சென்ற கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் விருப்பங்களையும் தெரிவித்து என்னை மென்மேலும் எழுத ஊக்குவியுங்கள்.
“ஹேய் மதி வேலை கிடைச்சிடுச்சு!” என்று கத்திக்கொண்டே ஓடிவந்து தன் உயிர் தோழி மதி என்கிற வெண்மதியை கட்டிப்பிடித்துக்கொண்டாள் கவிதா.
“எனக்கும் வேலை கிடைச்சிருச்சு டி! ஐ அம் ரியலி ஹேப்பி கவி” என்றாள் வெண்மதி
“மீ. ட்டு” என்று வெண்மதியின் சந்தோஷத்தில் கலந்து கொண்டாள் கவிதா.
வெண்மதி கவிதா இருவரும் உயிர் தோழிகள் அந்த பொறியியல் கல்லூரியில் ஒன்றாக படித்தனர். அன்று கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொண்டிருந்தனர்.
“உனக்கு எந்த கம்பெனியில் வேலை கிடைச்சிருக்கு கவி?”
“எனக்கு டெக் சாஃப்ட்வேரில் கிடைச்சிருக்கு மதி. உனக்கு?”
“எனக்கும் அதே கம்பெனியில் தா கிடைச்சிருக்கு கவி.”
“சூப்பர் மதி! நான் சாமிக்கிட்ட வேண்டிக்கிட்ட மாதிரியே நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே கம்பெனியில் வேலை கிடைச்சிடுச்சு. ஐ அம் ரியலி ரியலி ஹேப்பி.” என்று கத்தினாள்.
வீட்டை அடைந்த வெண்மதி கால் செருப்புகளை கழட்டி அதன் ஸ்டாண்டில் வைத்துவிட்டு கைப்பையை அறையில் வைத்துவிட்டு தாயை தேடினாள். வழக்கம்போல தாய் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருந்தாள். பின்னே ஓடி சென்று அவள் கண்களைப் பொத்தினாள்.
தாய், லட்சுமி “யாரு? பக்கத்து வீட்டு பொண்ணா?” என்று கேட்டார்.
வெண்மதி கோபமாக “என்ன பக்கத்து வீட்டு பொண்ணா? “என்று சிறிது கோபமாக கேட்டாள்.
தாய் லட்சுமி கலகலவென சிரித்தார்.
“உன்னை தவிர வேற யாருமா என்கிட்ட இப்படி விளையாடுவா? “என்று திரும்பி தன் ஒரே குழந்தையான வெண்மதியை பார்த்தார்.
“என்ன மதி மா ரொம்ப சந்தோஷமா இருக்க போல இருக்கு.”
“வேலை கிடைச்சிடுச்சு!” என்று உற்சாகமாக கூறினாள்.
வெண்மதி.
லட்சுமிக்கும் சந்தோஷம்தான்.
“எந்த ஊர்ல வேலை கிடைச்சிருக்கு? என்று முதல் கேள்வியை கேட்டார்.
தாயை கூர்ந்து கவனித்து விட்டு
“எந்த ஊர்ல வேலைன்னு இன்னும் தெரியல. ஆனா நல்ல சம்பளம் 40,000 கிட்ட கிடைக்கும். நான் எங்க போனாலும் நீங்களும் அப்பாவும் என்கூட வந்துடனும்.” என்றாள் உறுதியாக.
“முதல்ல எந்த ஊருன்னு தெரியட்டும். அதுக்கு அப்புறம் நாம அதைப் பற்றி பேசலாம். கை கழுவிட்டு வந்து சாப்பிடு. முகத்தைப் பார்த்தா நல்ல பசியில் இருக்கிற மாதிரி தெரியுது.” என்றார் அக்கறையாக.
“எப்படி மா? எப்பவும் முகத்தை பார்த்தே என்னோட பசி, கஷ்டம் சந்தோஷம் ன்னு எல்லாத்தையும் கண்டு பிடிக்கிறீங்க ?
அந்த ட்ரிக எனக்கும் சொல்லிக் கொடுங்க.”
“அதெல்லாம் சொல்லிக் கொடுத்து வருவது கிடையாது. உனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை பிறந்து நீயும் அம்மா ஆனதுக்கப்புறம் தன்னாலே வந்துடும்.” என்றார் சாதாரணமாக.
“சரி மா. அந்த கதைய அப்புறமா பேசுவோம். அப்பா வந்துட்டாங்களா?”
“இல்லம்மா. நீ சாப்பிடு. அப்பா வர்றதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும்.”
“சரி. எனக்கும் பயங்கர பசி தான். இன்டர்வியூ டென்ஷன்ல ஒழுங்காவே சாப்பிடல.” என்று கை கால்களை கழுவி கொண்டு வந்து காயின் சமையலை ஒரு கை பிடித்தாள்.
விழுப்புரத்தில் இருந்து ஒரு மணிநேரத்தில் இருக்கும் ஒரு அழகிய கிராமம் அது. அந்த கிராமத்தில் அவர்களுடைய வீடு. வீட்டை சுற்றி தோட்டம் இருந்தது. பெரிய வாசலும் அதனைச்சுற்றி தாழ்வாரமும் இரண்டு தளமும் இருந்தது. மேலே ஐந்து அறைகள் கீழே ஐந்து அறைகள் என்று மொத்தம் பத்து அறைகள் கொண்ட பெரிய வீடு அது. ஒவ்வொரு அறைக்கும் பெரிய பால்கனியும் அந்த பால்கனியில் பலவிதமான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகிய பூச்செடிகளும் இருந்தன. வீட்டில் இருந்தத நுணுக்கமான வேலைப்பாடுடன் கூடிய அழகிய தூண்கள் அந்த வீட்டினை கட்டிய அவருடைய தாத்தாவின் கலை ரசனையையும் செல்வச்செழிப்பையும் காட்டின. அந்த கிராமத்தில் பெரிய வீடு என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும். அந்த வீடு மூன்று கோடிக்கு மேல் போகும். அந்த வீட்டில் அண்ணன் தம்பி இருவர், மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர்.
அண்ணன் கிருஷ்ணன், நன்கு படித்து பட்டம் வாங்கி வங்கி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அவர், அவருடைய மனைவி லலிதா, இரண்டு மகன்கள் பெரியவன் கதிர்வேலன், சின்னவன் கார்த்திகேயன் ஆகியோருடன் அந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
தம்பி கோவிந்தன், பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு தந்தைக்கு உதவியாக இருந்தவர், அவருக்குப் பிறகு இப்பொழுது குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்துகொண்டு இருக்கிறார். இவர், இவருடைய மனைவி லட்சுமி, மகள் வெண்மதி ஆகியோருடன் அதே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
நன்கு படித்து நல்ல வேலையில் இருந்ததால் கிருஷ்ணனுக்கு பெரிய இடத்தில் இருந்து பெண் கொடுத்தனர். லலிதா ஒரு பெரிய பண்ணைகாரரின் மகள் செல்வ செழிப்பில் வாழ்ந்து பழகியவள்.
லட்சுமி ஒரு ஏழை வீட்டு பெண், பார்க்க மிகவும் அழகாக இருந்ததாலும் அடக்கமாக இருந்ததாலும் லட்சுமியை தன் மகன் கோவிந்தனுக்கு மணமுடித்தார் ராஜரத்தினம். ராஜரத்தினத்திற்கு இரண்டு மகன்கள் இருந்தாலும் இரண்டாவது மகன் கோவிந்தன் பிறந்த பிறகே அவரது தொழில் மென்மேலும் வளர்ந்து. அவரது செல்வம் பெருகியது. எனவே அவர் தன் இரண்டாவது மகனை எல்லா சுப காரியங்களுக்கும் முன் நிறுத்தினார். இதனைக் கண்டு மூத்த மகனான கிருஷ்ணன் சில நேரங்களில் பொறாமை கொள்வதும் உண்டு. இதைப்பற்றி தாய் விசாலாட்சியிடம் கேட்டதும் உண்டு. அவர் எதையாவது கூறி கிருஷ்ணனை சமாதானம் செய்வார். எனினும் கிருஷ்ணன் தந்தையிடமும் தம்பியிடமும் நேரடியாக கேட்டு சண்டை போட்டது கிடையாது. அந்த வீட்டில் மூத்த மகனுக்கான மரியாதை அவருக்கு எப்பொழுதும் கிடைத்ததே இல்லை என்பது அவரது பெரிய குறை. அந்த குறையை சரி செய்வதற்காகவே அவர் படிப்பில் அதிக நாட்டம் காண்பித்து நன்கு படித்து முடித்து பட்டம் பெற்று நல்ல வேலையில் சேர்ந்தார்.
ராஜரத்தினம் “ஏம்பா நமக்கு இருக்கிற சொத்துக்கு நீ ஏன் இன்னொருத்தன் கிட்ட போய் வேலை செஞ்சு சம்பாதிக்கணும் ?
பேசாம நம்ம நிலத்தை பாத்துக்கப்பா. அதுவே போதும்.”
என்று கூறி பார்த்தார்.
“இல்லப்பா. எனக்கு அரசு வேலைதான் பிடிச்சிருக்கு. தயவுசெஞ்சு என்ன என்னோட இஷ்டத்துக்கு விட்டுவிடுங்கள்.”
என்ற கிருஷ்ணன் பின்பு தாய் விசாலாட்சி இடம் வந்து
“ஏன் நான் நிலத்தில் போய் வேல செய்யணும்? அதை தான் உன்னோட இரண்டாவது பையன் பண்ணிக்கிட்டு இருக்கானே. அவன் வச்சதுதான் இங்கே சட்டமா இருக்கு. அவனைத் மீறி என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது. அப்படி இருக்க நான் எதுக்கு இங்கே அவன் கூட சேர்ந்து வேலை செய்யணும்?” என்று தாயிடம் தன் குறையைச் கூறிவிட்டு சென்றார்.
விசாலாட்சி கணவனிடம் மகனின் இந்த குற்றச்சாட்டை எடுத்து சென்றார். ஆனால் ஜோசியம் ராசி இவற்றிலெல்லாம் அதிக நம்பிக்கை கொண்ட ராஜரத்தினம் மனைவி மற்றும் பெரிய மகன் குற்றச்சாட்டினை பெரிதாக எடுத்துக் கொண்டதே கிடையாது. மற்ற எல்லா விதத்திலும் கணவன் நல்லபடியாகவே நடந்துகொள்ள மூத்த மகனுக்காக கணவனிடம் விசாலாட்சி வாதாடவும் முடியாமல் மூத்த மகனுடைய பிரச்சினையை தீர்க்கவும் முடியாமல் தர்மசங்கடமான நிலைமையில் இருந்தார்.
பட்டப்படிப்பை விடுதியில் தங்கி படித்த கிருஷ்ணன் சென்னையில் அரசு வங்கி பணியில் சேர்ந்தார். அங்கேயே ஒரு விடுதியில் தொடர்ந்து தங்கினார். தீபாவளி பொங்கலுக்கு கிராமத்துக்கு வந்து குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்ப விடுதிக்கு சென்று விடுவார். மற்றபடி அவர் சென்னையில்தான் பெரும்பாலும் இருந்தார். இப்படி அவர் தன்னுடைய குடும்பத்தில் இருந்து தானே சிரிது ஒதுங்கியே இருந்தார். அதுவே அவருக்கு நிம்மதியாகவும் இருந்தது.
ஒரு முறை கிருஷ்ணனை பார்த்த லலிதாவின் தந்தை, மகளை அவருக்கு மணம் முடித்து கொடுப்பதற்கு விருப்பம் தெரிவித்தார். ராஜரத்தினம் கிருஷ்ணனுக்கு கடிதம் எழுதினார். கிருஷ்ணன் அந்த வார விடுமுறையில் ஊருக்கு வந்தார் . சாப்பிட்டு முடித்து விட்டு உறங்கச் சென்ற மகனிடம்
“ஏம்பா கிருஷ்ணா, உனக்கு ஒரு சம்பந்தம் வந்திருக்கு. பொண்ணு நல்லா இருக்கா. அவங்க அப்பா என்ன பார்த்து பேசினாங்க. நீ என்ன சொல்ற ?” என்று ஒரு புகைப்படத்தை காட்டினார்.
தந்தையை எதிர்த்து பேசி பழக்கமில்லாத கிருஷ்ணன் “நான் பாத்துட்டு சொல்றேன் அப்பா.” என்று கூறிவிட்டு அந்த புகைப்படத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றார்.
முதலில் திருமணத்தில் ஆர்வம் இல்லாத அவர் புகைப்படத்தில் லலிதாவைப் பார்த்த உடன் திருமணத்திற்கு சம்மதித்தார்.
அவள் அழகாக இருந்தாள். திருமணம் முடிந்த பிறகு கிருஷ்ணன் தன் மனைவி லலிதா உடன் சென்னைக்கு கிளம்பினார்.
அப்பொழுது ராஜரத்தினம் “ஏன்பா இப்பதான் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு இல்ல. நீ இனிமே அந்த வேலையை விட்டுவிட்டு நம்ம நிலத்தை பார்த்துக்கலாம் இல்ல?” என்று கேட்டார்.
அதற்கு கிருஷ்ணன் “இல்லப்பா. எனக்கு அந்த வேலைதான் பிடிச்சிருக்கு.” என்று ஒற்றை வரியில் பதில் கூறி விட்டு நகர முயல
“சரி கிருஷ்ணா. உனக்கு அந்த வேலைதான் பிடிச்சிருக்கு னா, நீ அந்த வேலையை செய். ஆனா விழுப்புரத்துக்கு மாற்றல் வாங்கிட்டு இங்கே இருந்து வேலைக்கு போகலாம் இல்ல ?” என்றார் .
கிருஷ்ணன் “சரிப்பா. நான் முயற்சி செய்து பார்க்கிறேன்.” என்று அவரிடம் கூறினாரே தவிர அவர் அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. முயற்சி எடுக்கவும் விருப்பமில்லை.