“கல்யாணம் ஆயிட்டா என்ன ? என்னோட பிரச்சினை இன்னும் தீரலையே இன்னும் கூட அப்பா தம்பிய தானே எல்லாத்துக்கும் முன்னாடி நிறுத்துகிறார். அப்படி இருக்க நான் எப்படி இங்கே இருக்க முடியும் ? என்னோட பொண்டாட்டிக்கு முன்னாடி எனக்கு இன்னும் அவமானமா தான் இருக்கும்.” என்று தன் குறையை தாய் விசாலாட்சியிடம் மட்டும் கூறிவிட்டு சென்றார்.
இதை எதையும் அறியாத தம்பி கோவிந்தன் தந்தையிடம்
“அண்ணனுக்கு எது இஷ்டமோ அதையே செய்யட்டும். நீங்க ஏன்பா? அவர தொந்தரவு பண்றீங்க?” என்று அண்ணன்னுக்கு பரிந்து பேசினார்.
கோவிந்தனுக்கு பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கம் கிடையாது. அதனாலேயே தன் நிலத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்த ஒரு ஏழையின் பெண்ணை பார்த்து விரும்பினார். அவளையே திருமணம் செய்து கொள்ளவும் நினைத்தார்.
தந்தையிடம் “அப்பா எனக்கு ஒரு பெண்ணை பிடிச்சிருக்கு. யாருப்பா அந்த பொண்ணு?”
“நம்ம நிலத்துல வேலை செய்ற இராமனுடைய பொண்ணு லட்சுமி.”
“இராமனுடைய பொண்ணா? நான் கூட பார்த்திருக்கிறேன். அந்த பொண்ணு பார்க்க நல்லா தான் இருக்கும். ஆனால் கொஞ்சம் கஷ்டப்படுற குடும்பம்.”
“அதனால என்னப்பா? நம்மகிட்ட இல்லாத காசு பணமா?”
“சரிப்பா. உன்னோட இஷ்டம். நான் உன்னோட இஷ்டத்துக்கு மாறாக எதுவும் செய்ய மாட்டேன்.” என்று ஜாதி மதம் வித்தியாசம் பார்க்காமல் ஒத்துக்கொண்டார் ராஜரத்தினம்.
இருவருக்கும் ஒரு முகூர்த்தத்தில் திருமணம் இனிதே நிறைவேறியது. ஏழைக்குடும்பத்தில் பிறந்து கஷ்ட நஷ்டங்களை பார்த்து வளர்ந்திருந்த லட்சுமி குடும்பத்தை சிறப்பாக நடத்தினாள். அதனை பார்த்து சந்தோஷப் பட்டனர் விசாலாட்சி, ராஜரத்தினம் . நல்ல சாப்பாடு, துணிமணி, நகைகள் என்று லட்சுமியின் அழகு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. பார்த்தவர்கள் எல்லோரும் அவளது அழகையும் அடக்கத்தையும் குடும்பத்தை நடத்தும் முறையையும் பாராட்டினார்கள்.
தீபாவளி பண்டிகைக்காக கிருஷ்ணனும் லலிதாவும் ஊருக்கு வந்து இருந்தனர் .
“வாங்கக்கா வாங்க. “ என்று பாசமுடன் வரவேற்று அழைத்துச் சென்றார் லட்சுமி.
அவளது ஆடை, நகை, அழகு எல்லாவற்றையும் பார்த்த லலிதாவுக்கு பொறாமை வந்தது. விசாலாட்சி,
“லட்சுமி இங்க வாமா. இந்த பணத்தை எடுத்துட்டு போயி பீரோல வை. இதை பண்ணுமா. அதை பண்ணுமா,” என்று எல்லாவற்றிற்கும் சின்ன மருமகள் லட்சுமியை எதிர்பார்க்க ஆரம்பித்தார்.
“லட்சுமி இன்னிக்கு எல்லோருக்கும் நல்ல விருந்து ஏற்பாடு பண்ணிடு.” என்று கூறினார்.
“அதுக்கு என்ன அத்தை நான் இதோ ஏற்பாடு பண்ணிடறேன்.” என்று சமையலறைக்குள் நுழைந்தாள்.
விசாலாட்சி லலிதாவிடம் திரும்பி “லட்சுமி சமைச்சா எப்படி இருக்கும் தெரியுமா ? இந்த ஊரே மணக்கும். நான் அவளை இன்னிக்கு மீன் குழம்பு, மீன் வருவல், கோழி கறி, பிரியாணி, நாட்டுக்கோழி குழம்பு பண்ண சொல்லி இருக்கேன். நீ சாப்பிட்டு பாரு. அப்புறம் என்ன நீயே அவளை பத்தி என்கிட்ட பெருமையா பேசுவ.” என்று அவளது புகழை பேசிக்கொண்டிருந்தார்.
லலிதாவுக்கு கேட்பதற்கே பிடிக்கவில்லை என்றாலும் அவரிடம் மாமியாரிடம் மறுக்கமுடியாமல் “சரி அத்தை.” என்று தலை ஆட்டி வைத்தாள்
லட்சுமி சமையலை முடித்துவிட்டு எல்லோருக்கும் வாழை இலை போட்டு சாப்பாடு பரிமாறினாள். சாப்பாட்டை சாப்பிட்ட லலிதா உண்மையாகவே சாப்பாடு ருசியாக இருப்பதை உணர்ந்தாள். எனினும் அவளை நேரடியாக பாராட்ட மனம் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த விசாலாட்சி
“என்னமா நான் சொன்னது சரிதானே?” என்று எடுத்துக் கொடுத்தார். லலிதா வேறுவழியில்லாமல் “ஆமாம் அத்தை.” என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டாள்.
விசாலாட்சி நான்கு பட்டுப்புடவையை எடுத்து வந்து இரு மருமகளையும் கூப்பிட்டார்.
“லட்சுமி, லலிதா இங்க வாங்க. காஞ்சிபுரத்திலிருந்து நாலு பட்டுப்புடவை வாங்கிட்டு வந்திருக்கேன். நீங்க ரெண்டு பேரும் இரண்டு பட்டு புடவை எடுத்துக்கோங்க.” என்று கூறவும் இருவரும் அந்த நான்கு பட்டுப் புடவைகளையும் பிரித்து பார்த்தனர்.
“ பச்சை நிற பட்டுப் புடவையை லட்சுமி, லலிதா இருவரும் ஒரே நேரத்தில் எடுத்தனர்.
லட்சுமி “அக்கா உங்களுக்கு இந்த பட்டுப்புடவை பிடிச்சிருக்கா? நீங்களே எடுத்துக்கோங்க.” என்று லலிதாவிடம் கொடுத்தார்.
இதனை கவனித்த விசாலாட்சி “லலிதா அந்த பட்டுப்புடவை லட்சுமிக்கு பிடிச்சிருக்கு என நினைக்கிறேன். அதை அவளுக்கு கொடுத்துடு. அது அவளுக்கு நல்லா இருக்கும். நீ வேற பட்டு புடவை எடுத்துக் கொள்.” என்று லலிதாவின் கையிலிருந்து அந்த பட்டுப் புடவையை வாங்கி லட்சுமிக்கு கொடுத்தார் விசாலாட்சி.
லலிதா வேறு வழியின்றி மீதமிருந்த மூன்று பட்டுப் புடவைகளில் இரண்டை எடுத்துக்கொண்டார். இந்த வீட்ல இவ, இவளோட புருஷன் இவங்க ரெண்டு பேரோட அதிகாரம்தான் கொடிகட்டி பறக்குது. சீக்கிரம் இவங்க ரெண்டு பேரையும் நம்ம அதிகாரத்துக்கு கீழ கொண்டு வரணும் என்று மனதினில் உறுதி கொண்டார் லலிதா.
இப்படியாக லலிதாவுக்கு லட்சுமி மீது பொறாமை அதிகரித்துக் கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில் லலிதாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. முதல் பேரக்குழந்தை என்று ராஜரத்தினம் விசாலாட்சி ஆனந்தமடைந்தார். மூன்று வருடங்கள் கழித்து லட்சுமி கோவிந்தனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வெண்மதி என்று பெயர் சூட்டி பெரிதாக கொண்டாடினார் ராஜரத்தினம் ஆனந்தமாக . அவரது பரம்பரையில் நெடு நாட்களுக்கு பிறகு பிறந்த பெண்குழந்தை வெண்மதி. “என் வீட்டு மகாலட்சுமி” என்று பெருமையாக எல்லோரிடமும் கூறுவார். வெண்மதி பார்ப்பதற்கு தன் தாயைப் போலவே மிக அழகாக இருந்தாள். இது இன்னும் பொறாமையை தூண்டியது லலிதாவின் மனதில் . அதே வருடத்தில் லலிதா கர்ப்பவதியானாள். பெண் குழந்தை எதிர்பார்த்து கொண்டிருந்தவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
விசாலாட்சி “என்னோட எல்லா நகையும் என்னோட பேத்தி வெண்மதி க்கு தான்” என்று கூற மேலும் பொறாமை கொண்டாள் லலிதா.
லலிதாவின் அண்ணன் ராகவனிடம் எல்லாவற்றையும் கூறி புலம்புவது உண்டு. அதை கேட்டுக்கொண்டிருந்த ராகவன் “பொறுமையா இரு லலிதா. நானும் எல்லாத்தையும் கேள்வி பட்டேன். ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்துகிட்டு இருக்கேன். கிடைக்கட்டும் பாத்துக்கலாம்.” என்று கூறி சமாதானம் செய்வார்.
இந்த சூழ்நிலையில் விசாலாட்சி இறந்தார். அவர் இறந்த ஆறு மாதங்களில் ராஜரத்தினம் இறந்துபோனார். ராஜரத்தினம் தனது நிலத்தினை பாதியாக பிரித்து ஒரு பாதியை தன் மூத்த மகன் கிருஷ்ணன் பெயரிலும் இன்னொரு பாதியை இளைய மகன் கோவிந்தனின் பெயரிலும் எழுதி வைத்திருந்தார்.
அவர் பார்த்து பார்த்து கட்டியிருந்த வீட்டில் பெரியவன் கிருஷ்ணன் சின்னவன் கோவிந்தன் தங்களது மனைவி குழந்தைகளுடன் வாழ வேண்டும் என்று விரும்பினார். எனவே, அந்த வீட்டினை தன் மகன்களின் பெயரில் எழுதாமல் பேரக் குழந்தைகளின் பெயரில் எழுதி இருந்தார். தன் மகன்கள் இருவரும் ஒற்றுமையாக அந்த வீட்டில் தங்கள் மனைவி குழந்தைகளுடன் அவர்களது ஆயுள் காலம் முடியும் வரையில் வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் மட்டுமே அவருடைய வாரிசுகளான தன் பேரக் குழந்தைகளுக்கு அந்த வீட்டைப் விற்கும் உரிமை கிடைக்கும் என்று உயில் எழுதி இருந்தார்,.
பெற்றோர்கள் இறந்த துயரத்தில் சரியாக நிலத்தினை கவனிக்காமல் சோர்ந்து கிடந்த கோவிந்தனின் அலட்சியத்தையும், உறவினர்களை கண்மூடித்தனமாக நம்பும் அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு அவர் பெயரில் இருந்த சொத்தினை அவரது உறவினர்கள் ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டனர். எனவே வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார் கோவிந்தன்.
முதலில் ஊருக்கு வந்து அந்த வீட்டில் வாழ விருப்பம் இல்லாத கிருஷ்ணன், தம்பியின் இந்த பரிதாப நிலையை பார்த்து மனம் இறங்கினார். தம்பி மீது இருந்த பொறாமை பறந்தது. மேலும் தன்னை வித்தியாசமாக நடத்த தந்தையும் இப்பொழுது இல்லை. எனவே தம்பியுடன் அந்த வீட்டில் ஒற்றுமையாக வாழலாம் என்று நினைத்துக்கொண்டு ஊருக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தார்.
லலிதாவுக்கு லட்சுமியை அதிகாரம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. எனவே அவளும் ஆனந்தமாகவே அங்கு வந்து சேர்ந்தார். லட்சுமியின் சமையல் லலிதாவுக்கு பிடித்திருந்ததால் அவளை சமையல் செய்ய வைத்துக் கொண்டாள். எனினும் லட்சுமி தன்னை எப்பொழுதும் அந்த வீட்டு எஜமானி ஆக நினைத்துக் கொள்ள கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். ஆகவே வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவளை மட்டம் தட்டி பேசுவார்.
“ சிலர் சும்மாவே உட்கார்ந்துகொண்டு எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ தெரியல” என்று குத்தலாக பேச ஆரம்பித்தார். இதனை கேட்ட கோவிந்தன் , ஒரு இடத்தில் சின்ன வேலையில் சேர்ந்து மாதம் தனக்கும் தன் மகளுக்கும் மனைவிக்கும் செலவாகும் பணத்தினை கொண்டுவந்து அண்ணியிடம் கொடுத்து அவரது வாயை ஓரளவுக்கு அடைத்தார்.
“இந்த வீட்டு வேலைக்காரர்களுக்கு நாங்க இதைவிட அதிகமா சம்பளம் தருகிறோம்” என்று அவர் காதுகளில் விழுமாறு மெல்லிய குரலில் கூறிவிட்டு வாங்கி செல்வார்.