நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அறையிலிருந்த சுகந்தன்காதில் அவ்வளவும் விழுந்தது. அறையிலிருந்து வெளியே வந்தான்.
அதற்குள் தாமரை சாதனா இடம்
“என்ன அப்படியா சத்தம்போட்ட? வீட்டு மாப்பிள்ளை மேல உனக்கு சுத்தமா மரியாதை கிடையாதா?” என்று கோபத்தை காட்டினார்.
“இல்லை அத்தை அவர் சொன்னது எல்லாமே உண்மை கிடையாது.”
“அப்படின்னா என்ன அர்த்தம்?”
“அது அது வந்து… அவங்க அப்பாகிட்ட பணம் கேட்க சொன்னது உண்மைதான்.” என்றாள் தயங்கியபடி.
“அப்புறம் சுகன்யா கல்யாணத்துல சுகந்தன் கடன் வாங்கி கஷ்டப்படுறாருன்னு நீங்க சொன்னீங்களா இல்லையா?” என்று கேட்டான் சேகர்.
“ஆமாம் சொன்னேன். ஆனால் பொறுமையா தான் சொன்னேன். நீங்க சொன்ன மாதிரி கத்தவில்லை. இவனோட கஷ்டத்தை உங்களுக்கு புரிய வைக்க ட்ரை பண்ணினேன். அவ்வளவுதான். மத்தபடி மரியாதை இல்லாம நான் உங்ககிட்ட நடந்துகொள்ள வில்லை.” என்றாள்.
“நல்லா இருக்கே நீங்க சொல்றது. நான் சொன்னதை எல்லாம் நீங்க சொன்னதா ஒத்துக்கரிங்க. ஆனால் உங்க மேல எந்த தப்பும் இல்லையா?” என்று கேட்டான் சேகர்.
“நான் அதையெல்லாம் உங்கமேல குறையாக சொல்லல. சுகந்தன் கஷ்டத்தை உங்களுக்கு எடுத்து சொன்னேன். நீங்க தான் இப்போ அதை மாற்றி பேசுறீங்க. இனி பணம் கேட்க கூடாதுன்னு நான் சொல்லல. ஏற்கனவே அவன் கஷ்டத்தில் இருக்கிறான்ன்னு சொன்னேன். அதுவும் பொறுமையா தான் சொன்னேன். எந்த வகையிலும் எடுத்து எறிந்து பேசல.” என்றாள் சாதனா.
“ உனக்கு வயித்தெரிச்சல். சுகன்யாவுக்கு சுகந்தன்செய்யறதை பார்த்து வயித்தெரிச்சல். அதனாலதான் இப்படி பேசுற.” என்று கேட்டார் தாமரை.
“அத்தை அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை.”
“அப்படியா? அப்போ நீ பேசினதுக்கு இவர் கிட்ட சாரி கேளு.” என்றார் அவர்
தாமரை சொன்னதைக் கேட்டதும் சேகர் சாதனாவை ஏளனமாக பார்த்தான்.
அவன் பார்வையிலிருந்து ஏளனம் புரிந்த சாதனா “நான் இவர் சொன்ன மாதிரி பேசவே இல்லை. கத்தவும் இல்லை. மரியாதை இல்லாம எடுத்து எரிந்து பேசவும் இல்லை. அப்படி இருக்கும்போது நான் எதுக்கு சாரி கேக்கணும்?” என்று கேட்டாள் சாதனா.
தாமரை சேகரை பார்த்தாள்.
சேகர் “என்ன அத்தை அப்படி பாக்குறீங்க? அப்போ நீங்க என்னை நம்பல. இவங்க சொல்றதை நம்புறீங்க. அப்போ எனக்கு இந்த வீட்டில என்ன மரியாதை இருக்கு? நான் கிளம்பறேன். மரியாதை இல்லாத வீட்டில் எனக்கு என்ன வேலை? இனிமேல் இந்தப் பக்கமே வரமாட்டேன். உங்க பொண்ணை உங்க வீட்டிலேயே வச்சுக்கோங்க.” என்று கோபமாக வெளியே செல்ல முயன்றான் சேகர்.
“மாப்பிள்ளை மாப்பிள்ளை இருங்க.” என்று தடுத்தார் தாமரை.
“அப்போ இவங்க என் கிட்ட சாரி கேக்கணும்.” என்றான் அவன் விடாப்பிடியாக.
சாதனா கணவனை பார்த்தாள் .
“நீ எதுக்கு இந்த விஷயத்துல தலையிட்ட?” என்று கேட்டான் சுகந்தன்.
அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் சாதனா.
“என்னடா இப்படி பேசுற? உனக்காகதான் நான் அவர் கிட்ட பேசினேன். நீயே இப்படி பேசுற?” என்று கந்தனை பார்த்து கேட்டாள். சாதனா
“நான் தான் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம். உன் வேலையை பாருன்னு சொன்னேன் இல்ல? நீ எதுக்கு அவர்கிட்ட போய் பேசின?”
என்று சாதனாவை பார்த்து கத்தினான் சுகந்தன்.
அவ்வளவு நேரம் எல்லோரும் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த சுகன்யா யார் பக்கம் பேசுவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
சேகர் பேசியதை கேட்ட சுகன்யா
“அம்மா” என்று அழ ஆரம்பித்து விட்டாள்.
ஆனால் “அழாதே அழாதே சுகன்யா. நிறைமாத கர்ப்பிணி நீ. இந்த நேரத்துல இப்படி அழக்கூடாது. உனக்கு ஏதாவது ஆகிட போகுது அழாதே.” என்று தாமரை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார்.
ஆனால் சுகன்யா கேட்பதாக இல்லை. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். அவள் அழுவதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த சேகர் மீண்டும் “என்ன அத்தை அன்னிக்கி கூட உங்களுக்கு இவர்களை விட நான் தான் முக்கியம்னு சொன்னீங்க. இப்போ சும்மா நின்னுட்டு இருக்கீங்க.” என்று அவரை உசுப்பி விட்டான் அவன்.
சேகருக்கு எப்பொழுதுமே சாதனா ஒரு பொருட்டே கிடையாது. கந்தனை அவள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டதாக நினைத்தான். மேலும் தாமரை சாதனாவை பலமுறை அவனை வைத்துக்கொண்டே குறை கூறுவதை அவன் கேட்டிருக்கிறான். எனவே மாமியார், கணவன் இருவரிடமும் மதிப்பு இல்லாதவள் அவள் என்று சாதனாவை பற்றி முடிவு கட்டியிருந்தான்.
‘இப்படி துளியும் மதிப்பில்லாத இவள் எனக்கு அறிவுரை சொல்வதா? இவளை இப்படியே விட்டு விட்டால் நமக்கு இந்த வீட்டில் மரியாதை இருக்காது. அதைவிட முக்கியமாக சுகந்தன்இடம் எந்த உதவியும் கேட்கவும் முடியாது. எனவே இவள் இனி என் விஷயத்தில் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு இவள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்டால் தான் இன்னொரு தரம் இது நடக்காது.’ என்று நினைத்து அவள் மரியாதை இல்லாமல் அவனிடம் சத்தம் போட்டாள் என்று மாற்றி பேசினான்.
“மாப்பிள்ளை கிட்ட மன்னிப்பு கேளு.” என்றார் தாமரை.
சுகந்தன்அமைதியாக இருந்தான்.
“என்னடா அமைதியா இருக்க? நான் தான் மரியாதையாதான் பேசினேன்u சொல்றேன் இல்ல?” என்று கேட்டாள் அவள்.
“ நீ எதுக்கு அவர்கிட்ட போய் பேசின?”
“என்னடா திரும்பத் திரும்ப இதையே கேட்டுட்டே இருக்க. உனக்காக தான் பேசினேன்.”
“நான் உன்னை கேட்டனா? இப்போ பாரு. பிரச்சனை பெருசு தான் ஆகி இருக்கு.”
“அப்போ நீயும் என்னை மன்னிப்பு கேட்க சொல்றியா?” என்று கலங்கிய கண்களுடன் கேட்டாள். சாதனா
“ஆமா கேளு.”. என்று அவன் சொல்லவும் திகைத்தாள்
அவள் “கேட்க முடியாது. கேட்கவே மாட்டேன். அப்படி கேட்டால் நான் தப்பு பண்ணதா நானே ஒத்துக்கொண்டதா ஆயிடும். நான் அதை செய்யவே மாட்டேன்.” என்றாள் உறுதியாக.
“பாத்தீங்களா அத்தை. எப்படி பேசுறாங்கன்னு இப்போ சொல்லுங்க. இந்த வீட்டுக்கு என்னோட உறவு வேண்டுமா? இல்லை இவங்க உறவு வேண்டுமா? நீங்களே முடிவு பண்ணுங்க. சொல்லுங்க. நானா இவங்களா?” என்று கேட்டான் சேகர்.
தாமரை “.நீங்க இருங்க மாப்பிள்ளை” என்று சொல்லவும்
“அப்போ நான் வெளியே போகணுமா?” என்று கேட்டாள். சாதனா
“ஆமாம் மன்னிப்பு கேட்டுட்டு இங்கே இருக்கிறதுனா இரு. இல்லைனா வெளியே போ. வீட்டு மாப்பிள்ளையை மரியாதை இல்லாம பேசிட்டு ஒரு சாரி கூட கேட்க மாட்டியா?” என்று இவளை பார்த்துகோபமாக கேட்டார் தாமரை.
சாதனா கணவனை பார்த்தாள்
“என்னடா அமைதியா இருக்க? உனக்கும் இவங்க பேசுவதில் சம்மதம் தானா?” என்று கேட்டாள்.
அவன் கலங்கிய கண்களை அவளுக்கு காட்டாமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டு “ஆமாம்” என்றான்.
“என்னை என்னையா வெளிய போக சொன்ன? எனக்கு தேவை தாண்டா. என் அப்பா பேச்சை கேட்காம உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் இல்ல எனக்கு தேவைதான்.” என்று சொன்னவள் அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்காமல் அறைக்குச் சென்று துணிமணிகளை எடுத்துக்கொண்டு இரவு 11. மணிக்கு வெளியில் சென்றாள்
“அண்ணி” என்ற சுகன்யாவின் குரல் லேசாக அவள் காதுகளில் ஒலித்தது. ஆனால் அவள் திரும்பவில்லை.
எப்படி பஸ் ஏறி நடந்து வந்தாளோ அவளுக்கே தெரியாது. இரவு 12 மணிக்கு தாய் வீட்டின் கதவை தட்டினாள் சாதனா.
தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்து கதவை திறந்தார் கார்த்திகேயன். மகளை கண்ணீரும் சூட்கேஸ்ம் ஆக பார்த்த அவர் பதறியபடி
“என்ன? என்ன சாதனா? என்ன ஆச்சு? நடுராத்திரியில் அழுதுகிட்டு வந்திருக்க?” என்று கேட்டார்.
இவரது பின் வந்துகொண்டிருந்த கலைவாணி
“என்ன? சாதனாவா?” என்று அவரை பின்னுக்கு தள்ளி அவர் முன்வந்து “சாதனா இந்த நேரத்துல நீ மட்டும் தனியாவா வந்த? உள்ள வா.” என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.
அவள் கையிலிருந்து சூட்கேசை வாங்கினார் கார்த்திகேயன்.
உள்ளே வந்த சாதனா பொத்தென்று சோபா மீது அமர்ந்தாள்.
“அப்பா அம்மா உங்க ரெண்டு பேர் பேச்சையும் கேட்காம இவனை கல்யாணம் பண்ணிக் கொண்டது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரிஞ்சுக்கிட்டேன். என்னை வெளியே போன்னு சொல்லிட்டான்.” என்று கதறிக் கதறி அழுதாள்.
“வெளிய போன்னு சொன்னானா? அதுவும் இந்த நேரத்துலயா? எவ்வளவு திமிர் இருக்கணும் அவனுக்கு! என் பொண்ணை வீட்டை விட்டு வெளியே போக சொன்னானாம்.” எ.ன்று கொந்தளித்துக் கொண்டிருந்தார் கார்த்திகேயன்
“என்னடி சொல்ற? நிஜமாவா?” என்று நம்ப முடியாமல் கேட்டார் கலைவாணி.
“ஆமாம் அம்மா.” என்றாள் அழுதபடி சாதனா.
“கேட்க ஆள் இல்லைன்னு நினைத்தானா? அப்பன் நான் குத்துக் கல்லு மாதிரி இருக்கிறேன். அவனை என்ன பண்றேன் பாரு.” என்று ஆவேசமாக சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினார்.