நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தந்தையை நினைத்து வெண்மதி கண்களில் தேங்கியிருந்த தண்ணீர் வழிய தொடங்கியது.யாரேனும் பார்த்து என்னவென்று கேட்பார்களோ என்று எண்ணி கண்களை துடைத்துக் கொண்டு ஜன்னல் பக்கம் திரும்பி கொண்டாள்.
பேருந்து விழுப்புரம் வந்தது. விழுப்புரம் பேருந்து நிலையத்தில் வேகவேகமாக இறங்கி ஒரு ஆட்டோவை பிடித்து ஏ. ஆர். ஹாஸ்பிடலுக்கு சென்றாள்.
அங்கு ரிசப்ஷனிஸ்ட் இடம்
“இங்க கோவிந்தன் என்ற பெயரில் யாராவது அட்மிட் ஆகி இருக்காங்களா?” என்று பதட்டத்துடன் கேட்டாள் வெண்மதி.
ரிசப்ஷனிஸ்ட் “ஒரு நிமிஷம் இருங்க. நான் செக் பண்ணிட்டு சொல்றேன்.” என்று பெரிய புத்தகத்தை எடுத்து அதில் அந்தப் பெயரை தேடினாள்.
“அப்படி இங்க யாரும் அட்மிட் ஆகல.” என்று ரிசப்ஷனிஸ்ட் கூற வெண்மதி ‘ஒருவேளை அட்மிட் செய்தவருக்கு இவருடைய பெயர் தெரியாமல் இருந்திருக்கலாம்’ என்று யோசித்து
“இன்னைக்கு ஏதாவது ஆக்சிடென்ட் கேஸ் அட்மிட் பண்ணி இருக்கீங்களா?”
“ஆம் பண்ணியிருக்கோம்.”
“எங்க இருக்காங்க?”
“ஐ. சி. யு வில் இருக்கிறார்.” என்று ஐ. சி .யு விற்கு செல்லும் வழியை சொன்னாள் அந்த ரிசப்ஷனிஸ்ட்.
உடலில் இருந்த மொத்த சக்தியும் வடிந்து விட நடக்கமுடியாமல் நடந்து அங்குசென்றாள். அங்கு ஒருவருக்கு சிகிச்சை ஐசியூவில் நடந்து கொண்டிருந்தது. இவள் கண்ணாடி வழியாக உள்ளே பார்த்தாள்.
அங்கு 2 மருத்துவர்களும் அவருக்கு சிகிச்சை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு யாரோ வரும் சத்தம் கேட்டது.
இவள் திரும்பி பார்த்தாள்.
“சிஸ்டர் சொல்லுங்க. உண்மையை சொல்லுங்க. என்ன ஆச்சு? என்னோட புருஷனுக்கு?” என்று ஒரு இளம் பெண் கேட்க.
“தலையில் அடி. டாக்டர் பாத்துக்கிட்டு இருக்காங்க. உங்க கூட யாராவது வந்திருக்காங்களா?”
“எங்க அம்மா வந்துகிட்டே இருக்காங்க. சொல்லுங்க. நீங்க எதுவா இருந்தாலும் என்கிட்டயே சொல்லுங்க.”
“எனக்கு எதுவும் தெரியாது மா. டாக்டர் வெளியே வந்தா தான் தெரியும்.” என்று கூறிக்கொண்டே ஐ. சி. யு வை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
“அந்த நர்ஸ் பாருங்க. உங்கள் புருஷனுக் தான் இத்தனை டாக்டர்ஸ் ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.” என்று கூறியதை கேட்ட வென்மதி திகைத்தாள். அப்போது அவரது முகத்தை மறைத்துக் கொண்டிருந்த மருத்துவர் நகர அவரது முகம் தெரிந்தது. அவர் வெண்மதியின் தந்தை இல்லை.
மலைபோல வந்த கஷ்டம் பனி போல விலகியது போல தோன்றினாலும் அந்த இளம் பெண்ணுக்காக மனம் வருந்தினாள் வெண்மதி. மீண்டும் ரிசப்ஷனிஸ்ட் இடம் சென்று
“அவர் இல்லை. வேற யாராவது அட்மிட் ஆகி இருக்காங்களா?” என்று கேட்டாள். ரிசப்ஷனிஸ்ட் சலித்து கொண்டே
“எத்தனை முறை சொல்வது? வேற எந்த ஆக்சிடென்ட் கேசும் இங்கே அட்மிட் ஆகல.” என்று மீண்டும் ஒரு முறை சொல்லிவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள் .
“அப்போ நமக்கு வந்த கால்” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியில் வந்து ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தாள்.
ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குள் நுழைந்த வெண்மதி
“அம்மா” என்று வேகமாக கத்த வீட்டில் இருந்த அனைவரும் அங்கு வந்தனர். முதலில் வந்தது கோவிந்தன். கோவிந்தனை பார்த்ததும் போன உயிர் திரும்ப வந்தது போல இருந்தது வெண்மதிக்கு.
ஓடி சென்று அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டாள்.
“அப்பா அப்பா உங்களுக்கு ஒன்றுமில்லையே?”
“என்னமா என்ன? என்ன ஆச்சு? ஏன் அழற?” அவள் எதுவும் பதில் பேசாமல் அவரை கட்டி பிடித்தபடி விசும்பி கொண்டிருந்தாள்.
அங்கு வந்த லட்சுமி “என்னாச்சு வெண்மதி? ஏன் இப்படி அழற?” என்று அவளை அழைத்து வந்து சோபாவில் உட்கார வைத்தார்.
“ நீ சென்னைக்கு இன்டர்வியூவுக்கு போறேன்னு தானே சொல்லிட்டு போன. எப்படி இங்க? என்ன விஷயம் மதி?” என்று லட்சுமி கேட்க
தந்தையின் கையை பிடித்தவாறு
“அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சின்னு எனக்கு போன் வந்துச்சு.”
“என்னம்மா சொல்ற? என்று ஆச்சரியமாக கேட்டார் கோவிந்தன்.
“ஆமாம் அப்பா. உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகி உங்களை ஏ.ஆர். ஹாஸ்பிட்டலில் ஐ.சி.யூவில் அட்மிட் பண்ணி இருக்கிறதா எனக்கு போன் வந்துச்சு. அதான் சென்னையிலிருந்து வந்தேன்.”
“என்ன சொல்ற? உனக்கு யார் அப்படி கால் பண்ணி இருப்பா? நீ எனக்கு கால் பண்ணியிருக்கலாமே.” என்று கேட்டார் கோவிந்தன்.
“அப்போதுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது. அவள் கோவிந்தனுக்கு போன் செய்யவில்லை என்பது.
“ஆனா உங்களுக்கு தான் ஆக்சிடென்ட் என எனக்கு கால் வந்தது. அதனால உங்களுக்கு நான் போன் பண்ணல. ஆனா மத்த எல்லோருக்கும் போன் பண்ணினேன். யாரும் போனை எடுக்கலை.”
“போன் வரவே இல்லையே.” என்று லட்சுமி கூற
“உங்க போன் ஆப் ஆகியிருந்தது.”
“ஆமாம் நான் சார்ஜ் போடல. அதனால ஆகியிருக்கும்.”
அப்போது “கதிர்வேலன் உள்ளிருந்து வந்து
“நீ சரியான லூசு தான். யாராவது ராங்க் கால் போட்டிருப்பாங்க. யாருக்காவது அடிபட்டிருக்கும். அதே ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருப்பாங்க. அவங்க சொந்தக்காரர்களுக்கு கால் பண்றதுக்கு பதில் உனக்கு கால் பண்ணி இருப்பாங்க. இதை நம்பிக்கிட்டு யார்கிட்டயும் போன் பண்ணி கேட்காம கிளம்பி வந்துட்டியா?” என்று அலட்சியமாக கேட்க
ஹாஸ்பிடலில் ஐ.சி.யூவில் இருந்த அந்த இன்னொருத்தர் அப்பொழுது
அவளுக்கு ஞாபகம் வந்தார். அவருடைய சொந்தக் காரருக்கு போன் செய்வதற்கு பதில் இவளுக்கு போன் செய்திருக்கிறார்கள் என்று யோசித்தாலும் இவளுடைய எண் எப்படி அவரது செல்போனில் வந்தது? என்று அவளுக்கு புரியவில்லை.
கோவிந்தன் “அப்படி இல்லை கதிர். பதட்டத்தில் அவளுக்கு புரிஞ்சு இருக்காது.” “அப்போ இந்த இன்டர்வியூவும் போச்சா?” என்று கதிர்வேலன் சிரித்துக்கொண்டே கேட்க
அப்போதுதான் அவளுக்கு உரைத்தது. அவள் கையில் கிடைத்த அடுத்த வேலையையும் கோட்டை விட்டிருக்கிறாள் என்பது. எனினும் தந்தைக்கு எதுவும் நேரவில்லை என்ற நினைப்பு அவளுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற வருத்தத்தை போக்கியது.
அப்போது அவளுடைய செல்போன் ஒலித்தது . எடுத்துப் பார்த்தாள்.
“சரிம்மா நீ உன்னோட ரூமுக்கு போ. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. போன் அடிக்குது பாரு.”
“கவிதா தான் அம்மா.”
“நீ அவ கிட்ட பேசு. அப்புறம் மத்ததை பேசிக்கலாம்.” என்று மகளை போக சொன்னார் லட்சுமி.
வெண்மதி போன் எடுத்து நடந்தவற்றை கூறினாள்
“கவி இந்த வேலையும் எனக்கு கிடைக்கல ஆனா அப்பாவை நல்லபடியா பார்த்ததில் எனக்கு அந்த கஷ்டமே தெரியல.”
“மதி யார் இந்த மாதிரி உனக்கு கால் பண்ணி இருப்பா? கதிர் அண்ணன் சொன்ன மாதிரி இது ராங்க் கால் கிடையாதுன்னு எனக்கு தோணுது.”
“ஆமாம் எனக்கும் அப்படி தான் தோணுது.”
“இன்னிக்கி சாயந்திரம் நான் அந்த ஹாஸ்பிடலில் போய் விசாரிச்சு பார்க்க போறேன்.”
“சரிடி விசாரிச்சு பாரு. நான் சாய்ந்திரம் உனக்கு கால் பண்றேன்.” என்று கூறிவிட்டு கவிதா போனை வைத்தாள்.
வெண்மதி அந்த ஹாஸ்பிடலுக்கு சென்றாள்.
அங்கு ரிசப்ஷனிஸ்ட் இடம்
தன்னுடைய மொபைல் எடுத்து காட்டி
“இந்த நம்பர் உங்க ஹாஸ்பிடல் நம்பர் தானே?” என்று கேட்டாள்.
“ஆமாம். ஆனா நான் கூப்பிடல. யார் கூப்பிட்டான்னு எனக்கு தெரியல. நான் இந்த பக்கம் அந்த பக்கம் போய் இருக்கும்போது யாராவது பேசி இருக்கலாம்.” “சிசிடிவி கேமரா பாக்கலாமா? என்னமா விளையாடுறீங்களா?”
“போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுங்க. கம்ப்ளைன்ட் எடுத்துட்டு வாங்க. சிசிடிவி கேமரா அப்பதான் காட்டுவோம். அதுகூட எல்லா கேமராவும் ஒழுங்கா வேலை செஞ்சு இருந்தால் தெரியும். போங்கம்மா போங்க. உங்க அப்பா நல்லா தான இருக்காரு. அதை நினைத்து சந்தோஷப்படுங்க. சும்மா சி. ஐ. டி. வேலையெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காதீங்க.” என்று அவளை துரத்துவதில் குறியாக இருந்தாள் அந்த ரிசப்ஷனிஸ்ட். இவளுக்கு தெரியாமல் இந்த போனை யாரோ எடுத்து பேசியிருக்கிறார். இது மேலிடத்துக்கு தெரியவந்தால் இவளுடைய வேலைக்கு ஆபத்தாகக் கூட முடியலாம் என்ற பயம் அவளுக்கு.
அன்று இரவு கவிதா போன் செய்தாள்.
“ என்ன மதி விசாரிச்சயா?”
“விசாரிச்சேன். அந்த நம்பர் ஹாஸ்பிடல் நம்பர் தான். ஆனால் ரிசப்ஷனிஸ்ட் கால் பண்ணல.”
“என்னடி சொல்ற?’
“ஆமாம் கவி. யாரோ வேணும்னு எனக்கு கால் பண்ணி இந்த மாதிரி பொய் சொல்லி இருக்கிறார்கள். ஆனா அவங்களுக்கு இதுல என்ன லாபம்? என்று மதி சொல்லிக்கொண்டே யோசித்த பொழுது அவளுக்கு புரிந்தது அவளுடைய வேலை! அவளுக்கு வேலை கிடைக்க கூடாது என்று இப்படி யாரோ செய்திருக்கிறார்கள். புரிந்ததும் அவளுக்கு அதிர்ச்சியாக கூட இருந்தது. எனக்கு வேலை கிடைக்க கூடாது என்று யார் நினைக்கிறது என்று யோசித்தாள் மதி.
“என்ன சத்தத்தையே காணோம்?”
“எனக்கு வேலை கிடைக்கக்கூடாது என யாரோ இப்படி பண்ணி இருக்காங்க.”
“என்னடி சொல்ற?”
“ஆமாம் கவி. ஆனா யார் அப்படி நினைக்க போறா? இந்த இன்டர்வியூவுக்கு நான் போகப் போறது ரெண்டு பேர் கிட்ட தான் நான் சொன்னேன். ஒன்னும் எங்க அம்மா இன்னொன்னு நீ.”
“மதி நீ என்னையா சந்தேகப்படுற?”
“ உன்னை நான் சந்தேகபடல நீ யார்கிட்டயாவது சொன்னியா?”
அவள் யோசித்தாள். நான் எங்க வீட்ல மட்டும் சொன்னேன். அப்புறம் என்று யோசித்தாள்.