“ஆமாம் உண்மையை தான் சொல்றேன். அவளுக்காக நான் பார்த்த மாப்பிள்ளை இன்னும் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்காம இவளையே நினைச்சுக்கிட்டு இருக்கான். நீ மட்டும் அவளை பார்க்காமல் இருந்தா இவள் மனசு மாறி அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருப்பா.”
“மாட்டா எத்தனை வருஷம் ஆனாலும் அவள் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா. என்னை மட்டும் தான் லவ் பண்ணிட்டு இருப்பா.”
“சரி பார்க்கலாம். ஆனால் இந்த ரெண்டு வருஷம் நீ அவளை எந்த வகையிலும் தொடர்பு கொள்ளக் கூடாது.” என்றார் கார்த்திகேயன்.
சுகந்தன்யோசித்தான். அவனுக்கும் அவனது கடன்களை அடைத்து சற்று உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு இரண்டு வருடம் தேவைப்பட்டது.
இந்த இரண்டு வருடத்தை நாம் அதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்த அவன்.
“சரி பார்க்கலாம். நான் அவளை எந்த வழியிலும் காண்டாக்ட் பண்ண மாட்டேன். ஆனா ரெண்டு வருஷம் கழிச்சு அவள் எங்க இருந்தாலும் நான் தேடி வந்து அவள் கிட்ட எல்லாத்தையும் சொல்லி புரிய வச்சு மன்னிப்பு கேட்டு கூட்டிட்டு வந்து அவளோடு வாழ்வேன். இந்த ஜென்மத்துல மட்டுமில்லை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு அவள், அவளுக்கு நான் தான். இதுக்கு நடுவுல வேறு யாரும் வரவே முடியாது.” என்று தெளிவாக சொல்லிவிட்டு சென்றான் சுகந்தன்.
இப்படி நடந்ததை சொல்லி முடித்தான் சுகந்தன்.
“என்ன? எங்க அப்பா எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கிறதா சொன்னாரா? நல்லா கதை சொல்ற. ஆனால் உன் கதையை நான் நம்ப மாட்டேன்.” என்றாள் சாதனா அலட்சியமாக.
“தெரியும் நீ இப்படி தான் சொல்லுவேன்னு எனக்கு தெரியும். அதனாலதான் உங்க அப்பா இங்க இருக்குற இந்த நேரத்துல சொல்றேன். நீ உங்க அப்பாவை கேளு.”
“நீ சொல்றது உண்மையா இருந்தா என் அப்பா என்கிட்ட யாரையாவது கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்லி இருக்கணும் இல்லையா? ஆனால் அவரு அப்படி எதுவுமே சொல்லல.”
“ஆமாம் அதுதான் எனக்கும் புரியல.”
“பாத்தியா? உனக்கே புரியல. அப்புறம் நான் எப்படி நம்புறது?”
“இதை நீ உன் அப்பா கிட்ட தான் கேட்கணும். கேளு.”
“என் அப்பா என் விருப்பத்துக்கு மாறாக எதுவும் என்மேல திணிக்க மாட்டார்.” “தெரியும். உங்க அப்பா உன்னை கட்டாயப்படுத்தி வேறு யாருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டார். ஏன்னா அவருக்கு உன்னோட சந்தோஷம் முக்கியம். அதுக்கு மேல உன்னை யாரும் அப்படி கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க முடியாது. அதனால்தான் அவர் சொன்னதற்கு நான் சரின்னு சொன்னேன்.
உங்க அப்பா நம்ம கல்யாணம் ஆனதில் இருந்து அப்பப்போ ஏதாவது என் மனசு கஷ்டப்படுற மாதிரி சொல்லிட்டு தான் இருப்பார். ஆனால் நான் அதை உன்கிட்ட சொன்னது கிடையாது. ஏன்னா நான் சொன்னா நீ நம்ப மாட்ட. நம்பினாலும் கஷ்டப்படுவ. (greenspringsschool.com) ஆனால் இப்போ எனக்கு வேற வழி இல்ல. அதனால சொன்னேன்.
நான் சொன்னது உண்மைன்னு) தெரிஞ்சு அப்புறம் என்கிட்ட வா.” என்றுவிட்டு வாசல் நோக்கி நடந்தான்.
வாசலுக்கு அருகில் சென்று அவளை திரும்பிப் பார்த்து
“சுகன்யாக்காக நான் அப்படி பண்ணியிருந்தாலும் அதுவும் தப்புதான். மன்னிச்சுக்கோ. நீ என்னை புரிஞ்சுக்குவன்னு அப்படி பண்ணினேன்.” என்று மீண்டும் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியே சென்றான்.
சாதனா அமர்ந்த இடத்தில் அப்படியே சிலை போல நெடுநேரம் அமர்ந்திருந்தாள். வெளியில் சென்ற அனைவரும் வீடு திரும்பினர்.
“சாப்டியா சாதனா?” என்று கேட்டார் கலைவாணி.
அவள் அவருக்கு பதில் சொல்லாமல் “அப்பா” என்றாள்.
அவள் கண்கள் கலங்கியிருந்தன.
“என்னமா” என்று கேட்டபடி அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.
கலங்கிய அவள் கண்களை பார்த்த அவர்
“என்ன ஆச்சு? உடம்பு எதாவது சரியில்லையா?” என்று அவர் கேட்கவும் வீட்டினர் அனைவரும் அவளை கவனித்தனர்.
“அப்பா சுகந்தன்என்னைத்தேடி நம்ம வீட்டுக்கு வந்தானா?” என்று கேட்டாள். “அது அது அது வந்து…..” என்று பேச்சு வராமல் தவித்தார் அவர்.
“சொல்லுங்கப்பா. இப்பயாவது உண்மையை சொல்லுங்க.” என்று தேக்கி வைத்திருந்த கண்ணீரை வழிய விட்டாள்.
“அழாத சாதனா. இதுக்கு மேலயும் நான் உன்கிட்ட மறைக்க விரும்பல. ஆமாம் வந்தார்.”
“அப்போ அவன் சொன்னது உண்மைதானா? நீங்க எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க போறதா அவன் கிட்ட சொன்னீங்களா?”
“ஆமாம் சாது.” என்றார் அவர் மெல்லிய குரலில்.
சாதனாவுக்கு மட்டும் இல்லை. அங்கு இருந்த அனைவருக்கும் அது பேரதிர்ச்சியாக இருந்தது.
“உண்மையாதான் சொல்றீங்களா? என்னால நம்பவே முடியல. நீங்களா அப்படி பேசினீங்க?”
“ஆமாம். நான்தான் சாது.”
“ஆனால் இதுவரைக்கும் எந்த மாப்பிள்ளையையும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்கிட்ட சொல்லவே இல்லையே.”
“ஆமாம்மா. நான் உன்கிட்ட அப்படி யாரையும் கல்யாணம் பண்ணிக்க சொல்ல. ஆனால் நான் தானே உன்னை அமெரிக்காவில் ஒரு வேலை இருக்கு. அதுக்கு அப்ளை பண்ணன்னு சொன்னேன்.”
“ஆமாம்”
“அந்த கம்பெனியில் தான் நான் உனக்கு பார்த்த மாப்பிள்ளை வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு.
“அப்படியா? யாரு?”
“ அது திலீப் தான். அவர்தான் நான் உனக்கு பார்த்த மாப்பிள்ளை. உனக்கு கல்யாணம் ஆனதற்கு அப்புறமும் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்காம உன்னையே நினைத்து கொண்டு இருந்தார். அதனாலதான் உன்னை இங்க அனுப்பினேன். இந்த ரெண்டு வருஷத்தில் நீ அவரிடம் நல்லா பழகினதா என் கிட்ட அடிக்கடி சொல்லுவார். அப்புறம் உன்கிட்ட அவர் காதலை சொன்னப்போ நீ அதை ஏத்துக்கலன்னு சொன்னார். இப்போ அவருக்கு வேற இடத்துல கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சு. இப்ப கூட நான் இதை எல்லாம் உன்கிட்ட எதுக்காக சொல்றேன்னா.. உனக்கு சுகந்தன்தான் பொருத்தமானவள். நீ அவரை ஏத்துக்கிட்டு ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோசமா வாழனும். இதுதான் என்னுடைய ஆசை.” என்றார்.
இதை வீட்டிலிருந்த அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
அங்கு ஒரு அமைதி நிலவியது. சிறிது நேரத்திற்கு பிறகு சாதனா எழுந்தாள்.
காலில் பேண்ட் எய்ட் பார்த்து கலைவாணி “என்னாச்சு சாது?” என்றார்.
“ஒன்னும் இல்லை. சின்ன காயம் தான். நான் கந்தனை பார்க்கணும்.” என்றாள்.
சஞ்சனா மூலம் அவன் வீடு எங்கு எங்கு இருக்கிறது என்று தெரிந்து வைத்திருந்தாள் சாதனா.
எனவே நடந்து அங்கு சென்றாள்.
வீட்டுக் கதவு திறந்து இருந்தது. உள்ளே நுழைந்தாள்.