‘இருக்கட்டும் கூடிய சீக்கிரம் எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுகிறேன். என்று மனதில் உறுதி கொண்டாள் வெண்மதி.
வெண்மதியும் லட்சுமியும் சாப்பிட்டு முடித்ததும் லலிதா அங்கு வந்து “என்ன கிளம்பலாமா வெண்மதி? சீக்கிரம் வந்து வண்டியை எடு.” என்றார் பெரியம்மா .
‘முடியாதுன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொன்னா என்ன’ என்று ஒரு கணம் நினைத்தாள் வெண்மதி .
மறுகணமே ‘இப்போ நாம அமைதியா இருக்கணும். நிரந்தரமா வேலை கிடைக்கட்டும். அதுக்கப்புறம் இவங்களை பாத்துக்கலாம். என்று நினைத்தவாறு வண்டியை எடுத்தாள் வெண்மதி. தாயை திரும்பி பார்த்தாள்.
“பெரியம்மா வேலை செஞ்சு அம்மா டயர்டா இருக்காங்க. நான் அவங்களை வண்டியில கூட்டிகிட்டு போறேன். நீங்க கொஞ்சம் வெயிட் பண்றீங்களா?”
“என்னடி திமிரா? ஒரு வேலையும் செய்யாம சும்மா உக்காந்துட்டு இருந்தேன்னு சொல்றியா?”
‘நான் சொன்னாலும் சொல்லவில்லைனாலும் அதுதானே உண்மை’ என்று நினைத்தாலும் வெளியில் சொல்லவில்லை வெண்மதி.
பெரியம்மா முகத்தில் அப்பியிருந்த பவுடர் கூட கலையாமல் ஃப்ரெஷ் ஆக இருந்தார். பதிலேதும் சொல்லாமல் வெண்மதி பார்த்துக்கொண்டே இருக்க…
“என்னடி முறைக்கிற?” என்று லலிதா கோபமாக கேட்க
லட்சுமி “மதி பெரியம்மாவை கூட்டிட்டு போ. நீங்க போங்க அக்கா. நான் நடந்து வர்றேன்.” என்று கூற வெண்மதி மனமில்லாமல் வண்டியை எடுத்து பெரியம்மாவை அழைத்துக்கொண்டு வீடு வந்தாள்.
பெரியம்மாவை வீட்டில் விட்டுவிட்டு திரும்பவும் வண்டியை எடுத்துக்கொண்டு வியர்த்து வழிய நடந்து வந்து கொண்டிருக்கும் தாயைப் பார்த்து
“அம்மா வாங்க. வந்து வண்டியில் உட்காருங்க.” என்று வெண்மதி கூற லட்சுமியும் ஏறி உட்கார்ந்து கொண்டார்.
“ஏன்மா நான் தான் உங்களை கூட்டிட்டு வர்றேன்னு பெரியம்மா கிட்ட சொல்லிகிட்டு இருந்தேன் இல்ல? அதுக்குள்ள நீங்க ஏன் நடுவுல புகுந்து நடந்து வர்றன்னு சொல்றீங்க?”
“பெரியம்மாவுக்கு மூட்டுவலி இருக்கு. அவங்களால நடக்க முடியாது. அதனால தான் சொன்னேன்.”
“நீங்க ரொம்ப நல்லா தெம்பா இருக்கீங்களா? நீங்களும் தான் வேலை செஞ்சு டயர்டா இருக்கீங்க. இன்னும் கேட்ட நீங்க தான் டயர்டா இருக்கீங்க. அவங்க போட்ட மேக்கப் கூட கலையாம நல்லா பிரஷா இருக்காங்க.” என்று எரிச்சலுடன் வெண்மதி கூற
“அப்படியெல்லாம் பெரியம்மாவை பற்றி பின்னாடி பேசக்கூடாது.” “முன்னாடி மட்டும் என்னை பேச விடுவீங்க.”
“அதான் அவங்களுக்கு மூட்டுவலின்னு சொன்னேன் இல்ல மா?” ”மூட்டுவலிக்கு கொஞ்சதூரம் நடக்கறது தான் நல்லது.”
“சரி விடுமா. இது ஒரு பெரிய விஷயமே கிடையாது.”
“ஏன்தான் இப்படி எல்லாத்துக்கும் பொருத்து போறீங்களோ? உங்கள மாதிரி என்னால இருக்க முடியாது.” ‘கூடிய சீக்கிரம் எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டறேன்’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் வெண்மதி.
வீட்டிற்கு வந்து படுத்த லட்சுமி சோர்வினால் அடுத்த நிமிடம் உறங்கினார். அடுத்த நாள் காலை வழக்கம்போல சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்த தாயிடம்
“அம்மா பாண்டிச்சேரியில் ஒரு கோர்ஸ் படிக்கலாம். என நினைக்கிறேன். ஒரு மாசம் கோர்ஸ் படிச்சதுக்கு அப்புறம் ஒரு சர்டிபிகேட் கிடைக்கும். அந்த சர்டிபிகேட் கிடைச்சா எனக்கு வேலை கிடைக்கிறது ஈசியா இருக்கும். நான் படிக்கட்டுமா?”
“எவ்வளவு ஃபீஸ்” என்று லட்சுமி கேட்டார்.
அப்போது தண்ணீர் அருந்த வந்த லலிதா
“இப்படியே ஊர்ல இருக்கிற எல்லா படிப்பையும் படிச்சு காசை வேஸ்ட் பண்ணிக்கிட்டு இரு. ஏற்கனவே படிச்சியே அதுக்கு இன்னும் வேலை கிடைச்ச பாடு இல்ல. இப்ப இது வேறயா? வெட்டி செலவுதான்.” என்று கூறி அவளை மட்டம் தட்டினார் லலிதா.
லலிதாவை புரிந்துகொண்டு வெண்மதி
“பெரியம்மா இதுக்கு செலவு கிடையாது. ஃப்ரீ கோர்ஸ்.”
“சுத்தம் பணம் கட்டி படிச்சதுக்கே வேலை கிடைக்கல. சும்மா படிக்கப் போற இந்த கோர்ஸ்க்கா வேலை கிடைக்கப் போகுது? டைம் வேஸ்ட்.” என்று லலிதா கூறிக்கொண்டிருக்கும் போதே
“அம்மா” என்று கார்த்திகேயனின் குரல் கேட்டது.
“இவன் ஒருத்தன் வாயை திறக்கவே விடமாட்டான்.” என்று சலித்தபடியே “என்னடா” என்று கேட்டபடி அங்கிருந்து சென்றார் லலிதா.
லட்சுமி வெண்மதியிடம் “நீ படி மா. பணம் வேணும்னாலும் கேளு. ஆசைப்பட்டதை நீ படி.” என்று அவள் தோளில் தட்டிக் கொடுத்தார். வேலையில் சேர வேண்டிய நாள் வந்தது. அன்று தாயின் காலை தொட்டு வணங்கிவிட்டு
“அம்மா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க.” என்று கேட்டாள் வெண்மதி. “என்னோட ஆசீர்வாதம் உனக்கு எப்பவுமே இருக்கும். நல்லா படி.” என்று ஆசிர்வதித்தார்.
கவிதாவிடம் மட்டும் சொல்லலாமா என்று முதலில் நினைத்தாள். பிறகு வேண்டாம் என்று முடிவு செய்தாள். அம்மா கிட்ட சொல்ல முடியவில்லையே என்று மனதில் நினைத்துக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்தாள். சரியான நேரம் வரட்டும் எல்லார்கிட்டயும் சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டே பேருந்தில் ஏறி கம்பெனிக்கு வந்து சேர்ந்தாள்.
மேனேஜரை பார்த்தாள்.
அங்கு இவளைப் போல இன்னும் ஒரு இளம் பெண் வேலைக்கு சேர்ந்து இருந்தாள்.
“வெல்கம் டு அவர் கம்பெனி. நீங்க செய்ய வேண்டிய வேலையை இவர் சொல்வார்.” என்று ஒருவரை கை காட்டினார்.
அங்கே 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி இருந்தார். மொரு மொரு காட்டன் புடவையில் மாநிறத்தில் குதிரைவால் போட்டுக்கொண்டு பார்ப்பதற்கு அழகாக இருந்தார் அவர்.
ஏனோ அவரைப் பார்த்ததும் வெண்மதிக்கு பிடித்துவிட்டது.
“இவங்க என்னோட பெட்டர் ஹாஃப். நானும் இவங்களும் சேர்ந்துதான் இந்த கம்பெனியை நடத்திட்டு இருக்கோம். உங்களுக்கு என்ன வேணும்னாலும் இவங்க கிட்ட கேளுங்க. இவங்க பெயர் தாமரை.” என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.
“ஹாய் வெல்கம் டு அவர் கம்பெனி.” என்று தாமரை கூறினார்
“வாங்க உங்க சீட்டை காமிக்கிறேன். என்று இருவரையும் அழைத்து சென்று இருக்கையை காட்டினார். வேலையை சொல்லி முடித்துவிட்டு இது ஒரு டெவலப்பிங் கம்பெனி. உங்கள மாதிரி இளம் வயசு பசங்களுக்கு நாங்க இம்பார்ட்டன்ஸ் கொடுப்போம். நீங்கள் உங்களுடைய ஐடியாஸ் எங்க கூட ஷேர் பண்ணிக்கலாம். அது எங்களுக்கு ஓகேன்னு தோணுச்சுன்னா நாங்க அதை இம்பிளிமெண்ட் பண்ணுவோம். அப்படி நீங்க கொடுக்கிற ஐடியா மூலமா எங்களுக்கு லாபம் கெடச்சா உங்களுக்கு இன்கிரிமெண்ட் கிடைக்கும். ஆல் தி பெஸ்ட்.” என்று கூறி முடித்து விட்டு எழுந்து சென்றார்.
“ஹாய் மை நேம் இஸ் மேரி.” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள் இளம் பெண்
“ஐ அம் வெண்மதி.” என்று கூறியபடி கைகுலுக்கினாள்
“நீங்கள் எந்த ஊரு?”
“நான் விழுப்புரம்.”
“ஓ. ஓகே. நைஸ் டு மீட் யு.” என்று விட்டு தன் வேலையை இருவரும் ஆரம்பித்தனர். மதிய உணவின் போது இருவரும் ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.
“உங்க ஃபேமிலி பத்தி சொல்லுங்க.” என்று மேரி கேட்க
வெண்மதி “எங்க அம்மா அப்பாவுக்கு நான் ஒரு பொண்ணு மட்டும்தான். அப்பா ஒரு கம்பெனியில் வேலை செய்றாரு. அம்மா ஹவுஸ் வைஃப்.” “எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். எங்க அப்பா ப்ரொபசர். அம்மா ஹவுஸ் வைஃப்.” என்று இருவரும் தங்களது குடும்பத்தை பற்றி சொல்லிக்கொண்டனர்.
“எனக்கு ஒரு க்ளோஸ் ஃப்ரெண்ட் இருக்கா. அவ பேரு கவிதா. அவள் சென்னையில் வேலை செய்றா.”
“எனக்கும் நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க. ஆனால் இங்கே இல்லை. நாங்க சென்னையில இருந்தோம். அப்பாவுக்கு பாண்டிச்சேரி சொந்த ஊர் அதனால பாண்டிச்சேரிக்கு மாற்றல் வாங்கிட்டு வந்துட்டோம். இங்க எங்களுக்கு சொந்தமாக வீடு கொஞ்சம் சொத்து இருக்கு. அதை எல்லாம் பார்த்துக் கொள்வதற்காக இங்கே வந்துட்டோம்.”
“அப்படியா?” என்று கேட்டுக்கொண்டாள் வெண்மதி.
அன்றைய பொழுது இனிதாகவே கழிந்தது வெண்மதிக்கு. கவிதா பக்கத்தில் இல்லாத குறையை மேரி தீர்த்து வைத்தாள்.
மாலை 6 மணிக்கு வீடு திரும்பிய வெண்மதி
“அம்மா நான் பக்கத்துல கடைக்கு போயிட்டு ஒரு மணி நேரத்துல வர்றேன்.” என்று கூறிவிட்டு ஹாஸ்பிடலுக்கு சென்றாள். அங்கு அன்று கதிர்வேலனுடன் பேசியவனை தேடினாள்.
அங்கு அவன் பச்சை நிற சட்டையும் பச்சை நிற பேண்டும் அணிந்துகொண்டு ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது அங்கு “அந்த வார்டு பாய் சத்யாவை கூப்பிடுங்க.” என்று ஒரு நர்ஸ் கூற அவன் “இப்பதான் உட்கார்ந்த. அதுக்குள்ள கூப்பட்றீங்களா?” என்று சலித்துக் கொண்டே எழுந்து சென்றான்.
“இந்த பையன் கால்ல இருக்குற காயத்துக்கு ட்ரெஸ்ஸிங் பண்ணுங்க.” என்று அந்த மருத்துவர் கூற
அவன் ஒரு ட்ரேயில் கட்டு போடுவதற்கான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அங்கு சென்றான்.
வேலையை முடித்துவிட்டு வெளியே வந்தான்.
வெண்மதி அவன் முன் சென்று நின்றாள்.