பகுதி – 30
சாதனாவின் உறவினர்கள் சிலர் அவர்கள் வீட்டுத் திருமணத்திற்குப் பத்திரிகை வைக்க வந்திருந்தனர். அவர்கள் வருவது தெரிந்து வெற்றியும் வீட்டில் தான் இருந்தான்.
அவர்கள் செல்வதற்கு முன் சாதனாவிடம் அவளுக்கு அபார்ஷன் ஆனது பற்றி விசாரிக்க…. அவளைப் பதில் சொல்ல விடாமல் ப்ரீதாவே சமாளித்து அனுப்பி வைத்தாள். இருந்தாலும் சாதனாவின் முகம் வாடி விட… அதிலிருந்து அவள் யாரோடும் பேசாமல் அறையிலேயே அடைந்து கிடந்தாள்.
வெற்றிக்கு அப்போது ரிஷி சொன்னது தான் நியாபகம் வந்தது. இன்னும் சாதனா மனதிற்குள் குழந்தையை நினைத்து வருந்துகிறாள் என நன்றாகவே புரிந்து கொண்டான்.
ரிஷியை அழைத்தவன் வீட்டில் நடந்தை அவனிடம் சொல்லி “சாதனா மூட் அவுட்டா இருக்கா… நீ வந்து பாரு.” என்றவன், ப்ரீதவிடம் சொல்லிக்கொண்டு அவன் வேலையைப் பார்க்க கிளம்பி சென்றான்.
ரிஷி வந்த போது… சாதனா சோர்வாகப் படுத்திருந்தாள். அவன் சென்று அவளின் தலையை மிருதுவாக வருட…. யாரென்று பார்த்தவள், தன் கணவனைப் பார்த்ததும் வேகமாக எழுந்து அமர்ந்தாள்.
“என்ன ரிஷி இந்நேரம் வந்திருக்கீங்க?”
“சும்மா தான் உன்னைப் பார்க்கணும் போல இருந்துச்சு.”
இது அவன் வரும் நேரமில்லை. ஒன்று மதியம் வருவான் இல்லையென்றால் இரவு வருவான். மாலை நேரம் அவன் மிகவும் பிஸியாக இருப்பான். அதனால் சாதனா அவனைச் சந்தேகமாகப் பார்க்க…. அவள் பார்ப்பதை பார்த்து ரிஷி சிரித்துவிட்டான்.
“ஹே… என்ன ரொம்ப ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க?”
“அண்ணன் போன் பண்ணாங்களா….” சாதனா சரியாகச் சொல்லிவிட….
“ஆமாம், நீ சொல்லு எப்படி இருக்க?” என்றவன், அவளை இழுத்து தன் மீது சாய்த்துக்கொண்டான்.
சிறிது நேரம் வரை பொறுத்த ரிஷி சாதனாவிடமிருந்து பதிலே இல்லையென்றதும், அவள் முகத்தை நிமிர்த்திப் பார்க்க…. அவள் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.
“ஹே…. என்னடா…. இப்படி அழுதா எனக்குக் கஷ்ட்டமா இருக்காதா…. இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்கலாமா…”
“அறிவுக்குச் சில விஷயம் புரியுது ரிஷி, ஆனா… மனசு அதைக் கேட்க மாட்டேங்குது. இன்னும் அப்படி ஆகாம இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்னு தான் நினைக்கத் தோணுது.”
[the_ad id=”6605″]
“சீக்கிரம் சரி ஆகிடும், அழக் கூடாது. வா வெளிய போயிட்டு வரலாம். நீ வீட்ல இருந்தா அதையே நினைச்சிட்டு இருப்ப.” என்றவன், அவளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான்.
ரிஷிக்கும் சாதனாவிற்கு ம் நாட்கள் இனிமையாகச் சென்றது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ரிஷி சாதனாவை பார்க்க இங்கே வந்துவிடுவான்.
சில நாட்கள் இருவரும் வெளியே செல்வர்கள். அல்லது வீட்டிலேயே தனியாக அவர்கள் இருவரும் மட்டும் எங்காவது உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள்.
ரிஷியை ஒருவிழாவுக்குத் தலைமை தாங்க அழைத்திருந்தனர். அவன் சாதனாவையும் அழைத்துக்கொண்டு சென்று இருந்தான். அங்கே திடிரென்று ஒரு பெண்மணிக்கு உடம்பு முடியவில்லை.
சாதனா அவருக்குச் சிகிச்சை செய்தவள், அவர் மயக்கத்தில் இருந்து தெளிந்ததும், அவரை மேல் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு செல்ல சொன்னாள். ஆனால் அந்தப் பெண்மணி மிகவும் பயப்பட்டார்.
“உங்களுக்கு ஒன்னும் இல்லை மைல்ட் அட்டாக் போலத் தான் இருக்கு.” சாதனா அவரைச் சமாதானம் செய்ய…. ஆபரேஷன் செய்வார்களோ என அவர் இன்னும் பயந்துவிட்டார்.
“மைல்ட் அட்டாக் எல்லாம் இப்ப மாத்திரையிலேயே சரி பண்ணிடுறாங்க. உங்களுக்கு ஒன்னும் இல்லை. ட்ரீட்மென்ட் எடுத்தா நீங்க சரி ஆகிடுவீங்க.” சாதனா அவருக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாகப் பலவாறாக எடுத்து சொல்லி, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாள்.
அவர்கள் சென்றதும், இவர்களும் வீட்டிற்குக் கிளம்பினர். காரில் ஏறி சிறிது தூரம் சென்றதும், “அந்த அம்மா உண்மையிலேயே சரி ஆகிடுவாங்களா… இல்லை… சும்மா சமாதானத்துக்காக நீ அப்படிச் சொன்னியா….” ரிஷி கேட்க….
“உண்மை தான் சொன்னேன் ரிஷி. மைல்ட் அட்டாக் தான். இப்ப அதெல்லாம் மாத்திரையிலேயே சரி பண்ணிடலாம். அப்புறம் கொஞ்சம் டயட் இருக்கணும். அவ்வளவு தான்.”
“ஆனா அவங்க ரொம்பப் பயப்படுறாங்களே…”
[the_ad id=”6605″]
“அதுக்காக ட்ரீட்மெண்ட் எடுக்காம இருக்க முடியுமா… இப்படிப் பயந்தா இன்னும் அதிகம் தான் ஆகும். நம்பிக்கை தான் ரொம்ப முக்கியம். நாம சரி ஆகிடுவோம்னு நாம முதல்ல நம்பனும். அப்பத்தான் எந்த ட்ரீட்மென்ட்டும் வேலை செய்யும்.”
“அப்படியா…. அதைக் கொஞ்சம் இங்க பார்த்து சொல்லு….” என ரிஷி சொன்னதும், சாதனா எதை என்று நிமிர்ந்து பார்க்க…. பின்புறம் வரும் வண்டிகளைக் கவனிக்க இருக்கும் கண்ணாடியை, அவள் பக்கம் திருப்பி இருந்தான். இப்போது அவள் முகம் தான் அதில் தெரிந்தது.
முதலில் அவளுக்குப் புரியவில்லை… பிறகு அவன் என்ன சொல்ல வருகிறான் எனப் புரிந்ததும், முதலில் கோபமாக முறைத்தவள், பிறகு முடியாமல் சிரித்து விட்டாள்.
ஓ… என் வாயில் இருந்தே வரவைக்கத் தான் இவ்வளவு கேள்வி கேட்டானோ என நினைத்தவள், தானும் தான் ஏன் அவ்வளவு நம்பிக்கை இழந்து போனோம் என இப்போது நினைக்க… எல்லாமே வியப்பாக இருந்தது.
ரிஷி ஏற்கனவே காரை ஓரமாக நிறுத்தி இருந்தான். சாதனா அவனின் சட்டையைப் பிடித்து அருகில் இழுத்தவள், அவனை அணைத்துக்கொண்டாள்.
அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து “சாரி உங்களை ரொம்பக் கஷ்ட்டப்படுத்திட்டேன். லூசு மாதிரி ஆகிட்டேன் இல்லை…” என அவள் கேட்க…. ரிஷி ஆமாம் இல்லை என்று இரண்டுமாகத் தலை ஆட்ட… அதைப் பார்த்ததும் சாதனாவிற்கு மேலும் சிரிப்பு வந்தது.
“என்னோட அழகு செல்லம்.” எனக் கொஞ்சி, அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.
“ஹே… இது ரோடு என்னைக் கிளப்பி விடாத….” ரிஷி எச்சரிக்க…. சாதனா வேகமாக யாரும் தங்களைப் பார்க்கிறார்களோ எனச் சுற்றிலும் ஆராய்ந்தாள். ஆனால் ஊருக்கு வெளியே இருந்ததால்…. யாரும் இல்லை.
அவள் தன் கணவனைச் சிறிது நேரம் கொஞ்சி மகிழ…. ரிஷி அவள் செய்வதையே முகத்தில் மென்னகையுடன் பார்த்து இருந்தான். சிறிது நேரத்தில் விலகி அமர்ந்து “காரை எடுங்க.” என்றாள்.
ரிஷிக்கு அவளின் செயல்கள் எல்லாம் எதோ அவனை வானத்தில் பறக்க வைப்பதை போல் உணர்ந்தான். ஆனால் எதுவும் பேசவில்லை அமைதியாக இருந்தான்.
சாதனா நேரத்தை பார்த்தவள், “என்னை ஹாஸ்பிடல்ல விட்டுடுங்க ரிஷி. ஏற்கனவே ரொம்ப நாளா போகலை.” என்றதும், அவனின் புன்னகை மேலும் விரிந்தது.
[the_ad id=”6605″]
அவள் இயல்புக்கு திரும்பி விட்டால்… அவளால் மருத்துவமனைக்குப் போகாமல் இருக்க முடியாது என அவனுக்கு நன்றாகத் தெரியும். அவள் வாயில் இருந்து இந்த வார்த்தை வாவேண்டும் என்று தான் இத்தனை நாள் காத்திருந்தான். அவள் சொன்னபடி அவளை மருத்துவமனியில் இறக்கி விட்டவன், சதோஷமாகக் கையசைத்து விட்டுச் சென்றான்.
சாதனாவை பார்த்த அவளது தோழிகள் உற்சாகமாக வரவேற்க…. ஷீபா மட்டும் புலம்பினாள்.
“நீ பெரிய இடத்து பொண்ணு. அதனால நீ எத்தனை நாள் லீவ் எடுத்தாலும் உன்னை ஒன்னும் சொல்றது இல்லை…. அதே நாங்க மட்டும் ஒருநாள் கூட லீவ் போட முடியாது. இது என்ன நியாயம்?” என அவள் பொங்க….
“சாரி உடம்பு சரியில்லை…. அதுதான் இத்தனை நாள் வரலை. உங்க யாருக்கு நைட் டுட்டி போட்டாலும், அதை நான் எடுத்துக்கிறேன் சரியா… சாதனா சமாதானம் செய்ய…. அவள் தோழிகளும் மகிழ்ச்சியுடன் சரி என்றனர்.
சாதனா அவர்களிடம் சொன்னது போல்… இரவு வேலையை அவள் எடுத்துக்கொண்டாள். உண்மையில் இரவு நேரத்தில் தான் அதிக வேலை இருக்காது. எமர்ஜென்சி கேஸ் எதுவும் இல்லையென்றால்… இரண்டு முறை ரௌண்ட்ஸ் சென்றுவிட்டு வருவாள். மற்ற நேரம் ஓய்வுதான். இதே பகல் என்றால் நிற்க கூட நேரமிருக்காது. அதனால் சாதனா அவளுடைய ஓய்வு அறைக்கு வந்ததும், ரிஷியை அழைத்து அவனோடு பேசிக்கொண்டு இருப்பாள்.
என்ன பேசுவார்கள் என்று கேட்டால் இருவருக்கும் தெரியாது. ஆனால் நிறையப் பேசுவார்கள். நள்ளிரவுக்கு மேல் ரிஷியை வற்புறுத்தி சாதனா உறங்க சொல்வாள்.
பகலில் ரிஷிக்கு வேலை இருக்கும். இரவில் சாதனாவிற்கு வேலை. அதோடு பகலில் சாதனா உறங்கட்டும் என்று ரிஷி பகலில் அவளைப் பார்க்க வருவதையும் நிறுத்தி இருந்தான். அதனால் சில நாட்கள் இருவரும் பார்த்துக்கொள்ளவே இல்லை. போன்னில் பேசுவதோடு சரி.
பத்து நாட்கள் சென்ற பின்னர்… அன்று கண்டிப்பாகச் சாதனாவை எப்படியும் பார்த்து விட வேண்டும் என நினைத்த ரிஷிக்கு, அவன் வேலை எல்லாம் முடிக்கவே இரவு பதினோரு மணி ஆகி விட்டது. அதன் பிறகு அவளைப் பார்க்க கிளம்பி சென்றான்.