அன்று சத்யாவிற்கும் இரவு நேர பணி என்பதால்….. சாதனாவும் அவனும் வெளியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். திடிரென்று ரிஷி அவள் முன்பு வந்து நின்றதும், சாதனாவால் அதை நம்பக் கூட முடியவில்லை.
“ரிஷி…. வரேன்னு சொல்லவே இல்லை…” என்றபடி சாதனா எழுந்து அவனிடம் சென்றாள். அவள் முகத்தில் அவ்வளவு சிரிப்பு. சத்யாவிற்கு அதைப் பார்க்கவே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
சாதனாவை பார்த்து கண்சிமிட்டிய ரிஷி, சத்யாவிடம் அவனே சென்று கை குலுக்கினான்.
“சத்யா உங்களை ரொம்ப நாளா பார்க்கனும்னு நினைச்சேன். ஆனா இன்னைக்குத் தான் பார்க்க முடிஞ்சுது.”
ரிஷியை திடிரென்று பார்த்ததும் சத்யாவிற்குப் பேச்சே வரவில்லை. அவன் மெலிதாகப் புன்னகைக்க….
“பயப்படாத டா… வாயைத் தொறந்து பேசு… உன்னை ஒன்னும் பண்ண மாட்டாங்க.” என்றாள் சாதனா.
“என்னைப் பார்த்தா பயப்படுற மாதிரியா இருக்கு.” ரிஷி கேட்க….
“நீங்க காலேஜ் படிக்கும் போது… கோபம் வந்தா சட்டுன்னு கையை நீட்டிடுவீங்க. அதனால இவன் உங்களைப் பார்க்கவே அப்ப எல்லாம் பயப்படுவான்.” சாதனா சொல்ல… சத்யா அசடு வழிந்தான்.
ரிஷிக்கு அதைக் கேட்டதும் சிரிப்பு வர…. ஆனால் தான் சிரித்தால் சத்யா எதுவும் நினைத்துக் கொள்வானோ எனத் தன்னை அடக்கிக் கொண்டவன், “சாரி, நீங்க பார்க்கும் போது யாரையோ அடிச்சிட்டேன் போலிருக்கு.” என்றான்.
எப்போதோ ஒருமுறை சத்யா தன்னைப் பார்த்திருப்பான் என்று தான் ரிஷி நினைத்தான். “இவ சொல்றது எல்லாம் நம்பாதீங்க. எனக்கு ஒன்னும் உங்களைப் பார்த்துப் பயம் எல்லாம் இல்லை…. நான்தான் உங்களைத் தினமும் பார்ப்பேனே…. நீங்க என்னைக்கோ ஒருநாள் தான் சண்டை போடுவீங்க. மத்த நாள் ஜாலியா தான் இருப்பீங்க.” என்றான் சத்யா.
“தினமும் பார்பீங்களா…” என ரிஷி ஆச்சர்யபட்டான். ஒரே நிர்வாகம் என்றாலும் பள்ளிக்கும் கல்லூரிக்கும் நடுவில் நிறைய இடைவெளி இருக்கும். அப்படியிருக்கும் போது… தினமும் இவன் எப்படி நம்மைப் பார்த்தான்? என அவனுக்கு ஆச்சர்யம். அது சத்யாவிற்கும் புரிந்தது.
“இவ உங்களைத் தினமும் பார்க்க வரும் போது… என்னையும் இழுத்திட்டு வந்திடுவா….” சத்யா சொல்ல… இப்போது ரிஷிக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது.
“அப்புறம் வேற என்ன எல்லாம் பண்ணுவா?” என அவன் கேட்க….
சத்யாவிடம் சாதனா சொல்லாத எனக் கண்ணைக் காட்ட…. ஆனால் சத்யா அவளை மதித்தாள் தானே…. இத்தனை வருடமாகச் சாதனா தன்னைப் படுத்திய கொடுமையெல்லாம் ரிஷியிடம் கொட்டி விட முடிவு செய்தவன் போல்…. எல்லாவற்றையும் சொல்லிவிட்டான்.
“நீங்க எதாவது பொண்ணுங்க கூடச் சிரிச்சு பேசினா… அன்னைக்கு எல்லாம் மூட் அவுட்டா இருப்பா…”
“உங்களை என்னைக்காவது பார்க்க முடியலைன்னா… அந்த எரிச்சலை என்கிட்டே தான் காட்டுவா….”
“நீங்க கிரௌண்ட்ல விட்டுட்டுப் போறது எல்லாம் எடுத்து பொருக்கி வச்சுப்பா….”
“நீங்க காலேஜ் முடிஞ்சு போன மறுநாள், எப்பவும் போல உங்களைப் பார்க்க போயிட்டு, நீங்க இல்லைனதும், அப்படி ஒரு அழுகை…. நாலு நாள் சோக கீதம் வாசிச்சிட்டு, அப்புறம் தான் நார்மல் ஆகினாள்.”
[the_ad id=”6605″]
“இவளால நான் பொண்ணுங்க பின்னாடி சுத்த வேண்டிய வயசுல உங்க பின்னாடி சுத்திட்டு இருந்தேன்னா பார்த்துக்கோங்க.”
சத்யா சொல்வதையெல்லாம் புன்னகையுடன் கேட்டிருந்த ரிஷிக்கு, அவன் கடைசியாகச் சொன்னதைக் கேட்டதும், சிரிப்பை அடக்கவே முடியவில்லை. வாய்விட்டு சிரித்தவன் தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டான்.
“ஐயோ ! தாங்கலை டா சாமி. அப்ப உங்களை ரொம்பக் கொடுமை படுத்தியிருக்கான்னு சொல்லுங்க.” என்றதும், சாதனா ரிஷியை முறைத்தாள்.
“இல்லைனாலும் இவன் பொண்ணுங்க பின்னாடி சுத்திட்டு தான் மறுவேலை பார்த்திருப்பான். எப்பப் பாரு புக்கும் கையுமா தான் இருப்பான்.” என சாதனா நொடிக்க…. அப்போதும் சத்யா விடவில்லை.
“அதெல்லாம் கூட மன்னிக்கலாம். ஆனா உங்க கல்யாணம் ஆனப்பிறகும், உங்களுக்குத் தெரியாம ஏர்போர்ட்ல நின்னு உங்களைப் பார்த்தா பாருங்க…. அதை மட்டும் என்னால மன்னிக்கவே முடியாது.”
“ஐயோ ! திரும்ப முதல்ல இருந்தான்னு பயந்தே போயிட்டேன்.”
சத்யா சொல்லி முடித்துவிட்டு ஹப்பாடா என்பது போல் அங்கிருந்த இருக்கையில் உட்கார…. ரிஷி இன்னும் சிரித்துக்கொண்டு இருந்தான்.
“எல்லாம் சொல்லிட்டியா… சரி நீ உள்ளப் போ…” சாதனா சொல்ல….
“நான் ஏன் போகணும்?” எனச் சத்யா கேட்க…
“அவரை ஏன் போகச் சொல்ற?” என்றான் ரிஷியும். சாதனா பதில் சொல்லாமல் முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ள…..
“சரி ரிஷி எனக்கும் வேலை இருக்கு நான் போகணும்.” என்ற சத்யா சாதனாவை பார்த்து சிரித்துவிட்டு உள்ளே சென்றான்.
“ஸோ…என் மேல இருந்தது வெறும் க்ரஷ் தான் இல்ல…. வெறும் க்ரஷ் மட்டும் இருந்தா… எதுக்கு மேடம் என்னைப் பார்க்க முடியலைன்னு அழுதீங்க?” ரிஷி கிண்டலாகக் கேட்க…. சாதனா மெளனமாக இருந்தாள்.
“ஆனா சாதனா இப்படிச் சாட்சியை வச்சிகிட்டா எல்லாம் பண்ணுவ….” சொல்லிவிட்டு ரிஷி மீண்டும் சிரிக்க….
சாதனா “போதும் நிறுத்துறீங்களா…நீங்க இப்படிக் கிண்டல் பண்ணுவீங்கன்னு தான் சொல்லலை….” என்றாள் கடுப்புடன்.
“சரி கிண்டல் பண்ணலை… ஆனா எனக்கு முழுசா… ஒவ்வொரு நாளும் எங்க? எப்ப என்னைப் பார்த்தேன்னு விளக்கமா சொல்லணும்?”
“சரி சொல்றேன்.”
“இப்ப சொல்லு.”
“இப்பவா… நான் இங்க வேலைப் பார்க்க வேண்டாமா… இன்னொரு நாள் பொறுமையா சொல்றேன். நீங்க இப்ப வீட்டுக்கு போங்க. ஏற்கனவே ரொம்ப நேரம் ஆச்சு.” எனச் சாதனா ரிஷியை வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.
மனமேயில்லாமல் அங்கிருந்து சென்ற ரிஷி, குளித்து உடை மாற்றிக் கட்டிலில் விழுந்தவன், உடனே செல்லில் சாதனாவை அழைத்தான்.
“இன்னும் தூங்கலையா நீங்க…”
“நீ முதல்ல சொல்லு… எப்ப என்னை முதல் தடவை பார்த்த?”
[the_ad id=”6605″]
முதலில் கொஞ்சம் தயக்கமாக இருந்தாலும், சாதனா எதையும் மறைக்காமல் சொல்ல…. ரிஷி ஆர்வமாகக் கேட்டிருந்தான். அவள் எதிர்ப்பார்த்தது போல்… அவளைக் கிண்டல் எல்லாம் செய்யவில்லை…
“நானும் உன்னை அப்போ லவ் பண்ணியிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும் இல்லை…” என்று அவன் சொன்னதும், சாதனா அவ்வளவு மகிழ்ச்சியாக உணர்ந்தாள்.
அடுத்த வாரம் ரிஷிக்குச் சென்னை செல்ல வேண்டியது இருந்தது. ஜோதி வேறு அவனை அழைத்துக்கொண்டே இருந்தார். பெற்றோரை பார்க்கும் ஆசையில் அவனோடு ப்ரீதாவும் சென்றாள்.
அதற்கும் அடுத்தா வாரம் காலை பேப்பர் படித்துக் கொண்டு இருந்த வெற்றி, அதில் இருந்த செய்தியை பார்த்து விட்டு முகம் மாறினான். சாதனாவிற்கு அன்று பகல் வேலை… அதனால் அவள் மருத்துவமனைக்குக் கிளம்பிக்கொண்டு இருந்தாள்.
“பேப்பர்ல உங்களுக்குக் கோபம் வர்ற அளவுக்கு அப்படி என்ன போட்டிருக்கு?”
“நீயே பாரு…” என்றவன், பேப்பரை அவளிடம் கொடுக்க…
வேறு எதோ செய்தியை எதிர்ப்பார்த்து வாங்கியவள், ரிஷி தயாரிக்கும் புதிய படத்தின் நாயகி நேகா என அவர்கள் இருவரின் புகைப்படத்தையும் பேப்பரில் போட்டு இருந்ததை பார்த்ததும், அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.
‘நான் நினைச்சா திரும்ப ரிஷியை என்கிட்டே இழுக்க முடியும்.’ என நேகா அன்று சொன்னது, இன்று அவள் காதில் ஒலிக்க….
“இல்லை அவங்க என் ரிஷி தான்.” எனச் சாதனாவின் மனம் ஆணித்தரமாக முழங்கியது.
“இதெல்லாம் உன் புருஷனுக்குத் தேவையா…. எதோ நல்லவன் மாதிரி பேசினான். எல்லாம் ஏமாத்து வேலையா…” வெற்றி கோபத்தில் வார்த்தையை விட….
“அண்ணா ப்ளீஸ்… இது உண்மையா இல்லையான்னு தெரியாம எதுவும் பேச வேண்டாம்.” என்றவள், மருத்துவமனைக்குக் கிளம்பியதும், வெற்றி ப்ரீதாவை போன்னில் அழைத்து அவளிடம் கத்தினான்.
அங்கே ராஜ்மோகனும் ஜோதியிடம் திட்டிக்கொண்டு இருந்தார். “இப்போ தான் திருந்தி நல்லாயிருக்கான்னு பார்த்தா… அதுக்குள்ளே திரும்ப ஆரம்பிக்கிறானே…” என்றவர், “அவனை முதல்ல வர சொல்லு… நான் அவனோட பேசணும்.” என்றார்.
ரிஷி மதியம் வீட்டிற்கு வந்ததும், ராஜ்மோகன் அவனிடம் பேப்பரை காட்டி “இதுக்கு என்ன பதில்?” என்று கேட்க….
“அதுதான் அதுலேயே தெளிவா போட்டிருக்கே…” என்று அவன் அலட்ச்சியமாக பதில் கொடுக்க….
[the_ad id=”6605″]
“இப்ப என்ன தேவை அவளை வச்சுப் படம் எடுக்கணும்னு?”
“எனக்கு நீங்க ஒரே ஒரு விஷயம் சொல்லுங்க. நேகாவிற்கு ஹிந்தி படம் வாய்ப்பு வந்த மாதிரி ஒரு மாயையை உண்டு பண்ணி, அவளை இங்க இருந்து விரட்டினது நீங்க தான….” ரிஷி கேட்க… ராஜ்மோகன் பதில் சொல்லாமல் மௌனம் காக்க…
“நீங்க பதில் சொல்லாம இருக்கிறதுலேயே தெரியுது. அது உங்க வேலை தான்னு . அதனால தான் அதுக்கு நான் இப்ப பரிகாரம் பண்றேன். போதுமா பதில்.”
“அதுக்கு நீயே ஏன் படம் எடுக்கணும்? மத்தவங்க கிட்ட சிபாரிசு பண்ணா போதாதா….”
“அது என் இஷ்ட்டம்.”
“இது சாதனாவிற்கு த் தெரிஞ்சா… அந்தப் பொண்ணு என்ன நினைக்கும்.”
“அதைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க. அவ கேட்டா நான் பதில் சொல்லிக்கிறேன்.”
அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ப்ரீதா அதை வெற்றியிடம் அப்படியே சொல்ல….
“உங்க அண்ணனுக்குப் பழைய காதலி மேல என்ன திடீர் அக்கறை?” என்றவன், “உன் அண்ணனுக்கு மட்டும் தான் இதெல்லாம் பண்ண தெரியும்னு நினைக்கிறானா….”
“உங்க அண்ணன்கிட்ட இருந்து இதுக்கு ஒழுங்கா பதில் வர்றவரை நீ உங்க அம்மா வீட்லயே இரு.” என்றவன், பட்டென்று போன்னை வைத்து விட… அவன் பேசியது ப்ரீதாவை மிகவும் காயப்படுத்தியது. அப்போ அவன் தன் தங்கைக்காகத்தான் தன்னைத் திருமணம் செய்தானா என நினைத்து, அவள் மனம் வருந்தினாள்.
சாதனா வந்ததும் வெற்றி அவளிடமும் கத்தினான். “நீ கேட்டா உன்கிட்ட பதில் சொல்லிக்கிறதா… உன் புருஷன் சொல்லி இருக்கான். அவன்கிட்ட ஏன் இப்படிப் பண்றான்னு கேளு?”
“நான் கேட்க மாட்டேன். அப்படிக் கேட்டா… நான் ரிஷியை சந்தேகப்படற மாதிரி ஆகிடும். அவங்க செஞ்சா எதாவது காரணம் இருக்கும். காரணமில்லாமல் எதுவும் செய்ய மாட்டாங்க.”
சாதனாவின் உறுதியான பேச்சை கேட்டு வெற்றி திகைத்து போய் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
முதலில் காதலுக்குத் தேவை நம்பிக்கை தான். நம்பிக்கை இல்லாத இடத்தில் காதல் இருப்பதில்லை….. அதே போல் நம்பிக்கை இல்லாத காதல் நிலைப்பதும் இல்லை….