நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதே விடுமுறை நாட்களில் அக்கம்பக்கத்து வீட்டு பிள்ளைகள் ஊட்டி, கொடைக்கானல், கேரளா என்று தங்கள் பெற்றோர்களுடன் அல்லது நண்பர்களுடன் சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெண்மதியை அவர்கள் எங்கும் கூட்டி சென்றது கிடையாது. வெண்மதியும் கூட்டி செல்லுமாறு பெற்றோர்களை தொந்தரவு செய்தது கிடையாது. எனினும் தனக்கு கிடைத்த விடுமுறை நாட்களை தன்னால் முடிந்தவரை இனிமையாக்கி கொள்கிறாள தன் மகள் என்று பெருமையாக நினைத்துக் கொண்டார்.
“மதி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்னோட போன் அடிச்சுது. அதை நான் எடுக்க போனேன். ஆனா அதுக்குள்ள ரிங் நின்னுடுச்சு. இதை உன்கிட்ட சொல்லலாம்னு போன் எடுத்துட்டு வந்தேன். அத மறந்துட்டு என்ன என்னமோ பேசிக்கிட்டு இருக்கேன். பாரு.” என்று போனை நீட்டினார் லட்சுமி.
போனை வாங்கி பார்த்த வெண்மதி
“கவி தான் போன் பண்ணி இருக்கா. சரி நான் அவளுக்கு திரும்ப போன் பண்ணி பேசறேன்.”
“சரிமா எனக்கு வேற வேலை இருக்கு.” என்று கூறிய லட்சுமி அங்கிருந்து சென்றார்.
வெண்மதி கவிதாவுக்கு போன் செய்தாள். கவிதா போனை எடுத்ததும் “ஹலோ மதி ரிசல்ட் வந்துடுச்சு. பாத்திட்டியா?” என்று அவசர அவசரமாக கேட்டாள்.
“அப்படியா கவி? நான் இன்னும் பார்க்கலை. நான் பாத்துட்டேன். நம்ம ரெண்டு பேரும் பர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் ஆயிட்டோம். “
“அப்பாடி ரொம்ப சந்தோஷம் கவி. என்ன பர்சன்டேஜ் கவி?” என்று ஆர்வமாக அடுத்த கேள்வி கேட்டாள் வெண்மதி.
“நான் 80%. நீ” என்று சற்று தயங்கினாள்.
“சூப்பர் கவி. ஏற்கனவே நீ 80% வச்சிருந்த. இப்போ அதையே மெயின்டெயின் பண்ணிட்ட . கிரேட் ஜாப் கவி.” என்று வாயார பாராட்டினாள் வெண்மதி.
“சரி. நான்?” என்று அடுத்த கேள்வியை கேட்டாள்.
“நீ 65 பர்சன்டேஜ் எடுத்திருக்க.” என்று கவிதா கூற வெண்மதி அமைதியானாள்.
“மதி என்ன பேச்சையே காணோம்?”
“என்னோட பர்சன்டேஜ் கம்மி ஆயிடுச்சு. இல்லடி கவி?”என்று சிரிது சோகம் காட்டி கேட்டாள் வெண்மதி.
“மதி அதை நினைச்சு நீ கவலைப்படாதே. நீ இருந்த நிலைமைக்கு இந்தப் பர்சன்டேஜ் ஜாஸ்திதான். அதான் பஸ் கிளாஸ்ல பாஸ் ஆயிட்ட இல்ல. அதுவே போதும்.” என்று அவளைத் தேற்றுவது போல பேசினாள் கவிதா.
“அது கரெக்டுதான். நான் எக்ஸாம் எழுதினதுக்கு நீதான் காரணம் கவி. நீ மட்டும் அன்னிக்கி எனக்கு அட்வைஸ் பண்ணி படிக்க வச்சு எக்ஸாம் எழுத போர்ஸ் பண்ணலைன்னா, நான் எக்ஸாம் எழுதி இருக்கவே மாட்ட. தேங்க்ஸ் கவி.” என்று கவிதாவுக்கு நன்றி கூறினாள் வெண்மதி .
“சாரி, தேங்க்ஸ் எல்லாம் பிரண்ட்ஷிப்.ல கிடையாது. அதனால அதையெல்லாம் சொல்லாத. அப்புறம் வெட்னஸ்டே காலேஜ் போய் மார்க் சீட் எல்லாம் வாங்கிட்டு வந்துவிடலாம். ஓகே வா? என்று கவிதா கேட்க வெண்மதி “சரி நாம போய் வாங்கிட்டு வந்து விடலாம்.”என்று கூறி போனை வைத்துவிட்டு தாயிடம் சென்றாள் வெண்மதி.
லட்சுமி சமையலறையில் எல்லோருக்கும் காபி தயாரித்து கொண்டிருந்தார்.
“அம்மா ஒரு குட் நியூஸ்! எக்ஸாம் ரிசல்ட் வந்துடுச்சு. நான் ஃபஸ்ட் கிளாசில் பாஸ் ஆயிட்டேன்.”
“ரொம்ப சந்தோஷம் மதி” என்று மகளை கட்டிப்பிடித்து கொண்டார் லட்சுமி.
“இரு நான் ஸ்வீட் செய்கிறேன்.” என்று கூறியபடி கேசரி செய்ய ஆரம்பித்தார். நெய் எடுத்து ரவையை வறுத்துப்படியே
“முதல்ல அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லுமா. அப்பா ரொம்ப சந்தோஷப்படுவார்.” என்று பூரித்துப் போனார் லட்சுமி.
வெண்மதி போனை எடுத்து தந்தைக்கு போன் செய்து விஷயத்தை கூறினாள். அவருக்கு மிகுந்த சந்தோஷம். போனை வைத்தவர்
அவசர அவசரமாக வெளியே சென்று சாக்லேட் வாங்கி வந்து அவருடன் வேலை செய்து கொண்டிருந்த சக ஊழியர்களிடம்
“என்னோட பொண்ணு இன்ஜினியரிங் எக்ஸாம் பாஸ் ஆயிட்டா. பி ஈ பட்டம் வாங்கிட்டா. சாக்லேட் எடுத்துக்கோங்க.” என்று எல்லோருக்கும் கொடுத்தார்.
தந்தையிடம் பேசிவிட்டு சமையல் அறைக்குள் வந்த வெண்மதி நெய் மணக்க கேசரி தயாராக இருந்ததை பார்த்தாள்.
ஒரு தட்டில் வைத்து மக்களுக்கு கொடுத்தார் லட்சுமி. ஒரு ஸ்பூன் எடுத்து தாய்க்கு ஊட்டிவிட்டு தானும் சாப்பிட ஆரம்பித்தாள் வெண்மதி. லட்சுமி காபியுடன் கேசரி பிஸ்கட் எல்லாம் வீட்டில் இருந்த மற்ற அனைவருக்கும் கொடுத்துவிட்டு விபரத்தை ஆனந்தமாக கூறினார். சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்த லலிதா கதிர் வேலன் இந்த விபரத்தை கேட்டு ஒருவரை ஒருவர் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டனர். எதுவும் கூறவில்லை.
கார்த்திகேயனுக்கு மிகுந்த சந்தோஷம். அவன் வெண்மதியைத் தேடி சென்று “கங்கிராட்ஸ் அக்கா. பிஇ முடிச்சிட்டீங்க. கேம்பஸ் இன்டர்வியூ ல செலக்ட் ஆயிட்டீங்க. கலக்குறீங்க அக்கா. ஐ அம் ரியலி ஹேப்பி பார் யூ. எப்போ வேலையில ஜாயின் பண்ண போறீங்க?” என்று ஆர்வமாக கேட்டான் கார்த்திகேயன்.
“இன்னும் அப்பாயின்மென்ட் ஆர்டர் வரலை கார்த்திக். வந்ததும் ஜாயின் பண்ண வேண்டியதுதான். என்று சந்தோஷமாக கூறினாள் வெண்மதி.
அன்று 7 மணி அளவில் லட்சுமி “மதி கோயிலுக்கு கிளம்பு. நாம போயிட்டு வரலாம்.” என்று வெண்மதி இடம் கூறிவிட்டு
வெண்மதி கட்டி வைத்திருந்த மாலை, வீட்டிலிருந்த பழம், வெற்றிலை பாக்கு எடுத்துக்கொண்டு கோயிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.
இதனை கவனித்த லலிதா “லட்சுமி எங்க போற?” என்று கேட்டார்.
“அக்கா வெண்மதி எக்ஸாம்ல பாஸ் ஆயிட்டா. நான் கோயிலுக்கு மாலை கட்டி போடறதா வேண்டிக்கிட்டேன். அதான் மாலையை சாமிக்கு போட்டுட்டு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வரலாம்னு கோயிலுக்கு கிளம்பறேன்.” என்று உற்சாகமாக கூறினார் லட்சுமி.
இதனை கேட்ட லலிதா “என்கிட்ட எதுவும் சொல்லாம நீ பாட்டுக்கு கிளம்பி கோவிலுக்கு போறேன்னு சொல்ற. நீ கெளம்பி போய்ட்டா நாங்க எல்லாம் எப்போ சாப்பிடுறது?” என்று கேட்க
லட்சுமி “அக்கா நான் போயிட்டு சீக்கிரமா வந்துடறேன். வந்து சமைச்சுடுவேன்”
“இன்னிக்கு வெள்ளிக்கிழமை. கோயிலில் கூட்டம் ஜாஸ்தியா இருக்கும். உன்னால சீக்கிரமா வர முடியாது. லேட்டாயிடுச்சுனா சாப்பாட்டுக்காக நாங்க எல்லோரும் நீ வர்ற வரைக்கும் காத்துகிட்டு இருக்கனுமா? நல்ல கதையா இருக்கே. சமையல் பண்ணி வச்சிட்டு போ.” என்று வழக்கம்போல அதிகாரம் செய்தார் லலிதா.
“சரி அக்கா. நான் இட்லி சட்னி பண்ணி வைத்து விட்டு போறேன்.” என்று வேகவேகமாக உள்ளே நுழைய போனார் லட்சுமி.
“என்னது வெறும் இட்லியும் சட்னியுமா? அது எங்களுக்கு பத்தாது பூரி உருளைக்கிழங்கு, கிச்சடியும் சேர்த்து பண்ணு.”
“லேட் ஆகிடுமே” என்று யோசனையாக மெல்லிய குரலில் கூறினார் லட்சுமி.
இதனை கேட்ட லலிதா “என்ன லேட் ஆயிடுமா? லேட் ஆனா என்ன கோயில் ஒன்பது மணி வரைக்கும் திறந்து இருக்கும். பொறுமையா போய்க்கலாம். போய் சமையலை கவனி.”
இதை கவனித்த கார்த்திகேயன் “அம்மா கோயிலுக்கு போற சித்தியை தடுக்காதீங்க. சாமி குத்தம் ஆயிடும்.” என்று லலிதாவின் பய பக்தியை நன்கு தெரிந்து வைத்திருந்த மகன் கூறினான்.
எனினும் லலிதா “நான் ஒண்ணும் போக வேண்டாம்னு சொல்லலையே. வீட்டு வேலையை முடிச்சுட்டு போன்னு தான் சொன்னேன். அதனால சாமி குத்தம் ஆகாது.” என்று திட்டவட்டமாக கூறி விட்டு சென்றார் லலிதா.
லட்சுமி வேறுவழியின்றி சமையலறைக்குள் புகுந்தாள். கோயிலுக்கு போக தயாராகி வந்த வெண்மதி இதை கவனித்தாள். சமையலறைக்கு சென்று தாய்க்கு உதவினாள். வேகவேகமாக பூரி உருளைக்கிழங்கு, இட்லி, சட்னி, கிச்சடி செய்து ஹாட் பாக்ஸில் எடுத்து வைத்தனர். எனினும் சமையலை முடிப்பதற்கு எட்டரை மணி ஆனது. முடித்துவிட்டு, வெண்மதி தந்தையின் டிவிஎஸ் 50 எடுத்து வந்தாள். இருவரும் அதில் ஏறிக்கொண்டு கோயிலுக்கு சென்றனர். தீபாராதனை முடிந்து விட்டிருந்தது. ஐயர் எல்லோருக்கும் குங்குமம் விபூதி கொடுத்துக்கொண்டிருந்தார். அவசரமாக உள்ளே நுழைந்த லட்சுமி, வெண்மதி இருவரும் கொண்டு சென்றிருந்த மாலையை அய்யரிடம் கொடுத்தனர்.
அர்ச்சனைக்காக எடுத்து வந்திருந்த தேங்காய் பழத்தை கொடுத்தனர். “இப்பதான் மா. தீபாராதனை முடிஞ்சது. அர்ச்சனை பண்ண முடியாது. இனிமேல் நாளைக்கு தான்.” என்று கூறியவர். மாலையை வாங்கிக்கொண்டு சென்று சுவாமிக்கு அணிவித்தார்.
லட்சுமிக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தது அதை அவர் முகத்தில் பார்த்த வெண்மதி “என்னம்மா என்ன யோசிக்கிற? அதான் மாலை சாமிக்கு போய் சேர்ந்துடுச்சு இல்ல. இன்னும் என்ன யோசனை?”
“இல்லை மதி. உன் பேர்ல அர்ச்சனை பண்ணலாம்னு நினைச்சேன். அது முடியாம போச்சு. அதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு.” என்றார்.
லட்சுமி.
“அதனால என்னமா? இன்னொரு நாள் அர்ச்சனை பண்ணிக்கலாம். நீங்க கவலைப்படாதீங்க.” என்று அவருக்கு சமாதனம் கூறிவிட்டு டிவிஎஸ் 50யை எடுத்து வந்து “உட்காருங்க அம்மா. வீட்டுக்கு போகலாம்,” என்று கூற லட்சுமி வண்டியில் ஏறினார். லட்சுமி சோகமாகவே இருக்க …
வண்டியை ஒட்டியபடியே வெண்மதி தாயிடம்
“அம்மா எனக்கு சென்னையில் தான் வேலை கிடைக்கும்னு நினைக்கிறேன். என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அப்படித்தான் சொன்னாங்க. எனக்கு வேலை கிடைத்ததும் நீ, நான், கவி மூணு பேரும் சேர்ந்து ஒரு வீடு வாடகை எடுத்துக்கிட்டு இருக்கலாம். திங்கள் கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரைக்கும் நானும் கவியும் வேலைக்கு போயிட்டு வருவோம். எனக்கும் கவிக்கும் கார் டிரைவிங் தெரியும். லைசென்ஸ் வச்சிருக்கோம். வீடு வாடகை எடுத்ததுக்கு அப்புறம் கார் லோன் போட்டு ஒரு கார் வாங்கறோம். அந்த காரில் நாம மூணு பேரும் எல்லா வெள்ளிக்கிழமையும் சென்னையில இருக்கிற எல்லா பெரிய கோவிலுக்கும் போயிட்டு வரலாம். தூரமா இருக்கிற கோயிலுக்கு சனிக்கிழமை போயிட்டு வெளியவே சாப்டுட்டு வரலாம்.”