின் மீது நடப்பது போல அவ்வளவு கடினமாக இருந்தது.
விழுந்துவிட கூடாது என்று நினைத்துக் கொண்டு தான் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாக ஒரு நாள் விழுந்து பலமாக அடிபடுவான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
அன்று சாதனா தந்தையுடன் வீட்டிற்கு வந்தாள்.அவரது காரில் இருந்து இறங்கி வேக வேகமாக நடந்து உள்ளே வந்து
“அத்தை, மாமா, கந்தா, அப்பா வீட்டுக்கு வராங்க.” என்று ஓட்டமும் நடையுமாக சொல்லிவிட்டு மீண்டும் வெளியே சென்று தயங்கி தயங்கி வந்து கொண்டிருந்த தந்தை கையை பிடித்து அழைத்து இல்லை இல்லை பிடித்து இழுத்துக் கொண்டு
“வாங்கப்பா வாங்க.” என்று உள்ளே வந்தாள்.
முதன்முறையாக அவளது தந்தை அவள் புகுந்த வீட்டிற்கு வந்திருந்த மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிந்தது.
“வாங்க” என்று தாமரை, வாசுதேவன் இருவரும் கூப்பிட்டனர்.
“வாங்க மாமா” என்று சுகந்தன் கூப்பிட்டான்.
பேச்சு குரல் கேட்டு தூக்கம் கலைந்து வெளியே வந்த சுகன்யா அவரிடம் வந்து
“வாங்க மாமா நல்லா இருக்கீங்களா? அத்தை, சஞ்சனா எல்லோரும் நல்லா இருக்காங்களா?” என்று கேட்டாள்.
“எல்லோரும் நல்லா இருக்காங்கமா. நீ நல்லா இருக்கியா? நான் நல்லா இருக்கேன். நல்லா சத்தான சாப்பாடு சாப்பிடு. உடம்பை பத்திரமா பாத்துக்கோ. ஹாப்பியா இரு. அதுதான் குழந்தைக்கு நல்லது.
உன் பங்ஷனுக்கு வரணும்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் வேலை வந்துட்டதால வர முடியல. தப்பா எடுத்துக்காதே.” என்று பொய் கூறினார்.
“அதெல்லாம் பரவாயில்லை மாமா.” என்றால் சுகன்யா பெருந்தன்மையாக.
பூ பழங்கள் கொண்டிருந்த பையை அவளிடம் கொடுத்தார்.
“அப்பா நீங்க உட்காருங்க. நான் போய் உங்களுக்கு பிடிச்ச மாதுளை பழம் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரேன்.” என்று விட்டு அவசர அவசரமாக உள்ளே சென்று பிரிட்ஜை திறந்து ஜூஸ் போட்டு எடுத்து வந்து அங்கு இருந்த அனைவருக்கும் கொடுத்தாள்.
அதனை வாங்கி ஒரு மிடறு விழுங்கிய அவர்
“ஜூஸ் ரொம்ப சூப்பரா இருக்கு சாது . உனக்கு ஜூஸ் போட தெரியும்nu எனக்கு இப்பதான் தெரியும்.” என்று நகைச்சுவையாக சொல்லிவிட்டு புன்னகைத்தார்.
“ஜூஸ் மட்டும் இல்லை, எல்லா சமையலும் நான் பண்ணுவேன். இன்னிக்கு நைட் இங்கதான் நீங்க சாப்பிடனும்.” என்றாள் மகள் பூரிப்புடன்.
ஆனால் அவர் வேறு சொன்னார்.
“இல்லம்மா எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. வழியில ஸ்கூட்டி ரிப்பேர் ஆகி நீ நின்னுகிட்டு இருந்ததை பார்த்து உன்னை இங்க விட்டுட்டு போகலாம்னு வந்தேன்.” என்றபடி சுகந்தனை பார்த்தார்.
அவர் பார்வையில் ஒரு வெறுப்பு இருந்தது.
“இருங்க உங்களுக்கு நான் ஒரு தட்டில் இரண்டு லட்டு வச்சு எடுத்து வருகிறேன்.” என்று உள்ளே சென்று சொன்னபடி எடுத்து வந்து கொடுத்தாள்.
“வேண்டாம்” என்று அவர் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
மகளின் மகிழ்ச்சியை கெடுக்க மனமின்றி ஒரு லட்டை அவளுக்காக எடுத்து அவள் முன்பு வாயில் வைத்த வைத்தான்.
உண்மையாகவே லட்டு அவள் சொன்ன மாதிரியே அருமையாக இருந்தது. அது அவர் முகத்தில் தெரிந்தது. கொடுத்த இரண்டு லட்டு களையும் பேசியபடி சாப்பிட்டு முடித்தார்.
“சரி ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க. அத்தை பண்ணின ரவா லட்டு அம்மாவுக்கும் சஞ்சனாவுக்கும் கொடுத்து அனுப்புகிறேன்.
அடுத்த வாரம் சஞ்சனா அமெரிக்கா போரா இல்லையா?” என்றாள் சிறிது சோகமாக.
“ஆமாம்மா. சரி எடுத்துட்டு வா. நான் அதுவரைக்கும் பேசிட்டு இருக்கேன்.” என்றுவிட்டு எழுந்து சுகந்தனை அழைத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தார்.
“என் பொண்ணு எப்படி வாழ வேண்டியவ தெரியுமா?
அவள் நான் வாங்கி கொடுத்த காரை கூட எங்க வீட்லயே விட்டுட்டு அவளோட சம்பளத்தில் வாங்கின ஸ்கூட்டியை யூஸ் பண்ணிட்டு இருக்கா.
ஏன் சார் அவளை நான் வாங்கி கொடுத்த காரை யூஸ் பண்ண கூடாதுன்னு சொன்னீர்களோ?” என்று கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டார்.
“நான் அப்படி எதுவும் சொல்லல. அப்புறம் அவள் ஏன் ஸ்கூட்டி யூஸ் பண்றா?”
“நீங்க இதை அவர்கிட்டயே கேட்டிருக்கலாமே.”
“ஏன் சார் பதில் சொல்ல மாட்டிங்களோ?”
“சரி சொல்றேன். நாங்க ஒரு வாடகை வீட்டில் இருக்கிறோம். இங்க கார் பார்க் பண்ற இடவசதி இல்ல. அதனாலதான் உங்க காஸ்ட்லி காரை யூஸ் பண்ண முடியல.” என்று விளக்கம் கொடுத்தான் அவன்.
“அப்போ பெரிய வீடு பார்க்க வேண்டியதுதானே?” என்றார் அவர் விடாப்பிடியாக.
“ரெண்டு மூணு வருஷம் போகட்டும். வாடகைக்கு வீடு பார்க்கிறது என்ன? புதுசா ஒரு வீடே வாங்கலாம். நானும் நல்லாதான் சம்பாதிக்கிறேன்.” என்றான்.
“பார்த்தா அப்படி தெரியல. இப்போ தெரியாது. கடன் எல்லாம் தீரட்டும். அதுக்கு அப்புறம் பாருங்க . ஹோம் லோன் போட்டு வீடு புதுசா கட்டிட்டு உங்களை கிரகப்பிரவேசத்திற்கு கூப்பிடறேன்.” என்றான் நிமிர்ந்து.
“சும்மா எல்லாத்தையும் வாயால சொல்லிட்டா போதாது..”
“ செஞ்சு காட்டுவேன்.” என்றான்.
அப்போது ஒரு டிபன் பாக்ஸ் உடன் அங்கு வந்தாள் சாதனா.
“அப்பா இந்த ரவா லட்டு எடுத்துட்டு போய் வீட்ல கொடுங்க. நெய், முந்திரி பருப்பு எல்லாம் போட்டு அத்தை கைப்பக்குவத்தில் பண்ணியது. ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு இந்த ரவாலட்டு ரொம்ப பிடிச்சு போச்சு. அம்மா, சஞ்சனா ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடிக்கும்.” என்று அவரிடம் கொடுத்தாள்.
தாமரை, வாசுதேவன் இருவரும் அவரைப் பார்த்து அடிக்கடி மாறி மாறி புன்னகைத்து கொண்டே இருந்தனரே தவிர பேசவில்லை.
“பார்ட்டிக்கு டைம் ஆச்சு. இன்னும் நீ டிரஸ் போடலையா?” என்று கேட்டபடி பட்டு வேஷ்டி சட்டையுடன் அங்கு வந்தான் கார்த்திக்.
“இருடா.” என்று பனியன் மற்றும் பட்டு வேஷ்டியுடன் நின்றுகொண்டு ஜன்னல் வழியாக விக்ரம் வீட்டு தோட்டத்தில் சாதனா தெரிகிறாளா என்று பார்த்துக் கொண்டிருந்தான் சுகந்தன் .
“என்னடா பார்த்துட்டு இருக்க? டைமாச்சு கெளம்பு.”
“ஒரு நிமிஷம்.” என்று மீண்டும் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தான் சுகந்தன் .
அப்போது சஞ்சனா இளம்பச்சை நிற பட்டுப்புடவையில் தோட்டத்து கதவை ஒருமுறை திறந்து நன்றாக சாத்தினாள்.
அவ்வளவு நேரம் எதிர்பார்த்திருந்த அந்தக் காட்சி கண்டு விட்ட திருப்தியில் வேகவேகமாக அவனும் இளம்பச்சை நிற சட்டை ஒன்றை எடுத்து அணிந்து கொண்டான்.
“சட்டை ரொம்ப நல்லா இருக்கு. எப்படியோ இந்த சட்டை தான் போட போறேன்னு ஒரு முடிவுக்கு வந்துட்ட போல இருக்கு.” என்று கேட்டான் கார்த்திக்.
“ஆமாண்டா அவள் இந்த கலர்ல தான் பட்டு புடவை கட்டி இருக்கா. அதனாலதான்.”
“ஓ கதை அப்படி போகுதா?”
“ஆமாண்டா. அவ புடவைக்கு மேட்சிங்கா நான் சட்டை போட்டா அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அதனாலதான்.”
“சரிடா சீக்கிரம் கிளம்பு.” என்று அவனை அவசரப்படுத்தினான் கார்த்திக்.
அந்த பெரிய ஹாலின் நடுவில் ஒரு மேடை இருந்தது. அந்த மேடை பல வண்ணங்களில் ஜொலிக்கும் காகிதத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுவற்றில் சுருள் சுருளான காகிதங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. ஆங்காங்கே மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
ஹாலில் ஒரு மேஜைக்கு நான்கு நாற்காலிகள் என்று பல நாற்காலிகள், மேஜைகள் போடப்பட்டு இருந்தது. அந்த மேஜைக்கு நடுவில் ஒரு ரோஜா பூங்கொத்து அழகாக சிரித்தது.
பெரும்பாலான பெண்கள் பட்டுப் புடவை, குண்டுமல்லி, அதற்கேற்ற நகைகள் என்று ஜொலித்தனர். சில பெண்கள் சல்வாரில் இருந்தனர். ஆண்கள் பட்டு வேஷ்டி சட்டை அல்லது ஷர்வானி அணிந்து இருந்தனர். குழந்தைகள் பட்டு வேஷ்டி, பட்டு பாவாடை, ஜோலி அணிந்து அந்த பெரிய ஹாலில் ஓடி ஆடி விளையாடிக்கொண்டிருந்தனர். மொத்தத்தில் அந்த இடம் ஒரு திருமண விழா நடைபெறும் மண்டபம் போல காட்சியளித்தது.
கார்த்திக், சுகந்தன் இருவரும் உள்ளே நுழைந்தனர். அணிந்திருந்த பெரிய கோட்டை கழற்றி அங்கிருந்த நாற்காலி மீது வைத்துவிட்டு அமர்ந்தார்கள்.
“டெக்கரேஷன் சூப்பரா இருக்குடா. இங்க இவ்வளவு தமிழர்கள் இருக்காங்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் சுகந்தன் .
“ஆமாண்டா. எங்க போனாலும் தமிழர்கள் இருப்பாங்க.”
“ஏதோ கல்யாண வீடு மாதிரி அவ்வளவு கலகலப்பா இருக்கு.” என்றான் சுகந்தன் .
“ஆமாண்டா.” என்றான் கார்த்திக்.
சுகந்தனின் கண்கள் சாதனாவை தேடியது. அவள் அந்த ஹாலில் இல்லை.
“சுகந்தா ஆர்டர் பண்ண ஃபுட் வந்திடுச்சு பாரு. வா போய் செக் பண்ணலாம்.” என்று கூப்பிட்டான் கார்த்திக்.