Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir 11.2

மண்டபத்தின் வெளியே ஆட்டோவுக்கு காத்திருந்தனர்.

காத்திருக்கும் நேரம் விஜயுடன் பேசலாம் என்று நினைத்துக்கொண்டு கையில் வைத்திருந்த செல்போனை மறைத்து விட்டு  வெண்மதி “கவி என்னோட  செல்போனை மறந்து வைத்துவிட்டு வந்துட்டேன். ஒரு நிமிஷம் நான் போய் எடுத்துட்டு வந்துடுறேன். ஆட்டோ வந்தா என்னை கூப்பிடு” என்று கூறி விட்டு மண்டபத்திற்குள் மீண்டும் நுழைந்தாள்.

 

அங்கு ஒரு மறைவான இடத்தில் விஜய் ஒரு பெண்ணை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தான்.



Advertisement

அதேநேரம் கவிதா “ஆட்டோ வந்துருச்சு மதி. வா சீக்கிரம்.” என்று கூப்பிடும் குரல் கேட்க அவள் திரும்பி கவிதாவுடன் ஆட்டோவில் ஏறி பேருந்து நிலையத்திற்கு வந்தாள்.

விஜயையும் அந்த பெண்ணையும் சேர்த்து பார்த்த வெண்மதி அந்த காட்சியை திரும்பவும் நினைத்துப்பார்த்தாள் அவள் பார்த்தது ஒரு சில வினாடிகள் மட்டுமே . ‘யார் அந்தப் பெண்  இவன் ஏன் அவளை தாங்கி பிடித்துக் கொண்டிருந்தான்’ என்று யோசித்து குழம்பிக் கொண்டிருந்தாள். ஒரு மனம் அவனை சந்தேகித்தாலும் மற்றொரு மனம் வாசலில் இவள் கூட தான் கீழே விழப் போக சந்துரு தாங்கி பிடித்தான். அதற்காக சந்துரு பக்கம் இவளுக்கும் ஏதாவது தொடர்பு என்று எடுத்துக்கொள்ள முடியுமா? முடியாது. அதே போல அவனும் அந்த பெண்ணை கீழே விழாமல் தாங்கி பிடித்திருக்கலாம் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாலும் அவளது மனதில் இருந்த குழப்பம் அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

“என்ன மதி ஏதோ குழப்பத்தில் இருக்கிற மாதிரி தெரியுது.”

Advertisement

“அது அது ஒண்ணும் இல்லடி.” என்று சமாளித்தாள். பிறகு மெல்ல ஆரம்பித்தாள்.

Advertisement

“கவி உன்னோட மாமா பொண்ணு விஜய் பத்தி ஏதோ சொன்னான்னு சொன்னியே அது உண்மைதானா?” என்று கேட்ட வெண்மதியை உற்றுப்பார்த்தாள் கவிதா.

“இப்போ எதுக்கு அதைப்பற்றி கேட்கிற?”

“சும்மாதான். சொல்லு கவி.”

Advertisement

“மதி. நமக்கு இன்னும் இரண்டு  நாள்ல எக்ஸாம் இருக்கு. இப்போ நாம செய்ய வேண்டியது படிக்கிற வேலையை மட்டும்தான். அதை செய்வோம். அப்புறம் இதைப் பற்றி  பேசுவோம்.” என்று முடிக்க முயன்றாள் கவிதா. ஆனால் வெண்மதி விடுவதாக இல்லை.

“இல்லை கவி. நீ  சொல்லு நான் டிஸ்டர்ப் ஆக மாட்டேன்.” என்று கண்களில் கலங்கிய நீருடன் கேட்ட வெண்மதியை பார்த்த கவிதா இரண்டு நாட்களில். பரிச்சை எழதவேண்டிய இந்தநேரத்தில் இவளுக்கு அதிர்ச்சி தருமாறு எதையும். சொல்லக்கூடாது என்று நினைத்தவள் மாற்றி கூறினாள்.

“இல்லடி மதி. நான் சொன்னது தப்பு. இன்னும விஜய் வீட்ல இதை பத்தி பேசல போல இருக்கு. எக்ஸாம்கப்புறம் பேசலாம்னு விட்டுட்டாங்க. அதனால  இதை மறந்துட்டு படி.”

 

 

அன்று வீடு வந்தவள் சிறிது நேரம் தூங்கி விட்டு எழுந்து அமர்ந்து படித்தாள்.  அப்பொழுது அங்கு வந்த பெரியம்மா

“நாளை மறுநாள் ஒரு சொந்தகாரர்களோடு ஃபங்ஷன் இருக்கு. நாம எல்லோரும் போயிட்டு வரணும்.”

“பெரியம்மா எனக்கு அடுத்தநாள் எக்ஸாம் இருக்கு. நான் படிக்கணும் நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க.” என்று வெண்மதி கூற

“இது ஒரு முக்கியமான சொந்தக்காரங்களோட பங்க்ஷன். போகலைன்னா நல்லா இருக்காது. என்ன படிக்கணும்? அதை இப்பவே படித்து வை.  ஏன் நீ மட்டும் இன்னைக்கு பங்ஷனுக்கு போயிட்டு வரல.  உனக்கு இஷ்டம்னா எங்க வேணும்னாலும் சுத்திட்டு இருப்பேன். அதே நான் கூப்பிட்டா தப்பு. அப்படித்தானே இந்த வீட்டுல எனக்கு அவ்வளவு தான் மரியாதை.” என்று ஆரம்பித்தார் பெரியம்மா.

“இல்ல பெரியம்மா. இன்னும் ரெண்டு நாள் இருக்கு. அதான் இன்னைக்கு நான் போனேன். நீங்க கூப்பிடுகிற நாளுக்கு அடுத்த நாள் எனக்கு எக்ஸாம் இருக்கு. அதுக்கு தான்.”

“அதுக்கு என்ன? அப்ப படிக்க வேண்டியதை இப்பவே  படித்து வை. அவளவுதான்.”  என்று கூறினார் சாதாரணமாக.

“சரி எவ்வளவு நேரம் பெரியம்மா? சொல்லுங்க.”

“பக்கத்துலதான். போயிட்டு ஒரு மணிநேரத்துல  வந்துடலாம்.”

“சரி. நானும்  வருகிறேன்.” என்று வேறு வழியின்றி ஒத்துக்கொண்டாள்  வெண்மதி. இரு நாட்களும் பரீட்சைக்கு படித்து கொண்டிருந்தாள். கவிதா, வெண்மதி இருவரும் போன் மூலம் என்ன எப்பொழுது படிக்கலாம் என்று பேசி அட்டவணை போட்டுக் கொண்டு அதற்கு ஏற்றார் போல இருவரும் படித்தனர்.

இந்நிலையில் பரீட்சைக்கு முன் நாள் பெரியம்மா ஏற்கனவே சொன்னபடி எல்லோரும் அந்த விழாவிற்கு கிளம்பி சென்றனர். வெண்மதிக்கு விருப்பம் இல்லை  என்பதால் அவள் பெரிதாக தன்னை அலங்கரித்துக் கொள்ளாமல் ஒரு சல்வாரை எடுத்து அணிந்து கொண்டு  சென்றாள். உள்ளே சென்றவள் கைக்கடிகாரத்தை பார்த்துக்கொண்டே இருந்தாள். ஒரு பத்து நிமிடம் ஆன பிறகு தாயிடம்

“அம்மா நாம சீக்கிரமா சாப்பிடலாம். சாப்பிட்டுட்டு கிளம்பலாம். எனக்கு படிக்கிற வேலை இருக்கு. நாளைக்கு எனக்கு எக்ஸாம்.” என்றாள் வெண்மதி.

மகளின் நிலையை புரிந்து கொண்ட தாய்

“சரி மா போய் சாப்பிடலாம்.” என்று  எழுந்து இருவரும் சாப்பிட சென்றனர். அப்பொழுது அங்கு  தூரத்தில் விஜய் போலவே ஒருவன் தெரிந்தான். ‘இங்கு எப்படி விஜய்’ என்று யோசித்தவாறே அருகில் சென்று பார்க்கலாம் என்று நினைத்து தாயிடம்

“அம்மா நீங்க முன்னாடி போங்க. நான் இப்போ வந்துடறேன்.” என்று  கூறிவிட்டு அவன் அருகில் சென்று  கொண்டிருந்தாள்.  அவனுக்கு சற்று அருகில்  பார்க்கும் தூரத்தில் வந்தாள். அவன்  விஜய்தான். அவனை அங்கு எதிர்பாராமல் பார்த்தது  இன்ப அதிர்ச்சியாக இருந்தது. முகமலர்ச்சியுடன் அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தவள் அப்படியே  திகைத்துப் போய் நின்றாள்.

 

இங்கேயும் அதே பெண் அவனுடன் நின்றுகொண்டிருந்தாள். இருவரும் ஏதோ பேசி கலகலவென சிரித்துக் கொண்டிருந்தனர். இவள் அவர்களை பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவன் அவள் கைகளை பிடித்து இழுத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான். இதை பார்த்துக்கொண்டிருந்த  வெண்மதிக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஒரு நிமிடம் அவள் பாதம் வைத்திருந்த பூமி நழுவுவது போல இருந்தது. பக்கத்தில் இருந்த  சுவற்றை பிடித்துக் கொண்டாள். அவளுடைய இதயம் துடிக்கும் ஓசை அவள் காதுகளுக்கும் கேட்டது. அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. மேலும் இரண்டு அடி எடுத்து வைத்தாள். அவன் அவளை பார்த்து விட்டான். அவன் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. அவசர அவசரமாக அந்த பெண்ணிடம் ஏதோ கூறி அவளை அங்கிருந்து அனுப்பினான். பின் இவனை நோக்கி நடந்து வந்தான்.

“நீ எங்கே இங்கே?” என்று தடுமாறினான்.

அவள் “என்னை நீங்க எதிர் பாக்கல இல்ல?” என்று  கேட்க

அவன் எதுவும் பேசாமல்  முழித்துக் கொண்டிருந்தான்.

“நானும் உங்களை இங்கே இப்படி எதிர்பார்க்கல.”  என்றாள். அவன்  கண்களை பார்த்து “நாளைக்கு எக்ஸாம் வச்சிக்கிட்டு நீ இங்கே என்ன பண்ற?” என்று அவன் பேச்சை திசை மாற்ற முயற்சித்தான். “உங்களுக்கும் தான் நாளைக்கு எக்ஸாம் இருக்கு .  இந்த கேள்வி உங்களுக்கும் பொருந்தும்.” என்று அவனுடைய கேள்வியை அவனுக்கு திருப்பினாள் நிம்மதி.

“இது என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் வீட்டு பங்க்ஷன். அதனால வர வேண்டியதா போச்சு.” என்றவன்  அவளை நேராக பார்க்க  முடியாமல் தரையை பார்த்தான்.

“எனக்கும் அப்படித்தான்.” என்று கூறியவள்

“ஏன் விஜய்? என் முகத்தை பார்த்து பேச  பயமா இருக்கா?”

“ஏன் எனக்கு என்ன பயம்? அதுவும் உன்னை பார்த்து. என்றான் இளக்காரமாக.

“அப்போ என்னை நேரா பார்த்து பேசுங்க.”

“உன்கிட்ட பேச எனக்கு நேரம் இல்லை. எனக்கு நிறைய வேலை இருக்கு நான் கிளம்பனும்.” என்று கூறிக்கொண்டே அங்கிருந்து கிளம்ப முயன்றான்.

அவள் “ஏன் விஜய் என்னை இப்படி அவாய்ட் பண்றீங்க? உண்மையை சொல்லுங்க. எதுக்காக எனக்கு பயந்து ஓட பாக்கறீங்க?”

“என்ன உனக்கு நான்  பயப்படுகிறேனா நல்ல காமெடி. நான் எதுக்கு உனக்கு பயப்படணும். உண்மையை சொல்றேன் கேட்டுக்கோ. உன்னை எனக்கு பிடிக்கல. நீ  சந்துரு கிட்ட நடந்துக்கிற விதம் எனக்கு பிடிக்கல.”

“அப்படி என்ன நான் தப்பா  நடந்துகிட்டேன்? சொல்லுங்க.”

“சொல்லட்டுமா? என் கூட வெளியே வர மாட்டேன்னு சொல்லிட்டு அவன் கூட வெளியே சுத்திகிட்டு இருந்த.”

“அது நான்  காலேஜ் பங்க்ஷன்க்காக அரேஞ்ச்மெண்ட்ஸ் பண்ணிக்கிட்டு  இருந்தோம். இது உங்களுக்கும் நல்லாவே தெரியும்.”

“சரி. செல்வா அக்காவுடைய  கல்யாணம் அன்னைக்கு  அவன் உன்னை கட்டிப்பிடித்துக்கொண்டு  இருந்தானே . நான் கேட்டதுக்கு கூட நீ என்கிட்ட பொய்  சொன்னாயே.” என்று அவள்  சந்துருவுடன் நடந்துகொண்ட விதத்தில்தான் தவறு இருப்பது போல அவள் மீது பழி போட்டான்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!