மறுநாள் அதிகாலையிலேயே அவளை யாரோ எழுப்ப, கண்விழித்து பார்த்த மதிவதனி, அங்கு நிலா நிற்பதைக் கண்டாள்.
“அண்ணி, சீக்கிரம் ரெடி ஆகி வாங்க! எல்லாரும் ரெடி ஆயிட்டாங்க!” அவள் வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டாள்.
‘இவ ஏன் இப்படி முகத்தை உம்முன்னு வச்சிருக்கா? இப்போ எங்க போக போறோம்னு தெரியலையே?! இதுவும் சஸ்பென்ஸா?’ என்று நினைத்தவாறு எழுந்து தயாரானாள்.
நேராக தன் அத்தையிடம் சென்று.”அத்தை! இப்போ எங்க போறோம்?” என்று கேட்டாள்.
அவர் எதுவும் சொல்லாமல் அவளை பார்க்க, அவர் கண்களில் நீர் நிறைந்திருந்ததை பார்த்து பதறியவள்,”அத்தை! என்னாச்சு? இப்போ ஏன் அழுவுறீங்க?”
“இன்னைக்கு என்ன நாள்னு உனக்கு ஞாபகம் இல்லையாமா?”
“என்ன நாள்?! என்று கேட்டுக் கொண்டே கேலன்டரை பார்த்தவள் உறைந்து போய்விட்டாள்.
எப்படி மறந்தாள்? எப்படி இந்த நாளை மறந்தாள்? அவள் அன்னை, தந்தை அவளை விட்டு பிரிந்துச் சென்ற இந்த நாளை எப்படி மறந்தாள்? ஒவ்வொரு வருஷமும் இந்த நாளன்று, யாருடனும் பேசாமல், சாப்பிடாமல், தனி அறைக்குள் கண்ணீர் வடித்துவிட்டு, இப்போது மட்டும் எப்படி மறந்தாள்?
ஒருவேளை சுற்றிலும் உறவுகளும், தன் மனம் கவர்ந்தவனும் அருகில் இருப்பதால் மறந்துவிட்டாளோ!
அதற்கு மேல் அவளை யோசிக்க விடாமல் அவளை அழைத்துக் கொண்டு மாஞ்சோலை எஸ்டேட் சென்றனர்.
மாஞ்சோலை எஸ்டேட் செல்லும் வழியில், மதிவதனியின் பெற்றோர் சென்ற பஸ் கவிழ்ந்த ஆற்றுக்குச் சென்றனர். ஐயரை வைத்து ஆக வேண்டிய காரியமெல்லாம் முடிந்த பின் ஆற்றுக்குச் சென்று மலர் தூவி வணங்கினர்.
எல்லா சம்பிரதாயங்களும் முடிந்த பின் மதிவதனி, அந்த ஆற்றுக் கரையின் படிக்கட்டுகளில் அமர்ந்துக் கொண்டிருந்தாள். இறந்து போன தன் பெற்றோரையும், மாமாவையும் நினைத்து அவள் கண்கள் கண்ணீரை பொழிந்துக் கொண்டிருந்தன.
மனோரஞ்சன் அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
“மது! இப்போ எதுக்கு அழுவுற? உன் அப்பா, அம்மா உன்னை விட்டுட்டு போய்ட்டாங்கன்னா? இல்லை…..அவங்க எங்கேயும் போகல! அவங்க உனக்குள்ள தான் இருக்காங்க மது!”
“நீ சிரிக்கிறப்போ உன் கூட சேர்ந்து சிரிக்கிறாங்க! நீ அழுவுறப்போ உன் கூட சேர்ந்து அழுவுறாங்க! நீ சந்தோஷமா இருந்தா அவங்களும் சந்தோஷமா இருப்பாங்க! நீ அவங்களை ரொம்ப நேசிச்சேனா சந்தோஷமா இரு! அது தான் இறந்த போன அவங்களுக்கு நீ குடுக்கிற மரியாதை”
மதிவதனி மெல்ல புன்னகைத்தாள்.
“ஹ்ம்ம்….இது தான், இப்படி தான் இருக்கனும்! எப்பவும் சிரிச்சுட்டே இரு. அது உனக்கு பெரிய பலத்தை குடுக்கும். சரி, இப்போ உன் மனசை மாத்த நாம ஒரு இடத்துக்கு போலாமா?”
“எங்க?”
“அங்க போனா உனக்கே தெரியும்! வா!”
மனோரஞ்சன், மதிவதனியை அழைத்துச் சென்ற இடம், அவர்கள் இருவரும் முதன் முதலில் சந்தித்த கல்யாண தீர்த்தம்.
அந்த இடத்துக்குச் சென்றதும் பழைய நினைவுகள் அவள் மனதில் படமெடுக்க அவள் கண்களை மூடி அதை அனுபவித்தாள்.
இண்டர்வியுவுக்கு லெட்டர் வந்தது, அவள் தோழி மித்ராவை பார்க்க வந்தது, புறாவை காப்பாற்ற போய் தண்ணீரில் விழுந்தது, மனோரஞ்சன் வந்து காப்பாற்றியது, அவளுக்கும், மனோரஞ்சனுக்கும் கல்யாணம் ஆகி அவள் சென்னை சென்றது, எல்லா நினைவுகளும் அவள் மனதில் உலா வந்தன.
‘ச்சே! மித்ரா எப்படி இருக்காளோ?! அவ கிட்ட பேசி எவ்ளோ நாள் ஆகுது?! அவ கல்யாணத்துக்கு கூட நம்மளால வர முடியல’ நினைத்துக் கொண்டே கண்மூடி நின்றவள், மெதுவாக கண்ணைத் திறந்து பார்க்க, தன் எதிரில் வந்து கொண்டிருந்த மித்ராவை பார்த்து இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
தோழியைக் கண்டதும் கண்களில் நீர் வழிய, அவளை கட்டிபிடிக்கச் சென்றவள், மேடிட்டிருந்த அவள் வயிற்றை பார்த்து சந்தோஷ கூச்சலிட்டாள்.
“ஏய்! மித்ரா! கன்ங்ராட்ஸ்டி! எப்படி இருக்க? உன்னை பார்த்து பேசி எவ்ளோ நாள் ஆச்சு? எத்தனை மாசம்டி இது?”
மதிவதனி பேச பேச, எதுவும் பேசாமல் மித்ரா அவளை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏய்! ஏதாவது பேசுடி?”
“நான் ஏண்டி பேசணும்? இல்ல நான் ஏன் பேசணும்னு கேக்குறேன்? என்னை நீ மறந்துட்டேல! அட்லீஸ்ட் எனக்கு ஒரு போன் பண்ணி பேசணும்னு கூட உனக்கு தோனலைல?!”
“இல்லடி! திடீருன்னு என்னனவோ நடந்து போச்சு! அப்படியே என் வாழ்க்கை, என் கஷ்டம், என் கவலைனு மூழ்கி போயிட்டேன்டி! நான் பண்ணினது தப்பு தான், சாரிடி!”
“சரி, சரி விடு! மன்னிச்சு விடுறேன்” என்று கூறி சிரித்தாள்.
“நான் இங்க வரேன்னு உனக்கு எப்படி தெரியும்?”
“ஹ்ம்ம்…உன் ஆத்துகாரர் தான், உன் அத்தை கிட்ட என் போன் நம்பர் வாங்கி எனக்கு போன் பண்ணி சொன்னார்”
சற்று தள்ளி நின்றுக் கொண்டிருந்த மனோரஞ்சனை அவள் ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
‘எனக்காக இவர் எவ்ளோ யோசிக்கிறார்?! என் சின்ன சின்ன சந்தோஷத்தை நிறைவேற்ற என்னலாம் செய்றார்?! என் சந்தோஷத்தில, என் துக்கத்தில. என் பயத்தில, என் வெற்றியில, இருட்டில, வெளிச்சத்தில, எல்லா சந்தர்பத்திலையும் என் கூடவே இருக்காரே!’
‘இவருக்கு எப்படி என் மேல காதல் இல்லாம போகும்? ஒருத்தருக்கொருத்தர் காதலிக்கிறோம்னு சொல்லிக்கிட்டா மட்டும் தான் காதலா? எல்லா சூழ்நிலையிலும் நம்ம கூடவே வர இது தான் காதல்!’
‘நித்யாவுக்கும் இவருக்கும் என்ன பிரச்சனை வேணா இருந்துட்டு போகட்டும். அதை பத்தி எப்போ என் கிட்ட சொல்லனும்னு அவரு நினைக்கிறாரோ, அப்போ சொல்லட்டும்! ஆனால் அவர் மனுசுல நித்யா இல்லை, நான் தான் இருக்கேன். கண்டிப்பா நான் தான் இருக்கேன்!”
இவ்வளவு நாள் அவள் மனதுக்கு, இந்த விஷயம் புரிந்திருந்தாலும், அவள் சிந்தை அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது. ஆனால் இப்பொழுது அவள் சிந்தையும் தெளிவாயிற்று.
கண்கள் நிறைய காதலுடனும் மனோரஞ்சனையே பார்த்துக் கொண்டிருந்த மதிவதனியை உலுக்கி, நிஜ உலகிற்குக் கொண்டு வந்தாள் மித்ரா.
“ஏய்! என்னடி உன் ஆத்துக்காரரை இப்படி சைட் அடிக்குற?! ஹ்ம்ம்…இதுக்குமேல நான் இங்க இருக்கிறது நல்லதில்லே! நான் கிளம்புறேன். நீ ஊருக்கு போறதுக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு வந்துட்டு போ” என்று சொல்லிவிட்டு இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள் மித்ரா.
அதன்பின் மனோரஞ்சன் அவளை, தீர்த்தத்தின் அருகே அழைத்துச் சென்றான்.
சிறிது நேரம் இருவரும் மௌனமாக சுழித்து ஓடும் நீரை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
“ரஞ்சன்! மது!” இருவரும் ஒரே நேரத்தில் பேச ஆரம்பித்தனர்.
மனோரஞ்சன் சிரித்துக் கொண்டே,”சொல்லு! என்ன சொல்ல வந்த?”
“அது….அது வந்து ரஞ்சன்…..நான்…..வந்து…..உங்களை…..”
சரியாக அவன் போன் ஒலித்தது. அவன் அசடு வழிய அவளை பார்த்தான்.
இப்போது தான் அவள் மனம் தெளிவாக இருக்கிறதே! கூப்பிடுவது நித்யாவாகவே இருந்தாலும் அவள் கவலைப்படபோவதில்லை! அவர்கள் காதலுக்கு நித்யா ஒரு தடையில்லை என்பது அவளுக்கு புரிந்து வெகு நேரமாயிற்று!
சிரித்துக் கொண்டே எடுத்து பேசுமாறு சைகைக் காட்டினாள்.
போனை எடுத்து பார்த்த மனோரஞ்சன், “ரித்து தான் கூப்பிடுறான்!” என்று கூறிவிட்டு அழைப்பை ஏற்று பேசினான்.
“சொல்லுடா!”
மறுமுனையில் ரித்து ஏதோ கூற, இங்கே மனோரஞ்சனின் முகம் மாறியது.
“சரி! நான் இப்பவே கிளம்பி வரேன்” என்று கூறி போனை வைத்தான்.
“மது! நாம உடனே கிளம்பி வீட்டுக்கு போகணும். வா போகலாம்”
“என்னாச்சு ரஞ்சன்?”
“சொல்றேன், வா போகலாம்”
திரும்பி செல்கின்ற வழி முழுவதும், அவன் முகம் தீவிர யோசனையில் இறுகியிருந்தது. என்ன பிரச்சனை என்று மதிவதனிக்கு ஒன்று புரியவில்லை.
வீட்டி வாசலை அடைந்ததும் ரித்து,நிலா,தாமரை அவர்களை நோக்கி வேகமாக வந்தனர்.
“என்னாச்சு ரித்து?”
“பெரியவங்க எல்லாம் கோயிலுக்கு போய்டாங்கண்ணா. நான், நிலா, தாமரை மட்டும் தான் வீட்டுக்கு வந்தோம். வாசல்ல இந்த லெட்டர் இருந்துச்சு. நித்யா எழுதுனது, அண்ணிக்கு!” என்று முடித்து மதிவதனியை பார்த்தான் ரிதுநந்தன்.
‘என்னது லெட்டரா? எனக்கா? நித்யா ஏன் எனக்கு லெட்டர் எழுதணும்?ஒண்ணுமே புரியலையே?’ என்று மதிவதனி யோசித்துக் கொண்டிருக்கும் போதே மனோரஞ்சன்,”ரித்து! உனக்கு நித்யாவை பத்தி…..”
“எனக்கு எல்லாம் தெரியும்ணா! நிலாக்கும், தாமரைக்கும் கூட தெரியும். கொஞ்ச நாளைக்கு முன்னால நிலா போய் நித்யாவை பார்த்து பேசியிருக்கா! எனக்கு இப்போ தான் எல்லாம் சொன்னா”
மனோரஞ்சன் பெருமூச்சு விட்டுக்கொண்டு அந்த லெட்டரை ரிதுநந்தனிடமிருந்து வாங்கி மதிவதனியிடம் நீட்டினான்.
“நீங்களே படிங்க?”
“இல்லை மது! அவ உனக்கு தான் எழுதியிருக்கா. முதல்ல நீ படி” மதிவதனி அந்த லெட்டரை வாங்கி அதை பிரித்தாள். லெட்டரை பிரிக்கும்போது அவள் கரங்கள் நடுங்கியது.அந்த லெட்டரில்……….
புலரும்