சீட்டில் தலை சாய்ந்து படுத்தாள் மித்ரா. “போகும் காரியம் நல்லதா நடக்கணும் கடவுளே. அங்க இருக்குறவங்க எல்லாம் எப்படி இருப்பாங்களோ? என்ன சொல்லுவாங்களோ? அந்த ஊர் எப்படி இருக்குமோ? அப்பா பட்டிக்காடுன்னு சொல்றாங்க. கொஞ்சம் அவரச பட்டு கிளம்பிட்டேனோ? அப்பாவையும் கூட்டிட்டு வந்துருக்கலாமோ? ச்ச ச்ச என்ன மித்ரா நீ? அதுக்குள்ளே ஜெர்க் ஆகலாமா? போற, நினைச்சதை சாதிக்கிற”, என்று தனக்குள் சொல்லி கொண்டாள்.
பஸ் சென்னையை விட்டு தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. மெதுவாக தூக்கம் மித்ராவை சுழற்றியது. அப்படியே கண் மூடி தூங்க ஆரம்பித்தாள்.
அதே நேரம் தன்னுடைய வீட்டில், தன்னுடைய அறையில், கட்டிலில் மல்லாந்து படுத்து கிடந்த பார்த்திபன், டிவி சேனலை தொடர்ந்து மாற்றி கொண்டே இருந்தான்.
“ஏண்டா எடு பட்ட பயலே, இன்னும் அந்த டீவியை அணைக்காம பொசுக்கு, பொசுக்குன்னு மாத்திட்டு கிடக்க. கொஞ்ச நேரமாவது மனுஷியை தூங்க விடுறியா?”, என்று கேட்டாள் அதே அறையில் இன்னொரு கட்டிலில் படுத்திருந்த செண்பக வள்ளி. பார்த்திபனின் பாட்டி.
அவளை திரும்பி பார்த்த பார்த்திபன் “ஏய் கிழவி, நீ நாள் முழுவதும் தூங்கிட்டு தான இருக்க? என்னமோ வேலை செஞ்சு கிழிக்கிற மாதிரி தான். அதனால, என்கூட சேந்து முழிச்சிரு. சீக்கிரம் மோச்சம் கிடைக்கும்”, என்று சொன்னான்.
“என்னை அனுப்பணும்னு தான, நீ கங்கணம் கட்டிக்கிட்டு இருக்க? அவ்வளவு சீக்கிரம் பொய்ற மாட்டேன் ராசா. உனக்கு கல்யாணத்தை செஞ்சு வச்சு, உன்னை வர போற மவராசி விளக்க மாத்தால, நாலு சாத்து சாத்துறதை பாத்த பிறகு தான், என் கட்டை வேகும் பேராண்டி”
“நானா வேண்டாம்னு சொல்றேன். எனக்கும் வயசு ஆகுதே. ஒரு பொண்ணை பிடிச்சு என் தலையில கட்டுனா நானும் சந்தோசமா, அவ கூட டூயட் பாடிகிட்டு இருப்பேன். இப்ப பாரு நடு சாமத்துல, இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்குற, உன்கூட கடலையை போட்டுக்கிட்டு இருக்கேன். எல்லாம் என் கிரகம்”, என்று சலித்து கொண்டான் பார்த்திபன்.
“கல்யாணத்துக்கு அலையுற? நாளைக்கு உங்க அப்பன் கிட்ட சொல்றேன். உனக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பாக்க ஆரம்பிச்சா, ஊர்ல இருக்க அத்தனை பொண்ணுகளும், எனக்கு எனக்குன்னு வெக்கமே இல்லாம வீட்டு வாசல்ல வந்து நிக்குறாளுக. ஏண்டா பேராண்டி, எப்படி டா எல்லா பொண்ணையும் சரி கட்டி வச்சிருக்க?”
“அசிங்கமா பேசாத பாட்டி. நான் தெருவுல நின்னு, எந்த பொண்ணுட்டயாவது பேசுறதை பாத்துருக்கியா? என் பொண்டாட்டியை தவிர வேற யார் மேலயும் என் சுண்டு விரல் கூட படாது. ஊர்ல சொல்றவங்க பேச்சை நம்பாத பாட்டி. சும்மா எல்லா பொண்ணுங்களையும், பாக்க மட்டும் தான் செய்வேன். அப்படியே என் அழகுல அவளுக மயங்கி விழுந்துறாளுக. அவங்களா தேடி வந்து பேசுனா என்ன செய்ய?”
“என்ன செய்றதா? சும்மா நடிக்காத பார்த்தி, நீ அப்படியே உங்க தாத்தா மாதிரி தான். எவ கிட்டயும் நின்னு பேச மாட்ட. அது தெரியும். ஆனா, கண்ணாலேயே அவளுகளுக்கு நூல் விடுறது தான உன் வேலை. எல்லாருக்கும் தெரியும் டா பேராண்டி, உன்னை பத்தி”
“சரி விடு. நான் பாக்கலைன்னா எல்லார் மனசும் கஷ்ட படும் பாட்டி”
“ரொம்ப பெருந்தன்மை தான். அந்த டிவி பொட்டியை ஆப் பண்ணு. எனக்கு தூக்கம் வருது”
“முடியாது போ கிழவி. நீ படுத்து தூங்கு. தொண தொணன்னு பேசாத. இப்படி பேசி பேசியே தான், எங்க தாத்தாவை சீக்கிரம் மேல அனுப்பிட்ட. உன்னை எவன் என்னோட ரூம்ல வந்து படுக்க சொன்னது? வயசு பையன் தனியா இருக்கட்டும்ன்னு நினைக்காம, என்னோட ரூம்ல வந்து படுத்துக்கிட்டு என்னை உயிரை வாங்குற?”
“எனக்கு மட்டும் தலை எழுத்தா? இப்படி தூங்காம உக்காந்து உங்கிட்ட ஒரண்டையை இழுக்க? எல்லாம் உன்னால தான். எடுபட்ட நாயே, விட்டா சுவர் ஏறி குதிச்சு ஓடி போற? கூட இருக்க கழுதைகளை கூட்டிட்டு படம் பாக்க போறேன், அங்க போறேன், இங்க போறேன்னு எவனையாவது மண்டையை உடைச்சிட்டு, பஞ்சாயத்துன்னு வந்து நிக்குற. அதான் உன்னை காவல் காக்க இங்க வந்து படுத்து தொலைச்சிருக்கேன்”
“சரி சரி உன் வாயை மூடு. நான் ஆப் பண்ணுறேன்”, என்று சொல்லி விட்டு அணைத்து விட்டான் பார்த்திபன்.
பாட்டியும் அமைதியாக படுத்து விட்டாள்.
“நீ காவலுக்கு இருந்தா, என்னால போக முடியாதா என்ன? இரு கிழவி கொஞ்ச நேரத்துல போய் காட்டுறேன்”, என்று நினைத்து கொண்டு தக்க சமயத்தை பார்த்து கொண்டிருந்தான்.
அந்த சமயம் வந்தது. வெளியே விசில் சத்தம் கேட்டது. “பாண்டி வந்துட்டான். இப்ப போகலாம்”, என்று நினைத்து மெதுவாக எழுந்து, பூனை போல் கதவு அருகே நடந்து போனான்.
கதவை திறக்க கொண்டியில் கை வைத்தான் பார்த்திபன்.
“நீ கொண்டியை மட்டும் தான் பார்த்திபா கழட்ட முடியும். ஆனா சாவி என்கிட்ட இருக்கு”, என்று கண்களை திறக்காமலே பதில் சொன்னாள் பாட்டி.
மறுபடியும் அதே இடத்தில் வந்து படுத்தான்.
“நீ இப்படி எதாவது செய்வன்னு தெரிஞ்சு தான், நான் இங்க வந்து படுத்துருக்கேன் பேராண்டி. காலைல தான் நீ வெளிய போக முடியும்”, என்று அதே போல் கண்களை திறவாமல் சொன்னாள்.
“ஏன் கிழவி, இப்படி என் உயிரை வாங்குற?”, என்று கத்தினான் பார்த்திபன்.
“நீ எங்க உயிரை வாங்குறதை விடவா, நான் வாங்குறேன். மூடிட்டு படு டா”, என்று சொல்லி விட்டு படுத்து விட்டாள் பாட்டி.
“எல்லா வழியையும் அடைச்சிட்டாங்களே”, என்று நொந்து போய் படுத்தான் பார்த்திபன்.
பாட்டியை திரும்பி பார்த்தவன் ஒரு யோசனையுடன் “பாட்டி”, என்று அழைத்தான்.
“என்ன டா?”
“இன்னைக்கு மட்டும் விடேன். நான் உனக்கு நாளைக்கு லட்டு வாங்கி தரேன்”, என்று ஐஸ் வைத்தான் பார்த்திபன்.
“உன்னை வெளியே விட கூடாதுனு, உங்க அப்பன் நேத்தே எனக்கு நிறைய லட்டு வாங்கி கொடுத்துட்டான் பேராண்டி. தூங்க விடு”
“தூங்கி தொலை. பாரு உன் கனவுல தாத்தா வராம, வேற ஆள் தான் வர போறான். இது என் சாபம்”
“நல்லதா போச்சு பார்த்திபா. உன் சாபம் பழிக்கட்டும். உங்க தாத்தா மூஞ்சை பாத்து போர் அடிச்சு போச்சு டா” என்று சொல்லி அவனை கலாய்த்தாள் பாட்டி.
“எல்லாம் தலை விதி. நாளைக்கு புது சாவி செய்ய கொடுக்கணும்”, என்று நினைத்து கொண்டு படுத்தவன் தூங்கியே விட்டான்.
காலையில் அவன் முகத்தில் தண்ணீர் ஊற்றப்பட்டது. திடுக்கிட்டு கண் விழித்தான் பார்த்திபன்.
எதிரே பத்ரகாளி போல அவனை முறைத்துக் கொண்டு நின்றாள் பார்வதி. அவன் அன்னை.
“ஐயோ சொர்ணாக்கா”, என்று நினைத்து கொண்டு “எம்மா, இப்ப எதுக்கு இப்படி தண்ணியை ஊத்துன? அறிவு இருக்கா கொஞ்சமாவது?”, என்று கத்தினான் பார்த்திபன்.
“உன்னை எல்லாம் பிள்ளையா பெத்தா, அறிவு எங்க இருக்கும்? ரொம்ப நேரமா எழுப்பிட்டு இருக்கேன். எந்திக்காம படுத்து கிடக்க. உங்க அப்பா அங்க கத்திக்கிட்டு இருக்காரு. போய் உர மூட்டை வாங்கிட்டு வா”
“அதான் போறேன்னு நேத்தே சொல்லிருந்தேன்ல. அதுக்குள்ளவா நேரம் ஆகிட்டு?”, என்று கேட்டு கொண்டே எழுந்தான் பார்த்திபன்.
“மணி நாலு ஆகுது”, என்று சொன்னாள் பார்வதி.
“எட்டு மணிக்கு திறக்குற கடைக்கு, எதுக்கு மா, நாலு மணிக்கு போக சொல்ற?”
“உன்னை இந்த ஊர்ல இருந்து, விடியும் முன்னாடி அனுப்பலைன்னா, நீ ஒவ்வொரு பொண்ணையும் பாத்து பல்லை இளிச்சிக்கிட்டு, பதினோரு மணிக்கு தான் கடைக்கு போவ. உன்னை பத்தி தெரியாதா? எந்திச்சு கிளம்பு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் பார்வதி.
“ச்சே இப்படி கொடுமை படுத்துறாங்களே. நைட் இந்த கிழவி தூங்க விடலை. இப்ப இந்த சொர்ணாக்கா”, என்று நினைத்து கொண்டே பாட்டியை பார்த்தான்.
அங்கே வள்ளி பாட்டி குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தாள்.
“இரு இரு எனக்கு பொண்டாட்டி வரட்டும், அவ கூட சேந்துக்கிட்டு உன்னையும், இந்த கிழவியையும் நாடு கடத்துறேன்”, என்று சொன்னான் பார்த்திபன்.
“இப்ப வாயை மூடிட்டு குளிக்க போகலைன்னா, சுடு தண்ணியை ஊத்திருவேன் பார்த்தி”, என்று கத்தினாள் பார்வதி.
“ஆத்தாடி, இவ செஞ்சாலும் செய்வா”, என்று நினைத்து கொண்டு பாட்டியை பார்த்தான்.
“சும்மா ஓலை பாய்ல, நாய் நோண்ட மாதிரி பொலம்பிகிட்டு கிடக்க? அந்த பேனை கொஞ்சம் கூட்டி வச்சிட்டு இங்க இருந்து எந்திச்சு போடா பேராண்டி”, என்று சொல்லி விட்டு மறுபடியும் தூக்கத்தை தொடர்ந்தாள் வள்ளி பாட்டி.
“படுத்துறாங்களே, ரெண்டு பேரும்”, என்று சொல்லி விட்டு எழுந்து குளிக்க போனான் பார்த்திபன்.
அதே நேரம், பஸ் விட்டு இறங்கினாள் மித்ரா.
அடுத்து “எந்த பஸ் பிடிக்கணும்?”, என்று அப்பாவுக்கு போன் போட்டு கேட்டு, அந்த கிராமத்துக்கு போகும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள்.
“அங்கே போக இரண்டு மணி நேரம் ஆகும்”, என்று சொன்னார் ட்ரைவர். “டிக்கட் எடுக்கும் போது சரியா இறக்கி விட்டுருங்க”, என்று சொன்னாள் மித்ரா.
நடு காட்டில் பஸ் நிறுத்திய டிரைவர் “இது தான் மா நீங்க கேட்ட ஊரு, இறங்குங்க”, என்று சொன்னார்.
“என்னது ஊரா? காடு மாதிரி இருக்கு”, என்று அலறினாள் மித்ரா.
“ஹ்ம்ம் ஆமா, இங்கன இறங்கி, அதோ அந்தா ஒத்தையடி பாதை வழியா நடந்து போனேன்னா ஊர் வந்துரும்”
“எவ்வளவு தூரம் நடக்கணும்?”, என்று கேட்டு கொண்டே இறங்கினாள் மித்ரா.
“அது எப்படியும் முக்கா மணிநேரம் ஆகும் மா”, என்று சொல்லி விட்டு பஸ்ஸை கிளப்பினார். அடுத்து அந்த பாதையில் ஒரு திகிலுடன் நடக்க ஆரம்பித்தாள் மித்ரா.
கொஞ்ச தூரம் நடந்து போகும் போது, எதிரே ஒருத்தன் நடந்து வந்தான். அவனை பாத்தாலே முரடன் போல இருந்தது. “எதுக்கும் அவன் கிட்ட விசாரிப்போம்”, என்று நினைத்து கொண்டு அவன் அருகில் சென்றாள்.
“ஊருகுள்ள போகணும். இன்னும் ரொம்ப நேரம் நடக்கணுமா?”, என்று கேட்டாள் மித்ரா.
அவளை மேல் இருந்து கீழ் வரை ஒரு மார்கமாக பார்த்தான் அவன்.
அவன் பார்வையில் எரிச்சலானது மித்ராவுக்கு. “எதுக்கு இப்படி பாக்குறான்?”, என்று நினைத்து கொண்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் நடக்க ஆரம்பித்தாள்.
ஆனால் அவன், அவளை வழி மறித்தான். பயந்தே போனாள் மித்ரா.
“என்ன கண்ணு? இப்படி அழகா அம்சமா இருந்துட்டு ஒத்தை அடி பாதையில தனியா வரலாமா? அப்ப எங்களுக்கு எல்லாம் ஒரு மாதிரி ஆகாதா? நான் வேணும்னா உன்னை தூக்கிக்கட்டுமா?”, என்று கேட்டான் அவன்.
அவனை முறைத்து விட்டு, அவள் நடக்க ஆரம்பிக்கும் போது, அவள் வாயை பொத்தினான் அவன்.
ரெண்டு பைகளையும், அவளிடம் இருந்து பிடுங்கி கீழே எறிந்து விட்டு, அவளை ஒரு புதருக்குள் இழுத்து சென்றான்.
உள்ளே போய் அவளிடம், தவறாக நடக்க முயன்றவனை ஒரே அடியில் வீழ்த்தியவள், அவனுடைய கையில் தன்னுடைய விரலால் ஒரு குத்து வைத்தாள். அடுத்த நொடி “ஆ அம்மா”, என்று அலறிய படி கீழே விழுந்தான்.
“மூச். வாயை திறந்த கொன்னுருவேன். என்கிட்டயே வால் ஆட்டுறியா? கத்தாதே”, என்று சொல்லி விட்டு அங்கு இருந்த கல்லில் அமர்ந்து, அவன் சங்கில் கால் வைத்தாள் மித்ரா.
அப்போது வண்டியில் வந்த பார்த்திபனின், கண்ணில் கீழே கிடந்த இரண்டு பைகள் பட்டது.
“என்ன இங்கன கிடக்கு? பையை பாத்தா நம்ம சைட் ஆளுக மாதிரி தெரியலையே. எங்க போய்ட்டாங்க? யாரா இருக்கும்?”, என்று நினைத்து அங்கேயே வண்டியை நிறுத்தினான்.
அப்போது அவன் காதில் மெதுவாக, முனங்கல் சத்தம் கேட்டது.
“என்ன சத்தம்?”, என்று கேட்டு கொண்டே சத்தம் வந்த பாதையை நோக்கி நடந்தான் பார்த்திபன்.
ஒரு புதருக்கு அடியில் எதுவோ அசைந்தது. பயந்து போய் கொஞ்சம் திகிலுடன், அருகில் சென்றான். அங்கே அவனுடைய கழுத்தில் காலை வைத்து கொண்டு அமர்ந்திருந்தாள் மித்ரா.
இவனை பார்த்ததும் “அடுத்தது நீயா டா? வா டா, இன்னைக்கு ரெண்டு பேரும் செத்தீங்க டா”, என்று சொல்லி கொண்டே எழுந்தாள் மித்ரா.
“ஐயோ, நான் உங்களை காப்பாத்த தான் வந்தேன்”, என்று சொன்னான் பார்த்திபன்.
காதல் தொடரும்….