நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
விடுமுறை நாட்கள் முடிந்து தமிழ் பள்ளிக்கு செல்ல வேண்டிய ஞாயிற்றுக்கிழமைs வந்தது .
‘தமிழ் ஸ்கூலில் இவனை பார்க்கணுமே. பார்த்தாலும் எதுவும் பேசக்கூடாது.’ என்று ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். சாதனா
வகுப்பறைக்கு வந்த சாதனா அங்கு அமர்ந்து இருந்த பெண்ணை பார்த்து திகைத்தாள்.
“ஹாய் ஜெனிஃபர் நீங்க ஐந்தாம் நிலையில் தானே அசிஸ்டன்ட் டீச்சராக இருந்திங்க. இன்னிக்கி இங்கே வந்து இருக்கீங்க? என்ன விஷயம்?” என்று கேட்டாள்.
“அதுவா? இங்க ஏற்கனவே அசிஸ்டன்ட் டீச்சரா இருந்த சுகந்தன்ஐந்தாம் நிலையில் அசிஸ்டன்ட் டீச்சரா இருக்கார்.”
“ஓ அப்படியா? ஏன்? என்ன காரணம்ன்னு தெரியுமா?” என்று மனதில் தோன்றியதை வெளிப்படையாக கேட்டுவிட்டாள்.
“ஏன்u தெரியல. அட்மின்ல சொன்னாங்க. அதனால நான் இங்க வந்துட்டேன்.” என்றாள் ஜெனிபர்.
“சரி எதுவா இருந்தாலும் பரவாயில்லை. நீங்க வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் ஜெனிபர். கிறிஸ்மஸ் எல்லாம் எப்படி போச்சு?”
“ரொம்ப நல்லா போச்சு சாதனா.” என்றாள் ஜெனிபர்.
அதற்கு பிறகு இருவரும் சேர்ந்து பாடம் எடுக்க ஆரம்பித்தனர். இப்படியே அவளது நாட்கள் இன்பம், துன்பம், சுவாரசியம் என்று எதுவுமில்லாமல் இயந்திரத்தனமாக சென்று கொண்டிருந்தது.
இப்படியே 2 மாதங்கள் சென்றன.காலை சாதனா எழுந்து கீழே வந்தாள். சஞ்சனா கடிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு மணியை ஒரு மணி நேரம் கூட்டிக் கொண்டிருந்தாள். அப்போது விக்ரம் வந்தான்.
“விக்ரம் ஹாலில் இருக்கும் பெரிய கடிகாரத்தில் டைம ஒன்னவர் ஜாஸ்தியா வைங்க.” என்று சொன்னாள்.
“சரி. Day light saving (பகல் ஒளி சேமிப்பு) ஆரம்பிச்சுடுச்சு இல்ல?” என்று கேட்டபடி ஒரு ஸ்டூல் போட்டு ஏறி அந்த பெரிய கடிகாரத்தின் முட்களை நகர்த்தி ஒரு மணி நேரம் கூட்டி வைத்தான்.
இதை சமையலறையிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த கலைவாணி
“என்ன சஞ்சனா? பண்ணிட்டு இருக்க?”. என்று புரியாமல் கேட்டார்
“அது வாம்மா day light saving. இதை டே ளைட் சேவிங்னு சொல்லுவாங்க. ஒவ்வொரு வருஷமும் மார்ச் மாசம் ஒரு மணி நேரம் கம்மி பண்ணுவாங்க. அப்புறம் நவம்பர் மாசம் ஒரு மணி நேரம் ஜாஸ்தி பண்ணி அதை சரி பண்ணிடுவாங்க. இப்படி பண்ணினா நமக்கு சூரிய வெளிச்சம் பகலில் அதிகமாக கிடைக்கும். அதனால இதை பண்றாங்க.” என்று விளக்கம் கொடுத்தாள் சஞ்சனா.
“அப்படியா? என்னடி இது அதிசயமா இருக்கு?” என்று வியந்தார் கலைவாணி.
“ஆமாம் அம்மா ஃபர்ஸ்ட் டைம் பண்ணும் போது அப்படி தோணும். ஆனால் இது நல்ல ஐடியாதான். நமக்கு வசதியாயிருக்கும்.” என்றாள் சஞ்சனா.
“அப்போ இன்னிக்கி நமக்கு ஒரு மணி நேரம் சட்டென்று குறைந்துவிடும். அதனால வேகவேகமா வேலை செய்யணும்.”. என்றார் கலைவாணி
“ஒரு மணி நேரம் தானே அம்மா. அதெல்லாம் ஒன்னும் தெரியாது. நீங்க எப்போதும் போல செய்யுங்க.” என்றாள் சஞ்சனா.
நெடு நாட்களுக்கு பிறகு தட்பவெப்பநிலை இதமாக இருக்க சஞ்சனா மதியம் 4 மணி அளவில் குழந்தை விஷாலை ஸ்ட்ராலரில் வைத்து அதை தள்ளியபடி நடந்து கொண்டிருந்தாள். அவளுடன் சாதனா, கலைவாணி இருவரும் நடந்து கொண்டிருந்தார்கள்.
“இன்னிக்கு வெதர் ரொம்ப நல்லா இருக்கு. அங்க பாரேன் சஞ்சனா. அந்த மரத்தில் ஒரு இலை கூட இல்லை. மரம் முழுவதும் வெள்ளைப்பூக்கள் மட்டும் இருக்கு. பார்க்க ரொம்ப அழகா இருக்கு.” என்று கலைவாணி இயற்கை அன்னையை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.
“ஆமா மா இதுக்கு பேரு ‘செர்ரி ப்லாசம்’. இப்படி பூக்கள் வசந்த காலத்தில் பூக்கும்.”
“அப்படியா? வசந்தகாலம் வந்திருச்சா?”
“ஆமா மா. நீங்க அக்டோபர் மாசம் வந்தீங்க. அப்போ இங்க இலையுதிர் காலம் நடந்தது. செப்டம்பர்ல இருந்து நவம்பர் வரைக்கும் இலையுதிர் காலம். டிசம்பர்ல இருந்து பிப்ரவரி வரை குளிர்காலம். மார்ச்ல இருந்து மே மாசம் வரைக்கும் வசந்த காலம். அப்புறம் ஜூன் மாசத்துல இருந்து ஆகஸ்ட் மாதம் வரைக்கும் வெயில் காலம்.
நீங்க வந்தப்போ இலையுதிர் காலமா இருந்தது. நீங்க கூட கலர்கலரா இலையெல்லாம் பாத்தீங்களே. போட்டோ கூட எடுத்து வச்சிருக்கோம் இல்லையா?”
“ஆமா ஆமா. மஞ்சள் கலர் மரம், சிகப்பு கலர், ஊதா கலர் மரம், ஆரஞ்சு கலர் மரம், பிரவுன் கலர் மரம் எல்லா மரத்தின் பக்கத்திலும் போட்டோ எடுத்து வச்சிருக்கேன். ஊருக்கு போனதும் சொந்தக்காரர்களுக்கு காட்டுவேன்.” என்றார் கலைவாணி பெருமையாக.
“அதுதான் இலையுதிர் காலம். அதுக்கப்புறம் இலை கொட்டி போய் வெறும் குச்சி குச்சியா மரம் இருந்தது இல்லையா? அப்போ கூட ரொம்ப குளிர்ச்சியாய் இருந்ததே. அதுதான் குளிர்காலம்.”
“ஆமா ஆமா. ஒருநாள் பயங்கரமா குளிரும். இன்னொரு நாள் இதமா இருக்கும்.”
“ஆமாமா டெக்சாஸ் அப்படித்தான் இருக்கும். இப்போ குளிர்காலம் முடிந்து வசந்த காலம் வந்துருச்சு பாருங்க.”
“வெதர் ரொம்ப நல்லா இருக்கு.”
“மரத்தில முதலில் பூக்கள் வரும். அதுக்கப்புறம் இலைகள் வரும். இப்போ நீங்க பார்க்கிற மரத்தில் அப்படி வந்தது தான் இந்த பூக்கள் எல்லாம்.” என்று அந்த வெள்ளை பூக்கள் மட்டுமே பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த வெள்ளை மரத்தை காட்டினாள் சாதனா.
“ஆமாண்டி. பார்க்க ரொம்ப அழகா இருக்கு. வா நாம எல்லாரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கலாம்.” என்று அந்த மரத்தின் கீழ் கலைவாணி, பேரன் விஷால், மகள் சஞ்சனா உடன் நிற்க சாதனா புகைப்படம் எடுத்தாள்.
அதற்கு பிறகு எல்லோரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
“அங்க வாங்க. இன்னொரு இடம் காட்டுறேன்.” என்று அழைத்து சென்றாள் சஞ்சனா.
அங்கு வரிசையாக பூக்கள் மட்டுமே கொண்ட வெள்ளைநிற மரங்களும் இன்னொரு பக்கம் வரிசையாக ஊதா நிற மரங்களும் இருந்தன. பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.
“ரொம்ப சூப்பரா இருக்குடி.” என்று அதிசயத்து விட்டு அந்த மரங்களின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
“எப்படி காஞ்சு போய் கிடந்த மரங்கள் எல்லாம் அழகா பூத்துகுலுங்கிக் கொண்டு இருக்கு.”. என்று அதிசயித்த அதேநேரம் மகள் சாதனாவை பார்த்தார்.
“எப்ப தான் என் பொண்ணு வாழ்க்கையும் இப்படி பூத்து குலுங்கும்ன்னு தெரியல.” என்று மனதில் நினைத்ததை இளையமகள் சஞ்சனாவிடம் சொன்னார்.
“கூடிய சீக்கிரம் நடக்கும். இந்த வசந்த காலம் அவளுக்கும் வசந்தத்தை தரும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.. நீங்க வேணா பாருங்க. நீங்க அவளைப் பற்றின கவலையை விட்டுட்டு இதையெல்லாம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க” என்றாள் சஞ்சனா.
கலைவாணி சற்றுத் தெளிந்தார்.
“உன் அப்பா வருகிறார் இல்லையா? வரட்டும். வந்ததும் நாம எல்லோரும் சேர்ந்து இந்த மரத்துக்கு நடுவுல நின்னு போட்டோ எடுத்துக்கலாம்.” என்றார் கலைவாணி.
“சரிமா கண்டிப்பா பண்ணலாம்.” என்றாள் சஞ்சனா.
சூட்கேசை தள்ளியபடி கார்த்திகேயன் வீட்டுக்குள் நுழைந்தார்.
“அப்பா” என்று கூப்பிட்ட படி சாதனா, சஞ்சனா இருவரும் அவரது இரு தோள்களையும் கட்டிக்கொண்டனர்.
விக்ரம் இன்னொரு சூட்கேசை தள்ளியபடி பின் வந்துகொண்டிருந்தான். கலைவாணி “உட்காருங்க” என்றார்.
அவர் சோபாவில் அமர்ந்தார்.
விக்ரம் அவர் கையில் இருந்த சூட்கேசையும் வாங்கி தன் இரு கைகளாலும் இரு சூட்கேசையும் தள்ளிக் கொண்டு சென்று கலைவாணியின் அறையில் வைத்தான்.
“எப்படி இருக்கீங்க மா?” என்று மகள்களை கேட்டார் கார்த்திகேயன்.
“நாங்க நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க?”
“நானும் நல்லா இருக்கேன்மா. என் பேரன் விஷால் எப்படி இருக்கான்?” என்று ஆர்வமாகக் கேட்டார்.
“அவன் சூப்பரா இருக்கான். இப்போ தூங்கிட்டு இருக்கான். பார்க்கிறீங்களா?”
“இல்லமா நான் போய் குளிச்சிட்டு வரேன். அப்புறம் பார்க்கலாம். அவன் தூங்கட்டும்.”. என்றார்
சூட்கேசை வைத்துவிட்டு விக்ரம் ஹாலிற்கு வந்து சோபாவில் அமர்ந்தான்.