பகுதி – 23
காலை சாதனா முதலில் எழுந்து விட்டாள். ரிஷி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க…. அவனை வேண்டுமென்றே சீண்ட ஆரம்பித்தாள்.
அவன் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளுவது, அவன் மூக்கை பிடித்துத் திருகுவது என்று அவள் சேட்டை செய்ய…. அதில் உறக்கம் கலைந்த ரிஷி, அவளை இறுக அனைத்து அவளை நகர விடாமல் செய்தவன், மீண்டும் தன் தூக்கத்தைத் தொடர்ந்தான்.
சாதனா அவனிடம் இருந்து விடுபடப் போராட… ரிஷி அவளின் இதழில் அழுத்தமாக முத்தம் வைக்க…. சாதனாவும் பதில் கொடுக்க… சிறிது நேரம் சென்று விலகிய ரிஷி “போதும் அடங்குவோம். இதுக்கு மேல போனா ரிஸ்க். வயித்துல பாப்பா இருக்கு.” என்றவன் எழுந்து சாதனா எழவும் கை கொடுத்தான்.
கீழே வந்ததும் ரிஷி பக்கவாட்டு தோட்டத்தின் கதவை திறந்து விட… இதமான தென்றல் வீசியது. இருவரும் கையில் ஆளுக்கொரு காபி மக்குடன் சோபாவில் அமர்ந்தனர். சிறு நேரம் அமைதியாகக் கழிய…. பிறகு ரிஷியே பேச்சை ஆரம்பித்தான்.
“நாம ஊருக்கு போறதை வேணா இன்னும் ஒரு பத்து நாள் தள்ளிப் போடுவோமா… நேத்து நான் நெட்ல படிச்சேன். கர்ப்பம் ஆன முதல் சில வாரங்கள் விமானப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லதுன்னு இருந்துச்சு.”
சாதனாவிற்கு மே ரிஷியோடு இன்னும் சில நாட்கள் இங்கே தங்கி இருக்க விருப்பம் தான். ஆனால் ராஜ்மோகனிற்குத் தேர்தல் வேலை இருக்கும். அந்த நேரத்தில் ரிஷி அங்கிருந்தால் தான் வசதிப்படும். அதனால் தான் தேர்தலுக்கு முன் தன் வேலையை முடித்துக்கொள்ள வேண்டும் என ரிஷி வந்தது.
“அது ஒரு சேப்டிக்காகச் சொல்றது ரிஷி. ஒன்னும் ஆகாது. நாம டிக்கெட் புக் பண்ண அன்னைக்கே கிளம்பிடலாம்.”
“ஓகே… எனக்கும் புரியுது. இருக்கனும்னு நினைச்சாலும் இப்ப இருக்க முடியாது. ஆனா நீ கர்ப்பமா இருக்கிறதை வீட்ல சொல்லிடனும் சாதனா…”
“இப்பவே சொல்லனுமா ரிஷி. அங்க போய்ச் சொல்லிக்கலாமே அத்தை ரொம்பப் பயப்படுவாங்க.”
[the_ad id=”6605″]
“இதுக்கே இத்தனை நாள் ஏன் சொல்லலைன்னு கேட்பாங்க. சொல்லாம இருக்கிறது தப்பு சாதனா…” என்ற ரிஷி ஜோதியை செல்லில் அழைத்தான்.
“டேய் ரிஷி எப்படி டா இருக்கீங்க? உன்னோட சேர்ந்து உன் பொண்டாட்டியும் போன் பண்ண மாட்டேங்கிறா…. என்னை எல்லாம் நியாபகம் இருக்கா இல்லையா….”
“அதெல்லாம் உங்க மருமகள் உங்களுக்காக நிறைய ஷாப்பிங் பண்ணி இருக்கா…. நான் தான் அவங்களுக்கு ஏன் இவ்வளவு வாங்குறேன்னு சொல்லி அடக்கி வச்சிருக்கேன்.”
“அவ எனக்கு வாங்கினா உனக்கு ஏன் டா பொறாமை?”
“பாட்டி ஆகிட்டீங்க…. உங்களுக்கு இனிமே இதெல்லாம் தேவையா…”
முதலில் ரிஷி சொன்னதன் அர்த்தத்தை ஜோதி புரிந்துகொள்ளவே இல்லை….
“என்னைப் பார்த்தா பாட்டி மாதிரியா இருக்கு?”
“நீங்க பார்க்க பாட்டி மாதிரி இல்லைனாலும் நீங்க பாட்டி தான்.”
“டேய் ! ஏன் டா திரும்பத் திரும்பப் பாட்டின்னு சொல்ற?”
“நீங்க பாட்டி ஆகிடீங்கன்னு நான் தான் மா சொல்லணும். இன்னும் உங்களுக்குப் புரியலைன்னா நான் என்ன பண்றது?”
ரிஷி மீண்டும் அழுத்தி சொன்ன விதத்தில் ஜோதிக்கு பல்பு எரிய… “டேய் ! ரிஷி…. நிஜமாவே நீ சொல்றது உண்மை தான… விளையாட்டுக்கு சொல்லலையே…”
“இதுல போய் விளையாடுவேனா…”
“ரொம்பச் சந்தோஷம் டா…. இவ்வளவு நாள் உன்னோட ராஜ்ஜியம் தான் நம்ம வீட்ல நடந்தது. இனி உன் குழந்தை வந்து எப்படி உன்னை ஆட்டி வைக்குது பாரு…. நீ எல்லாரையும் மிரட்டலாம். ஆனா… உன் குழந்தை கிட்ட உன்னோட வேலையெல்லாம் நடக்காது.”
ஜோதி ரிஷியை திட்டுவது போல் பேசினாலும், அது எல்லாம் அவனின் உற்சாகத்தைக் குறைப்பதாகவே இல்லை…. அவன் முகத்தில் அவ்வளவு புன்னகை…. அவன் ஸ்பீக்கரில் போட்டு பேசியதால்… சாதனாவும் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள்.
“இருங்க உங்க மருமககிட்ட கொடுக்கிறேன்.” என ரிஷி சொல்ல… செல்லை வாங்கிச் சாதனா பேசினாள்.
“ஹலோ அத்தை…”
“சாதனா நல்லா இருக்கியா டா…. ரிஷி சொன்னான் நம்ம வீட்டுக்குச் சின்னக் குட்டி வரப்போகுதாமே…. ரொம்பச் சந்தோஷம். நீ எப்படி இருக்க? உனக்குத் தலைசுத்தல் வாந்தி எதுவும் இருக்கா…”
“நான் நல்லா இருக்கேன் அத்தை. எப்பவோ ஒரு தடவை தான் வாந்தி வருது. ஆனா காலையில தான் எழுந்துக்க முடியலை… ரொம்பத் தூக்கமா வருது. மதியத்துக்கு மேல தெளிவா இருப்பேன்.”
“உன் குழந்தையும் அப்படியே உன்னை மாதிரின்னு சொல்லு….”
சாதனாவிடம் இருந்து செல்லை வாங்கிய ரிஷி “அம்மா ! அப்படியே என்னை மாதிரி மா…. எனக்குப் பிடிச்சது சாப்பிட்டத்தான் உங்க மருமகளுக்கு வாந்தி வரலை தெரியுமா… ரொம்பத் தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க….” என்றான்.
“ஐயோ ! தெரியாம சொல்லிட்டேன் டா…. உங்க குழந்தை உங்க ரெண்டு பேர் மாதிரியும் இருக்கும் போதுமா…ஆனா உன்னை மாதிரி கோபக்காரனா இல்லாம சாதனா மாதிரி அமைதியா இருக்கட்டும். சரி நீ சாதனா கிட்ட போன்னை கொடு….” என்றவர், “என்னைக்குக் கடைசியா தலைக்குக் குளிச்ச சாதனா…” எனக் கேட்க…. சாதனாவும் சொன்னாள்.
அவள் சொன்னதும் மனதிற்குள் கணக்கு போட்டு பாரத்தவர், “நாற்ப்பதஞ்சு நாள் மேல ஆகி இருக்கு… இப்ப சொல்றாங்க.” என நினைத்தவர், அப்போது ஒன்றும் கேட்கவில்லை…. ஆனால் அவரின் உற்சாகம் குறைந்து விட்டது.
“அங்க எதுவும் டாக்டர்கிட்ட போனீங்களா….” ஜோதி கேட்க….
[the_ad id=”6605″]
“இல்லை…. இங்க வரும் போது என்னோட டாக்டர் ப்ரண்ட் பார்த்திட்டு வந்தேன். திரும்ப அங்க வந்து தான் போகணும்.” சாதனா சொல்ல…
“சரி பார்த்து இருந்துக்கோ…” என ஜோதி போன்னை வைத்து விட்டார்.
ரிஷி சாதனா இருவருக்குமே அவரின் குரலில் இருந்த வேறுபாடு புரிந்தது. முதலில் இருந்த உற்சாகம் கடைசியாக அவர் போன்னை வைக்கும் போது இல்லை… சாதனா ரிஷியின் முகத்தைப் பார்க்க… அவன் முகமும் இறுகி இருந்தது.
“நீ உங்க வீட்ல சொல்லு…” ரிஷி சொல்ல….
“நான்னா… எனக்குச் சொல்ல ஒரு மாதிரி இருக்கே…” சாதனா சொல்ல… ரிஷிக்கு அவளின் வெட்கம் புரிந்தது. அவள் அம்மாவிடம் சொல்லவதென்றால்… அவளுக்கு எளிதாக இருக்கும். ரிஷியே ப்ரீதாவை அழைத்துச் சொல்ல… அவளுக்குச் சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை….
“ஐயோ ! இப்பன்னு பார்த்து அவரு இல்லையே…. இதைச் சொல்லி அவர்கிட்ட நான் ஒரு ட்ரீட் வாங்கிடுறேன் பாரு….” என ப்ரீதா ஆர்பரிக்க… அவளின் உற்சாகம் ரிஷியையும் தொற்றிக்கொண்டது.
ப்ரீதா நிறையப் பேசினாள். ஆனால் அவளுக்கு ஜோதி போல எத்தனை நாள் என்று எல்லாம் கேட்க தெரியவில்லை… “நான் அவர் வந்ததும், திரும்பக் கூப்பிடுறேன்.” என வைத்து விட்டாள்.
ப்ரீதா உடனே வெற்றியை அழைத்துச் சொல்லிவிட… அவன் உடனே வீட்டிற்குக் கிளம்பி வந்துவிட்டான். வீட்டிற்கு வந்ததும் அவனே சென்று தன் அப்பாவிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, சாதனாவை அழைத்தான்.
“ஹாய் அண்ணா…”
“ஹாய் சாதனா… இப்பத்தான் ப்ரீதா சொன்னா… ரொம்பச் சந்தோஷம்.”
“அண்ணா…” என்றதற்கு மேல் சாதனாவிற்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை….வெற்றியே மேலும் தொடர்ந்தான்.
“குட்டி ரிஷியா இல்லை…குட்டி சாதனாவான்னு தெரிஞ்சிக்க இப்பவே ஆர்வமா இருக்கு… ஆனா இருக்கிற ஒரு ரிஷியவே சமாளிக்க முடியலை… இதுல இன்னொன்னுன்னா கஷ்ட்டம் தான்.” வெற்றி சிரிப்பை அடக்கிக் கொண்டு சொல்ல… அதைக் கேட்டு அந்தப் பக்கம் ப்ரீதா அவனை இடிக்க… இந்தப்பக்கம் சாதனாவிற்கும் அடக்க முடியாத சிரிப்பு… அவள் ஓரக்கண்ணில் ரிஷியை பார்க்க…. அவனும் இவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
“அப்பா எங்க அண்ணா?” சாதனா பேச்சை மாற்ற அதைப் புரிந்து கொண்ட வெற்றி “என்ன பக்கத்தில ரிஷி இருக்கான்னா…” எனக் கேட்க…
“ஆமாம்… கொடுக்கவா…” சாதனா ரிஷியின் காதில் விழாதவாறு கேட்க….
“வேண்டாம்…. வேண்டாம்…. அவனுக்கு என்னோட பேச பிடிக்காது.” என்றான் வெற்றி.
“ஏன் அண்ணா அப்படிச் சொல்றீங்க? அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது. நீங்களா நினைச்சுக்காதீங்க.” சாதனா தன் கணவனுக்குப் பரிந்து பேச….
“சரி, நான் வாழ்த்தினதா ரிஷிகிட்ட சொல்லிடு…. நேர்ல பார்க்கும் போது நானும் சொல்றேன். இப்ப அப்பாகிட்ட கொடுக்கிறேன்.” என வெற்றி போன்னை சந்தானத்திடம் கொடுக்க…. அவருக்கு என்ன பேசுவது என்று எல்லாம் தெரியவில்லை… பொதுவாக நலம் விசாரித்து விட்டு வைத்துவிட்டார்.
சாதனா போன்னை வைத்து விட்டு ரிஷியின் அருகே சென்று உட்கார…. “என்ன சொன்னான் உங்க அண்ணன்?” என அவனாகவே ஆரம்பிக்க….
“உங்களுக்குத் தான் என்னோட அண்ணனை பிடிக்காது இல்ல…. அப்புறம் எதுக்கு அவரைப் பத்தி கேட்கிறீங்க?”
“நீ இப்படிச் சொன்னா… உடனே நான் எனக்கு அவனைப் பிடிக்கும்னு சொல்வேன்னு நினைச்சியா…. எனக்கு எப்பவும் அவன் விரோதி தான்.”
ரிஷியின் பதிலை கேட்டுச் சாதனா கடுப்பாகி விட்டாள். “உங்க கிட்ட போய்ப் பேசுறேன் பாருங்க என்னைச் சொல்லணும். எனக்குப் பசிக்குது எதாவது செஞ்சு தருவீங்களா இல்லையா….”
சாதனா சொன்னதும் எழுந்து கொண்ட ரிஷி “என்னை முழு நேரம் சமையல்காரனா ஆக்கி இருக்கடி. இதெல்லாம் குழந்தை பிறக்கிற வரை தான். அப்புறம் ஒழுங்கா சமையல் கத்துகிற வழிய பாரு…” என்றான்.
அங்கே ஜோதி மதிய உணவுக்கு ராஜ்மோகன் வந்ததும், இனிப்பை பரிமாறியவர், சாதனா கர்ப்பமாக இருப்பதைச் சொல்ல…. அதைக் கேட்டவருக்கோ மிகவும் மகிழ்ச்சி.
[the_ad id=”6605″]
“ஹப்பா ஒரு குடும்பமா ஆகிட்டான். இனி அவனைப் பத்தி கவலை இல்லை…” என ராஜ்மோகன் சொல்ல…. அப்போது அங்கே அமிர்தா பாட்டியும் இருந்தார். அவர் கடந்த ஒரு வாரமாக இங்கே தான் இருக்கிறார். ராஜ்மோகன் அவரிடம் சாதனாவை புகழ்ந்தார்.
“சாதனா ரொம்ப நல்ல பொண்ணு மா…. ரிஷியோட குணத்துக்கு ரொம்பப் பொறுமையா போய் அவனை இந்த அளவுக்கு மாத்தி இருக்கு.” என்றார்.
அமிர்தா பாட்டிக்குச் சாதனாவிடம் விரோதம் இல்லை. ஆனால் ரிஷி அவளை விரும்பி திருமணம் செய்யவில்லை என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அவளிடம் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசுவார். இப்போது இருவருக்கும் குழந்தையே வரப்போகிறது என்றதும் அவருக்கும் மகிழ்ச்சி தான். என்ன இருந்தாலும் அவர்கள் குடும்பத்து வாரிசை அவள் சுமக்கிறாள் அல்லவா…
அமிர்தா பாட்டி எத்தனை நாள் ஆச்சு என்று ஜோதியிடம் கேட்க…. ஜோதி தயக்கமாகவே பதில் அளித்தார்.
“என்னது நார்ப்பத்தஞ்சு நாள் மேல ஆகிருக்கு…. அப்போ இங்க இருந்து போகும் போதே அவளுக்குத் தெரியுமா…. என்ன தைரியம் இருந்தா என்னவோ இப்பதான் தெரிஞ்சா மாதிரி அங்கிருந்து போன்ல சொல்லுவா…அவங்க அம்மா இருந்திருந்தா அவங்ககிட்ட சொல்லாம இருந்திருப்பாளா” எனக் கேட்க…. ஜோதிக்கும் அதே எண்ணம் என்பதால் அவர் மெளனமாக இருந்தார்.
“அம்மா விடுங்க மா…” என்றார் ராஜ்மோகன். ஆனால் அமிர்தா பாட்டி புலம்பிக்கொண்டே இருந்தார்.
ப்ரீதா தன் அம்மாவை செல்லில் அழைத்தவள், “என்ன மா அண்ணி உண்டாகி இருக்காங்க. ஆனா நீங்க எனக்குச் சொல்லவே இல்லையே….” என அவள் சொன்னதும், ஜோதி எதையும் மனதிற்குள் வைத்து புழுங்கும் ரகமில்லை…. அதனால் அவர் எல்லாவற்றையும் ப்ரீதாவிடம் கொட்ட…. சாதனா செய்தது சரியில்லை என அவளும் நினைத்தாள்.
ப்ரீதா அதை வெற்றியிடம் சொல்லவும் செய்தாள். வெற்றிக்கு தன் மனைவி தன் தங்கையைப் பற்றிக் குறை சொல்வது பிடிக்கவில்லை என்ற போதிலும், சாதனா குழந்தையைப் பற்றி வீட்டில் சொல்லி இருக்கலாம் என்றும் தோன்றியது.