நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
அந்த சமையல்கட்டில் 4 பெண்மணிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். ஒருவர் ரசத்திற்கு புளி கரைத்து கொண்டிருந்தார். ஒருவர் சாதம் வடித்துக் கொண்டிருந்தார் லட்சுமி.
பச்சைப்பருப்பு பாயாசம் கிண்டிக் கொண்டு இருந்தார். ஒரு கரண்டி பாயாசம் எடுத்து “முல்லை இந்த பாயசத்தை சாப்பிட்டு எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து சொல்லு.”
“நீ செஞ்சதை நான் சரி பார்க்கிறதா? உன்னோட கைமணம் இந்த ஊருக்கே தெரியும்.” என்று கூறியபடி அவர் கொடுத்த பாயசத்தை வாங்கி அருந்தி பார்த்தார்.
“ரொம்ப டேஸ்டா இருக்கு. அப்படி என்னதான் மேஜிக் கையில் வச்சிருக்க? எது செஞ்சாலும் அவ்வளவு டேஸ்டா வருது என்று லட்சுமியை பாராட்டிக் கொண்டிருந்தார் முல்லை.
“சரி சரி பேசிக்கிட்டே இருக்காம அந்த நீ முந்திரிப்பருப்பை எடு. எனக்கு வேற வேலை இருக்கு. என்று லட்சுமி கேட்க
அந்த முல்லை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் .ஒரு அடுப்பில் இருந்த பாயாசத்தை இறக்கி வைத்துவிட்டு முந்திரியை வறுத்துக் கொண்டு இன்னொரு அடுப்பில்கொதிக்கும் எண்ணெயில் பூரிப்போட்டு எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வெண்மதி வந்தாள்.
“அம்மா” என்று அழைத்தாள் வெண்மதி.
“எனக்கு இங்க நிறைய வேலை இருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணு.
முல்லை வடைக்கு வெங்காயம் கட் பண்ணி சீக்கிரம் வடை மாவு ரெடி பண்ணு. பூரி முடிஞ்சதுக்கு அப்புறம் வடையை போடலாம். அப்புறம் அப்பளம். சீக்கிரம் வேகமா கட் பண்ணு. சாப்பாட்டு நேரம் ஆயிடுச்சு.” என்று பரபரத்துக் கொண்டிருந்தார்.
அறிந்து கொண்டிருந்த வெங்காயத்தின் ஒரு சின்ன துண்டு வெங்காயம் வெண்மதியின் கண்களில் பட்டது. அவள் கண்கள் எரிந்தது. கண்ணீர் வழிந்தது.
“என்ன வெண்மதி கண்ணு எரியுதா? இங்க நிக்காத. ஹாலில் போய் உட்காரு. உங்கம்மா வேலையை முடிச்சுட்டு வருவாங்க.” என்று முல்லை கூற
அவள் அந்த சமையலறையிலிருந்து வெளியே வந்து முகத்தை கழுவுவதற்காக தோட்டத்திற்கு சென்றாள்.
முன்தினம் பெய்த மழையினால் தோட்டத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தது. கண்களைத் திறக்க முடியாமல் கசக்கிக்கொண்டே சென்ற இவள். அந்த தண்ணீரில் கால்வைக்க தடுமாறி சேற்றில் விழுந்தாள். இதனை கவனித்த ஒரு இளம்பெண் ஓடிவந்து அவளுக்கு கை கொடுத்து அவளை தூக்கினாள் .
“ என்னாச்சு வெண்மதி? பார்த்து வரக்கூடாதா? இப்படி சேத்துல விழுந்துட்டியே.”
“இல்லக்கா கண்ணில வெங்காயம் பட்டுடுச்சு. அதனால கண்ணு எரியுது.”
“ஓ அப்படியா? சரி ஒரு நிமிஷம் இரு.” என்று கூறி சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.
வெண்மதி அந்த தண்ணீரை வாங்கி கண்களை கழுவினாள்.
“இப்போ எப்படி இருக்கு வெண்மதி?”
“இப்போ பரவா இல்ல அக்கா. தேங்க்ஸ்.”
“உன்னோட டிரஸ்ஸ பாரு. சேர் ஆயிடுச்சு. வாஷ் பண்ணறியா?”
“சரி அக்கா.” என்று கூறியவள் அங்கு இருந்த தண்ணீரை எடுத்து உடையில் அப்பியிருந்த சேற்றினை கழுவினாள்.
“லைட் கலர் டிரஸ்ல சேரு நல்லா தெரியுது. பேசாம டிரஸ் மாத்திட்டு வந்திடு.”
“ஆமாம் அக்கா. என்னால கிளீன் பண்ண முடியல. சரி அம்மா கிட்ட சொல்லிடுங்க. நான் வீட்டுக்கு போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன்.” என்று கூறிவிட்டு வெளியே சென்று டிவிஎஸ் 50 எடுத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினாள்.
வீடு வந்த வெண்மதி அவள் அணிந்திருந்த பேபி பிங்க் சல்வாரை மாற்றி மஞ்சள் நிற புடவை ஒன்றை அணிந்தாள்.
‘இன்னிக்கு எல்லோ கலர் ரோஸ் தோட்டத்திலே பூத்திருந்தது. சரி நம்ம தோட்டத்துக்கு போய் அந்த பூவை பறித்து இந்த எல்லோ கலர் சாரிக்கு மேட்சிங்கா வச்சுட்டு போகலாம்’ என்று நினைத்தவள் தோட்டத்துக்கு சென்றாள்.
அந்த பெரிய தோட்டத்தில் ஒரு மறைவான இடத்தில் கதிர்வேலன் தெரிந்தான். அவனை பார்த்ததும் ‘இந்த நேரத்தில் இந்த அண்ணன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்’ என்று நினைத்தாள்.
முதலில் திரும்பி நடக்க நினைத்த வெண்மதிக்கு ஏதோ உறுத்தியது.
அவன் யாருக்கோ ஏதோ சைகை காட்டி கொண்டு இருந்தான். யாருக்கு என்று அவன் பார்வை சென்று இடத்தை பார்த்தாள் வெண்மதி. அங்கு ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
‘இவனை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே. எங்க?’ என்று யோசித்தாள் ஆனால் ஞாபகம் வரவில்லை.
கதிர்வேலன் அவனை ‘போ போ’ என்று சைகை காட்டிக் கொண்டு இருக்க. அவனோ கதிர் வேலனை நோக்கி வந்து கொண்டிருந்தான். அருகில் வந்த அவனிடம் கதிர்வேலன் கோபமாக பேசுவது தெரிந்தது. ‘இவன் ஏன் இவ்வளவு கோபப்படறான்?’ என்று யோசித்தபடி அவர்களை நன்கு கவனித்தாள்.
அவர்கள் பேசுவது இவளுக்கு மெதுவாகவே கேட்டது. எனவே சத்தம் போடாமல் அவர்கள் பேசுவது தெளிவாக காதில் விழும் தூரத்திற்கு சென்றாள். அங்கு இருந்த மல்லிகை பந்தலில் தன்னை மறைத்துக் கொண்டு அவர்கள் பேசுவதை கவனித்தாள்.
“இங்க எதுக்கு வந்த? நான்தான் உன்னை வீட்டுப்பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல? என்று கோபமாக கேட்டான் கதிர்வேலன்.
அதற்கு அவன் “வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் வெளியே போறதை பார்த்துட்டு தான் வர்றேன் சார். பத்து நிமிஷம் தான். நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க.”
“சரி எதுக்கு வந்த? சீக்கிரம் சொல்லிட்டு இடத்தை காலி பண்ணு.” என்று அவனை துரத்துவதில் குறியாக இருந்தான் கதிர்வேலன்.
“வேற எதுக்கு சார் நான் வர போறே?” என்றபடி தலையை சொரிந்தான். “நேத்து தானே பணம் வாங்கிட்டு போன. அதுக்குள்ள திருப்பி வந்துட்ட.” “நான் செஞ்ச வேலை அப்படி சார். ரிஸ்க் எடுத்தது நான். நீங்க இல்ல.” “அதுக்கு இப்போ என்ன பண்ண சொல்ற? கொஞ்சம் காசை தூக்கி போட்டீங்கன்னா எடுத்துக்கிட்டு ஓடிப் போய் விடுவேன்.”
“ஏற்கனவே நிறைய தண்டம் அழுதாச்சு. இன்னுமா?” என்று எரிச்சல் பட்டான் .
“மொத்தமா குடுத்து செட்டில் பண்ணிடுங்க. நான் இந்த பக்கமே வரமாட்டேன். நீங்களும் நிம்மதியா இருக்கலாம்.”
“நான் பேசின பணத்தை சீக்கிரமா கொடுத்துடறேன் சரியா? இப்போ இடத்தை காலி பண்ணு.”
“அது எப்படி சார்? இவ்வளவு தூரம் வந்துட்டு கொஞ்சமாவது கொடுங்க. போறேன்.” என்று அவன் விடாப்பிடியாக கேட்க
“சரி. இங்கேயே இரு.” என்று கூறிவிட்டு உள்ளே சென்று பணம் எடுத்து வந்து அவன் கையில் திணித்தான் கதிர்வேலன்.
“ரொம்ப நன்றி சார். திரும்பவும் ஏதாவது கால் பண்ணனும்னா, என்னையே கூப்பிடுங்க. அந்த ஹாஸ்பிட்டல் ரிசப்ஷனிஸ்ட் என்னோட ஆள்தான். அவளை ஈஸியா ஏமாத்தி கால் பண்ணலாம்.”
“எனக்கு இப்போ அப்படி எந்த தேவையும் இல்லை. முதல்ல நீ எடத்த காலி பண்ணு.” என்று கதிர்வேலன் அவனை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக தள்ளினான்.
அப்போதுதான் வெண்மதிக்கு ஞாபகம் வந்தது. அவனை அவள் அந்த ஹாஸ்பிட்டலில் பார்த்திருக்கிறாள். ‘அப்போ கால் பண்ணது இவன் தானா? கால் பண்ண சொன்னது கதிர்வேலன் தானா? அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
கதிர்வேலன் சுற்றும் முற்றும் யாராவது அவர்களை பார்த்தார்களா என்று பார்த்தான். யாரும் அவன் கண்களுக்கு தென்படவில்லை. எனவே அங்கிருந்து வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
இவள் மல்லிகைப் பந்தலின் மற்றொரு பக்கத்தில் அவனுக்கு தெரியாமல் மறைந்து கொள்ள அவன் வீட்டுக்குள் சென்றான்.
இவள் மல்லிகை பந்தலில் இருந்து இன்னொரு வழியாக வெளியே வந்து டிவிஎஸ் ஃபிப்டி வண்டியை ஆன் செய்யாமல் சிறிது தூரம் தள்ளியபடி வந்து அதற்கு பிறகு வண்டியை ஆன் செய்து கமலா வீட்டிற்கு வந்தாள்.
அவளுக்கு நினைக்க நினைக்க அதிர்ச்சியாக இருந்தது. ‘அப்போ கதிர்வேலன் தான் அவளுக்கு வேலை கிடைக்காம பண்ணியிருக்கான். ஆனா ஏன் இவன் இப்படி செஞ்சான்? இதற்கான காரணம் நமக்கு தெரியாத வரைக்கும் வேலை கிடைச்ச விஷயத்தை யார்கிட்டயும் சொல்லக்கூடாது. சொன்னால் ஏதாவது பிளான் பண்ணி வேலை கிடைக்காம பண்ணிடுவான். எனக்கு இன்னும் ஒரு மாசம் ட்ரெய்னிங் இருக்கு. இந்த ட்ரெய்னிங் முடிஞ்சதுக்கு அப்புறம் வேலை பர்மனென்ட் ஆயிடும். அதுக்கப்புறம் வேலையிலிருந்து அவ்ளோ ஈஸியா யாரும் எடுக்க முடியாது. அதுவரைக்கும் யாருக்கும் தெரியக்கூடாது.’ என்று நினைத்துக்கொண்டாள்.
சீமந்த விழா கோலாகலமாக நடந்தது. கமலாவின் மகள் சுந்தரி நிறைமாத கர்ப்பிணியாக மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டுக்கொண்டு நாற்காலியில் அமர்ந்திருக்க பெண்கள் அவளுக்கு நலங்கு வைத்து கைகளில் வளையல் அணிவித்தனர். பிறகு அனைவருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது. எல்லோரும் வயிறார சாப்பிட்டு விட்டு சுந்தரியை வாழ்த்திவிட்டு சென்றுகொண்டிருந்தனர். ஓரளவுக்கு கூட்டம் குறைந்ததும் லட்சுமி மகளிடம் வந்தார்.
“என்னம்மா என்ன விஷயம்? ஏதோ சொல்ல வந்தியே. இப்ப சொல்லு.” என்று சாவகாசமாக கேட்டார்.
“அது….” என்று இழுத்தாள் வெண்மதி.
“அப்போது லட்சுமி வெண்மதி வாங்க கடைசி பந்தி இது.” என்று கூப்பிட இவர்களும் சாப்பிட சென்றனர்.
“அக்கா நீங்களும் வாங்க.” என்று லலிதாவை அழைத்தார் லட்சுமி.
லலிதா “நான் அப்பவே சாப்பிட்டுவிட்டேன். வெண்மதி நீ சீக்கிரமா சாப்பிட்டு முடிச்சிட்டு வா. என்னை வண்டியில வீட்ல விடு.” என்று வழக்கம்போல ஆணையிட்டார்.
வெண்மதிக்கு அவரைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. ‘கதிர்வேலனும் இவரும் தான் எனக்கு வேலை கிடைக்காம பண்ணியிருக்கணும்.’ என்று நினைத்துக்கொண்டாள் வெண்மதி.