இப்படியே நாட்கள் சென்றன அவர்கள் தேனிலவு செல்லவில்லை. அதைப் பற்றி அவள் எப்பொழுதாவது அவனிடம் பேசினாலும் அவன் அதை காது கொடுத்து கேட்டது கிடையாது. அவளும் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விடுவாள். அது சாதனாவுக்கு ஒரு மனக்குறையாக இருந்தது.
சுகன்யா சாதனாவிடம் நன்றாகவே பழகினாள். ஆனால் சுகன்யாவின் கணவன் சேகர் சாதனாவிடம் பெரிதாக பேசுவது கிடையாது .
சாதனா ஏதாவது அவனிடம் பேசினாலும் அவன் ஆமாம் இல்லை என்று மட்டுமே சொல்லுவான்.
சிலநேரங்களில் சாதனாவை அவன் அலட்சியப்படுத்துவது போல கூட அவள் உணர்ந்தது உண்டு. எனினும் அதை அவள் பெரிது படுத்தியது கிடையாது. அப்படியே அவள் அவனைப் பற்றி குறை சொன்னாலும் அந்த வீட்டில் யாரும் அவளை நம்பியிருக்க மாட்டார்கள். ஏனென்றால் அந்த வீட்டில் அவனுக்கு நல்ல பெயர் இருந்தது. ஒரே மாப்பிள்ளை என்பதால் தாமரை அவனை பார்த்து பார்த்து உபசரிப்பார்.
சாதனா ஆப்பம் சுட்டுக் கொண்டிருக்க சுகந்தன் அந்த சூடான ஆப்பத்தில் தேங்காய் பால் ஊற்றி ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு வந்து அமர்ந்தார் தாமரை.
“சுகந்தா சுகன்யாவுக்கு இது அஞ்சாவது மாசம். ஜடை தைக்கணும். அதுக்கு ஒரு ஆளை கூட்டிட்டு வா.
அப்புறம் அஞ்சு விதமான சாப்பாடு செஞ்சு போடணும். தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம் அப்புறம் வேற என்ன பண்ணலாம்?” என்று கேட்டார்.
சாதனா அங்கு வந்து “அத்தை புதினா சாதம் பண்ணலாம். நல்லா இருக்கும்.” என்றாள்.
“சரி இன்னொன்னு என்ன பண்ணலாம்?” என்று அவளை கேட்டார்.
“வெஜிடபிள் ரைஸ் பண்ணலாமா?”
“சரி அப்படியே பண்ணலாம். கூட வடை, பாயாசம் பண்ணனும். அன்னிக்கு நீ லீவ் போட்டுடு.” என்றார்.
“அத்தை எங்க ஆபீஸ்ல ஒரு முக்கியமான பிராஜக்ட் போயிட்டு இருக்கு. நீங்க எனக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லிடுங்க. நான் அப்ப தான் லீவு எடுக்க முடியும்.” என்றாள் .
“அப்படியா? அப்போ இப்பவே சொல்லிடு.”
“என்னிக்குnu சொல்லட்டும்?”
“அது தெரியல.”
“அது தெரிஞ்சாதான் நான் சொல்ல முடியும் அத்தை.” என்றாள்.
“சரி. நான் நாளைக்கு சொல்றேன்.” என்றார் தாமரை .
“முடிஞ்சா ஞாயிற்றுக்கிழமை வையுங்க. இல்லைனா சீக்கிரம் சொல்லிடுங்க.” என்றான் சுகந்தன்.
அடுத்த நாள் காலை ஆபீசுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் சுகந்தன்
“கந்தா ஞாயிற்றுக்கிழமை நாள் நல்லா இல்லடா. அதனால வெள்ளிக்கிழமை வைக்கலாம்னு மாப்பிள்ளை வீட்ல சொல்லிட்டாங்க.”
“என்னமா இன்னிக்கி புதன்கிழமை இப்ப வந்து வெள்ளிக்கிழமை பங்ஷன்nu சொல்றீங்க.”
“அதுக்கு நான் என்னடா பண்ணுறது? உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் வசதியா இருக்கணும்னு கெட்ட நாளில் வைக்க முடியுமா? நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ அன்னிக்கு லீவு போடுங்க.”
அப்போது பையன் மாட்டிக்கொண்டு ஆபீசுக்கு கிளம்பிக் கொண்டிருந்த சாதனா
“அத்தை அன்னிக்கி எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. லீவு போட முடியாது.”
“உனக்கு என்னிக்கி முக்கியமான மீட்டிங்க இல்ல? காலையில போற சாயங்காலம் வர. வீட்டு வேலையும் பெருசா செய்யறது கிடையாது. முக்கால்வாசி நான்தான் செய்றேன். புருஷன் கடனை அடைக்க ஏதாவது ஹெல்ப் பண்ணவnu பார்த்தா அதுவும் கிடையாது. சம்பளத்தையும் கண்ணுல காட்டுவது கிடையாது. நீ எதுக்கு தான் வேலைக்கு போற? “ என்றார் சலிப்புடன் தாமரை சாதனாவை பார்த்து.
‘நானா தர மாட்டேன்னு சொல்ற, இவன்தான் வேணான்னு சொல்றான். இதை இவங்க கிட்ட சொல்றதுக்கு என்ன? சரி நாமலே சொல்லுவோம்.’ என்று நினைத்தவள்
“நான்….. என்று வேகமாக சொல்ல வாய் எடுத்தாள்.
அதேநேரம் வீட்டு டெலிபோன் ஒலித்தது. தாமரை அவளிடமிருந்து பார்வையை திருப்பி எழுந்து சென்றார்.
“அப்படியா சம்மந்தி?…..” என்று பேச ஆரம்பித்தவர் அடுத்த அரைமணி நேரம் பேசினார்.
சாதனா பொறுத்திருந்து பார்த்துவிட்டு அறைக்கு வந்தாள்.
சுகந்தனிடம்
“ஏண்டா நீ என்னோட சம்பளத்தை வேணாம்னு சொன்னதை உங்க அம்மாகிட்ட சொல்லலையா? உங்க அம்மா என்னை தப்பா நினைச்சுகிட்டு பேசிக்கிட்டு இருக்காங்க.” என்று சிறிது கோபமாக கேட்டாள்.
“சொன்னா அவங்க ஏதாவது திருப்பி சொல்லுவாங்க. அப்புறம் தேவையில்லாம பிரச்சனை வரும். அதனால தான் சொல்லல.”
“நீ உனக்கு பிரச்சனை வராமல் பார்த்துக்கொள். எனக்கு இதனால பிரச்சினை வருது. அதை பற்றி கொஞ்சம் கூட உனக்கு அக்கறையே கிடையாது.” என்று இவள் கோபமாக பேச இருவருக்கும் சண்டை மூண்டது.
“எதற்காக இப்ப இப்படி கத்துற? நான் பக்கத்துல தானே இருக்கேன்.” என்றான் அவன்.
“ஆமாண்டா நான் எது பேசினாலும் உனக்கு கத்தற மாதிரி தான் தெரியும். உன் அம்மா எது பேசினாலும் கரெக்டா தெரியும்.” என்றாள் சற்று சத்தத்தை குறைத்துக் கொண்டு.
“உன்கிட்ட மனுஷன் பேசுவானா?” என்று கேட்ட படி பாய் தலையணை இரண்டையும் எடுத்து தரையில் போட்டு படுத்துக் கொண்டான்.
இப்படி பல நாட்கள் இரவில் இருவரும் சண்டைபோட்டு தனித்தனியாக தூங்கினர். சாதனா தலையணையை நனைத்தபடி உறங்குவாள்.
வெள்ளிக்கிழமை அன்று காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்துவிட்டு
“அத்தை நான் ஆபிசுக்கு போயிட்டு மதியம் 2 மணிக்கு வந்துடறேன்.” என்றாள் தயங்கி தயங்கி.
தாமரை சாதனாவை நிமிர்ந்து பார்த்தாள்.
தனக்கு முன்பே எழுந்து காலையில் இருந்து பல வேலைகள் செய்து கொண்டிருந்தாள். அது ஞாபகம் வர அவர் மனம் இரங்கி
“சரி போயிட்டு ரெண்டு மணிக்கெல்லாம் வந்துடு.” என்று சொல்லி அனுப்பினார்.
. விட்டால் போதும் என்று கிளம்பி ஆஃபீஸ்க்கு வந்தாள் சாதனா
வீட்டில் செய்தது போலவே அலுவலகத்திலும் எல்லா வேலையையும் வேகவேகமாக செய்துகொண்டிருந்தாள். ஒரு சில வேலைகள் மட்டுமே பாக்கி இருந்தது. மதிய உணவு இடைவேளையில்
‘உடம்பு சரியில்லன்னு சொல்லி லீவு எடுக்க வேண்டியதுதான்.’ என்று நினைத்துக்கொண்டு மேலாளரிடம் சென்றாள்.
ஆனால் அவர் அங்கு இல்லை .
அதற்குள் அவர்களது குழுவில் இருந்த எல்லோருக்கும் திடீரென்று ஒரு கூட்டத்திற்கு அறிவிப்பு வந்தது.
சாதனா ‘என்ன செய்வது?’ என்று யோசித்தாள்.
“சரி எப்படியாவது சமாளிப்போம்.” என்று நினைத்துக்கொண்டு அந்த கூட்டத்திற்கு சென்றாள்.
‘மீட்டிங் ஒரு மணி நேரத்தில முடிஞ்சிடும். அதுக்கப்புறம் போகலாம்.’ என்று அவள் நினைத்ததற்கு மாறாக அந்தக் கூட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அதுவும் அவர்கள் செய்து கொண்டிருந்த முக்கியமான ப்ராஜக்டை பற்றிய முக்கியமான தகவல்களை தெரிவித்துக் கொண்டிருந்தனர். அவளுக்கு அந்த தகவல்கள் அத்தியாவசியமாக இருந்தது.” எனவே வேறு வழியின்றி அங்கேயே இருந்தாள்.
5 மணி அளவில் கூட்டம் முடிந்ததும் வேகவேகமாக வீடு வந்து சேர்ந்தாள். ஆனால் அதற்குள் வீட்டில் விழா முடிந்திருந்தது .வந்திருந்த விருந்தினர் சென்றிருந்தனர்.
தாமரை வீட்டு சோபாவில் அமர்ந்துகொண்டு இருந்தார்.
கைப் பையுடன் வியர்வையைத் துடைத்தபடி உள்ளே நுழைந்த மருமகளை முறைத்தார். எதுவும் பேசவில்லை.
இவள் ஆரம்பித்தாள்.
“அத்தை அது வந்து…..” என்று பேச்சு வராமல் தவித்தாள்.
“அதான் வந்து விட்டாயே. சொல்லு.” என்றார் அமைதியாகவே.
கனகாம்பரம் குண்டுமல்லி பூக்களை கொண்டு அழகாக தைத்து வைத்திருந்த சடையுடன் நைட்டி அணிந்து கொண்டு அங்கு வந்தாள் சுகன்யா.
“அம்மா நீங்க கொஞ்சம் சும்மா இருங்க. நீங்க போங்க அண்ணி. உங்கள பாத்தாலே ரொம்ப டயர்டா தெரியுது. நீங்க எதுவும் இப்போ பேச வேண்டாம்.” என்று பேச்சை தவிர்த்தாள்.
சாதனா இதுதான் சமயம் என்று அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.
அறையில் சுகந்தன் அமர்ந்திருந்தான். ஆனால் எதுவும் கேட்கவில்லை. சாதனா அவனிடம்
“எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது. நடுவுல வர முடியல.” என்றாள் மெல்லிய குரலில்.
அவன் “ஒரு மெசேஜ் பண்ணி இருக்கலாம் இல்ல? நானாவது அம்மாவை சமாளித்து இருப்பேன். சுகன்யா வீட்டில எல்லோரும் உன்னை கேட்டாங்க. எங்களுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. நான் உனக்கு பண்ணின போனயாவது அட்டென்ட் பண்ணி இருக்கலாம்” என்றான் அடக்கிய கோபத்துடன்.
“இல்லடா செல்போன் சைலன்ட்ல இருந்தது. வந்துடலாம்னு நினைச்சுட்டு இருந்ததால மெசேஜ் அனுப்பல.” என்று விளக்கம் கொடுத்தாள்.
அவன் அதனை கேட்டுவிட்டு எழுந்து பால்கனிக்கு சென்று விட்டான்.
அவள் காலை சாப்பிட்டதோடு சரி. ஓரளவு பிரச்சனையை சமாளித்த பிறகு பசியை உணர்ந்தாள்.
சமையலறை சென்று ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தாள்.
அப்போது அங்கு வந்த சுகன்யா அவளுக்காக எடுத்து வைத்திருந்த
வடை, பாயாசம், ஐந்து வகை சாப்பாடு எல்லாவற்றையும் ஒரு தட்டில் வைத்து அவளிடம் நீட்ட அவள் பசியாற சாப்பிட்டு வந்து விட்டு வந்து படுத்தாள். படுத்ததும் ‘சாப்பிட்டியானு ஒரு வார்த்தை கேட்டானா பாரு. என்ன சொல்லி மெசேஜ் அனுப்புறது எப்போ மீட்டிங் முடியும்னு எனக்கே தெரியல ஆரம்பிச்சு அப்புறம் அதுல இருந்து என்னால நடுவுல வர முடியல முக்கியமான இன்பர்மேஷன் கொடுத்துட்டு இருந்தாங்க.’
என்று நினைத்தபடி சோர்வில் உறங்கிப் போனாள்.