முள்ளை முள்ளால் எடுக்கும் வித்தை
பாகம் – 1
“ஏம்மா மதி நாளைக்கு நீ கெம்பஸ் போகனும் இல்லையா? எல்லாத்தையும் இப்பவே ரெடி பண்ணி வச்சிறும்மா. பின்ன போகும்போது அத மறந்திட்டேன் இத மறந்திட்டேன்னு எங்கள போட்டு விசர்படுத்தாத” என்று கூறிக்கொண்டே சமயலறைக்குள் சென்றாள் மகேஸ்வரி. தனது அறையினுள் இருந்து கொண்டே யாருமில்லாத நேரத்தில் தனது தலையை வெளியே எடுக்கும் ஆமைபோல மகேஸ்வரி நிற்கும் சமயலறைப் பக்கம் லேசாக எட்டிப் பார்த்து விட்டு தனது உதட்டை சுழித்துக் கொண்டாள். “அதெல்லாம் நேத்தே எடுத்து வச்சிட்டேன் மகேஸ்” என்றாள் செல்லமாக. “என்னடி சொன்ன? வர வர உனக்கு வாய் நீண்டு போச்சு. எல்லாம் உங்கப்பா உனக்கு கொடுத்த செல்லம் வரட்டும் அந்த மனுசன்” என்று பொய்க்கோபம் காட்டி நின்றாள். அந்த நேரம் வீட்டினுள் நுழைந்த அருணாச்சலம் “என்ன மகேஸ் என்னோட பொண்ண எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டேயிருப்பியா” என்றார்.
“அப்பா” என்று பலூனைக் கண்டு ஓடி வரும் சிறு குழந்தை போல மாணிக்கத்தை நோக்கி ஓடி வந்து அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள் மதி. அருணாச்சலமும் அதே போல் பெயர் கூறியழைக்க மகேஸ்வரிக்கு இன்னும் கோபம் வந்தது. “வாங்க சார்… வாங்க… உங்களோட செல்லப் பொண்ணு என்ன பார்த்து மகேஸ் ன்னு கூப்பிடுரா கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம” என்றாள் சிணுங்கிக் கொண்டே. “அதுல என்ன தப்பிருக்கு….. என்று கூறிக்கொண்டு மகேஸ்வரியின் அருகில் சென்று “ அதுதானே உன்னோட சோட் நேம்” என்று கூறிக்கொண்டே அவளை அருகில் நெருங்கினான். “உன்ன….. காதலிக்கும் போது அப்படித்தானே கூப்பிடுவன்.. ரொம்ப அன்பானவங்க நெருக்கமானவங்க அப்படித்தா..ன் கூப்பிடுவாங்க” என்று கூறியதும் மகேஸ்வரிக்கு தான் காதலித்த காலம் ஞாபகம் வந்ததோ என்னவோ தெரியவில்லை அப்போது தான் முதல் தடவையாக அருணாச்சலத்தை பார்ப்பது போல ஒரு வெட்கப்பார்வையை வீசி விட்டு மெல்ல தலைகுனிந்தாள். இந்த ரொமியோ ஜீலியட் இற்கிடையில் ஏன் தான் நந்தி போல குறுக்கே நிற்க வேண்டும் என்று மெல்ல விலகிக் கொண்டாள் வளர்மதி.
அடிக்கடி ஏதாவது செல்லச் சண்டைகள் அருணாச்சலத்திற்கும் மகேஸ’வரிக்கும் வரும். அப்போதெல்லாம் அருணாச்சலம் அவர்களிருவரும் காதல் தோட்டத்தில் அழகாக ”த்துக்குலுங்கிய வசந்த காலத்தை ஞாபகப்படுத்துவான். அப்போது மகேஸ்வரி புது மணப்பெண் போல வெட்கப்பட்டு அதனை மறைக்க முயன்று தோற்றுப் போனவளாய் அவனது மார்பிலே தன் தலையை புதைத்துக் கொள்வாள். அவ்வெட்கத்தையும் அவளது ஆளை அள்ளும் அந்த ஒரு நொடிப் பார்வையையும் ரசிப்பதற்காகவோ என்னவோ அடிக்கடி மகேஸ்வரியுடன் செல்லச்சண்டை பிடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் அருணாச்சலம். சில வேளைகளில் அதற்கு துரும்புச் சீட்டாக அருணாச்சலம் வளர்மதியை பயன்படுத்துவதுமுண்டு. அம்மா கோபமாக இருக்கின்ற போது அப்பா எவ்வாறு அம்மாவை இவ்வளவு அழகாக சமாளித்துக் கொள்கிறார் என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக் கொண்டு அது சரி காதலிக்கும் போதே பெண்களின் பலவீனம் என்னவென்பதை ஆண்கள் அறிந்து கொள்வார்கள் என்று தனக்குத் தானே விடையும் கூறிக்கொள்வாள்.
சில நேரங்களில் மதிக்கு இவர்களது அன்னியோனியம் அவ்வளவு கேள’வியை மனதில் ஏற்படுத்தும். ஒரு நாள் “அப்பா ஏன்பா உங்களுக்கு அம்மா மேல கோவமே வராதா? சில நேரம் சண்ட போட்டாக் கூட நீங்களே போய் பேசுவிங்க.. அம்மா சண்டையே நடக்காத மாதிரி உங்ககிட்ட உருகிப் போவாங்க அது எப்படி” என்றாள் மதி. “மகேஸ்கு குழந்தை மனசு… இந்த உலகத்திலயே என்ன நல்லா புரிங்சிக்கிட்ட ஒரே ஆளுன்டா அது அவள்தான்.. அவளோட அன்புக்கு நான் தகுதியானவனா இருக்கனும் அவ்வளோ தான்மா. காதலுக்கு வெற்றி எப்போ கிடைக்கும் தெரியுமா? காதலிக்கும் போது உள்ள அந்த புரிந்துணர்வு கல்யாணத்திற்குப் பிறகும் தொடர்ந்து இருக்கனும்.. அப்போ தான் அது உண்மையான காதல்…என்று ஒரு பெரிய சினிமா வசனத்தையே ஊற்றி விட்டார் அருணாச்சலம். மதிக்கு “புரிந்துணர்வு” என்ற சொல்லைத் தவிர எதுவும் அவ்வளவாக விளங்கவில்லை. ஆனால் அப்பா சொல்லும் போது மதிக்கு மனதிற்குள் இனம்புரியாத சந்தோஷம் எழுந்ததை அவள் மட்டுமே உணர்வாள்.
அம்மா, அம்மா என்று ஓடி வந்தான் சதீஸ’. “ஏன்டா ஏலம் போட்டுக் கொண்டே வாராய்? என்று கேட்டாள் மகேஸ’வரி. “ஏம்மா நான் கூப்பிட்டா மட்டும் ஏசுறிங்க? என்றான் சிணுங்கியவாறே. சதீஸ் மதிக்கு அடுத்ததாக பிறந்த சுட்டிப்பையன் படிப்பில் அவ்வளவு நாட்டமில்லை. ஆனால் சுறுசுறுப்பானவன். “ஐயோ என்னோட தங்கத்திற்கு கோபம் வந்திட்டா? எதுக்கடா கண்ணா கூப்பிட்டாய்? என்றாள். மகேஸ்வரி அவனுடைய கேசத்தை மெதுவாக வருடிவிட்டாள். “டேய் சதீ அம்மா சமாளிக்கிறாள்டா நம்பாத. நாம ஆம்பளைங்கடா. அவ்வளோ சீக்கிரம் பொம்பளங்ககிட்ட தோற்று விடகூடாதுடா” என்றார் அருணாச்சலம். மகேஸ்வரி கண்னைச் சுருக்கிக் கொண்டு பொய்க் கோபத்துடன் அருணாச்சலத்தைத் திரும்பிப் பார்த்தாள். அதற்கு அருணாச்சலம் “அப்படி இல்லாட்டாலும் ஒரு சில விசயத்தில விட்டுக் கொடுத்து பணிஞ்சு போகலாம் தப்பில்லை” என்;று வாய்க்குள் முணுமுனுத்தார். இதற்கு சதீஸ் “அப்பா இந்த டயலொக்க யாரு சொன்னாலும் ஏத்துக் கொள்ளுவேன்ப்பா சொன்னது நீஙகளாச்சே… அதுதான் கொஞ்சம் இடிக்குது” என்றான் ஒரு நக்கல் சிரிப்போடு. மகேஸ்வரியும் சேர்ந்து சிரித்தாள்.
மகேஸ’வரியும் அருணாச்சலமும் காதல் கல்யாணத்தை தமது பெற்றோர்களின் சம்மதத்துடன் செய்து கொண்டவர்கள். இருவரும் பதுளையில் வசித்ததோடு ஒரே பாடசாலையில் ஒன்றாகவே படித்தவர்கள். ஒன்றாகவே வவுனியா கல்வியற் கல்லூரிக்கும் தெரிவு செய்யப்பட்டார்கள். பாடசாலையில் வெறும் நட்பாக மலர்ந்த இவர்களது உறவு கல்லூரிக்கு செல்லும் போது காதல் எனும் அழகிய உருவெடுத்தது. இருவரும் ஒரே கிராமம் என்பதால் ஒன்றாகவே கல்லூரிக்கும் சென்று வந்தனர். மகேஸ்வரி அருணாச்சலத்துடன் இருக்கும் போது பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும் இருப்பதாக உணர்ந்ததை அருணாச்சலத்திடம் கூற அதற்கு அருணாச்சலம் காலம் முழுவதும் அவளுக்கு துணையாக இருக்கும் திருமண ஒப்பந்தத்தில் காதலை சாட்சியாகக் கொண்டு கையெழுத்திட முடிவெடுத்தார். தனது காதலை பெற்றோரிடம் தெரிவிக்க இரு வீட்டாருக்கும் பிடித்துப் போய் திருமணம் செய்து வைத்தார்கள். காதல் எனும் உறுதியான அத்திவாரமிட்டு கட்டப்பட்ட அவர்களது திருமணக் கட்டிடம் இற்றை வரைக்கும் உடையாமலும், நிறம் மாறாமலும், அழகு குறையாமலும் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது.
திருமணமாகி ஐந்து வருடங்களின் பின்னர் தான் மதி பிறந்தாள். அவள் அப்படியே மகேஸ்வரியைப் போல தான். பெற்றோரின் உயிர் நாடியாக இருப்பவள். மகேஸ்வரியின் ஆசைகளுக்கு அருணாச்சலம் எப்போதும் குறுக்கே நின்றதில்லை. மகேஸ்வரி மதி பிறந்தவுடன் தன்னால் வேலைக்கு செல்ல முடியாது என்றே மறுத்துவிட்டாள். அவளது விருப்பத்தை எப்போதும் அருணாச்சலம் மீறியதில்லை. அருணாச்சலம் அவரது ஊரிலுள்ள பிரதேச சபையில் வேலை செய்கிறார். அருணாச்சலத்துடன் கூடப்பிறந்தவர்கள் நால்வர். நால்வரும் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு குழத்தைகள் இருந்தாலும் அனைவருக்கும் ஆண்பிள்ளைகளே இருந்தார்கள். அருணாச்சலத்தின் குடுப்பத்தைப் பொருத்தவரையில் அவரின் குடும்பத்தில் மதி தான் முதல் பெண்குழந்தை.
அத்தோடு மதி ஒரு குடும்பப் பெண’ எவ்வாறு இருக்க வேண்டும் என்று சங்ககாலத்திலிருந்து இற்றைகால வரைக்கும் புலவர்கள் கூறியிருக்கிறார்களோ அத்தனைப் பெண்ணியம் சார்ந்த குணங்களும் மதியிடம் அளவுக்கதிகமாகக் காணப்படுகின்றன. இத்தனைக்கும் அவள் கிராமத்துப் பெண். நவீன கால்திற்கேற்ப பெண்கள் தன்னை எவ்வாறு மாற்றிக் கொண்டாலும் தமிழ்ப் பண்பாட்டையும் தமிழர்களின் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு காலக் கண்ணாடி மதி. மகேஸ்வரியின் குடும்பத்துக்கும் மதி என்றால் அவ்வளவு இஷ்டம். மதிக்கு மட்டும் என்ன? குடும்பம் தான் கோயில் அவள் வணங்கும் கடவுள்கள் அவளின் குடும்பத்தினர் தான். மதியின் குடும்பத்தில் பாசத்துக்கு பஞ்சமேயில்லை. மதி பிறந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் சதீஸ் பிறந்தான். சுட்டிப்பையன். மதிக்கு கிடைக்கும் மரியாதையையும், பாசத்தையும் பார்த்து பொறாமைப்படுபவனாகவும் இருப்பவன். ஆனால் மகேஸ்வரியை விடவும் மதியைத் தான் சதீஸ்க்கு ரொம்பப் பிடிக்கும்.
மதி மிகவும் அமைதியானவள். படிப்பிலும் கெட்டிக்காரி. க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருந்தாலும் கலைப்பிரிவிலேயே உயர்தரம் கற்றாள். ஏனெனில் தனது மகள் மனதளவும் கூட கஷ்டப்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்திலும், வேறு பிரிவுகளில் கற்றால் எங்கே அவளை பிரிய நேருமோ என்ற எண்ணத்திலும் அவளை கலைப்பிரிவில் கற்கச் சொன்னார். இதற்கு சற்றும் கூட மறுப்புச் சொல்லாமல் மதி அப்படியே ஏற்றுக்கொண்டாள். ஆனால் அவள் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்று அவர் விரும்பாவிட்டாலும் குடும்பத்தின் கட்டாயத்தினால் அவளை அனுப்ப முடிவெடுத்தார்.
ஆனால் மதிக்கு தனது குடும்பத்தை விட்டுப் பிரிய மனதில்லாவிட்டாலும் “இந்த கெம்பஸ’ வாழ்க்கைல உனக்கு மிகப் பெரிய மாற்றம் ஒன்னு வரும்மா. அதோட குடும்பத்தத் தவிர வேறெதுவுமே உனக்கு தெரியாது. குடும்பத்துகுள்யேயே இருந்து பாசம், நேர்மை, பெண்மை, உண்மை இப்படி எவ்வளவோ விஷயம் மட்டுமே கத்து இருக்க. இத விடவும் வாழ்க்கைல தேவைப்பட்ட விஷயங’களும் இருக்கும்மா, அது கெட்ட விஷயமா இருந்தாலும் நீ கத்துக்கத்தான் வேணும். களவும் கற்று மற அதுக்கு அர்த்தம் தெரியும் தானேம்மா. கெட்ட விஷயங்களயும் நீ தெரிங்சுக்கோ. ஆனால் நீ எப்போதும் நல்ல விஷயங்களயே செய்யனும். எனக்கு நம்பிக்க இருக்கும்மா, எப்போதுமே இந்த குடும்பத்தில இருக்கிற யாரோட மனசையும் கஷ்டப்படுத்திற மாதிரி நடந்துக்க மாட்டம்மா அது எனக்கு தெரியும்” என்று கூறி அவளது தலையை தடவி விட்டார். மதி அழுதுகொண்டே தந்தையின் மடியில் படுத்துக் கொண்டாள்.
ஒரு கணம் தந்தை தன்மேல் கொண்ட நம்பிக்கையை எண்ணி பெருமைப்பட்டுக்கொண்டாள். அதைக் காப்பற்ற வேண்டுமென்று உறுதிமொழியெடுத்துக் கொண்டாள். பல்கலைக்கழகம் செல்ல வேண்டிய நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. மகேஸ்வரியும் மகளை பிரிய வேண்டும் என்பதை நினைக்கும் போதே அவருடைய விழி கண்ணீர் காவியம் எழுதத் தொடங்கி விடும். தனக்குள் இருக்கும் கவலையை மதியின் முன்னால் காட்டிக்கொள்ள மாட்டாள். ஏனெனில் தனது பெற்றோரின் முகத்தில் சிறு வாட்டத்தைக் கண்டாள் கூட மதி துடிதுடித்து விடுவாள். மகேஸ்வரி அருணாச்சலத்திடம் கூறி கண்ணீர் வடிப்பாள். அருணாச்சலம் தன்னை பலப்படுத்திக் கொண்டு “இங்க பாரு மகேஸ் எது எப்படியிருந்தாலும் மதி நாளைக்கு இன்னொருவரோட வீட்டுக்கு மருமகளாப் போகப் போறவ. அதனால இப்பவே மதிய அதுக்கு தயார்படுத்த வேண்டியிருக்கு, அந்தப்பொறுப்பு நம்ம ரெண்டு பேருக்குமே இருக்கு” என’று ஆறுதல் கூறுவார். ஆனால் தன்னை விடவும் அருணாச்சலத்திற்கே மதி பல்கலைக்கழகம் செல்வதிலும் அதன் பேறாக அவளைப் பிரிவதிலும் அதிக வருத்தம் உள்ளது என்பதை மகேஸ்வரியும் அறிவாள்.
காலங்கள் உருண்டோடின. மதி பல்கலைக்கழகம் செல்லும் நாள் நெருங்கியது. அன்று குடும்பத்துடன் அவர்கள் ஒரு தனியான பேரூந்தில் மதியை பல்கலைக்கழகத்தில் விட சென்றிருந்தனர். கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கையின் பல்கலைக்கழக தரவரிசையில் முதலாவது இடத்தில் இருக்கும் பல்கலைக்கழகம், அங்கு கலைப்பிரிவில் குறிப்பிட்ட வெற்றுப்புள்ளிக்கு அதிகமாக எடுக்கும் மாணவர்களையே தெரிவுசெய்வார்கள். இந்த பல்கழைக்கழகத்தைப் பார்த்தவுடனேயே மதியின் பெற்றோருக்கு தனது பிள்ளைக்கு எல்லா வசதிகளுடனும் கூடிய ஒரு சிறந்த கல்விமுறை கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்தது. அங்கு பல்கலைக்கழ மாணவர்களுக்கென தனியான வாசிகசாலை, பிரத்தியேக சிற்றுண்டிச்சாலை, கல்விகற்பதற்கென விஷேடமான தொழிநுட்ப வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் என்று பல சிறப்பியல்புகள் அங்கு காணப்பட்டன. அன்று எல்லோரும் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலையிலேயே மதிய உணவு அருந்தினார்கள். பிறகு புதிய பல்கலைக்கழக்கழக மாணவர்களுக்கென அங்கு கற்பிக்கும் பேராசிரியர்களால் சில அறிவுரைகள் மற்றும் பல்கலைக்கழக கல்விமுறைமை தொடர்பாக விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.
அதன் பிறகு மாலை ஐந்து மணியளவில் விடுதிகளுக்கென தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை விடுதிகளில் கொண்டு விடுவதற்காக பேரூந்து தயாராகவிருந்தது. மதிக்கு விடுதி வாழ்க்கை சோகத்தை ஏற்படுத்தலாம் என்றும் அவளது குடும்பத்தினர் அவளுக்காக ஒரு தனியார் தங்குமிட வசதியை ஏற்படுத்தியிருந்தனர்.அதன் பிறகு மதியின் குடும்பத்தினர் அவர்களின் பிரத்தியேக வாகனத்திலேயே மதியை தங்குமிடத்தில் விடுவதற்காக சென்றனர். அங்கு அவளுக்கு முதன்முறையாக அறிமுகமாகிய நண்பி எனில் அது சுமித்ரா தான். சுமித்ரா திருகோணமலையைச் சேர்ந்தவள். மதிக்கு மட்டுமல்ல அவளுடைய குடும்பத்திற்கே சுமித்ராவைப் பிடித்திருந்தது. அவளது கலகலவென்ற சிரிப்பு, இன்முகத்துடன் பேசும் அவளது பண்பு என்று எல்லா விடயங்களும் அவர்களுக்குப் பிடித்திருந்தது. அவர்கள் இருவருக்கும் ஒரு அறையே கிடைத்தது. அந்த அறையில் மொத்தமாக ஆறு பேர் தங்கலாம்.
அறை அவ்வளவு வசதியுடன் கூடியதாக இருக்கவில்லை. இருந்தாலும் ஏதோ பரவாயில்லை போலிருந்தது. அதன் பிறகு மதி தனது பொருட்களையெல்லாம் அறையினுள் வைத்துவிட்டு விடுதியின் முகாமையாளர் புதிய மாணவர்களை அழைத்து வந்த குடும்பத்தினரை திரும்பிச் செல்லுமாறு கூறப்பட்டதற்கிணங்க மதி குடும்பத்தாரை நோக்கி விரைந்தாள். அங்கு தனது குடும்பத்தினரே தன் பிரிவை நினைத்து வருந்துவது மதிக்கு தெரிந்தது. கலங்கிய கண்களுடன் தனது தந்தை, வழிந்தோடும் விழிநீரை தனது முந்தானையால் துடைத்துக் கொண்டிருக்கும் தாய், தன்னுடன் விளையாட, தன்னைக் கொஞ்ச, தன்னுடன் சண்டை பிடிக்க இனி தன் அக்கா வீட்டில் இருக்க மாட்டாள் என எண்ணி வருந்தும் சதீஸ், அவளுடைய குறும்புத்தனமான சிரிப்பையும், அவளுடைய காலடித்தடங்கள் பதித்த இடங்கலெல்லாம் இனி அவளுடைய வருகைக்காக பல்கலைக்கழக விடுமுறை வரையில் தவமாய் தவமிருக்க வேண்டும் என்று எண்ணி வருந்தும் சித்தப்பா பெரியப்பா, மாமா, அத்தை, பாட்டி என அனைவருக்கும் அன்றைய நாள் ஒரு கருப்பு நாளாகவே தோன்றியது.
அனைவரும் மதியின் மேல் முத்தமழை பொழிந்தனர். இனி அம்மா,அப்பா, தாத்தா,பாட்டி, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா இப்படி மொத்த குடும்பத்தோட பாசம் எல்லாமே எனக்குத்தான், அப்பா வேலை விட்டு வாங்கி வார ஐஸ்கிரீம், சொகலேட் எல்லாமே எனக்குதான், அம்மா செய்ற ஸ்வீட்ஸ் கூட எனக்குத்தான் என்று சிரித்தவாறே கூறினான் சதீஸ் தனது விரல்களாலும் வாயினாலும் நக்கல் செய்துகொண்டே. மதிக்கு தெரியும் தன்னை பிரியும் சதீஸினுடைய வேதனை எத்தனையென்று, அவனது உதடுகள் மட்டுமே பொய்கள் கூறின. ஆனால் கண்கள், அதற்குத்தான் பொய் சொல்லத் தெரியாதே… ஒரு வேளை தனது அக்கா அழுவதை விரும்பாமல் இருக்க, அந்த அழுகையை நிறுத்த அவன் அவ்வாறு கூறியிருக்கலாம்.
அறிமுகமில்லாத புதிய முகங்கள் யாருடன் கதைப்பது என்று கூட தெரியாது. இலங்கையின் மிகப்பெரிய பல்கலைக்கழகமது. அங்கு கல்வி கற்பதே தனக்கு ஒரு பெரிய அதிஷ்டம் என்றே மதி கருதினாள். ஆனாலும் பெற்றோரின் பிரிவும், குடும்பத்தின் பாசமும் அவளை இங்கே நிம்மதியாக வாழ்வதில் ஒரு தடையை ஏற்படுத்தியது.