நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சாப்பிட்டு முடித்து விட்டு தன் அறைக்குப் திரும்பினாள் சாதனா. அவள் மனம் நடந்ததை மீண்டும் நினைத்தது
“என்னடா ஆபிசுக்கு கெளம்பல?” என்று கேட்டபடி அங்கு வந்தார் தாமரை.
“கல்யாணத்துக்கு ஒரு வாரம் லீவு எடுத்திருக்கேன்.” என்றான் சுகந்தன் பார்வையை தன் முன் இருந்த லேப்டாப்பில் இருந்து எடுக்காமலே.
“அப்புறம் லேப்டாப்ல என்ன பண்ற?”
“ஏன்மா லேப்டாப்ல ஆபீஸ் வேலை மட்டும்தான் பண்ணுவாங்களா?
நான் ஹோட்டல் ரூம் பாத்துட்டு இருக்கேன்.”
“ஹோட்டல் ரூமா? எதுக்கு?”
“எங்க ஹனிமூனுக்கு.”
“என்ன ஹனிமூன் போறியா? அது வேற எதுக்குடா தண்ட செலவு? ஏற்கனவே கல்யாணத்துக்கு ஏகப்பட்ட செலவு ஆயிடுச்சு. அவங்களே கல்யாணத்தை பண்ணி இருக்கலாம். அதை விட்டுட்டு உன்னை பாதி செலவு செய்ய சொல்லி உனக்கும் செலவு வச்சுட்டாங்க. நீயும் நல்லா பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிட்டு வந்து நிக்கிற.” என்று குறை சொல்லிக் கொண்டிருந்த தாமரையின் பேச்சு சாதனாவின் காதுகளில் விழுந்தது .
“என்னமோ எங்க அப்பா இவன் கிட்ட வந்து பாதி செலவை செய்ய சொன்னது மாதிரி பேசிட்டு இருக்காங்க. இவனும் உட்கார்ந்து கேட்டுட்டு இருக்கான். இவனே தான் தேவையில்லாம இழுத்து போட்டு கொண்டதை சொல்ல வேண்டியதுதானே?” என்று அவன் மீது கோபம் கொண்டாள்.
அவன் “அம்மா இப்போ எதுக்கு முடிஞ்சு போனதை பேசிட்டு இருக்கீங்க?”
“என்னடா முடிஞ்சு போச்சு? அவனவன் பெண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு அதுக்கு அப்புறமும் எவ்வளவோ பண்ணிக்கிட்டு தானே இருக்காங்க. ஏன் நாம கூட சுகன்யாவுக்கு இன்னும் பண்ணிக்கிட்டு தானே இருக்கோம்.
இவள் அப்பா என்னடான்னா ஒரு பவுன் நகை கூட போடாமல் இவளை இங்க அனுப்பி விட்டுட்டார். சரி கல்யாணத்துல தான் செய்யல”
“அம்மா எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. நீங்க உங்க வேலையை பாக்குறீங்களா?” என்று எரிச்சல் பட்டபடி கேட்டானே தவிர தன் மாமனாரிடம் தான் தான் செய்யவேண்டாம் என்று சொன்னதை சொல்லவே இல்லை. இது சாதனாவின் கோபத்தை இன்னும் அதிகரித்தது.
“சரி எல்லாத்தையும் விடு. இப்போ ஹனிமூனுக்கு கிளம்பிப் போய் இன்னும் வேற செலவை இழுத்து வைக்கணுமா? அதெல்லாம் எங்கேயும் போக வேண்டாம்.” என்றார் தாமரை தொடர்ந்து .
அப்போது வீட்டு தொலைபேசி அடிக்க தாமரை எடுத்தார்.
“ஓ அப்படியா? ரொம்ப சந்தோஷம். நாங்க உடனே கிளம்பி வருகிறோம்.”. என்று விட்டு வாயெல்லாம் பல்லாக மகனிடம் வந்தார்
“டேய் சுகந்தா, நீ மாமா ஆக போற. ஏங்க நாம ரெண்டு பேரும் தாத்தா-பாட்டி ஆகப் போகிறோம் .”என்று விபரத்தை அப்போது தான் உள்ளே வந்து கொண்டிருந்த தன் கணவனிடம் கூறினார் தாமரை.
விவரத்தை உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த சாதனாவுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது.
“ரொம்ப சந்தோஷம்.” என்று விவரத்தைக் கேட்ட வீட்டு ஆண்கள் மகிழ்ந்தனர்.
“இப்பதான் சுகன்யா மாமியார் போன் பண்ணி விவரத்தை சொன்னாங்க. சுகன்யாவை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போயிட்டு வந்து இருக்காங்க. டாக்டர் சுகன்யா வீக்கா இருக்கிறதா சொல்லி இருக்காங்க. சுகன்யா வேற வாந்தி எடுத்துக் கொண்டே இருக்கிறாளாம். அவங்களுக்கு பாத்துக்க கஷ்டமா இருக்காம். இங்க கூட்டிட்டு வந்து வச்சு பாத்துக்க சொல்றாங்க.”
“ஓ அப்படியா தாமரை சரி நாம போய் கூட்டிட்டு வரலாம்” என்றார் வாசுதேவன்.
“நாம மட்டும் போனால் எப்படி? வீட்டு மருமகள், மகன் எல்லாரும் போனா தான் நல்லா இருக்கும். வாங்க எல்லோரும் கிளம்பி போயிட்டு வரலாம்.” என்று கூப்பிட்டார்.
“சரிமா அப்படியே பண்ணலாம்.” என்று சொல்லிவிட்டு அறையின் உள்ளே இருந்த சாதனா இடம் வந்தான்.
“சாது உனக்கு ஒரு குட் நியூஸ் தெரியுமா?” என்று உற்சாகமாக உள்ளே நுழைந்த கணவனை பார்த்து மகிழ்ச்சியாக புன்னகைத்தாள் சாதனா.
“தெரியும் சுகந்தா. நீங்க எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து கிட்டு பேசிட்டு இருந்தது ரூமில் நல்லாவே கேட்டுச்சு. இது சின்ன வீடு தானே ரூம் ஹால் ரெண்டுமே சின்னது. அதனால அங்க பேசினது கேட்டது. எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான். நாம சுகன்யா வீட்டுக்கு போயிட்டு வரலாம்.
“அப்புறம், நம்ம ஹனிமூன் விஷயம் என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.
“அதை நாம போயிட்டு வந்து பேசலாமா? நான் போய் கொஞ்சம் ஸ்வீட், பழம், ஸ்நேக், பூ வாங்கிட்டு வரேன். நீயும் கிளம்பி ரெடியா இரு.”என்றுவிட்டு அவள் பதிலை எதிர்பாராமல் அணிந்திருந்த பனியின் மீது சட்டையை அணிந்து பைக்கை ஸ்டார்ட் பண்ணி கொண்டு சென்றான்.
“எதையாவது கேட்டால் பதில் நின்னு சொல்றானா பாரு?” என்று தனக்கு தானே கேட்டு சலித்துக் கொண்டு அணிந்திருந்த சல்வாரை மாற்றி புடவை அணிந்து கொண்டாள்.
பூ, பழம், ஸ்வீட், காரம் என்று வாங்கி வந்த அனைத்தையும் சுகன்யா விடம் கொடுத்துவிட்டு சோபாவில் குடும்பத்தினருடன் அமர்ந்தான் சுகந்தன்.
வீடு சாதனாவின் தாய்வீடு போல பெரிதாகவும் பளிச்சென்றும் இருந்தது. அவள் வீட்டில் இருந்த அனைத்து வசதிகளும் அங்கும் இருந்தது.
சுகன்யா,. கணவன் சேகருடன் அமர்ந்திருந்தாள். அவனுக்கு பக்கத்தில் சேகரின் தாய், தந்தை அமர்ந்திருந்தனர்
“சம்பந்தி நம்ம தாத்தா பாட்டி ஆகப் போகிறோம். சந்தோஷம்தானே?” என்று மகிழ்ச்சியாக கேட்டார் சேகரின் தந்தை சேதுராமன்.
“ஆமாம் சம்பந்தி. ரொம்ப சந்தோஷம்! “என்று அவருடன் சேர்ந்து மகிழ்ந்தார் வாசுதேவன்.
“ஆனால் பாருங்க என்னோட பொண்ணுக்கு இப்பதான் குழந்தை பிறந்து இருக்கு. எனக்கு அவ கிட்டயே நிறைய வேலை இருக்கு. அதனால இவளை என்னால கவனிக்க முடியல. அதனால தான் உங்கள பாத்துக்க சொல்லி கேட்டேன்.” என்றார் சேகரின் தாய் சீதா.
“அதுக்கு என்ன சம்பந்தி? நான் சும்மாதான் இருக்கேன்.. நான் என் பொண்ணை பார்த்துகிறேன்” என்றார் தாமரை.
“சந்தோஷம் சம்மந்தி. அப்புறம் நீங்க உங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு நல்ல டாக்டரை பார்த்து வச்சுக்கோங்க. அங்க சுகன்யாவை காட்டி மாத்திரை மருந்து வாங்கி கொடுங்க.
நான் எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்த டாக்டர் கிட்ட பார்த்த போ ரொம்ப வீக்கா இருக்கிறதா சொன்னாங்க.”
“சரி சம்மந்தி நான் பார்த்துக்கிறேன்.”. என்றார் தாமரை
“அடுத்த நல்ல செய்தி நீங்க ரெண்டு பேரும் தான் சொல்லணும்.” என்று சாதனா, சுகந்தன் இருவரையும் பார்த்து சொன்னார் சீதா. சாதனா அவரை பார்த்து புன்னகைத்தாள்.
சுகன்யாவை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினர்.
தாமரை “சுகந்தா ஒரு நல்ல ஹாஸ்பிடல், நல்ல லேடி டாக்டரா பாரு. டெலிவரி எல்லாமே பார்க்கிறார்களாnu விசாரி. விசாரிச்சு நல்ல ஹாஸ்பிடல்ல காட்டுவோம். சுகப்பிரசவம் ஆகணும்.” என்றார்.
“சரிமா ” என்றான் சுகந்தன்.
“சீக்கிரம் ரெண்டு மூணு நாளில் பார்த்து அப்பாயின்மென்ட் போட்டுடு. நாம போயிட்டு வரலாம். நம்ம வீட்டுக்கு ஒரு குழந்தை வரப்போகுது. நாம நாலு பேர்கிட்ட விசாரிச்சு நல்ல டாக்டரை பார்க்கணும்” என்றார் தாமரை.
வாசுதேவன் இந்த மாதிரி பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது கிடையாது. எனவே தாமரை தன் மகனிடம் அந்தப் பொறுப்பினை கொடுத்தார்.
“சரிமா. நான் என் விசாரிச்சு பார்க்கிறேன்.” என்று விட்டு அவனது மொபைலை எடுத்து விசாரிக்க ஆரம்பித்தான்.
அன்று இரவு சாப்பிட்டு முடித்து அறைக்கு வந்தான் சுகந்தன்.
“என்ன டாக்டர் தேடி கண்டுபிடித்து விட்டீர்களா?” என்று கேட்டாள் சாதனா.
“இன்னும் யாரையும் பிக்ஸ் பண்ணல. பார்த்துட்டு இருக்கேன்.” என்றான் சுகந்தன்.
“சரி நம்ம ஹனிமூன் விஷயம் என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.
“நாம கண்டிப்பா போயே ஆகணுமா?” என்று அவன் கேட்க அவள் அவனை முறைத்தாள்.
“ரெண்டு மூணு நாளைக்கு எனக்கு வீட்டிலேயே வேலை இருக்கும் போல இருக்கு. நாம அப்புறம் எப்பயாவது போகலாமா?” என்று கேட்டான் சோர்வாக.
அவனது சோர்வை பார்த்த சாதனா
“சரி ஆனால் போகணும்.” என்றாள்.
“சரி” என்றான் அவன் .
காலை 6 மணிக்கு எழுந்திருக்கும் சாதனா குளித்து முடித்து கீழே இறங்கி வந்து தாமரை செய்யும் சமையல் வேலை, வீட்டு வேலைகளுக்கு உதவுவாள்.பிறகு ஆபீஸ் கிளம்பி செல்வாள். மாலை வீடு திரும்பியதும் சிறிது நேரம் சுகன்யா உடன் தினமும் கலகலப்பாக பேசிவிட்டு இரவு உணவு தயார் செய்வாள். இப்படி தன்னால் முடிந்த அளவிற்கு தாமரைக்கு உதவி செய்து கொண்டு இருப்பாள்.
சமையல் செய்து பழக்கம் இல்லாத அவள் சுவையாக சமைக்காத போது தாமரை குறை சொல்வது உண்டு. ஆனால் அதை அவள் பெரிது படுத்துவது கிடையாது. மற்றபடி தாமரை மருமகளை தங்கம் போல தாங்கவில்லை என்றாலும் பெரிதாக கஷ்டப் படுத்தியது கிடையாது.