“சென்னையில் பெரிய பெரிய கோயில் நிறைய இருக்கு. அந்த கோவிலை எல்லாம் பார்க்கணும்னு எனக்கும் ரொம்ப ஆசை. நாம கண்டிப்பா போகலாம் மதி.” என்று உற்சாகமாக கூறினார் லட்சுமி.
முதன்முறையாக தாய் தன் மனதில் இருந்த ஆசை ஒன்றினை கூறியிருக்கிறார். இன்னும் எத்தனை வெளியில் சொல்லாத ஆசைகள் இவர் மனதில் இருக்கிறதோ என்று நினைத்துக்கொண்டாள் வெண்மதி. அந்த ஆசையை எல்லாம் தெரிந்துகொண்டு நிறைவேற்றி அவர் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க வேண்டும் என்று உறுதி கொண்ட வெண்மதி தொடர்ந்தாள்.
“அப்புறம் ஞாயித்துக்கிழமை மதியானம், உன் கையால பிரியாணி சாப்பிட்டுவிட்டு சினிமா, பீச், பார்க் எல்லாம் போயிட்டு நைட் வெளியிலேயே சாப்பிட்டுட்டு வந்துடலாம். வாரத்துக்கு ஒரு தடவை உனக்கு சமையல் அறையிலிருந்து லீவு.
அப்புறம் ஊட்டி, கொடைக்கானல் ட்ரிப் போலாம்.” என்று இருவரும் ஒரு கனவு உலகத்தில் சஞ்சரித்த படி வீடு வந்து சேர்ந்தனர்.
தாயின் முகத்தில் இருந்த ஆர்வத்தினை கண்டு மகிழ்ந்தாள் வெண்மதி.
அடுத்து வந்த நாட்களில் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இருவரும் சென்னையில் வாழப்போகும் இனிமையான வாழ்வினை பற்றி பேசி மகிழ்ந்தனர்.
அன்று கல்லூரியில் விரிவுரையாளர் சீதா
“டியர் ஸ்டூடண்ட்ஸ் நான் எதிர்பார்த்ததைவிட இந்த வருஷம் எல்லோரும் நல்ல மார்க் எடுத்து இருக்கீங்க. எதிர்பார்க்காத சிலர் ஆல் பாஸ் ஆகி இருக்கீங்க. என்னா நம்ப கூட முடியலை. குட் ஜாப் . கீப் ஆப் த ஸ்பிரிட். ஒருசிலர் ஃபெயில் ஆகி இருக்கீங்க. பரவாயில்லை. நெக்ஸ்ட் டைம் எல்லாத்தையும் கிளியர் பண்ணிடுங்க. எவ்வளவு சீக்கிரம் கிளியர் பண்றீங்களோ அவ்ளோ நல்லது. கிளியர் யுவர் அரியர்ஸ் அஸ் சூன் அஸ் பாஸிப்ல. இந்தாங்க உங்களுடைய மார்க் சீட். ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் பிரைட் ஃப்யூச்சர். என்று கூறியபடி அவரவர் மதிப்பெண் அட்டவணையை மாணவர்களுக்கு கொடுத்துவிட்டு சென்றார்.
“மதி உன்னோட பர்சன்டேஜ் எவ்வளவு?” என்று கேட்ட லதாவிடம் 65 என்று தயங்கியபடியே கூறினாள் வெண்மதி.
“என்னடி சொல்ற? ஏன் இவ்வளவு கம்மியாயிடுச்சு? என்று ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஆக கேட்டாள் லதா. அவளைத் தொடர்ந்து மேலும் சிலர் இதே கேள்வியை கேட்டனர்.
கவிதா “அவளுக்கு அப்போ உடம்பு சரி இல்லாம இருந்துச்சு. நீங்க திரும்பத் திரும்ப கேட்க அதனால அவ பீல் பண்றா பாருங்க.” என்று கூற மற்ற மாணவர்கள் அமைதி ஆயினர்.
வெண்மதியின் முகத்தில் சோகம் தெரிந்தது. கவிதா அவளின் மன நிலையை மாற்ற பக்கத்திலிருந்த மோனிகாவை வம்புக்கு இழுத்தாள்.
“ஏய் மோனிகா என்னடி பூசணிக்கா ஆயிட்ட.”
“ஆமாண்டி வீட்ல சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி, கொஞ்சம் குண்டாயிட்டேன். இல்லடி கவி?” என்று வருத்தமாக மோனிகா கேட்க “இல்லையே!” என்று கவிதா பதில் கூறினாள்.
“என்ன ? இல்லையா?” என்று புரியாதவளாய் கேட்டாள் மோனிகா.
“நீ கொஞ்சம் குண்டாகல ரொம்ப குண்டாயிட்ட.” என்று இரு கைகளையும் விரித்து பெரிதாக காட்டினாள் கவிதா.
“டிரஸ்ஸ பாரு எவ்ளோ டைட்டா இருக்கு! இந்த டிரஸ்சை தைத்ததுக்கப்புறம் போட்டியா. இல்லை உன்னை நிக்க வச்சுட்டு டைலர் இந்த துணியை உன்னை சுத்தி தைத்து விட்டாரா?” என்று கேட்க அங்கிருந்த மற்ற மாணவர்கள் சிரித்தனர்.
“உன்னை என்று மோனிகா கவிதாவை அடிக்க.
கையை தூக்கினாள்.
“மோனிகா கொஞ்சம் பொறுமையா இரு. ரொம்ப ஆவேச படாத. டிரஸ்சை பாரு. தையல் விட்டுவிட போகுது. அப்புறம் இங்கே ஏதாவது அசம்பாவிதம் நடந்தா அதற்கு நான் பொறுப்பில்லை.” என்று மோனிகாவை எச்சரிக்கும் குரலில் கூறினாள் கவிதா.
கவிதாவை முறைத்தவாறு கையை கீழே இறக்கினாள் மோனிகா. “இருக்கட்டும் இருக்கட்டும். எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்கட்டும். பாத்துக்குறேன். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்.”
“என்னடி தப்பா சொல்ற? இல்லையே பழமொழியை கரெக்டா தான் சொல்றேன்.”
“பூனைக்கு ஒரு காலம் வந்தால் யானைக்கு ஒரு காலம் வரும்னு உனக்கு சூட் ஆகுற மாதிரி சொல்லு.”
“அப்போ நீ பூனையா?”
“உன் பக்கத்துல நான் பூனை தான்.”
“ ஆமா உன்ன மாதிரி கொத்தவரங்காய் பக்கத்துல நானும் பூசணிக்கா தான். போடி வேலையை பாத்துக்கிட்டு.”
“கோச்சிக்காதடி மோனிகா. நான் உன்கிட்ட விளையாடாம வேற யார்கிட்ட விளையாடுவ? நீ குண்டா அழகா குஷ்பு மாதிரி இருக்க இல்ல அதனால எனக்கு கொஞ்சம் பொறாமையா இருந்துச்சு. அதனால தான் அப்படி சொன்னேன்.”
“நான் அப்பவே நெனைச்சேன். என்னோட அழக பார்த்து இங்கே நிறைய பேருக்கு பொறாமை.”
“ஆமாண்டி குஷ்பூ” என்று கூறியபடி மோனிகாவின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள் கவிதா.
“ஆமாம் மோனிகா. நம்மகாலேஜிலேயே நீதான் அழகி.” என்று வெண்மதி சேர்ந்து கூற ஒரு அழகியின் வாயால் அழகி பட்டம் பெற்றத்தில் மகிழ்ந்து போனாள் மோனிகா.
“போங்கடி எனக்கு வெட்கம் வெட்கமா வருது.” என்று கூறிவிட்டு நகத்தை கடித்தபடி குனிந்துகொண்டு அங்கிருந்து ஓடினாள்.
அவள் ஓடிய விதத்தை பார்த்த அனைவரும் சிரித்தனர். வெண்மதியும் கவலையை மறந்து சிரித்தாள்.
அதற்குப்பிறகு “கவி நாம சீதா லக்சரரை ஒரு தடவை பார்த்து தேங்க்ஸ் சொல்லிவிட்டு கிளம்பலாம்.” என்று வெண்மதி கூற
“ஓகே” என்றபடி இருவரும் கிளம்பி ஸ்டாப் ரூமுக்கு சென்று அவரை பார்த்தார்.
விரிவுரையாளர் சீதா இவர்களை பார்த்ததும்
“என்னம்மா மதி? நீ தான் ஃபர்ஸ்ட் வருவன்னு நினைச்சேன். ஆனால் சந்துரு ஃபர்ஸ்ட் வந்துட்டான். உன்னோட பர்சன்டேஜ் ஏன் கம்மியா ஆயிடுச்சு?” என்று உண்மையான அக்கறையுடன் கேட்டார்.
அதற்கு கவிதா முந்திக்கொண்டு “அவளுக்கு எக்ஸாம் அப்போ உடம்பு சரியில்லாம இருந்துச்சு மேடம். அதனாலதான் மார்க் குறைஞ்சிடுச்சு.”
“ஓ அப்படியா? ஓகே டேக் கேர். ஆல் தி பெஸ்ட் .”
“ஓகே சிஎம்.” என்று கவிதா கூற
சீதா “ஏன்மா இப்போ நான் நல்லாத்தானே பேசிக்கிட்டு இருக்கேன். என்னை எதுக்கு சிடுமூஞ்சின்னு திட்டுற?” என்று கேட்க வெண்மதியும் கவிதாவும் அதிர்ச்சியில் விழிகளை விரித்து அவரை பார்த்தனர்.
“பார்த்து பார்த்து கண் முழி வெளிய வந்து விழுந்திட போகுது.” என்று அவர்கள் இருவரையும் கிண்டலடித்தார்.
“மேடம்…….” என்று இழுத்தாள் கவிதா.
“நீங்க வெச்சிருக்கிற பட்டப்பெயரை பத்தி எனக்கு தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா? எல்லாம் எங்களுக்கு தெரியும் எங்களுக்கு தெரியாதுன்னு நீங்க நினைக்கிற வரைக்கும் தான் எங்களுக்கு மரியாதை. அதனால அப்படியே இருக்கட்டும்னு விட்டுடுவோம். நாங்களும் உங்க வயசை தாண்டி வந்தவங்கதான்.”
“சாரி மேடம்” என்று கவிதா கூற
“இட்ஸ் ஓகே. இட்ஸ் ஆல் இன் த ஃபன்.” என்று கூறி சிரித்தார் சீதா. அவருடன் சேர்ந்து இருவரும் சிரித்தனர்.
வெண்மதியின் பொழுது வேலை கிடைத்த பிறகு தான் வாழ போகும் வாழ்க்கையை எண்ணி இனிதாக கழிந்தது. அதனை நினைக்கும் பொழுதே அவளுக்கு அவ்வளவு ஆனந்தமாக இருந்தது. அவள் இப்பொழுதெல்லாம் விஜய்யை பற்றி நினைத்து கவலைப் படுவதே கிடையாது. அன்று வழக்கம் போல தோட்டத்தில் அழகிய மஞ்சள் வண்ண ரோஜா பூக்களை பார்த்து ரசித்தபடியே தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். அவை கொத்துக் கொத்தாக பூத்து இருந்தது ஒரு கொத்தில் 10 சிறு மஞ்சள் வண்ண ரோஜாக்கள் பூத்து குலுங்கின. அந்த பூக்கள் காற்றில் மெல்ல ஆடியது. அவை ஆடியது குலுங்கி குலுங்கி சிரித்தது போல தெரிந்தது வெண்மதிக்கு.
அப்பொழுது “மதி உன்னோட போன் அடிக்குது பாரு.” என்று லட்சுமியின் குரலை கேட்டு உள்ளே சென்றாள் வெண்மதி. போனை எடுத்து பேசினாள். “மதி அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்துருச்சு.” என்று கூற வெண்மதிக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது.. கால் தரையில் படவில்லை.
“ரியலி? எப்போ வந்துச்சு கவி?”
“எனக்கும் சந்துருவுக்கும் வந்துடுச்சு. உனக்கு வந்துடுச்சா? மெயில் செக் பண்ணியா?”
“இல்லடி இன்னும் செக் பண்ணல. நேத்து செக் பண்ணேன். சரிடி நான் போய் உடனே செக் பண்றேன் கவி.” என்று கூறி விட்டு ஓடி சென்று லேப்டாப்பை எடுத்து இன்டர்நெட் இணைத்து அவளது மெயிலை திறந்து பார்த்தாள்.
ஆனால் அவளுக்கு அந்த கம்பெனியிலிருந்து மெயில் எதுவும் வரவில்லை. ஜங்க் மெயிலை திறந்து பார்த்தாள். அதிலும் இல்லை. அவள் இதயம் வேகமாக துடித்தது. அவளுக்கு பதட்டமாக இருந்தது. போனை எடுத்து கவிதா எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினாள்.
“கவி எனக்கு அப்பாயின்மென்ட் ஆடர் வரலடி.”
“என்னடி சொல்ற? ஒழுங்கா பார்த்தியா.”
“பாத்துட்டேன் டி கவி. வரல.” என்று தழுதழுத்த குரலில் கூறினாள்.
“மதி நீ ஒண்ணும் கவலைப்படாதே. மிஸ் பண்ணி இருப்பாங்க. இல்ல ஏதாவது டெக்னிக்கல் ப்ராப்ளமா இருக்கலாம். டுடேஸ் வெயிட் பண்ணி பார்க்கலாம்.” என்று அவளுக்கு சமாதானம் கூறி விட்டு போனை வைத்தாள் கவிதா.
வெண்மதியால் அமைதியாக இருக்க முடியவில்லை. பத்து நிமிடத்திற்கு ஒருமுறை ஈமெயில் செக் பண்ணினாள். ஆனால் அதில் எந்த பிரயோஜனமும் இல்லை. அன்று இரவு உணவு சாப்பிட முடியாமல் தொண்டையில் சாப்பாடு அடைத்தது. சீக்கிரம் அறைக்குள் வந்து படுத்த வெண்மதி ஈமெயிலை பார்த்துக்கொண்டே இருந்தாள். அவளுக்கே தெரியாமல் 4. 00 மணி அளவில் அயர்ந்து போய் உறங்கினாள்.