பகுதி – 24
ஜுரம் விட்டு இரண்டு நாட்களில் சாதனா வீடு திரும்பி விட… இன்னும் ஒரு வாரம் கழித்து மதுரை பயணத்தை வைத்துக்கொள்வோம் என முடிவு செய்தனர். சாதனா வீட்டிற்கு வந்த அன்றே வெற்றி மதுரைக்குக் கிளம்பி விட்டான்…. சந்தானமும், ராஜ்மோகனும் அவர்கள் வேலைக்கு நடுவிலும் வந்து சாதனாவை பார்த்துவிட்டு சென்றனர்.
சாதனா அன்று தான் சற்று தெம்பாக உணர்ந்தாள். சும்மா அறையிலேயே படுத்துக் கிடப்பது ஒருமாதிரி இருக்க… எழுந்து நடமாடிக்கொண்டு இருந்தாள்.
மதிய உணவை சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்தவள், ரெஸ்ட் ரூம் செல்ல…. அப்போது தான் அவளுக்கு உதிர போக்கு தொடக்கி இருந்தது. அதைப் பார்ததும் கலவரம் அடைந்தவள், அறைக்கு வந்து ரிஷியை செல்லில் அழைத்தாள். அவன் கீழே அலுவலக அறையில் தான் இருந்தான்.
சாதனா அழைத்ததும் உடனே நேரிலேயே வந்துவிட்டான். இத்தனை நாட்களில் சாதனா பேச கூடத் தெம்பு இல்லாமல் இருந்ததால்… அவனும் அவளிடம் இருந்து விலகி இருக்க… இப்போது சாதனாவே அழைக்கவும், அவளோடு பேசும் ஆசையில் வந்தவனுக்கு, மனைவி முகத்தில் இருந்த கலவரத்தை பார்த்ததும் பதட்டம் தொற்றிக்கொண்டது.
[the_ad id=”6605″]
“என்ன டி திரும்ப ஜுரம் வருதா….” என்றபடி ரிஷி அவளின் நெற்றியை தொட்டு பார்க்க… அவனின் கையை எடுத்து வயிற்றில் வைத்த சாதனா “ப்ளீடிங் ஆகுது ரிஷி.” என்றாள்.
ரிஷிக்கும் அதிர்ச்சி தான். ஒரு நொடி திகைத்து நின்றவன், சாதனாவோடு உடனே மருத்துவமனை கிளம்பினான்.
“இப்ப எங்க டா போறீங்க?” கேட்ட ஜோதியிடம் வந்து சொல்வதாகச் சொல்லிவிட்டு ரிஷி சாதனாவோடு மருத்துவமனைக்கு விரைந்தான். ரிஷியே காரை ஓட்ட… சாதனா கண்கள் கலங்க அமர்ந்து இருந்தாள்.
மருத்துவமனையில் முதலில் சாதனாவிற்கு ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது. பிறகு மருத்துவரை சந்திக்கச் சென்றனர்.
“எனக்குச் சொல்லவே ரொம்பக் கஷ்ட்டமா இருக்கு. ஆனா எனக்கு வேற வழியில்லை… இந்நேரம் உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்.” மருத்துவர் சொல்ல…. ரிஷி புரிந்ததாகத் தலையசைத்தான்.
“டாக்டர் வேற வழியே இல்லையா…” சாதனா கண்ணீருடன் கேட்க….
“இப்ப எதுக்குச் சாதனா அழறீங்க? இந்தக் குழந்தை மட்டும் உங்களுக்குத் தங்கி இருந்தா… கண்டிப்பா எதாவது குறை அந்தக் குழந்தைக்கு இருந்திருக்கும். அப்படி யாருக்கும் கஷ்ட்டம் கொடுக்காம கடவுள் உங்களைக் காப்பாத்திட்டார்ன்னு நினைச்சுக்கோங்க.”
“எனக்கு என் குழந்தை இருந்தாலே போதும், அது எப்படி இருந்தாலும் அதை நான் நல்லா வளர்த்திருப்பேன்.” சொல்லிவிட்டுச் சாதனா கட்டுபடுத்த முடியாமல் அழ…. ரிஷி அவளை இழுத்து தன் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். அவனுக்குமே அதே எண்ணம் தான்.
“ஆனா உங்க குழந்தை உங்களுக்கு அந்தக் கஷ்ட்டத்தை வைக்கலை….”
“நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு கலங்க தேவை இல்லை… இங்க பாருங்க இதெல்லாம் இன்னைக்கு வந்தவங்க விவரம். இவங்க எல்லாம் அவங்களே இப்ப குழந்தை வேண்டாம்னு வந்தவங்க. இப்ப உங்களுக்குச் சின்ன வயசு தான். வீணா மனசை போட்டு குழப்பிக்காதீங்க. இன்னும் ஆறு மாசம் கழிச்சு… திரும்பக் கன்சீவ் ஆனீங்கன்னா எல்லாம் சரி ஆகிடும்.”
மருத்துவரின் பேச்சில் சாதனா தெளிந்தாளோ இல்லையோ ரிஷி சற்றுத் தேறினான்.
“இப்ப என்ன டாக்டர் பண்ணனும். இவளை இங்க அட்மிட் பண்ணனுமா…”
“இவங்களுக்கு நான் கிளீன் எல்லாம் பண்ணப்போறது இல்லை… வெறும் மாத்திரை மட்டும் தரேன். ஏன்னா அவங்களுக்குத் தானாவே வெளி வர தொடங்கிட்டதாலே… வேற எதுவும் வேண்டாம். எதுவும் கர்ப்பபையில தங்காம வெளி வந்துட்டாலே போதும். அதை மட்டும் ஸ்கேன் பண்ணி பார்த்துக்கலாம்.”
“இவங்களை வீட்ல கூட வச்சுப் பார்த்துக்கலாம். ஆனா இப்ப தான் ஜுரம் வந்து போனதால… எதுக்கும் ஹாஸ்பிடல்ல இருக்கட்டும். ரெண்டு நாள் கழிச்சு டிஸ்சார்ஜ் பண்ணலாம்.”
சாதனா அறைக்கு வந்ததும், அவளுக்கு மாத்திரை கொடுக்கப்பட… அதை விழுங்கிவிட்டுக் கட்டிலில் விழுந்தாள். நர்ஸ் அறையில் இருந்து சென்றதும், ரிஷி கட்டிலில் அவளின் அருகே வந்து உட்கார…. அதுவரை கண் மூடி படுத்திருந்த சாதனா கண்திறந்தாள்.
ரிஷியை பார்க்கவே அவளுக்கு அவ்வளவு கஷ்ட்டமாக இருந்தது.
“சாரி ரிஷி, உங்களை நான் ரொம்பக் கஷ்ட்டபடுத்துறேன். உங்களை மட்டும் இல்லை குழந்தையும் ரொம்பப் படுத்திட்டேன். அதுதான் அது விட்டா போதும்னு போய்டுச்சு போல….”
சாதனா மேற்கொண்டு பேசாமல் ரிஷி அவளின் வாயை தன் விரல்களால் மூடினான்.
“எனக்குக் கஷ்ட்டமா தான் இருக்கு. இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா இந்தக் கஷ்ட்டம் நமக்கு நிரந்தரம் இல்லை…. இதுவும் கடந்து போகும் அவ்வளவு தான். நீ திரும்பப் பழைய மாதிரி ஆனாலே எனக்குப் போதும், வீணா மனசை போட்டு குழப்பிக்காத… நல்லா ரெஸ்ட் எடு.”
இனி ரெஸ்ட் எடுத்து என்ன ஆகப்போகுது? என ஒருவித விரக்தி மனப்பான்மையில் சாதனா இருக்க…. ரிஷிக்கு அப்போது அது புரியவில்லை.
“நான் போய் அம்மாவுக்குப் போன் பண்ணி சொல்லிட்டு வரேன்.” எனச் சொன்னதும், சாதனாவிற்கு ப் பயத்தில் முகம் வெளிற…. “நான் பார்த்துகிறேன். நீ பயப்பாடாத.” என அவளின் நெற்றியை வருடிவிட்டு ரிஷி வெளியே சென்றான்.
ஜோதிக்கு ரிஷி சொன்னதைக் கேட்டதும், தாங்கவே முடியவில்லை…. ரொம்ப நேரம் உட்கார்ந்து அழுதார். ப்ரீதா தான் அவரைச் சமாதானம் செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.
ஜோதி ரிஷியை பார்த்ததும், அவனைப் பிடி பிடியெனப் பிடித்துக்கொண்டார். இதை எதிர்பார்த்து தான் ரிஷி அவர் வந்ததும் உடனே அவரைச் சாதனா இருக்கும் அறைக்கு அழைத்துச் செல்லவில்லை…. மொத்த திட்டையும் அவனே வாங்கிகொண்டான். ஜோதியும் அவர் ஆத்திரம் தீரும்வரை அவனை விடவில்லை….
“இங்க பாருங்க அவளே ரொம்ப மனசு கஷ்ட்டத்துல இருக்கா…. நீங்க அவளை எதுவும் சொல்லக்கூடாது. அப்படி இருக்கிறதுன்னா ஹாஸ்பிடல்ல இருங்க. இல்லை நீங்க ஊருக்கு போய்டுங்க, நான் அவளைப் பார்த்துகிறேன்.” ரிஷி கண்டிப்பாகச் சொல்லிவிட….
எல்லோரின் வலியை விடச் சாதனாவின் வலி அதிகம் என்று ஜோதிகும் புரிந்தது. மற்றவர்களுக்கு மனதில் தான் வலியென்றால் அவளுக்கு உடலிலும் வலி இருக்கும் அல்லவா…. அந்த வேதனை அவருக்கும் தெரியும்.
ரிஷி ஜோதியை மருத்துவரிடம் பேச அனுப்பி வைத்தான். குழந்தை குறையோடு பிறக்க வாய்ப்பு அதிகம் இருந்தது. இப்போது அந்த வேதனை இல்லாமல் போய்விட்டது. அதோடு இன்னும் ஆறு மாதத்தில் சாதனா திரும்பத் தாய்மை அடைய முடியும் என மருத்தவர் எடுத்துச் சொன்னதும், ஜோதி ஓரளவு சமாதானம் ஆனார்.
[the_ad id=”6605″]
பிறகு தான் சாதனா இருந்த அறைக்குள் அவர் செல்லவே ரிஷி அனுமதித்தான். ஆனால் சாதனாவிற்கு த் தான் அவர்கள் யாரையும் பார்க்க கூடத் தைரியம் இல்லை… அவள் கண் மூடியே படுத்திருந்தாள்.
முதல் நாள் அவ்வளவு வலி இல்லை. ஆனால் இரண்டாம் நாள் மிகுந்த வலியும் உதிரப்போக்கும் இருக்க… சாதனா வலியை கூட வெளியே சொல்லாமல் பல்லைக் கடித்துப் பொறுத்துக்கொள்ள…. ரிஷிக்கு அவளைப் அப்படிப் பார்க்கவே முடியவில்லை.
ரிஷி சென்று மருத்துவரையே கேட்டு விட்டான். “எதாவது பண்ணுங்களேன் ப்ளீஸ்.”
“இன்னைக்கும் நாளைக்கும் கொஞ்சம் கஷ்ட்டமாத்தான் இருக்கும். பொறுத்து தான் அகனும் வேற வழியில்லை…. அப்புறம் நார்மல் ஆகிடுவாங்க.”
அவள் வலியில் துடிக்கும் போது தான் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருப்பதை எண்ணி ரிஷி வேதனை அடைந்தான். ஒரு குழந்தை உருவாக ஆண் பெண் இருவருமே காரணம். ஆனால் அந்தக் குழந்தைக்காக வலி மொத்தத்தையும் அனுபவிப்பது பெண் தான்.
அவனால் அவள் வலியை வாங்கிக்கொள்ளவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ முடியவில்லை. ஆனால் அதற்காக அவன் அப்படியே விடவும் இல்லை. அறையில் சாதனாவோடு உட்கார்ந்து டிவி பார்ப்பது. அவளோடு பேசிக்கொண்டிருப்பது எனத் தன்னால் முடிந்த மட்டும் அவள் வலியை பற்றி மட்டுமே நினைக்காமல் பார்த்துக் கொண்டான்.
மூன்றாம் நாள் மாலை சாதனாவிற்கு உதிரபோக்குப் பெருமளவு குறைந்து விட…. அவளை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
மீண்டும் ஏழாம் நாள் ஒரு ஸ்கேன் எடுக்கப்பட்டு அதில் எதுவும் பிரச்சனை இல்லை என வந்துவிட… அன்று இரவே விமானத்தில் மதுரை கிளம்பி விட்டனர்.
ரிஷிக்கு நிறைய வேலை இருந்தது. அதோடு தேர்தல் வேறு வருவதால்….ரிஷி அங்குச் சென்றால் தான் ராஜ்மோகனிற்கு அவர் வேலையைப் பார்க்க முடியும். அதனால் கிளம்பி விட்டனர்.
ஏற்கனவே ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரில் இல்லாததால்… ரிஷி மதுரைக்கு வந்ததும் அவனை வேலைகள் சூழ்ந்து கொள்ள…. அவனுக்கு வேறு எதையும் பற்றி நினைத்து வருந்த நேரம் இல்லாமல் போனது.
அவன் அப்போதும் சாதனாவை பற்றி மறக்கவில்லை… அவள் உடம்பு தேற வேண்டுமானால் அவள் நல்ல சத்தான ஆகாரம் சாப்பிட வேண்டும் என்பதால்… அதற்கான மருத்துவரிடம் இருந்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொண்டு வந்து சமையல்காரரிடம் கொடுத்து விட்டான்.
“சாமி அண்ணா இதுல இருக்கிற படி நேரத்திற்குச் செஞ்சு சாதனா ரூமுக்கு அனுப்பிடுங்க. அவங்க சாப்பிடலைன்னா என்கிட்டே சொல்லணும்.” என்றும் சொல்லி இருந்தான்.
சாதனாவிற்கு ஆரம்ப நாட்களில் வலி அதிகம் இருந்ததால் அவளால் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை… ஆனால் இப்போது ரிஷியும் அருகில் இல்லாமல் தனியாக இருந்ததால்… அவள் நிறைய வேண்டாதது எல்லாம் யோசித்தாள். வீட்டில் இருந்த சூழ்நிலைகளும் அவள் நினைப்பதற்கு ஏற்ற மாதிரியே இருந்தது.
முதலில் ஜோதி ரிஷி இல்லாத நேரம் வீட்டில் புலம்பி கொண்டே இருப்பார். “தனக்குத் தான் எல்லாம் தெரியும்னு மண்டை கணம். இப்ப என்ன ஆச்சு? பெரியவங்களை மதிக்கிறதே இல்லை….”
வீட்டிற்கு ஒரு குழந்தை வரப்போகிறது என்ற கற்பனையில் வாழ்ந்துவிட்டு அது இல்லையென்றதும் அவரால் தாங்க முடியவில்லை…. ரிஷி இருக்கும் நேரம் பேசினால்… அவன் எதாவது நறுக்கென்று பேசி விடுவான் என்பதால்… அவன் இல்லாத நேரம் தான் புலம்பிக் கொண்டு இருப்பார்.
[the_ad id=”6605″]
ஒரு கட்டத்திற்கு மேல் சாதனாவால் அதைப் பொறுக்கவே முடியவில்லை. ரிஷியின் மீது எந்தத் தவறும் இல்லாமல்… அவன் ஏன் பேச்சு வாங்க வேண்டும் என்று நினைத்தவள், “அவங்களுக்கு நான் மாசமா இருந்தது தெரியாது. நான் நேர்ல போய்த் தான் அவங்க கிட்ட சொன்னேன்.” எனச் சொல்லியே விட்டாள்.
அதைக் கேட்ட ஜோதிக்கு சாதனா மீது கோபம் தான். ஒரு மருத்துவராக இருந்து கொண்டு அவள் இப்படி நடந்து கொண்டது அவருக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை…. ஆனால் அவர் சாதனாவிடம் எதுவும் சொல்லவில்லை…. தன் மகள் ப்ரீதாவிடமே புலம்புவார். அவள் வெற்றியிடம் புலம்புவாள்.