தன் அறையில் படித்துக்கொண்டிருந்த வேதாவை சென்று கூட்டிவந்தான் அவள் அண்ணன் இராஜேன்திரன்.
“ என்னப்பா ?” என்றவாறே வந்து அமர்ந்தாள் வேதா.
“வேதாம்மா, கோவில்ல வெச்சி ஒரு குட்டி பொண்ணு உனக்கு ஃபிரண்டு ஆனாளே, சிந்து…”, என்று நிறுத்தினார்.
சிறிய புன்னகையோடு, “ஆமாம்பா, ரொம்ப சமத்து..” என்றாள் வேதா.
“அவ சித்தப்பாவை கோவில்ல வெச்சிதான உன்னை பொண்ணு கேட்டா ?, அதான் சீனு ஐய்யர் அவரையே உனக்கு வரனா ஜாதகம் பார்க்கசொன்னார்.”, என்று மகளின் முகம் பார்த்தார்.
“இப்போ என்னதுக்கு வரன் எல்லாம் ? படிச்சு முடிக்கணும், வேலைக்கு போகணும்..”, என்று நெற்றி சுருக்கி சொன்னாள் வேதா.
“சட்டுன்னு உன் வேலை ஆனாதான, அடுத்து உங்கண்ணனுக்கு பார்க்க? நீ பாட்டுக்கு அடுக்கிட்டே போற ?”, என்று பாய்ந்தார் கோமதி.
மகள் முகம் கோபத்தைப் பூசவும், “ நீ கொஞ்சம் சும்மா இரு கோமதி.”, என்று அவரை அடக்கி, “ இல்லமா, ஜாதகம் பார்த்து , பொருந்தினா, உன் படிப்பு முடியவும் கல்யாணம்னு நெனச்சோம்.”, என்றார் சௌந்தர்ராஜன்.
“ அத அப்ப பார்துக்கலாமேபா, இப்பவே என்ன ?”, என்றாள் வேதா.
“இப்பவே பார்த்துட்டோம். நல்லா பொருந்துதுனு ஜோசியர் சொல்லிட்டார்.”, என்று இடை புகுந்தார் கோமதி.
இப்போது, வேதா முழித்தாள். “ சும்மாதான் அண்ணா பேசிட்டிருந்தோம். நான் ஒன்ணும் யோசிக்கலையே…”
“ இல்லைமா, ஜாதகம் பார்த்ததில் ஒரு சின்ன சிக்கல்”, என்று ஜோசியர் போட்ட குண்டை விவரித்தார் சௌந்தர்ராஜன்.
“ அப்பா, என்ன விளையாடுரீங்களா ? அடுத்த மாசம் கல்யாணம், மூணு மாசத்தில் குழந்தை…என் படிப்பு என்னாறது ?”, கோபத்தில் குரல் உயர்ந்தது வேதாவிற்கு.
“அதெல்லாம் நீ கல்யாணம் முடிஞ்சும் படிக்கலாம். குழந்தைய நான் பார்துக்கறேன். மாப்பிள்ளைக்கு சிங்கப்பூரில் வேலை கிடைச்சிருக்கு. அவர் அங்க போயிடுவாரு. நீ புள்ள பெத்து, படிப்பு முடிஞ்சு, அவர் கூட அப்பறம் போய்க்கலாம். ”, என்று விம் போட்டு விளக்கினார் கோமதி.
“கல்யாணம் பண்ணி என்னை இங்க விட்டுட்டு போறதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணனும் ? போயிட்டு வரட்டுமே, அப்பறம் பண்ணுவோம்.“ என வேதா கேட்க,
“அறிவில்லையாடி உனக்கு ? ரெண்டு வருஷம் கழிச்சி பண்ணா, அடுத்து அஞ்சு வருஷம் குழந்தை பிறக்காதாம். பதி மாமா பொண்ணுக்கு, மூணு வருஷம் குழந்தை இல்லைன்னு எவ்ளோ பேச்சு பேசினாங்க ஜனங்க ?” என்று பாய்ந்தார் கோமதி.
“எல்லாரையும்விட நீங்கதான் ஜாஸ்தி பேசினீங்க..”, என்று பதிலடி கொடுத்தாள் வேதா.
“அதனாலதான், உன்ன ஒருத்தர் பேசுறபடி இருக்கக்கூடாதுன்னு பார்க்கறேன்”, என்று முறைத்தார் கோமதி.
“ஜாதகத்தில் அவருக்குதானேபா பிரெச்சனை, ஏன், அப்பறமா எனக்கு வேற வரன் பார்த்தா என்ன ?”, என்று கேட்டாள் வேதா. வாய் கேட்டதே ஒழிய , சட்டென்று, அன்று அவள் பெயரை பாட்டியின் பேரா, என்று கேட்டுவிட்டு முழித்த விகரமின் முகம் வந்துபோனது.
“நல்ல இடம்மா. எனக்கு விக்ரம் காலேஜ்லயே தெரியும். ரொம்ப நல்ல டைப், அப்பவே குடும்ப பொறுப்பு உணர்ந்து, பார்ட் டைம் வேல பார்த்துகிட்டே நல்லா படிச்சான். அப்பவே சி.ஏ ப்ரிப்பேர் பண்ண ஆரம்பிசிட்டான். அவன் ஆடிட்டரையும் பார்த்து பேசினேன். நல்ல புத்திசாலி, பொறுப்பானவன், நிறைய அச்சீவ் பண்ணுவான்னு சொன்னார். அதான்மா உங்கிட்ட கேக்கலாம்னு.” என்று விவரித்தான் அவள் அண்ணன்.
அவர்களைப் பார்த்தவள், “உங்க மூணு பேருக்குமே சம்மதமா ? “, என்று கேட்டாள்.
“ஜோசியரே சொல்லிட்டார், ரெண்டு பேருமே அமோகமா வாழுவீங்கன்னு. அவங்க குடும்பமும் பிக்கல் பிடுங்கல் இல்லாதது. இவரும் கடைசி பிள்ளை. குடும்ப பொறுப்புன்னு பெருசா தலைல விழாது. மூத்த மகனும், மருமகளும் தீர்க்கமா ஆளுமையா இருக்காங்க. அவங்களே பார்த்துப்பாங்க. “ என்று கோமதி அவர் பங்குக்குச் சொன்னார்.
“நீங்க என்னப்பா சொல்ரீங்க ? “ என்று தந்தை முகம் பார்த்தாள்.
“நல்ல வரந்தான் வேதாம்மா, ஆனா நீ சொல்றதுதான் முடிவு. உடனே சொல்லணும்னு இல்லை. நீ யோசி. அவங்களுமே விக்ரம்கிட்ட சொல்லணும், என்ன சொல்லுவானோன்னு தான் சொன்னாங்க. நீ நாளைக்கு சாயந்திரம் வரைக்கும் யோசி. விக்ரம்கிட்ட பேசணும்னா, அண்ணன்கிட்ட சொல்லு. போன் பண்ணித்தருவான். உன் முடிவுதான்.” என்றார்.
மெல்ல எழுந்து உள்ளே சென்றாள் வேதா. “எதுக்கு இப்படி சொன்னீங்க அவகிட்ட..” என்று தாய் எகிறுவது கேட்டது கதவை சாற்றும்போது.
ஒரு நிமிடம் நிதானித்து விக்ரமை பற்றி யோசித்தாள். ‘சராசரிக்கு கொஞ்சம் மேலே உயரம். அந்த காலத்து மாதவன் போல ஒரு சாக்லேட் பாய் லுக், க்ளீன் ஷேவ் செய்த முகம். அதில் திருதிருத்த விழிகள். இப்போது நினைத்தாலும் கோவிலில் அவன் முகம் போன போக்கு புன்னகை வரவழைத்தது. ஐபக்கோவில், அவள் பெயரைப்பற்றி சொன்னபோது, சிரித்த முகத்தில் கண்கள் சுருங்க, விரிந்த புன்னகை., என்ன இவ்வளவு நோட் பண்ணிருக்கோம் நமக்குத் தெரியாமலேயே’, என்று திடுக்கிட்டாள்.
கைபேசி பீப் செய்யவும், எடுத்துப் பார்த்தாள். விக்ரம் நம்பர் என்று அவன் கைபேசி எண்ணை அண்ணன் அனுப்பியிருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் விக்ரம் கூப்பிடுவான் என்று.
[the_ad id=”6605″]
அங்கே விக்ரம் வீட்டிலோ, குழப்பத்தில் இருந்தான் விக்ரம், விஷயம் தெரிந்ததிலிருந்து. அவன் அம்மாவோ, ஏழு வருஷம் கழித்துதான் குழந்தை என்று சொன்னதில் பயந்திருந்தார். உடனே கல்யாணம் பண்ணிடலாம் என்று பரபரத்தார். ஜோசியர் சொன்னதைக் கேட்டு இப்படி அவர் ஆடுவது விக்ரமிற்கு விளங்கவில்லை. அவன் யோசிக்கட்டும், கொஞ்சம் விடுங்கமா அவனை என்று அண்ணன்தான் பர்வதம்மாவை அடக்கி வைத்தான்.
அவளை வெகுவாகப் பிடித்திருந்தது சந்தேகமேயில்லை. கோவிலில் அவள் சிரித்த முகம் பார்த்ததும் மனதில் பதிந்தது. ஆனால் ஐஸ் கிரீம் கடையில்தான், அவள் பேசக்கேட்டு முழுவதும் விழுந்தது. அவள் பழைய காலத்துப் பேரைக்கூட கேலியாய் கதை சொன்னவிதமும், அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டதும் அவனை வெகுவாகக் கவர்ந்தது.
விக்ரமிற்கு, சற்று எதிர்மறை சிந்தனைகள் அதிகம். வாழ்க்கை தனக்கு எல்லாவற்றையும் போராட வைத்தே தருகிறது என்று மனதில் பதிந்துவிட்டது. அதுதான், அவளின் எளிதான போக்கு மிகவும் பிடித்தது. இப்படி அவனுக்கு ஒரு பட்டிக்காட்டு பெயர் இருந்தால், மற்றவர் கேலிகளை அவனால் தாங்கியிருக்கமுடிந்திருக்காது. வேதா போன்று ஒருத்தி இருந்தால், கஷ்டங்களையும் எளிதாக கையாளமுடியும் என்று தோன்றியது. அண்ணிமாதிரி இவளும் பக்குவமானவளாக இருப்பாள் என்று நினைத்தான்.
விக்ரம் இயல்பிலேயே கொஞ்சம் அமைதியான சுபாவம். அவன் அக்காவின் நக்கல்களுக்கும் ஒதுங்கியே போவான். அவன் தந்தை இறந்தது, பின் வந்த பணக்கஷ்டம். கல்லூரிக்காலத்தில் கவலையின்றி சுற்ற வேண்டிய பருவத்தில், வேலை, சி.ஏ படிப்பு என்று சுமை ஏற்றிக்கொண்டான்.நிமரலாம் என்று நினைக்கையில், வீடு, அக்காவிற்கு பணம் என்று அம்மாவின் குடைச்சல். கடந்த பத்து வருடங்களும் போராட்டம்தான். அவன் சி.ஏ பைனல் எழுதுகையில், தேர்வில் தோற்றால், மீண்டும் தேர்வெழுத எங்கே காசு கட்டுவது என்றே மிகவும் மெனக்கெட, அது மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொடுத்தது.
அந்த அறிவுதான் இப்போது, வேதாவின்புறம் யோசிக்கவைத்தது. படிக்கும் பெண்ணை, உடனே கல்யாணம், குழந்தை என்று இழுப்பது சுயனலமாகத் தோன்றியது. அவளுக்குத் தன்னை பிடிக்குமா, அதுவும் இப்படி ஒரு இக்கட்டில் திருமணம் செய்யும் அளவுக்கு ? அப்படியே அவர்கள் வீட்டில் கட்டாயப்படுத்தினால், அந்தக் கோபமும் அவன் மீதுதானே திரும்பும். இதெல்லாம் போதாதென்று, மூன்று மாதத்தில் இவன் விட்டுவிட்டு சிங்கப்பூர் செல்ல வேண்டும். எப்படி ஒத்துக்கொள்வாள் ? எனக்கு மட்டும் எதுவும் எளிதாக அமையவே அமையாதா? என்று தலையை பிடித்து அமர்ந்திருந்தான்.
மாலினி கதவை தட்டி உள்ளே நுழைந்தாள். “என்ன விக்ரம், என்ன குழப்பம் ?”.
இதுவரை வேதாவிற்காக யோசித்ததை சொன்னான். “எப்படியண்ணி என்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேக்கமுடியும் ?”
[the_ad id=”6605″]
“அவ பக்க நியாயம் சொன்ன, ஆனா,உன் பக்கம் எப்படி ? பொருந்தணும்னு என்னை வேண்டிக்க சொன்ன, இப்போ வேதா வேண்டாமா ?”என்றாள் மாலினி.
“ வேணும்தான் அண்ணி. அவள ரொம்ப பிடிச்சிருக்கு…”
“ என்ன விக்ரம் லவ்வா ?”, என்று சிரித்தவாறே கேட்டாள் மாலினி.
“ லவ்வான்னு நான் யோசிக்கறதுக்குள்ளயே, கல்யாணம், குழந்தைன்னு வந்து நிக்குதே “, என்றான் பரிதாபமாக.
“லவ்வுன்னா, கல்யாணமாகறதுலதான் பிரச்சனை வரும். உனக்குதான் இப்படி வித்யாசமான பிரச்சனை”, என்று புன்னைத்தாள் மாலினி.
“என்ன அண்ணி பண்ணட்டும் ?”, என்று கேட்டான்.
“அவளுக்காக நீ யோசிக்கறது வெரி குட். ஆனா, அவ இப்படித்தான் முடிவெடுப்பான்னு நீயா அனுமானிக்காத. அவளோட பேசு. எல்லாமே நீங்கதான் ஃபேஸ் பண்ணனும். உன் மனச சொல்லு, அவ என்ன நினைக்கறான்னும் பாரு. அவ நம்பர் வாங்கித் தரட்டுமா ? “
“இல்லண்ணி, அவ அண்ணங்கிட்ட கேட்டுக்கறேன். பேசிட்டு நாளைக்கு சாயந்திரம் முடிவு சொல்றேன்.”, என்றான்.
“உனக்கு ஒண்ணு கண்டிப்பா வேணும்னா, அதுக்கு நீதான் ஸ்டெப் எடுக்கணும். எதுவும் செய்யாம, அப்பறம் ஃபீல் பண்ணக்கூடாது. ஆல் தி பெஸ்ட்”, என்று விடை பெற்றாள் மாலினி.