எடுத்துவந்த பஞ்சு கொண்டு கசிந்து கொண்டிருந்த ரத்தத்தை துடைத்தபடி பேச ஆரம்பித்தான்.
“முதல் தடவை உன்னை இங்க பார்த்த போதே எல்லாத்தையும் சொல்லி இருப்பேன். ஆனால் அன்னிக்கி என்னை இங்க திடீர்னு பார்த்ததில் நீ ரொம்ப அதிர்ச்சியில் இருந்த. அதனால உனக்கு இன்னும் அதிர்ச்சி கொடுக்க வேண்டாம்னு சொல்லல. அதுக்கப்புறம் பார்த்த போதெல்லாம் சொல்லனும்னு நினைத்தேன். ஆனால் நீ என்னை சொல்ல விடல.”
“நீ அன்னிக்கு வெளியே போனதுக்கு அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?” என்று ஆரம்பித்து நடந்ததை சொன்னான்
சுகன்யா “அண்ணி” என்று சாதனாவை கூப்பிட்டாள். ஆனால் அவள் திரும்பவில்லை.
தேம்பி தேம்பி அழுது கொண்டு இருந்த அவள் “அம்மா “என்று கத்தினாள்.
“என்ன ஆச்சு சுகன்யா?” என்று அவளிடம் வந்தார் தாமரை.
“எனக்கு இடுப்பு வலிக்குது.” என்று இடுப்பை பிடித்துக்கொண்டாள் சுகன்யா.
நிற்க முடியாமல் அந்தப் பெரிய வயிறுடன் தரையில் அமர்ந்தாள்.
“இடுப்புவலி வந்திடுச்சா? இன்னும் 15 நாள் இருக்கு. அதுக்குள்ள வலிக்குதா?” என்றவர்
“ரொம்ப வலிக்குதா?” என்று பதறியபடி கேட்டாள்.
“ஆமாம். என்னால தாங்கவே முடியல.” என்று கத்த ஆரம்பித்தாள் சுகன்யா.
“மாப்பிள்ளை இவளை பாருங்க. நான் போய் ஒரு செட் டிரஸ் எடுத்து வச்சிக்கிறேன். நாம ஹாஸ்பிடல் போகலாம். சுகந்தா ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாம் சீக்கிரம் எடுத்துட்டு வா.” என்று சொல்லிவிட்டு அறைக்கு ஓடினார் தாமரை.
சுகந்தன்அறைக்கு ஓடி வந்து ரிப்போர்ட் எல்லாத்தையும் எடுத்து வைத்துக் கொண்டே தன் நண்பன் பிரகாஷுக்கு போன் செய்தான்.
அவன் எடுத்ததும்
“டேய் வீட்டில் ஒரு பிரச்சனை. சாதனா அம்மா வீட்டுக்கு இந்த நேரத்துல கிளம்பி போயிருக்கா. நீ கொஞ்சம் அவள் ஒழுங்கா வீடு போய் சேர்ந்தாளானு பாரு. பாத்துட்டு எனக்கு மெசேஜ் பண்ணு.” என்றான்.
அவன் “சரி” எனவும் தொடர்பை துண்டித்து விட்டு ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.
அப்போதுதான் வாசுதேவன் தன் நண்பன் திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அவரைப்பார்த்து தாமரை “சுகன்யாவுக்கு இடுப்பு வலி வந்துடுச்சு. டாக்ஸி பிடிச்சுட்டு வாங்க.” என்றார்.
“சரி சரி” என்றுவிட்டு அவர் வெளியே ஓடி டாக்ஸி பிடித்து வந்திருந்தார்.
சுகன்யா, தாமரை, சேகர் டாக்ஸியில் ஏறினர். சுகந்தன்பைக்கில் ஏறி அவர்களைப் பின்தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்.
சுகன்யா 12 மணி நேரம் வலியில் துடித்தாள். ஆனால் குழந்தை பிறக்கவில்லை. மருத்துவர்
“சீ செக்ஷன் பண்ணி தான் குழந்தையை எடுக்கணும்.
என்று விட்டு மருத்துவர் உள்ளே சென்றார்.
அரை மணி நேரத்தில் ஆண் குழந்தையுடன் வெளியே வந்தார்.
குழந்தையை பார்த்ததும் தாமரை மகிழ்ந்தார். சுகன்யா குழந்தையைப் பார்த்துவிட்டு உறங்கினாள்.
சுகந்தன்தாமரை இடம்
“அம்மா நான் சாதனாவை பார்த்து பேசி கூட்டிட்டு வரேன்.” என்றான். “என்னடா? என்ன சொல்ற? நாம சொன்னதை மதிக்காம அவள் வெளிய போய்விட்டாள். அவளைப் போய் நீ கூட்டிட்டு வர போகிறாயா? அப்போ அவள் சொன்னதை நம்புகிறாயா?” என்று கேட்டார்.
“ஆமாம். நான் அவளை நம்புகிறேன். அவள் அப்படி மரியாதை இல்லாமல் எடுத்தெறிந்து பேசியிருக்க மாட்டார்.”
“எப்படி சொல்ற? அவள் உன்னையே வாடா போடான்னு மரியாதை இல்லாம தானே பேசிட்டு இருக்கா. உன் கிட்ட சண்டை போட்டா கூட கத்தி தான் பேசுவா. அவளுக்கு கொஞ்சம் கூட மரியாதையே தெரியாது. அவள் மாப்பிள்ளையை மரியாதை இல்லாம எடுத்தெறிந்து பேசியிருப்பா.”
“இல்லம்மா. நீங்க நினைக்கிறது தப்பு. அவள் என் மேல இருக்கிற உரிமையில் இப்படி பேசுறா. அவள் என்னை திட்டினாலும் கத்தினாலும் அதில் ஒரு நியாயம் இன்னும் கேட்டால் பாசம் இருக்கும். அதெல்லாம் உங்களுக்கு புரியாது. எனக்கு மட்டும்தான் தெரியும். புரியும். அதனால அதை இது கூட கம்பேர் பண்ணாதீங்க. ஒருவேளை சேகரிடம் அவள் மரியாதை இல்லாமல் கத்தியிருந்தாலும் அதிலும் கண்டிப்பா ஒரு நியாயம் இருந்திருக்கும். ஆனால் அவள் சேகர் சொன்னமாதிரி மரியாதை இல்லாம பேசல.”
“அது எப்படிடா அவ்வளவு உறுதியா சொல்ற? அப்படி பேசி இருந்தால் அவள் அதை நேர்மையா ஒத்துக்கொண்டு இருப்பா. அவளைப் பற்றி எனக்கு நல்லா தெரியும். அவள் பொய் பேச மாட்டாள். அவள் சொன்னது உண்மைதான்.”
“அப்புறம் ஏன் நான் சொன்னதுக்கு எல்லாம் சரின்னு சொன்ன?”
“எனக்கு அப்போ வேற வழி தெரியல. சுகன்யாவுக்காக தான் அப்படி செய்தேன். இந்த நேரத்தில சேகர் அவள் கூட இருக்கணும்னு அப்படி பண்ணினேன். அதுக்கும் மேல, டாக்டர் சுகன்யாவுக்கு டெலிவரி வரைக்கும் எந்த டென்ஷனும் கொடுக்கக் கூடாது. அவள் வீக்கா இருக்கறதனால அது அவளோட உயிருக்கு ஆபத்தா முடியும்ன்னு சொல்லியிருந்தார். இதை சொல்லி உங்க எல்லாரையும் டென்ஷன் பண்ண வேண்டாம்னு சொல்லல. நான் சாதனாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசி இவர் கோபித்துக் கொண்டு வெளியே போய் இன்னும் பிரச்சனை பெருசாகி சுகன்யா டென்ஷன் ஆகி அவள் உடம்புக்கு இல்லை உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோன்ற பயத்துலஎனக்கு துளிகூட விருப்பம் இல்லைனாளும் நான் அப்படி நடந்துகிட்டேன். இதையெல்லாம் சாதனா கிட்ட சொல்லி சாரி கேட்டா அவள் என் கூட வந்து விடுவாள். அதுக்கு தான் போகிறேன்.” என்று விட்டு அங்கிருந்து இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த சேகரை ஒரு முறை முறைத்துவிட்டு வந்தான்.
சுகந்தன்மருத்துவமனையிலிருந்து சாதனாவை தேடி அவன் வீட்டிற்கு வந்தான்.
இவனைப் பார்த்த வாட்ச்மேன் கதவை திறந்து விட்டார். கதவை திறந்த சத்தம் கேட்டு உள்ளிருந்து கார்த்திகேயன் வரவும் சுகந்தன்வீட்டுக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
“சாதனா” என்று கூப்பிட்டான்.
பதில் வரவில்லை. கார்த்திகேயன் தான் வந்தார்.
“சாதனா எங்க?” என்று கேட்டான்.
“அவள் எங்க இருந்தா உனக்கு என்ன? நீ எதுக்கு இங்க வந்த?” என்று கோபமாக கேட்டார்.
“நான் எல்லாத்தையும் உங்களுக்கு சொல்றேன். முதல்ல சாதனா எங்கன்னு சொல்லுங்க.” என்று கண்களால் வீட்டை ஆராய்ந்து படி கேட்டான்.
“அவள் வீட்ல இல்ல. இருந்தாலும் அவள் உன்னை பார்க்க வரமாட்டா.” என்றார் கோபமாக.
“ஏன் வர மாட்டா?”
“ஏன் உனக்கு தெரியாதா? நீதான் அவளை வீட்டைவிட்டு போக சொன்னாயே. இப்போ வந்து திரும்ப கூப்பிடுற. அவளை என்ன உன் வீட்டு நாய் குட்டின்னு நினைத்தாயா? நீ வான்னு சொன்னதும் வருவதற்கும் போன்னு சொன்னதும் போவதற்கும்.” என்று ஆவேசமாக கத்தினார்.
“சரி. நான் பண்ணினது தப்புதான். ஆனால் அப்போ எனக்கு வேற வழி தெரியல. அதனாலதான் இப்போ சாரி கேட்க வந்தேன்.” என்றான் கலங்கிய கண்களுடன்.
“சாரினு ஒரு வார்த்தை சொல்லிட்டா போதுமா? நடுராத்திரி ஒரு வயசு பொண்ண இப்படியா வெளியே அனுப்புவ? பட்டப்பகலிலேயே நாட்டில் என்னென்னமோ நடக்குது. நீ கொஞ்சம் கூட பொண்டாட்டி மேல அக்கறையில்லாமல் நடுராத்திரியில் அவளை வெளியே போக சொல்லி இருக்க. நீயெல்லாம் ஒரு புருஷனா?” என்று அவனை வார்த்தையாலே விளாசினார்.
“நான் பண்ணினது தப்பு இல்லைன்னு சொல்லவே இல்லை. இருந்தாலும் நான் அவளை பார்க்கணும் பேசணும். அவ்வளவுதான்.”
“அது முடியவே முடியாது. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவள் பட்டபாடு போதும். எப்படி இருக்க வேண்டியவ அவள் தெரியுமா? உன் கிட்ட மாட்டிக்கிட்டு இவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கா.” என்றார் கோபம் சற்றும் குறையாமல்.
“என்ன? எப்ப பார்த்தாலும் எப்படி இருக்க வேண்டியவ எப்படி இருக்க வேண்டியவன்னு சொல்லிட்டு இருக்கீங்க. அவள் என்னைத் தவிர வேற யார் கூட எங்க இருந்தாலும் சந்தோஷமா இருக்க மாட்டா. இது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது?”
“ உனக்கு தான் புரிய மாட்டேங்குது. உன் கூட அவள் இல்லனா அவள் சந்தோஷமா இருப்பாள். உனக்கு நான் இதை ப்ரூ பண்ணட்டுமா?” என்று கேட்டார்.
“என்ன? என்ன சொல்றீங்க? எப்படி ப்ரூ பண்ணுவீங்க?”
“நீ மட்டும் அவளை 2 வருஷம் பார்க்காம பேசாம இரு. அவள் நான் பார்க்கும் பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருப்பாள்.”
“ என்ன உளறீங்க?”