“இருடா நான் சாதனாவுக்கு போன் பண்றேன்.” என்று சொன்ன அந்த கணம்
“நான் இங்கதான் இருக்கேன்.” என்று குரல் வர சட்டென்று பரவிய மகிழ்ச்சியுடன் திரும்பி அவளைப் பார்த்தான் சுகந்தன் .
இவர்களை கவனித்த கார்த்திக் ‘இனிமேல் நமக்கு இங்க வேலையில்லை.” என்று நினைத்துக் கொண்டு அந்த இடத்தை காலி செய்தான்.
“இதோ இருக்கு லிஸ்ட்.” என்று அவள் கையில் இருந்த ஒரு காகிதத்தை பிரித்தாள்.
இளம்பச்சை நிற பட்டுப்புடவை, முத்துக்களால் ஆன மாலை, குண்டுமல்லி என்று பளிச்சென்று இருந்தாள் அவள்.
அவள் மீதான அவன் பார்வையை விலக்க முடியாமல் தவித்தான் அவன். அவனது வைத்த கண் வாங்காத பார்வை அவளை ஏதோ செய்தது. எனினும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல்
“எல்லா சரியா இருக்காnu செக் பண்ணனும்.” என்று அவனை பார்க்காமல் சொன்னாள்.
அவள் சொன்னது அவன் காதில் விழவில்லை.
‘எப்படி பார்க்கிறான் பாரு! யாராவது இவன் இப்படி என்னை பார்க்கிறதை பார்த்தா, என்ன நினைப்பாங்க? இதைக்கூட யோசிக்காம இவ்வளவு நேரமா வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்கான்.’ என்று நினைத்து சலித்துக் கொண்டாலும் அவளுள் ஒரு பூரிப்பு பரவுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
அவளே எல்லாவற்றையும் சரி பார்த்து விட்டு
“எல்லாம் சரியா இருக்கு.” என்று சிலையாக நின்று அவளை ரசித்துக் கொண்டிருந்த அவனிடம் சொல்லிவிட்டு நாற்காலியில் வந்து அமர்ந்தாள்.
அவள் சென்ற பிறகு கார்த்திக் அவனிடம் வந்தாள்.
“ஏன்டா? ஏன் இப்படி முழுங்குற மாதிரி பார்த்துட்டு இருக்க?” என்று கேட்டான்.
“என் பொண்டாட்டி. நான் பார்க்கிறேன். உனக்கு என்னடா? நீயும் கல்யாணம் பண்ணி கொஞ்ச நாள் வாழ்ந்து விட்டு அதுக்கு அப்புறம் தனியா இருந்து பாரு. என்னோட தவிப்பு உனக்கு புரியும்.” என்றான் சுகந்தன் பெருமூச்சுடன்.
“சரி சரி. கொஞ்சம் உன் புலம்பலை நிறுத்து. நீ விடற பெருமூச்சில் இங்க அனல் அடிக்கிது.”
“பரவாயில்லை அடிக்கட்டும். இந்த குளிருக்கு இதமாக தான் இருக்கும்.”
“அனல் அடிச்சா பரவாயில்லை. பத்தி எரியாம இருந்தா சரி.
வாடா போய் உட்காரலாம்.” என்று அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றான் கார்த்திக்.
மேடையில் பல நிகழ்ச்சிகள் நடந்தன.
பலர் சொற்பொழிவு ஆற்றினர். ஒருசில சிறுவர்-சிறுமிகள் நல்ல உச்சரிப்பில் தமிழ் பேசினர். மற்றவர்கள் ஆங்கிலம் பேசுகிறார்களா இல்லை தமிழ் பேசுகிறார்களா என்று யோசிக்கும் அளவிற்கு பேசினர் . ஒரு 15 வயது பையன் நல்ல தமிழில் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தான்.
ஆங்கிலத்தில் பேசிப் பழகிய அவன் பயிற்சி எடுத்து தமிழில் பேசிக்கொண்டிருந்தான். அவன் தமிழின் மீது கொண்டிருந்த ஆர்வத்தை பார்த்து வியந்தான் சுகந்தன் .
சொற்பொழிவு முடிந்ததும் அனைவரும் கரகோஷம் எழுப்பினர்.
அதற்குப் பிறகு அவரவர் அவரவர் திறமைகளை காட்டினர்.
பெண்கள் குழுக்களாக சேர்ந்து பாடல்களுக்கு நடனமாடினர். ஆண் பெண் ஜோடி ஜோடியாக நடனமாடினர். சாதனா, விஜயா இருவரும் சேர்ந்து
“கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை….” என்ற பாடலுக்கு நளினமாக ஆடினார்கள்.
சாதனா ஏக்கமாக அவனை பார்த்தது போல அவனுக்கு ஒரு கணம் தோன்றியது. மறுகணம் அந்த பார்வை மாறி சாதாரணமாக மாறியது.
‘இவள் இன்னும் என்னை லவ் பண்ணிட்டு தான் இருக்கா. ஆனால் அதை என்கிட்ட ஒத்துக்க தான் மனசு இல்லை.’ என்று நினைத்துக் கொண்டான் சுகந்தன் .
அவளது அழகிலும் நளினமான நாட்டியத்திலும் சொக்கிப் போனான் அவன். அவளை அணைத்து அவள் அழகை அவளுக்கு சொல்ல வேண்டும் என்று கைகள் பரபரத்தன. வாய்ப்புக்காக காத்திருந்தான்.
நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் சாப்பிட சென்றனர். அசைவ உணவில் கோழி பிரியாணி முதல் சைவ உணவில் வடை பாயசம் வரை அங்கு வரிசையாக பாத்திரத்தில் சூடாக வைக்கப்பட்டிருந்தன. அதற்கு பக்கத்தில் நறுக்கி வைக்கப்பட்ட பழங்கள், ஐஸ்கிரீம், இனிப்பு வகைகள் என்று அனைத்தும் இருந்தன. சாப்பிட்ட சிறிது நேரத்தில் அனைவரும் உணவை பாராட்டினர்.
சாப்பிட்டு முடித்து விட்டேன் கை கழுவும் இடத்தில்
“இந்த தடவை யார் எந்த ஹோட்டலில் ஃபுட் ஆர்டர் பண்ணது?” என்று கேட்டார் ஒரு பெண்மணி.
“சஞ்சனா சிஸ்டர் சாதனா இருக்காங்க இல்லையா? அவங்க அப்புறம் கார்த்திக் பிரெண்ட் சுகந்தன் ரெண்டு பேரும் சேர்ந்துதான் ஆர்டர் பண்ணி இருக்காங்க.” என்று விஜயா பதில் கொடுத்தாள்.
“ஃபுட் ரொம்ப நல்லா இருக்கு.”
“ஆமாம் அவங்க நேர்ல போய் சாப்பிட்டு பார்த்து ஆர்டர் பண்ணாங்க.”
“ஓ அப்படியா? நல்ல ஐடியாதான். சாதனா..” என்று கூப்பிட்டார் அந்தப் பெண்மணி.
சாதனா அங்கு வந்தாள்.
“சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு. உன் கூட யாரு வந்தா?” என்று கேட்டார்.
அவள் “அது அது….” என்று இழுக்கும் பொழுதே அங்கு வந்தான் சுகந்தன் .
“நான் தான். நானும் இவங்களும் போய் தான் சாப்பிட்டு பார்த்து செலக்ட் பண்ணி வாங்கிட்டு வந்தோம்.” என்றான்.
“எமி புட்.” என்று பாராட்டி விட்டு அவர் சென்று விட்டார். விஜயாவும் அந்த பெண்மணியும் சென்றுவிட அந்த இடத்தில் இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் இல்லை.
சாதனா நகர முயற்சிக்க அவள் கையை பிடித்தான் சுகந்தன் . அவள் திகைத்து அவனை பார்த்தாள்.
“நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா? இந்த லைட் கிரீன் கலர் சாரி, குண்டுமல்லி, இந்த குண்டுமல்லி போலவே இருக்கிற இந்த முத்துமாலை எல்லாம் உன்னோட அழகுக்கு அழகு சேர்க்குது.” என்று அவளை வர்ணித்து கொண்டிருந்தான்.
அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு செல்லவேண்டும் என்று ஒரு மனம் நினைக்க இன்னொரு மனம் அவனிடம் மயங்கிக் கொண்டிருந்தது. அவள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.
“இந்த ஜிமிக்கி எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா?” என்று அவள் ஜிமிக்கி யை ஒரு விரலால் தொட்டு ஆட்டினான். அதே ஒற்றை விரலால் அவள் கண்ணத்தில் மெல்ல ஒரு தட்டு தட்டினான். அவள் அவனை தடுக்கவில்லை.
அவள் அருகில் சென்று அவள் கன்னத்தில் தன் இதழை பதித்தான். கண்ணத்தில் பட்ட ஈரத்தை உணர்ந்த அவள் தன் கைகளை கொண்டு அவன் மார்பை தொட்டு அந்தபக்கம் தள்ளினாள். ஆனால் அதில் சிறிதும் சக்தி இல்லை. அவன் மார்பில் பட்ட கையை பிடித்துக்கொண்டு “சாதனா” என்றான். அவன் கண்ணில் ஒரு கெஞ்சல் ஏக்கம் தெரிந்தது அவள் கண்ணில் ஒரு தவிப்பு தெரிந்தது.
அவன் மீது இருந்த தன் பார்வையை தாழ்த்திக்கொண்டு அவன் கையை உதறிவிட்டு அந்த இடத்திலிருந்து வேகமாக வந்தாள்.
இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சனா
“ஏதாவது பேசி பிரச்சனையை தீர்ப்பாங்கன்னு பார்த்தா ஒண்ணுமே பேசல.” என்றாள் சஞ்சனா ஏமாற்றமாக.
“அவங்க வாய் பெருசா பேசல. ஆனாலும் அவங்க ரெண்டு பேரோட கண்ணும் நிறைய பேசி இருக்கும். சாதனா கண்டிப்பா டிஸ்டர்ப் ஆகி இருப்பாங்க. நீ கவலைப்படாதே ரெண்டு பேரும் கூடிய சீக்கிரம் சேர்ந்து விடுவாங்க. அவங்களுக்குள்ள இருக்கிற காதல் அவர்களை சேர்த்துவிடும்.” என்றான் விக்ரம் உறுதியாக.