“இனிமே அடிக்கடி நான் இங்க வருவேன்.” என்று அவன் கூற இருவரும் அவனை கேள்வியாக பார்த்தனர்.
“எதுக்குன்னு கேக்க மாட்டீங்களா?”
“சொல்லுங்க தம்பி.”
அவன் “உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற காலி இடத்தை அண்ணன் தம்பிகள் மூணு பேர் வாங்கி இருக்காங்க. அவங்களுக்கு ஒரு வீடு கட்டி தரணும்.”
“கட்டி தரணுமா?” என்று நினைத்தபடி அவனை யோசனையாக பார்த்தாள் வெண்மதி.
“ஓ அப்படியா?” என்று சாதாரணமாக கேட்டுக்கொண்ட லட்சுமி
“சரி உள்ள வாங்க தம்பி. உட்கார்ந்து பேசலாம்.” என்று அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
“உட்காருங்க” என்று சோபாவை காட்டினார் லட்சுமி.
“வேண்டாமா. என்னோட டிரஸ் ஈரமா இருக்கு. நான் உட்கார்ந்தா ஷோபாவும் ஈரம் ஆயிடும். தோட்டத்துல காத்து நல்லா வரும் போல இருக்கு. நான் அங்க கொஞ்ச நேரம் நடக்கிறேன்.” என்று கூறியவன் தோட்டத்தை நோக்கி நடந்தான்.
“சரி தம்பி. நான் உங்களுக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன். வெண்மதி நீ அவர்கிட்ட பேசிட்டு இரு.” என்று அவளை அனுப்பினார் லட்சுமி.
இருவரும் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தனர்.
தோட்டத்தில் நடந்து கொண்டே வசந்த் வெண்மதியிடம் இவர்கள் வீட்டு பக்கத்தில் இருந்த காலி மனையை காட்டி
“இந்த இடத்தில்தான் அந்த வீடு வரப்போகுது. கிரவுண்ட் ஃப்ளோர் அண்ணனுக்கு மேல இருக்கிற இரண்டு ஃப்ளோர் மத்த ரெண்டு தம்பிகளுக்கும். வீடு பெருசா இருக்கும்.” என்று அந்த கட்டப்போகும் வீட்டைப்பற்றி அவன் கூறிக் கொண்டே நடந்து கொண்டிருந்தான்.
அப்பொழுது லட்சுமி அங்கே காபி கொண்டு வந்தார். ஒரு தட்டில் அவர் செய்த ஜாங்கிரி, மைசூர் பாக்கு கொஞ்சம் மிக்சர் இருந்தது.
“இந்தாங்க தம்பி.” என்று இரண்டையும் நீட்டினார்.
தோட்டத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான் வசந்த்.
காபியை வாங்கி ஒரு மிடறு விழுங்கினான். நனைந்திருந்த அவனுக்கும் அந்த காபி அமிர்தமாக இருந்தது.
ஜாங்கிரியை எடுத்து சுவைத்தவன்
“ ஜாங்கிரி ரொம்ப நல்லா ஃப்ரெஷ்ஷா இருக்கு. எந்த கடையில வாங்கினீங்க?” என்று கேட்டான்.
“கடையில் இல்லை. எங்க அம்மா வீட்டில் செஞ்சது.” என்று பெருமையாக வெண்மதி கூற அவன் யோசனையாக
“அப்படியா? ஆனா இதே டேஸ்ட் நான் ஏதோ ஸ்வீட் கடையில சாப்பிட்ட ஞாபகம் இருக்கு. பேர்கூட” என்று யோசித்தான்.
“பிரியா ஸ்வீட்ஸ் ஸ்டால்.” என்று எடுத்துக் கொடுத்தாள் வெண்மதி.
“ கரெக்ட். அது எப்படி இரண்டுமே ஒரே மாதிரி இருக்கு?” என்று யோசனையாக கேட்டான்.
வெண்மதி “ஏன்னா இரண்டையும் செஞ்சது ஒரே ஒருத்தங்க தான்.” என்று கூறி புன்னகைத்தாள்.
அவள் கூறியதை யோசித்து புரிந்து கொண்டவன்
“ஓ நீங்க தான் பண்ணீங்களா?”
“ஆமாம். அம்மா ஸ்வீட் ஆர்டர் எடுத்து அந்த கடைக்கு பண்ணி தராங்க.”
“ஓ அப்படியா?”
“உங்க ஸ்வீட் எங்க வீட்ல பெரிய ஹிட் . எல்லாருக்கும் உங்க ஸ்வீட் ரொம்ப பிடிக்கும். எல்லா வெள்ளிக்கிழமையும் நான் அந்தக் கடையில தான் ஸ்வீட் வாங்கிட்டு போவேன்.”
“அப்படியா ரொம்ப சந்தோஷம் பா.” என்றார் லட்சுமி புன்னகையுடன்.
“சரி மா. நான் வீட்டுக்கு கிளம்புறேன். நாம இனிமே அடிக்கடி பார்க்கலாம்.” என்று கூறிவிட்டு வெளியில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். சட்டை ஓரளவுக்கு காய்ந்திருந்தது.
வெண்மதி “நானே உங்களை டிராப் பண்றேன்.” என்று கூற
“சரி வெண்மதி” என்று இவன் கூற இருவரும் வண்டியில் ஏறினர். வெண்மதி ஓட்டிச்சென்ற அவனுடைய கார் நிற்கும் இடத்தில் விட்டாள்.
அவன் இறங்கி “ஓகே வெண்மதி பார்க்கலாம்.” என்று கூறிவிட்டு சென்றான்.
வீடு வந்து சேர்ந்து அவளுக்கு இன்னும் குழப்பமாகவே இருந்தது. தாயிடம்
“இவர் எதுக்கு அந்த வீட்டை கட்டிக் கொடுக்கப் போறார்?” என்று ஆர்வமாக கேட்டாள்.
“உனக்கு தெரியாது இல்ல. இந்த தம்பி சிவில் இன்ஜினியர்.”
“ஓ அப்படியா?”
“ ஆமாம். வசந்த் கன்ஸ்டிரக்ஷன்ஸ் அப்படின்னு ஒரு கம்பெனி நடத்தி வருகிறார். நம்ம ஊர்ல நிறைய பேருக்கு வீடு ,அபார்ட்மெண்ட் கட்டி கொடுத்திருக்கிறார். நல்ல வருமானம் வருமாம். உன்னை பெண் பார்க்க வரும்போதே நான் உன்கிட்ட சொல்ல வந்தேன். நீ தான் காது கொடுத்து கேட்கல. அதனால விட்டுட்டேன்.”
அன்று அவள் இருந்த மனநிலையில் இதையெல்லாம் கேட்கும் ஆர்வம் அவளுக்கு அப்போது இல்லை.
அடுத்த நாள், கட்டிட பொறியாளர்கள் அணியும் மஞ்சள் நிற தொப்பியை அணிந்து கொண்டு வசந்த் ஒரு பெரிய சார்ட்டை வைத்துக்கொண்டு “இந்த மூலையில ஒரு ரூம், அப்புறம் இந்த இடத்தில் இன்னொரு ரூம், இங்கே பூஜை அறை, இந்த இடத்தில இன்னும் மூன்று ரூம் , இங்கு பெரிய ஹால் அப்புறம் முன்னாடி நாலு கார் விடற மாதிரி கார் பார்க்கிங், அப்புறம் எல்லா ரூம்லயும் அட்டாச்டு பாத்ரூம்.” என்று அந்த சார்ட்டை காட்டி மற்றவர்களுக்கு விவரித்துக் கொண்டிருந்தான். மற்றவர்கள் அதனை கேட்டுக்கொண்டிருந்தனர்.
முடித்தவன் அங்கு மேற்பார்வை செய்துகொண்டிருந்தான். அப்பொழுது “போய்ட்டு வர்றேன் அம்மா” என்று வெண்மதியின் குரல் கேட்டு திரும்பினான்.
“ஓ இவ இந்த நேரத்தில்தான் தினமும் ஆபீஸ் போவாளா?” என்று நேரத்தை குறித்துக்கொண்டான். அன்று இளம்பச்சை நிற சல்வாரில கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகாக இருந்தாள் அவள்.
அன்று வழக்கம் போல அலுவலகத்திற்கு வந்த வெண்மதி தன் இருக்கையில் அமர்ந்து வேலையை தொடங்கினாள். சிறிது நேரத்தில் மேரி அங்கு வந்தாள். “ஹாய் மேரி” என்று இவள் சொல்ல அவளும் பதிலுக்கு ஹாய் சொல்லிவிட்டு அவள் இருக்கையில் உட்கார்ந்தாள்.
“நம்ம ரெண்டு பேரையும் மதியானம் ரெண்டு மணிக்கு மேனேஜர் அவரோட ரூம்ல வந்து பார்க்க சொல்லி இருக்கிறார்.” என்று மேரி கூற வெண்மதி
“அப்படியா எதுக்கு?” என்று அவள் அமர்ந்திருந்த சுழல் நாற்காலியை மேரி பக்கம் திருப்பி அவளைப் பார்த்து கேட்டாள்.
“ஆமாம் வெண்மதி. எனக்கும் என்ன விஷயம்னு தெரியாது.”
“ஏதாவது புது ப்ராஜக்ட் விஷயமா இருக்கும். போய் பார்க்கலாம்.” என்று கூறிவிட்டு மீண்டும் வேலையை தொடர்ந்தனர்.
மதியம் 2 மணி அளவில் இருவரும் தங்களுடைய லேப்டாப்பை எடுத்துக்கொண்டு மேலாளர் அறைக்கு சென்றனர். அங்கு மேலாளரும் அவரது மனைவியும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.
இவர்களைப் பார்த்ததும்
“வாங்க மா உட்காருங்க.” என்று எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டினர். இருவரும் அதில் அமர்ந்தனர்.
“சொல்லுங்க சார். “என்று வெண்மதி கேட்க மேலாளர் சந்திரன் தொடர்ந்தார்.
“நம்ம கம்பெனிக்கு ஒரு புது ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு. இந்த புராஜெக்டை நாம சக்சஸ் ஃபுல்லா பண்ணா நமக்கு இன்னும் நிறைய ப்ராஜெக்ட் அதே கம்பெனியில் இருந்து கிடைக்கும். அப்படி நமக்கு கிடைச்சா நம்ம கம்பெனிக்கு நல்ல லாபம் கிடைக்கும். நாம அடுத்த லெவல் போகலாம்.”
“ஓ குட் நியூஸ் சார். ரொம்ப சந்தோஷம்” என்று வெண்மதி கூற
மேரி “கிரேட் நியூஸ் சார்.” என்று உற்சாகமானாள்.
“இது ஒரு முக்கியமான ப்ராஜக்ட் . இந்த ப்ராஜெக்டை நான் உங்க ரெண்டு பேரையும் நம்பி கொடுக்கிறேன். நீங்க என்னோட நம்பிக்கையை காப்பாத்தணும்.”
“கண்டிப்பா நாங்க உங்க நம்பிக்கையை காப்பாற்றுவோம் சார்” என்று இருவரும் சேர்ந்து கூறினர்.
“சரி ப்ராஜெக்ட் டீடைல்ஸ் எல்லாமே என்னோட வைஃப் சொல்வாங்க. அவங்க கிட்ட கேட்டுட்டு நீங்க வொர்க் ஸ்டார்ட் பண்ணலாம்.”
“ஓகே சார்” என்று இருவரும் கூறிவிட்டு அவரிடம் அனைத்து விபரங்களையும் கேட்டனர்.
“ரொம்ப கேர்ஃபுல்லா இந்த ப்ராஜெக்டை பண்ணனும். இந்த பிராஜெக்ட் பண்றதுக்கு நாலு மாசம் ஆகும்.”
“ஓகே மேடம். நாங்க ரெண்டு பேரும் ரொம்ப கேர்ஃபுல்லா இந்த ப்ராஜெக்ட் பண்ணுவோம். எங்க மேல நீங்க வெச்சிருக்கிற நம்பிக்கையை நாங்க காப்பாற்றுவோம்.” என்று கூறிவிட்டு மேரி, வெண்மதி இருவரும் இருக்கைக்கு வந்தனர்.
இருவரும் சேர்ந்து அந்த வேலையில் இறங்கினர்.
அன்று மாலை ஆறு மணி அளவில் வீடு திரும்பினாள் வெண்மதி. அந்த நேரத்தில் வசந்த் அவளுக்காகவே அங்கு காத்துக் கொண்டிருந்தான். சிறிது சோர்ந்து இருந்தாலும் அவளது அழகு அப்படியே இருந்தது. அந்த நேரத்தையும் குறித்துக்கொண்டான். அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் அவள் அலுவலகத்துக்கு செல்லும் நேரத்திலும் வீட்டுக்கு திரும்பும் நேரத்திலும் வந்து வெளியில் நிற்பான்.
ஆனால் வெண்மதி அவனை கவனித்ததே கிடையாது. அவனை மட்டும் அல்ல வேறு யாரையும் அவள் கவனித்தது கிடையாது. சாலையில் இறங்கி நேராக பார்த்து நடந்து சென்று விடுவாள். அதே சாலையில் இவளை பார்த்துக்கொண்டு ஒருவன் தினமும் வழிந்து கொண்டு இருந்தான். அவனை அவள் ஒருநாளும் பார்த்ததே கிடையாது. இவற்றை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்தான் வசந்த்.