“சரிப்பா யோசிச்சு சொல்லு.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். அப்போது அங்கு வந்த செல்வா
“டேய் விஜய் வெளிய போகலாம். வரியா?” என்று அழைத்தான்.
அவனும்
“ஆம் போலாம் வாடா.” என்று செல்வாவின் தோள்மீது கை போட்டபடி வெளியே சென்றான.
செல்வா “அப்படியே கொஞ்சதூரம் நடக்கலாமாடா?”
“சரிடா நடக்கலாம்.” என்று கூறினான் விஜய்.
“என்னடா உன் வீட்டுக்கு அக்காவோட மாமனார் வந்தாரு போல இருக்கு.” “ஆமாம்டா வந்து அவரோட பொண்ணுக்கு என்னை மாப்பிள்ளை கேட்டுட்டு போயிருக்கிறார்.”
“எனக்கும் தெரியும்டா. உங்க அப்பா கிட்ட பேசுறதுக்கு முன்னாடி எங்க அப்பாகிட்ட சொல்லி இருக்கிறார். எங்க அப்பா தான் உங்க அப்பா கிட்ட நேரடியா பேச சொல்லி அனுப்பியிருக்கிறார்.”
“ஓ அப்படியா? எங்க அப்பாகிட்ட அங்கிள் இத பத்தி சொல்லவே இல்லையே!”
“பெண்ணோட அப்பா பையனோட அப்பா கிட்ட நேரடியா பேசறது தான் சரியா இருக்கும்னு அப்பா சொன்னாரு. அதனாலதான் நானும் இதைப்பற்றி உன்கிட்ட பேசல.”
“சரி அதை விடு. உனக்கு விஷயம் இப்போ தெரிஞ்சு போச்சு இல்ல. முடிவு எடுத்துட்டியா?”
“என்னடா என்னோட லவ் மேட்டர் தெரிஞ்ச நீயே இப்படி கேக்குற?”
“என்னடா பெரிய லவ். நீங்க ரெண்டு பேரும் பழக ஆரம்பிச்சி என்ன ஒரு நாலு மாசம் இருக்குமா?”
“இருக்கும்.”
“அதுக்கு என்னடா? இந்த நாலு மாசம் பழக்கத்திற்காக உனக்கு கிடைக்கிற அதிர்ஷ்ட தேவதையை வேணாம்னு சொல்ல போறியா?” “என்னடா சொல்ற?”
“என்ன சொல்றேன்னு உனக்கு புரியலையா?”
“பிரியா ஒரு அதிர்ஷ்ட தேவதைன்னு சொல்றேன்.” விஜய் அமைதியாக இருக்க செல்வா தொடர்ந்தான்.
“நீயே நல்லா யோசிச்சு பாருடா. ப்ரியாவையும் வெண்மதியையும் கம்பேர் பண்ணி பாரு. வெண்மதியை கல்யாணம் பண்ணிக்கிட்டு மாச சம்பளத்துக்காக ரெண்டுபேரும் காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் வேலை செஞ்சு சம்பாதிச்சு குடும்பம் நடத்துற அந்த வாழ்க்கை வேண்டுமா? இல்லை கால் மேல கால் போட்டுக்கொண்டு ப்ரியாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஆயிரம் பேரை அதிகாரம் பண்ணிக்கிட்டு அவங்களுக்கு உன் கையால நீ சம்பளம் கொடுத்து வாழற வாழ்க்கை வேண்டுமா? நீயே யோசி.” என்று கூறியபடி யாருக்கோ போன் செய்தான்.
“யாருக்குடா கால் பண்ற?” என்று விஜய் கேட்டான்.
“இன்னும் அஞ்சு நிமிஷத்துல உனக்கே தெரியும். அதுவரைக்கும் நான் சொன்னதை நீ யோசி.” என்று கூற விஜய் யோசித்துப் பார்த்தான்.
அவன் கண் முன் செல்வா சொன்ன இரண்டு காட்சியும் வந்து போனது. அப்போது அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கி நடந்து வந்தாள் ஒரு அழகான இளம் பெண். நீல நிற ஜீன்ஸ் வெள்ளை நிற டாப், ஹைஹீல்ஸ், தோள் வரையில் வெட்டிவிட்டு இருந்த பளபளப்பான கூந்தலும் குளிர் கண்ணாடியுமாக பார்ப்பதற்கு திரைப்படத்தில் வரும் அழகிய கதாநாயகி போல இருந்தாள். அவள் மீது இருந்து தன் பார்வையை எடுக்க முடியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் விஜய்.
அவன் தோளைத் தட்டி “என்னடா? யாருன்னு தெரியுதா? இவதான் பிரியா. எவ்வளவு ஸ்டைலா இருக்கா பாரு.” என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அவள் இவர்கள் அருகினில் வந்தாள்.
“ஹாய் ஐ அம் பிரியா. எங்க அப்பா இன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்து பேசியிருப்பார். உங்களுக்கு விஷயம் என்னன்னு தெரிஞ்சிருக்கும்.” என்று ஆரம்பித்தாள்.
செல்வா “சரிடா நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. நான் பக்கத்துல போயிட்டு வந்துடறேன்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
“நாம ரெண்டு பேரும் ஒரு டிரைவ் போகலாமா?” என்று அவனை அழைத்தாள்.
“ஓகே” என்று கூறி விட்டு அவளுடன் சென்று காரில் ஏறினான்.
கார் வழுக்கிக் கொண்டு சென்றது. விஜய் வீட்டிலும் ஒரு கார் இருக்கிறது. ஆனால் அது இவ்வளவு வசதியாக இல்லை என்பது இப்பொழுது அவனுக்கு ஏனோ ஞாபகம் வந்தது.
அவள் காரை ஓட்டினாள். “எங்க அப்பா எனக்கு எவ்வளவோ மாப்பிள்ளை பார்த்தார். ஆனால் எனக்கு உங்களை தான் பார்த்ததும் பிடித்தது.
நீங்க என்னை கல்யாணம் பண்ணிகிட்டா நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சு நடத்தலாம் .
நீங்க அரியர்ஸ் கிளியர் பண்ணனும்னு கூட அவசியம் கிடையாது.
எங்க அப்பா அம்மாவுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க என்ன சொல்றீங்க? நான் ஆசைப்பட்டது எல்லாமே எனக்கு எப்பவுமே கிடைச்சுடும். இப்போ நான் உங்க மேல ஆசை படறேன். இதுவும் கிடைக்கும்னு நம்புறேன். நீங்க ஏதாவது என்கிட்ட கேட்கணுமா?” என்றாள்.
அவன் அமைதியாக இருக்கவும் “நைஸ் மீட்டிங் யு.” என்றவாறு கைகுலுக்க கை நீட்டினாள்.
அவன் அவள் கைகளை குலுக்கினான். அவளுடைய உள்ளங்கை அவ்வளவு மிருதுவாக இருந்தது. கை குலுக்கிய அவள், அவனை அணைத்தாள். விஜய்யின் கரங்கள் அவனை மீறி அவளை அணைத்தது. “ஓகே பாய். சி யு சூன்.” என்று கூற விஜய் காரிலிருந்து இறங்கினான். அங்கே செல்வா விஜய்க்காக காத்திருந்தான்.
“என்னடா பிரியா கிட்ட பேசனியா?”
அவன் அமைதியாக இருந்தான்.
“நான் சொன்னது கரெக்ட் தானே அவள் ஒரு அதிர்ஷ்ட தேவதை. எல்லோருக்கும் இந்த மாதிரி ஒரு கோல்டன் ஆப்புர்ச்சுனிட்டி வாழ்க்கையில கிடைக்கிறது கிடையாது உனக்கு அது கிடைச்சிருக்கு யூஸ் பண்ணிக்கோ.” என்ற செல்வா. மேலும் தொடர்ந்தான்.
“வெண்மதிக்கு நீ பெட்டரா தெரிஞ்ச அதனால அவங்க உன்னை லவ் பண்றாங்க. ஆனா உன்னோட ஸ்டேட்டஸ்க்கு அவங்க கம்மி டா. நீ ஒரு ஹீரோ டா. உனக்கு ஒரு ஹீரோயின்தான் சூட் ஆகும். வெண்மதியும் அழகுதான். ஆனா ப்ரியாவை பாருடா எவ்வளவு ஸ்டைலா இருக்கா. உனக்கு இவ தான் சரியான ஆள். உன்னோட நல்லதுக்கு தான் நான் இவ்வளவு தூரம் சொல்லிக்கிட்டு இருக்கேன்.”
“ஆனா நான் எப்படி வெண்மதி கிட்ட இதை சொல்றது?”
“அப்போ உனக்கு பிரியாவை கல்யாணம் பண்ணிக்க ஓகேதானே. சூப்பர் டா நல்ல முடிவுதான் எடுத்திருக்க.” என்றான் செல்வா விஜய்யை கட்டிப்பிடித்துக்கொண்டு.
“அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல டா. நேரம் வரும்போது சொல்லிக்கலாம். நீ தேவையில்லாம வெண்மதியை நினைச்சுக்கிட்டு மனசை குழப்பிக்காத நீ எடுத்த முடிவு தான் கரெக்ட். சரி வா போகலாம்.” என்று விஜய்யை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றான் செல்வா.
வீடு வந்த விஜய் தன் விருப்பத்தை பெற்றோர்களிடம் தெரிவித்தான். சரிதாவுக்கு மிகுந்த சந்தோஷம். சிதம்பரமும் மகனின் முடிவினை நடராஜனுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
இரண்டு நாட்கள் கழித்து கவிதா திரும்பவும் ஆரம்பித்தாள்.
“மதி நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.அவனுக்கும் செல்வா அக்காவின் நாத்தனாருக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ண போறாங்களாம்.”
“என்ன சொல்ற கவி?” என்று அதிர்ச்சியாக கேட்டாள் வெண்மதி. அவளால் நம்ப முடியவில்லை.
“ஆமாம் மதி நான் சொல்றது உண்மைதான்..”
“இது கண்டிப்பாக உண்மையாக இருக்காது. என்னோட விஜய் இந்த மாதிரி பண்ண மாட்டா. எனக்கு அவன் மேல நம்பிக்கை இருக்கு..
நாங்க ரெண்டு பேரும் பேசி பழகுவது உனக்கு பிடிக்காது. அதனால நீ இப்படி என்கிட்ட பொய் சொல்ற.”
“ஆமாம். நீங்க ரெண்டு பேரும் பழகுவதால் உன்னோட படிப்பு பாதிக்குமோன்னு நான் பயந்தது உண்டு தான். ஆனா நான் இப்ப சொல்றது பொய் கிடையாது. எனக்கு தெரிஞ்ச உண்மையை தான் சொல்றேன்.”
“இல்லை நான் நம்ப மாட்டேன். நீதான் அவன் கிட்ட இருந்து என்னை பிரிப்பதற்காக பொய் சொல்ற.” என்று அவளிடம் கோபமாக பேசி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
வெண்மதி வீட்டுக்கு வந்து சேர்ந்த வெண்மதி தன் செல்போனை எடுத்து விஜய் எண்ணிற்கு தொடர்பு கொண்டாள். ஆனால் அவன் அதனை எடுக்கவில்லை.
“ஹவ் ஆர் யூ விஜய்?’ என்று கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“ஃபைன். பிசி நவ்” என்று பதில் அனுப்பினான். ‘ஒருவேளை படித்து கொண்டிருக்கிறானோ’ என்று நினைத்த வெண்மதி அதற்கு பிறகு அவனை தொந்தரவு செய்யவில்லை. கவிதா கூறியதை நம்ப அவளால் முடியவில்லை. அவளிடம் பேசுவதை தவிர்த்தாள். அவளே வந்து பேசினாலும், ஒற்றை வார்த்தையில் பதில் கூறினாள்.
அன்று விரிவுரையாளர் சீதா “நாளையிலிருந்து உங்களுக்கு ஸ்டடி ஹாலிடேஸ் ஸ்டார்ட் ஆகுது. எல்லோரும் டைம் வேஸ்ட் பண்ணாம படிங்க. ஆல் த பெஸ்ட்” என்று கூறி விட்டு சென்றார்.
அன்று கவிதா வெண்மதி இடம் வந்து “மதி. நான் உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன். நீ எதைப் பற்றியும் யோசிக்காம படிச்சி நல்ல மார்க் எடு. அதுதான் நம்ம வாழ்க்கைக்கு நல்லது. மத்ததை நாம அப்புறம் பார்த்துக்கலாம். நீ நான் சொன்னதை நம்ப கூட வேண்டாம். ஆனால் கொஞ்சநாள் விஜய்யை மறந்துட்டு படிப்பு மேல கவனத்தை வச்சி படித்து டிகிரி வாங்கும் வழியை பாரு.” என்று அவள் மீது இருக்கும் அக்கறையில் அறிவுரை கூறினாள் கவிதா.
“ சரி கவி” என்று பதில் அளித்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள். அன்று இரவு வெண்மதி கவிதாவின் அறிவுரையை நினைத்துக்கொண்டாள். ‘அவள் சொல்வது அனைத்தும் உண்மைதான். இப்பொழுது நாம் கவனத்தை செலுத்த வேண்டியது படிப்பில் தான். அவளுக்கு ஏதாவது தவறான தகவல் வந்திருக்கக்கூடும். அல்லது இவள் விஜயுடன் பேசி நேரத்தை வீணாக்கி படிக்காமல் விட்டு விடுவாளோ என்ற அக்கறையில் கூட அப்படி சொல்லியிருக்கலாம். மற்றப்படி எந்த பிரச்சனையும் கிடையாது.’ என்று தனக்குத்தானே கூறியவள் கவிதா கூறியதுபோல படிப்பில் கவனத்தை செலுத்தினாள்.