பகுதி – 26
“ஹாய் ரிஷி என்ன இந்தப் பக்கம்?” சாதனா மூன்றாம் மனிதரிடம் கேட்பது போல் கேட்டு வைக்க…. ஒரு தடவை தங்களைச் சுற்றிப் பார்த்துக்கொண்ட ரிஷி, சாதனாவின் உடைக்குள் இருந்த தாலியை உள்ளே கைவிட்டு எடுத்தான். அவன் கையைத் தட்டி விட்ட சாதனா “ச்சீ… என்ன பண்றீங்க?” என்றாள்.
“இல்லை நீ என் பொண்டாட்டி தான…. மாத்தி வேற யாரையும் பார்க்க வந்திட்டேன்னோன்னு நினைச்சேன்.”
ரிஷி சொன்னதைக் கேட்டு சாதனா அவனை முறைக்க…. “என்னடி யாரோ மாதிரி பேசுற?” ரிஷி ஒருமாதிரிக் கேட்க…..
“திடிர்ன்னு வந்திருக்கீங்கன்னு கேட்டேன்.”
“பொண்டாட்டியை பார்க்க வர்ற லெட்டர் போட்டுட்டு வருவாங்களா…” என்றவன், “சரி சீக்கிரம் கிளம்பு… போகணும்.” என்றான்.
இவனிடம் எப்படித்தான் சொல்லப் போகிறோமோ என நினைத்தபடி சாதனா அவள் தங்கி இருந்த அறைக்குச் சென்றாள்.
வேகமாகக் குளித்து வேறு உடை மாற்றியவள், அவளின் பெட்டி மற்றும் இரண்டு பைகளோடு வெளியே வர…. ரிஷி அவனின் ஆள் முருகனுக்கு ஜாடை காட்ட… அவன் சென்று அவளிடம் இருந்த பொருட்களை வாங்கிச் சென்று காரில் வைத்தான்.
அப்பொழுதே மணி எழு இருக்கும். சாதனா காரில் ஏற… முன் இருக்கையில் வழக்கம் போல் ரிஷியின் ஆட்கள் இருந்தனர். எட்டு மணி ஆன போது “நல்ல ஹோட்டல்லா பார்த்து வண்டியை நிறுத்து சாப்டிட்டு போய்டலாம்.” என்றான் ரிஷி.
சாதனா மருத்துவ முகாமுக்காக வந்திருந்தது நாகர்கோவில் பக்கம். அதனால் அங்கிருந்து மதுரை செல்ல இரவு மிகவும் தாமதம் ஆகிவிடும் என்பதால்… வழியிலேயே ரிஷி உணவை முடித்து விட நினைத்தான்.
[the_ad id=”6605″]
சாப்பிட்டதும் சாதனாவிற்கு அப்படி ஒரு தூக்கம் வர… அதைக் கவனித்த ரிஷி, தன் மடியை காட்டி படுத்துக்கோ என்றான்.
முன்னாடி இருவரை வைத்துக்கொண்டு இவன் மடியில் படுப்பதா என நினைத்து முறைத்தவள், “காரை நிறுத்துங்க, நான் பின்னாடி போய்ப் படுத்துகிறேன்.” என்றாள்.
ரிஷியும் அவள் சொன்னதை ஏற்றுக் காரை நிறுத்த… சாதனா சென்று கடைசி இருக்கையில் படுத்துக்கொண்டாள். வீடு வருவரை அவள் விழிக்கவே இல்லை.
வீடு வந்து சேர நள்ளிரவுக்கும் மேல் ஆகிவிட்டதால்…. வீட்டினர் யாரும் விழித்து இல்லை. ரிஷி சாதனாவை எழுப்பி வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றான்.
தங்கள் அறைக்கு வந்ததும், உடை கூட மாற்றாமல் அப்படியே சென்று அவள் கட்டிலில் படுக்க… ரிஷி சென்று குளித்து விட்டு வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து வந்தவன், கட்டிலில் சென்று சாதனாவின் அருகே படுத்து, அவளை அணைக்க முயல… அதற்கு அவள் விடவே இல்லை.
“நான் தூங்கி ரெண்டு நாள் ஆகுது. எனக்குத் தொடர்ந்து வேலை இருந்தது. என்னைத் தூங்க விடுங்க.” சாதனா எரிந்து விழ… ரிஷி உடனே விலகி படுத்துக்கொண்டான்.
அவள் சொன்னதை ஏற்று அவன் சட்டென்று விலகி படுத்ததும் அவளுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. அவளுக்கு உடம்பு முடியாமல் போன நாளில் இருந்து அவனும் விலகி தானே இருக்கிறான். இன்று வந்து அனைத்தவனிடம் முகத்தில் அறைந்த மாதிரி பேசிவிட்டோமே என்று சாதனாவிற்கு மே குற்ற குறுகுறுப்பாக இருக்க….
“சாரி… நிஜமாவே எனக்கு டயர்ட்.” என்றாள்.
“நானும் ஒன்னும் பண்ணனும்னு நினைக்கலை… சும்மா கட்டி பிடிச்சு தூங்கலாம்னு தான் நினைச்சேன். சரி நீ தூங்கு.” என்றவன், திரும்பி படுத்துக்கொண்டான்.
சாதனாவிற்கு அதற்கு மேல் உறக்கமே வரவில்லை… ஏனோ அழுகை தான் வந்தது. ரிஷிக்கு அவள் அழுகிறாள் என்று நன்றாகவே தெரிந்தது. சிறிது நேரம் பொறுத்தவன், அவள் அழுகையை நிறுத்தும் வழியைக் காணோம் என்றதும், எழுத்து படுக்கையின் அருகே இருந்த விளக்கை ஒளிரவிட்டான்.
கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவன், சாதனாவையும் இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டான்.
“சொல்லு என்ன பிரச்சனை உனக்கு?”
சிறிது நேரம் கண்ணீரை அவன் மார்பில் வழிய விட்டவள், “நான் உங்களுக்கு வேண்டாம்.” என்றாள் சின்னதாகிவிட்ட குரலில்….
“ஏன்னு காரணம் சொல்லு? நீ வேண்டுமா வேண்டாம்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்.”
ரிஷி நேரடியாகக் கேட்கவும், சாதனாவும் எதையும் மறைக்கவில்லை. “நான் ரொம்பச் சுயநலவாதி. உங்களுக்குப் பிடிக்கலைன்னு தெரிஞ்சும் உங்களைக் கல்யாணம் பண்ணிகிட்டேன். குழந்தை உண்டாகி இருக்குன்னு தெரிஞ்சும் உங்கிட்ட சொல்லலை…. அப்ப கூட என்னைப் பத்தி தான் யோசிச்சேன். அதுதான் இப்படி ஆகிடுச்சு.”
ரிஷி குறுக்கிடாமல் முழுவதும் அவள் சொல்லி முடிக்கட்டும் என்று காத்திருந்தான்.
“நான் திரும்பக் கர்ப்பம் ஆறது கஷ்ட்டம். அப்படியே ஆனாலும் கரு தங்கிறது கஷ்டம். ஏற்கனவே ஒரு குழந்தையை என்னோட சுயநலத்தால இழந்துட்டேன். திரும்ப இன்னொரு குழந்தையையும் இழக்க என்னால முடியாது.”
“நான் தான தப்பு செஞ்சேன். அப்ப அதுக்கான தண்டனையை நான் தான் அனுபவிக்கனும். அதனால நீங்க என்னை டைவர்ஸ் பண்ணிட்டு வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கோங்க.” என்றவள், ரிஷியின் முகம் பார்க்க…. அவன் முகத்தில் இருந்து அவன் என்ன நினைக்கிறான் என்று ஒன்றும் புரியவில்லை.
“நீ என்ன குழந்தை வேண்டாம்னு வேணும்ன்னே எதுவும் செஞ்சியா…. உனக்கு மதுரையில இருந்திருந்தா கூடக் காய்ச்சல் வந்திருக்கலாம். அதோட உனக்கு இப்படி ஆனதுக்கு நீ மட்டும் காரணம் இல்லை… நானும் தான்.”
ரிஷி சொல்வது புரியாமல் சாதனா அவனைப் பார்க்க…. “நான் ஆரம்பத்தில இருந்தே உன்கிட்ட அன்பா இருந்திருந்தா… நீ இப்படி என்னைப் பார்க்க லண்டன் வரை வந்திருக்க மாட்ட…. உனக்குக் காய்ச்சலும் வந்திருக்காது.”
“அதோட இன்னொன்னும் தெரிஞ்சிக்கோ… உனக்கு உடம்பு முடியாம இருந்த போது… குழந்தைக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை… நீங்க பவரான மருந்து கொடுங்கன்னு நான்தான் டாக்டர்கிட்ட சொன்னேன்.”
ரிஷி சொன்னதைக் கேட்டு சாதனா அவனை நம்பாமல் பார்க்க…. “எனக்கு அப்ப நீ மட்டும் தான் முக்கியமா தெரிஞ்ச….நீ கண் முழிக்காம இருக்கிறதை என்னால இனியும் பொறுத்துக்க முடியும்னு தோணலை…. அதனால அப்படிச் சொன்னேன்.”
“நீ மட்டும் இல்லை… நானும் தான் காரணம். இனி என்ன யோசிச்சாலும் முடிஞ்சு போனது முடிஞ்சு போனது தான். அதனால அதை விட்டுட்டு அதைப் பத்தி பேசாத.”
ரிஷி என்ன சொன்ன போதிலும் சாதனா அதைக் கேட்கும் நிலையில் இல்லை. “வேண்டாம் ரிஷி, திரும்ப அடுத்தக் குழந்தைக்கும் அப்படி ஆச்சுன்னா… என்னால தாங்க முடியாது.”
“லூசு மாதிரி உளறாதே….உனக்குக் காரணம் இல்லாம கரு கலைஞ்சா தான் பயப்படனும். உனக்குக் காய்ச்சல் அதனால பவர்புல் மெடிசன் எடுத்ததுனால தான் அப்படி ஆச்சு. அதனால அடுத்தக் குழந்தைக்கும் அப்படி நடக்கும்னு கட்டாயம் இல்லை…”
[the_ad id=”6605″]
“இல்ல என்னால ரிஸ்க் எடுக்க முடியாது…” சாதனா பிடிவாதமாக இருக்க….
“இப்ப ஏன் குழந்தையைப் பத்தி பேசுற? நம்மை ஆறு மாசம் டாக்டர் டைம் எடுத்துக்கச் சொல்லி இருக்காங்க. நாம அதுக்கு மேலையும் எடுத்துப்போம். நீ உன்னோட கோர்ஸ் முடி அப்புறம் பார்க்கலாம்.” என்றான் ரிஷி.
“அத்தை, பாட்டி எல்லாம் எவ்வளவு ஆசையா இருந்தாங்க. நமக்காக அவங்களைக் கஷ்ட்டப்படுத்தனுமா….”
“அதுக்காக நான் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா டி…” ரிஷியின் பொறுமை பறந்தது.
“ஏன் பண்ணிகிட்டா என்ன? நீங்க என்னைப் பிடிச்சா கல்யாணம் பண்ணீங்க? இந்தக் கல்யாணம் என்னை எந்த வித்ததுலேயும் கட்டுபடுத்தாது. நான் நினைச்சபடி இருப்பேன்னு நீங்க தான சொன்னீங்க. இப்ப மட்டும் என்ன திடீர் பாசம் என் மேல?….”
சாதனா பேசியதை கேட்டு ரிஷிக்கு ஐயோ ! என்று இருந்தது. அவன் எதோ கோபத்தில் உளறியது. அதை இன்னும் நினைவு வைத்து கேட்கிறாளே…. அது பெண்களின் இயல்பான குணம்.
கணவனிடம் சண்டை வந்தால்… போன ஜன்மத்தில் அவர்கள் செய்ததை கூட மறக்காமல் நினைவு வைத்துச் சொல்வார்கள் என்று பாவம் அவன் அறியவில்லை.
“நான் அப்படிச் சொன்னேன்னே தவிர… ஒரு நாளாவது அப்படி நடந்துகிட்டேனா சாதனா. உன் மனசாட்ச்சியை தொட்டு சொல்லு….” ரிஷி கேட்க….
“கல்யாணம் பண்ணிகிட்டோம்னு வேற வழியில்லாம என்னைப் பொறுத்து போறீங்களோ என்னவோ….” என்றாள் சாதனாவும் பதிலுக்கு.
இருவர் சம்மதித்து நடக்கும் திருமணத்தில் இந்தச் சந்தேகமெல்லாம் வந்திருக்காது. ஆனால் இங்கே ஆரம்பமே தகராறு. நாம தான அவனைப் பிடிவாதமாகத் திருமணம் செய்தோம். நம்மோடு ஏன் அவனும் கஷ்ட்டப்படனும்? இது தான் சாதனாவின் எண்ணமாக இருந்தது. அது ரிஷிக்கும் புரிந்தது.
சாதனாவின் புலம்பல் அதோடு நிற்கவில்லை…. அவள் நிறையப் பேசினாள். “நான் நேகாவோட வாழ்க்கையைப் பரிச்சுட்டேன். அவளோட சாபம் தான் இப்படி ஆகிடுச்சோ…” எனச் சாதனா சொன்ன போது….. ரிஷிக்கு எங்காவது சென்று முட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.
சில பேர் சொல்லும் பொண்டாட்டி டார்ச்சர் என்பது என்னவென்று அன்று ரிஷிக்கு நன்றாகப் புரிந்தது. பேசிப் பேசி சாதனா களைத்தாளோ இல்லையோ ரிஷி மிகவும் கலைத்து விட்டான். இருந்தாலும் அவளிடம் கோபப்பட முடியவில்லை.
தன்னை உருகி உருகி காதலித்த பெண். அவளுக்கு அவனோடு திருமணம் நடக்குமா என்று கூடத் தெரியாது. ஆனால் அவள் அவனிடம் கொண்ட அன்பு உண்மையானது. சாதனாவின் தீவிரமான அந்த எண்ணம் கூட…. சேரவே வாய்ப்பில்லாத தங்களைத் திருமணத்தில் இணைத்ததாக ரிஷி நினைத்தான்.
சாதனாவிற்கு த் தன்மேல் இருந்த ஈடுபாடு ரிஷிக்கு தெரியும் அல்லவா…. ஆனால் அதைச் சாதனாவே சொல்ல வேண்டும் என்றுதான், அவன் அதைப் பற்றி இதுவரை சாதனாவிடம் கேட்கவில்லை. ஆனால் இப்போது வேறுவழியின்றி அவனே ஆரம்பித்தான்.
“நேகாவிற்கு முன்னாடியே நீ என்னை லவ் பண்ணி இருக்க… அதனால நீ அதை நினைச்சுக் கில்ட்டியா பீல் பண்ண வேண்டாம்.” ரிஷி இலகுவாகச் சொல்ல….
“நான் உங்ககிட்ட சொன்னேனா அப்படி.” சாதனா சண்டைக்கு வர….
“பொய் சொல்லாத சாதனா நானே உன் ரூம்ல பார்த்தேன். சரியான கேடி நீன்னு…. எனக்கே தெரியாம என்னோடது எல்லாம் திருடி வச்சிருக்க… அதுகென்ன சொல்லப்போற…” ரிஷி கெத்தாகக் கேட்க…
“அது பொண்ணுங்க அப்படித்தான். ஏன் நிறையப் பேர் சச்சின் போட்டோ… தோனி, விஜய், அஜித் போட்டோ எல்லாம் வச்சிகிறது இல்லையா… அது மாதிரி தான் இதுவும். அதுபேர் லவ் இல்லை க்ரஷ்.”
“அடிப்பாவி ! ரொம்பச் சந்தோஷப்பட்டிருந்தேனே… இப்படி ஒரே நிமிஷத்துல தூக்கி போட்டுட்டியே…” என்றவனுக்கு, அப்படி ஒரு சிரிப்பு…. “சரி அவங்க எல்லாம் பிரபலங்க. அவங்க மேல க்ரஷ் வரலாம். ஆனா நான் ஒன்னும் அப்படி இல்லையே… என் மேல வர என்ன காரணம்.” ரிஷி விடாமல் கேட்க….
“அது நீங்க ஒரு தடவை எனக்கு உதவி பண்ணீங்க.” சாதனா சொல்ல ரிஷி அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.
“அப்படியா ஆனா எனக்கு உன்னைப் பார்த்ததா நினைவே இல்லையே….”
“எங்க அம்மா தவறியிருந்த டைம். நான் எப்பவும் தனியாவே இருப்பேன். அப்ப ஒரு பையன் என்கிட்டே சில்மிஷம் பண்ணான். அப்ப நீங்க வந்து அவனை அடிச்சீங்க.” சாதனா சொன்னதும், ரிஷிக்கும் அந்தச் சம்பவம் நினைவு வந்தது.
“ஆமாம், நான் கூட நினைச்சேன் இந்தப் பொண்ணு ஒரு தேங்க்ஸ் கூடச் சொல்லாம போயிடுச்சேன்னு… அது நீ தானா…. அப்பவே என் பொண்டாட்டி கிட்ட தப்பா நடந்துகிட்டவனை அடிச்சிருக்கேன் பார்த்தியா…. இது எதோ பூர்வ ஜன்ம பந்தம்.” ரிஷி உருக்கமாகப் பேச….
“ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. அப்படி இருந்தா நீங்க எப்படி நேகாவை லவ் பண்ணி இருப்பீங்க?” சாதனா சிடுசிடுக்க….
“உனக்குச் செலெக்டிவ் அம்னிஷியா எல்லாம் வராதா சாதனா…. இப்படி எல்லாத்தையும் நினைவு வச்சிருக்கியே…” ரிஷி பாவமாகச் சொல்ல… அதெல்லாம் பார்த்து கூடச் சாதனா இளகவில்லை…
“ஒரு ஹீரோ இமேஜ் உங்க மேல அவ்வளவு தான். லவ்வும் கிடையாது ஒன்னும் கிடையாது.” என்றாள் முடிவாக.
“சரி அதெல்லாம் விடு பரவாயில்லை… நம்ம நாட்டில எல்லோரும் லவ் பண்ணியா கல்யாணம் பண்ணிக்கிறாங்க. இப்ப நம்ம விஷயத்துக்கு வருவோம்.”
[the_ad id=”6605″]
“நம்ம கல்யாணம் எப்படி நடந்து இருந்தாலும், கல்யாணத்துக்கு அப்புறம் லவ் வந்துச்சு… அது உண்மை…” ரிஷி சொல்ல…. சாதனா மறுக்க வாய் திறந்தாள்.
“இங்க பாரு பேசுற நான் முட்டாள் இல்லை. எல்லாத்தையும் தட்டி தட்டி பேசின… அப்புறம் பல்லை தட்டி கையில கொடுத்துடுவேன். என்னை முழுசா சொல்ல விடு…” ரிஷி மீண்டும் கடுமைக்கு மாறி இருந்தான். இவளிடம் அமைதியாகப் பேசுவதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று அவனுக்குத் தெரியும்.
“நீ நினைச்சா எனக்கு விருப்பம் இல்லைனாலும் கல்யாணம் பண்ணிப்ப…. அதே மாதிரி உனக்கு இஷ்ட்டம் இல்லன்னா உடனே விலகிடனும். உனக்கு என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது?” ரிஷி கேட்க…. சாதனா பதில் சொல்லாமல் மௌனம் காத்தாள்.
“நீ எல்லாம் ஒரு டாக்டரா…. உன்கிட்ட முதல்ல பாசிடிவ் எண்ணம் இருந்தா தான்…. நீ கொடுக்கிற மருந்து கூட வேலை செய்யும். தயவு செஞ்சு இனிமே ஹாஸ்பிடல் பக்கம் காலை எடுத்து வைக்காத. அப்படி வச்ச… நானே உன் காலை வெட்டுவேன்.”
“எனக்கு உன்கிட்ட ரொம்பப் பிடிச்சது என்ன தெரியுமா? உன்னோட தைரியம் தான். நான் எப்பவுமே மெண்டல்லா நீ ரொம்ப ஸ்ட்ராங் அப்படின்னு நினைப்பேன். ஆனா அப்படி இல்லைன்னு நீ ப்ரூப் பண்ணிட்ட….”
“ஒரு கஷ்ட்டம் வந்ததும், பிரிஞ்சு போகலாம்னு சொல்ற உன்னோட சேர்ந்து வாழறது எனக்கும் கஷ்ட்டம் தான். அதனால நீ சொன்னதைப் பத்தி யோசிக்கிறேன்.”
“எனக்குத் தெரியும் என்ன பண்ணனும்னு? ஆனா அதுக்குள்ள… நீ வெற்றி கிட்ட உளறின மாதிரி வேற யார்கிட்டயும் உளறி, அவங்களுக்கு நெஞ்சு வலி வர வச்சிடாத…. நானே பார்த்துப் பக்குவமா சொல்லிகிறேன்.”
“அம்மா, அப்பா சென்னை போற வரை இங்க இரு…. மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்.” என்றவன், விளக்கை அனைத்து விட்டு படுத்து விட்டான்.
பிரிந்து விடலாம் என எளிதாகச் சொன்ன சாதனாவிற்கு அதையே ரிஷி சொன்ன போது… மனதில் மிகவும் அடி வாங்கினாள். அவளுக்கு மிகவும் வலித்தது. அதே போலத் தானே அவனுக்கும் இருந்திருக்கும் அதை நினைக்க மறந்தாள்.
அவளின் வலியை அவளின் கண்களே காட்டிக்கொடுத்தது. அதை உணர்ந்த ரிஷிக்கு அவளை அனைத்து ஆறுதல் சொல்லவேண்டும் போல் இருந்தாலும், அதை அடக்கிக்கொண்டான்.
இவளுக்கு எல்லாம் சொன்னா புரியாது பட்டாத்தான் தெரியும். இன்னைக்குப் பாவம் பார்த்து இளகினா… திரும்பி பின்னாடி ஒரு நாள் இதே போல மீண்டும் ஆரம்பிப்பாள்.
அதோடு இன்னொன்றும், சாதனா மனதில் இது மாதிரி தவறான எண்ணங்களை வளரவிடக் கூடாது என நினைத்தான். நாம் ஒன்றை தீவிரமாக நினைத்துப் பயப்படும் போது…. அப்படியே நடக்க வாய்ப்புகள் அதிகம்.
ஆரோகியமான உடலை விட… ஆரோகியமான எண்ணமே சிறந்தது. உடல் பலகீனமானவர்கள் கூட மனதில் தைரியம் இருந்தால்… எப்படிப் பட்ட துன்பத்தையும் தாண்டி வந்துவிடுவார்கள்.
அவளுக்குக் கருகலைப்பு ஆனது, அவளை மனதளவில் மிகவும் பலகீனமாக ஆக்கி இருந்தது. அதனால் தான் தொட்டதற்கெல்லாம் அழுகை வந்தது. முதலில் குழந்தையைப் பற்றி அவள் அதிகம் யோசிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தவன், அடுத்தடுத்த அதிரடியில் இறங்க…. சாதனா திணறிப் போனாள்.
சிலரிடம் அன்பாகப் பேசி காதலை புரியவைக்கலாம். ஆனால் சிலரிடம் அதிரடித்தான் சரி வரும். ஏற்கனவே அடாவடியான ஆள் ரிஷி… இனி கேட்கவும் வேண்டுமா….