“மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது
கரைபொருது இரங்கும் முந்நீர் போல,
கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது”.
(மாங்குடி மருதனார் – மதுரைக்காஞ்சி)
மும்மாரி குறைவின்றி கொட்டினாலும், சமுத்திரத்தின் பேரலைகளை செங்கதிரோன் மொத்தமாக குடித்து தீர்த்தாலும், முக்கூடல் நதியலைகள் கடலில் சேர்வதால் கடலலைக்கு தாகம் தீராது என்பது போல மருத மரக்காடுகளின் நடுவே அமைந்த முத்து நகரம் மதுரை.
மதுரையை சுற்றியெழுந்த கோட்டை மதில்களை எட்டிப்பிடிக்க துள்ளியெழும் வைகையின் வேகத்தை தடவித் தழுவி கட்டியனைக்கும் கோட்டை சுவற்றின் பெரும் கற்களுக்கு தெரியும் வைகை மட்டுமே மதுரையின் மீது “கைவை”க்க முடியுமென்று. அத்துணை பாதுகாப்பை, நன்மாறனின் பாட்டனார் “அவனி சூளாமணி” செய்திருந்தான்.
கொற்கை துவங்கி குதிரைமலை வரையும், விராலிக் காடு தொட்டு நெல்லையம்பளபதி வரையான தேசம் வளம் கண்டு கொழித்து செழித்து இருந்தது. காரணம் நன்மாறன். தன் இளம் வயதில் அரியணை ஏறியவன். சோழத்திடம் பகையில்லை. காரணம் இரு இளவல்களும் இவனது தோழர்கள். சேரனிடம் பிணக்குண்டு, ஆனால் பகையில்லை. அமைதியான தேசம் ஆரவார குரல்களும், ரத்தமும் இன்றி மக்கள் நிம்மதியுடன் நித்திரை கொள்ள மாமன்னனாய் இருக்கும் நன்மாறன் காட்டும் அன்பே பிரதானம். நாளங்காடியும், அள்ளங்காடியும் அள்ள அள்ள குறையாத பொருட்களை குவித்து விற்பதே அதற்கு சாட்சி.
நன்மாறனின் சிறப்பான ஆட்சியில் குறையின்றி பயணித்த பாண்டிய தேசத்தை, சமீபகாலமாக சதிகளும், எல்லையோரங்களில் நடக்கும் துஷ்டத்தனமான செயல்களும் சீர்குலைத்து வருகின்றது. நன்மாறனின் சகோதரி வேல்விழியை சுற்றி பின்னப்படும் வலைகள் அனுதினமும் அதிகரிக்கின்றது. சகோதரியை “தன் பிள்ளையாக கருதி பாதுகாக்கும் பொறுப்புள்ள தகப்பனாக” இருக்கும் நன்மாறனை போர்களத்திலோ அல்லது நேரில் நின்றோ எதிர்த்து வீழ்த்த முடியாது என்ற எதிரிகள் இப்போது பின்னியிருக்கும் புது சதி தான் வேல்விழி. வேல்விழியை கொண்டு நன்மாறனை கட்டுக்குள் கொண்டுவர சேரன் போட்டிருக்கும் திட்டம் குறித்து ஒருவாறு அறிவான். ஆனால்……
ஆவூர் கோட்டையின் அரசியும், தன் ஆருயிர் நண்பனும், மைத்துனனாக போகின்றவனுமான நலங்கிள்ளியின் தாய் அனுப்பியிருந்த ஓலையில், “வேல்விழிக்கு ஆபத்து… சோழர்கள் அரச குடும்பம் வேல்விழியை அடைய திட்டமிட்டு உள்ளனர். கோட்டைக்குள் வேல்விழியை பத்திரப்படுத்தி காத்திடு”. என்னும் ஓலை நன்மாறனை நிமதியின்றி தவிக்கச் செய்தது. வேல்விழி மதுரை விட்டு உறையூருக்கு சென்று மூன்று திங்கள் கடந்து விட்டது. இரு முறை தான் நலமாக இருப்பதாக ஓலையனுப்பி இருந்தாள். ஆனால் கடந்த ஒரு திங்களாக வேல்விழியின் நிலையை அறிய இயலவில்லை.
நலங்கிள்ளியும் தலைமறைவு வாழ்வை வாழ்வதாக ஒற்றர்கள் மூலம் அறிந்திருந்தான் நன்மாறன். சிந்தனையின் சீற்றம் சற்றும் குறையாது, குதிரை மலையின் அடர் வனத்தின் இடையே இருந்த மாளிகைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவனை அந்த குரல் நிமிர்ந்து பார்த்து சுயநினைவிற்கு கொண்டு வந்தது.
“மதுரையின் தலைவன், பாண்டிய பேரரசருக்கு வணக்கம்”. என்றான் மேற்கு பகுதியின் பாண்டிய படை தலைவன் பதறியபடியே.
சொல் பரிதி இளம்வழுதி, என்ன செய்தி? ஏன் இவ்வளவு பதட்டம் என்றான் நன்மாறன்.
கோமகனே! ஆபத்து நெருங்கி நிற்கிறது.மேற்கு மலையின் உச்சியில் திடீரென்று தோன்றியிருக்கும் சில விசித்திரங்கள் பார்க்க பயங்கரமாக உள்ளன. இது நிச்சயமாக நமக்கு விடப்பட்ட எச்சரிக்கை என்றே தோன்றுகிறது என்றான். அவனின் படப்படப்பில் உதடுகள் கூட வார்த்தைகளை நிறைவு செய்த பின்பும் துடித்து கொண்டிருந்தது.
பரிதி… விளக்கமாக கூறு. எதைக் கண்டாய்? எது ஆபத்து? என்றான் மன்னன்.
அரசே தயைகூர்ந்து என்னோடு வாருங்கள். நான் கூறுவதை விட நீங்கள் காண்பதே சரியாக இருக்கும் என்றான் சேனாபதி. சற்று யோசித்த பாண்டிய நன்மாறன் அவனுடன் கிளம்பினான்.
“ஆறரையடி உயரத்தில் ஆஜானுபாகுவான உடலும், மருதமரத்தின் அடிப்பாகத்தை போன்ற அகன்று, உறுதிப்பட்ட கரங்களும் தோளின் தினவுகளும், தேக்கின் உரமேறிய தொடைகளும், கொண்டிருந்த நன்மாறனின் மார்பில் மேற்குமலை காடாய் முளைத்து சுருண்டிருந்த இரும்பை ஒத்த மயிற்கற்றைகளும் விளக்கின, இந்த மனிதனின் பேரழகை. சாந்தமான முகம் அடர்த்தி குறையாத அர்ஜுனனின் காண்டீபம் போன்ற மீசை, பரந்த நெற்றி காட்டும் குறுக்குக் கோடுகள்,…. இயம்பும் இவனின் யோசனைகளின் வீரியத்தை”.
குதிரை மலை அரண்மனை கடந்து, சற்று தள்ளியிருந்த குன்று ஒன்றின் மீது ஏறினான் பரிதி… மன்னனும் பின்னேயே சென்றான். குன்றின் மீது ஒரு குறிப்பிட இடத்தை இருவரும் அடைந்த போது நன்மாறனின் கண்களும் அகண்டு விரியத் தொடங்கியது ஆச்சரியத்தில். ஆம் உயர்ந்து நின்ற மேற்கு மலை தொடரின் சேரர்கள் ஆட்சிக்கு உட்பட்ட மிக உயர்ந்த மலை குன்று ஒன்றின் மீது அந்த பயங்கரங்கள்!!!… தங்கள் உலோக பற்களைக் காட்டியபடி திடீரென்று முளைத்து உட்கார்ந்து இருந்தன.
“கிரேக்க யவன கோபுர பொறிகள்”… பாண்டிய தேசத்தின் குதிரை மலை தொடங்கி அதை சுற்றியுள்ள கிராமங்களை குறிவைத்து அவை நிலை நிறுத்தப்பட்டு இருந்தன. முற்றிலும் புதிய வடிவில் நின்ற அவற்றை வீழ்த்த சேர தேசத்திற்குள் படையெடுத்து சென்று தாக்கினால் தான் முடியும். ஆனால் அந்த பொறிகளைக் கொண்டு முன்னேறும் படையை, எரிகணைகள் கொண்டும், வலுவான ஈட்டி, மற்றும் நீண்ட மெல்லிய அம்புகள் கொண்டும் தாக்கி அழித்துவிட இயலும். ஒவ்வொரு பொறி கோபுரமும் குறைந்தது ஐயாயிரம் பேரை ஒரே நேரத்தில் தாக்கும் அளவிற்கு வலுவாக இருந்தது.
நன்மாறனின் மொத்த வலுவும் குன்றிப் போனது. இப்படியொரு பொறிகள் எங்கிருந்து சேரத்திற்குள் நுழைந்தது. எப்போது இதை கட்டமைத்தார்கள். இதன் நோக்கம் என்ன? என குழம்பி நின்றான் பாண்டிய மன்னன்.
பரிதி, எப்போது இவை உன் கண்களில் பட்டன. இவை உருவாக்கப் பட்டது முன்னமே தெரியாதா? என்றான் நன்மாறன்.
அரசே இவை இன்று தான் கண்களில் தட்டுப்படுகின்றது. இதற்கு முன் இவை இங்கு இல்லை. நேற்று மாலை கூட நான் இங்கு ரோந்து வந்தேன் என்றான் பரிதி.
அப்போது வேகமாக ஓடி வந்த வீரன் ஒருவன் அரசனை வாழ்த்தி தலை குனிந்து நின்றான். பின் தான் வந்த காரணத்தை கூறலானான்.
“வேந்தே தங்களை காண ஒற்றர் படையின் தலைவர் வந்துள்ளார். மேலும் சேரத்தில் இருந்து ஒரு தூதுவன் குதிரை மலை சேர தேசத்தின் எல்லை சாவடியில் காத்து நிற்கின்றான்” என்றான்.
ஒற்றர் தலைவனை உடனே வரச்சொல் வீரனே. எல்லைக்கு தகவல் அனுப்பி தூதனையும் மாளிகைக்கு அழைத்து வா. நான் கூறிய பின் சேரத்தின் தூதனை என்னை காண அனுப்பு என்றான்.
பின் பரிதியை நோக்கிய நன்மாறன், பரிதி இந்த பிசாசுகளின் தன்மையை அறிய வேண்டும். உடனே மதுரையில் இருந்து நம் பொறியியல் அறிஞர்களை வரச் சொல்லி தகவல் அனுப்பு. ஒற்றனிடம் இது குறித்து தகவல் உண்டா என்று பார்ப்போம் என்றான். அதற்குள் ஒற்றர் தலைவன் குன்றின் மீது ஏறி இருவரும் நிற்கும் இடத்தை அடைந்தான்.
பாண்டிய மாமன்னா, பாரின் அத்தனை வளமும் கொண்ட பாண்டிய தேசத்தின் குலமகனே நீவிர் வாழியவே!!!… என்று வாழ்த்தி நின்ற ஒற்றர் தலைவன் மளமளவென்று தான் சேகரித்த தகவல்களை ஒப்புவிக்கத் தொடங்கினான்.
தென் திசை எல்லையில் சேரப்படைகளை குவித்து வருகின்றான் சேர மன்னன். காந்தளூர்சாலையில் முகாமிட்டு கொண்டு தென்திசையில் இருந்து செங்கோட்டை எல்லை வரை லட்சம் வீரர்களை நிலை நிறுதியுள்ளான். அதே வேளையில் மகேந்திரகிரி மலையில் இருந்து கொங்கு எல்லை வரையான சேர பாண்டிய எல்லை நெடுகிலும் கடந்த ஒரு வாரத்தில் சுமார் ஐநூறு கிரேக்க யவன விசைப் பொறி கோபுரங்கள் திடீரென முளைத்து உள்ளன. ஒவ்வொன்றையும் எழுப்பி நிலை நிறுத்தியிருப்பது என்று சற்று தயங்கினான் ஒற்றர் தலைவன்…
அவனை ஏறெடுத்து பார்த்த பாண்டியன் “ம்ம்ம்… சொல்ல வந்ததை முழுமையாக சொல்லும் “என்றான்.
“அவற்றை வடிவமைத்து நிலைநிறுத்தி வருவது கிரேக்க படைகள்” என்ற ஒற்றர் தலைவனை ஆச்சரியத்துடன் நோக்கிய நன்மாறன்.. என்ன கிரேக்க படைகளா? என்றான்.
ஆம் மன்னா கடந்த பத்து நாட்களுக்கு முன் இருபது நாவாய்களை முசிறியின் துறைக்கும், ஏழு நாவாய்களை தொண்டிக்கும் அனுமதித்த சேர கடற்காப்பாளன் கொடுத்திருக்கும் செய்தியை இடைமறித்து அறிந்த பாண்டிய ஒற்றர்கள் கொடுத்த உறுதியான தகவல் யாதெனில்,
” சுமார் ஐம்பது ஆயிரம் வீரர்கள் தொண்டி முதல் முசிறி வரை சேரத்தின் பல்வேறு பகுதிகளில் சேர படைவீரர்களுடன் இணைந்து கிரேக்க பொறிகளையும், கோபுரங்களையும் நிர்மாணித்து வருகின்றனர். இந்த பொறிகள் முழுமையாக கிரேக்கத்தில் இருந்தே தயாராகி வந்தவை என்று அறிந்துள்ளோம்” என்றான்.
பொறிகள் பாண்டிய தேசத்தை குறிவைத்து நிர்மாணித்ததன் நோக்கம் என்றான் பாண்டியன்.
நம்மை சேரத்தின் வியூகங்களுக்கும், அவர்களின் வார்த்தைகளுக்கும் கட்டுப்பட வைப்பது தான் இதன் பின்னணி மன்னா. மேலும் இவற்றை உயர்ந்த மலைகளின் மீது நிர்மாணித்து உள்ளனர். எளிதில் அவற்றை நாம் அழிக்கவும் இயலாது. ஆகவே நாம் அவர்களுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்பது திட்டம். மேலும் இதே போன்ற பொறிகளும், ஆயுதங்களும் சோழத்தின் புகாருக்கு சென்று கொண்டிருக்கின்றன. புகாரில் அமைக்கவும், விராலிக் காடுகளுக்குள் இருந்து கொண்டு தாக்க ஏதுவாகவும் அவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு இரும்பிடையான் அனுமதி அளித்துள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றோம் என்று முடித்தான் ஒற்றன்.
சேரன் தாக்குவதிலும், மிரட்டுவதிலும் உள்ள கணக்கு வணிகம், பொருளாதாரம் சம்மந்தப்பட்ட விஷயம் என்று கொண்டாலும், சோழர்கள் ஏன் நம்மை தாக்க முயலவேண்டும். நம்முடைய நட்பில் உள்ள தேசம். நெடுங்கிள்ளிக்கும், நலங்கிள்ளிக்கும் என் மீது தாக்குதல் நடத்த வேண்டிய அவசியமில்லை. இருவருமே என்னுடைய தோழர்கள் ஆயிற்றே என்று கூறியவனை ஒரு குரல் தடுத்தது….
“தோழர்கள் துரோகியாகவும் கூடும் பாண்டிய பேரரசே”, ” துரோகம் சிலநேரம் மண்ணுக்காகவும், பொன்னுக்காகவும், பல நேரங்களில் பெண்ணுக்காகவும் தீர்மானிக்கப்படுகிறது” என்ற குரலை கேட்டு மூவரும் திருப்பிப் பார்க்க அங்கே சிரித்தபடியே நின்று கொண்டிருந்தான் ஆதிரை நம்பி.
யார் நீ? நீ எப்படி இங்கு வந்தாய்? என்று குரல் கொடுத்தபடி முன்னே வந்தான் பரிதி? அதற்குள் தன்னுடைய உடலை ஒருமுறை உலுக்கி கொண்ட ஆதிரை நம்பி…. “அங்கேயே நில் பரிதி. என்னை தாக்கவும் கேட்கவும் நீ அதிகாரம் இல்லாதவன். நான் சேரத்தின் சார்பில் வந்திருக்கும் தூதன் மறந்து விடாதே” என்றான்.
பரிதி சற்று தாமதிக்க அவனை கையமர்த்திய பாண்டியன், “தூதன் என்றால் துடுக்குதனம் செய்யலாம் என்பது சேரத்தில் பழக்கமா? அல்லது மன்னன் அனுமதிக்காமல் அவனது தனிக்காரியங்களில் ஆலோசனைகளில் தூதன் நுழையலாம் என்பது உங்கள் மரபா?” என்றான் நன்மாறன்.
“அப்படி கிடையாது மீன்கொடியின் நாயகனே, சில காலங்களாக உங்களுக்கு தெளிவு இல்லை. சேரத்தின் உதவியையும், அதன் பால பாடங்களையும் நீங்கள் கேட்பதில்லை. வரலாற்று அதிசயமாக இப்போது நீங்கள் சோழர்கள் பாசறையில் உட்கார்ந்து கொண்டு பாடம் படிக்கின்றீர்கள். உங்களுக்கு அவர்கள் சொக்குப் பொடி போட்டு மயக்கிவிட்டார்கள். பலமுறை கூறியும் கேட்க மறுக்கும் உங்களை தெளிய வைக்கவே இந்த அவசர குறுக்கீடு தேவைப்பட்டது” என்றான் ஆதிரை நம்பி.
அவனை கூர்ந்து நோக்கிய நன்மாறன், சரி வந்து விட்டீர்கள், சொல்லுங்கள் உங்கள் வரவின் நோக்கத்தை… என்ன பெரிதாக கூறிவிடப் போகின்றீர்கள்? என்றான் நன்மாறன்.
அரசே!, என்னுடைய பெயர் ஆதிரை நம்பி. சேரத்தின் ஒற்றர் படைகளுக்கு தலைவன். சேரத்தின் பேரரசருக்கும், பிரதம அமைச்சர் ஸ்ரீவராகநம்பியின் நம்பிக்கைக்கு உரியவன். அவர்கள் இருவர் சார்பாகவே இங்கு வந்துள்ளேன். தங்கள் தேசத்தின் எல்லைகள் முழுதும் சேரத்துப் படைகள் அலையாக மோதி நிற்கின்றன. இதோ இந்த மேற்கு மலை எங்கும் கிரேக்க, யவன பொறியாளர்கள் வடிவமைத்த கோபுரங்கள் குடிமக்களை குறிபார்த்து கிரேக்கர்களால் இயக்கப்பட தயாராக இருக்கின்றன. ஒரு கோபுரத்தால் குறைந்தது ஐயாயிரம் பேரை சுலபமாக அழிக்க முடியும், என்றவனை இடைமறித்த நன்மாறன்…
“ஆதிரை நம்பி இந்த பயம்காட்டும் பனங்காட்டு நரி வேலையெல்லாம் வேண்டாம். உங்களின் திட்டம் என்ன? எதிர்பார்ப்பு என்ன”? அதை மட்டும் சொல் என்றான்.
ஆ… ஆஆ…. அரசே அப்படியெல்லாம் அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டாதீர்கள். உங்கள் சகோதரி வேல்விழி நிலை குறித்து கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் என்று ஒரு புதிய வெடிகுண்டை வீசினான் ஆதிரை நம்பி.
என்ன உளருகின்றாய்? வேல்விழிக்கு என்ன? என்றான் நன்மாறன்.
ஹாஹ்ஹா…. என்று கர்வ சிரிப்பு சிரித்தான், ஆதிரை நம்பி. என்ன அரசரே! சட்டென்று சுருதி குறைந்த ராகமாக மாறிப் போனீர்கள்? உங்கள் ஆருயிர் தங்கை வேல்விழி தேவியார் இப்போது பத்திரமாக சோழத்து ஆபத்துதவிகளிடம் உள்ளார். அவரை பத்திரமாக வைத்து இருப்பது நெடுங்கிள்ளி. உங்கள் நண்பன். என்ற ஆதிரை நம்பி குறுகுறுவென்று நன்மாறனை நோக்கிவிட்டு தொடர்ந்தான்….
அது பாருங்கள் அரசே, நலங்கிள்ளியுடன் காதல் சிறகை விரிக்க வேல்விழியார் நினைக்க, நெடுங்கிள்ளியோ அவளே வேண்டுமென்று பிடிவாதம் பிடித்து இப்போது இருவரையும் குடந்தையின் அருகில் வைத்து ஆபத்துதவிகள் மூலம் சிறையெடுத்து வைத்துள்ளார். வேல்விழியை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் பாருங்கள் அவரின் எண்ணத்திற்கு சேரத்தின் ஒப்பந்தம் கட்டுப்படாது. இரும்பிடையான், சேரமன்னன் இடையேயான ஒப்பந்தம் அல்லவா செல்லும்? என்று நமட்டு சிரிப்பு சிரித்தான் ஆதிரை நம்பி.
என்ன உளருகின்றீர்கள் எல்லோரும்? என் சகோதரி குறித்து ஒப்பந்தம் போட நீங்கள் எல்லாம் யார்? அவளது வாழ்வையும் எதிர்காலத்தையும் நான் தீர்மானிக்க வேண்டும்? என்று பேசிய நன்மாறனை இடைமறைத்த ஆதிரை நம்பி….
அரசே….. அரசே…. ஏன் இவ்வளவு உணர்ச்சிப் போராட்டம்??? ஹாஹாஹா…. அவசரப்படவே கூடாது… ராஜ்ஜியம் முக்கியம், குடிகள் வாழ்வு முக்கியமென்று கருதும் மன்னர் அல்லவா நீங்கள்? இவ்வளவு பதட்டம் கொள்கின்றீர்களே?? கூடாது கூடாது… பொறுமை வேண்டும்.
ஆமாம். என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்!!!…. ஆ… இரும்பிடைவல்லன் கோருவது வெற்று கோரிக்கை. எளிதும் கூட… உங்கள் சகோதரி வேல்விழியோடு திருமணம்… அதற்கு ஈடாக சேரப்படைகளை விலக்கிக் கொள்ளுதல். பாண்டிய சாம்ராஜ்யத்தை சுதந்திரமாக செயல்பட செய்தல், புகாரிலும், கொற்கையிலும், நாகையிலும் கிரேக்கர்கள் வாணிபம் செய்ய அனுமதித்தல் அவ்வளவு தான். இதற்கு சேர அரசர் சரியென்று கூறியும் விட்டார். நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் எவ்விதத்திலும் தொல்லை தர இயலாதவாறு சேரஅரசரும், இரும்பிடையாரும் பார்த்துக் கொள்வர். உங்களுக்கு சிக்கல் இருக்காது அல்லவா? சோழத்தில் உங்கள் சகோதரி அரசி, பாண்டிய நாடு உங்கள் ஆட்சியில் பிறகென்ன எல்லாமே சுபம் தானே? அதற்கு ஏன் இவ்வளவு தயக்கம்”?? என்றான் ஆதிரை நம்பி குதர்க்கமாக….
பாண்டிய அரசனுக்கு கோபத்தில் இரத்தமெல்லாம் கொதித்தது. தன் சகோதரியை வைத்து, சுற்றியுள்ள தேசமும், தேசத்தின் தலைவர்களும் தீர்மானித்து விரித்துள்ள வலையை குறித்து ஆவேசம் அடைந்தான். வேல்விழியும், நலங்கிள்ளியும் இப்போது நெடுங்கிள்ளியின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளனர். யாரை கொண்டு அவர்களை மீட்பது என்று குழப்பம் ஒரு புறம், தான் தேசத்தை குறித்து எடுக்கப் போகும் தீர்மானம் என்ன? என்னும் குழப்பம் மறுபுறம் என பேரலையில் சிக்கிய பீங்கான் கிண்ணமென அலை மோதினான்.
அரசே தங்களின் தீர்மானத்திற்கு சேர அரசர் விடுத்துள்ள அவகாசம், ஒரு இரவு. நாளை சூரிய உதயத்தில் உங்கள் முடிவை நீங்கள் அறிவிக்க வேண்டும். குதிரை மலையின் இந்த குன்றின் மீது பச்சை கொடி பறக்கும் என்றால், ஒப்பந்தத்திற்கு சம்மதம்…என்று அர்த்தம். சிகப்பு கொடி பறக்குமென்றால் போருக்கு ஆயத்தம் என்று அர்த்தம். தீர்மானியுங்கள் வருகின்றேன் என்ற ஆதிரை நம்பி விருட்டென்று குதிரை மலை குன்றை விட்டு வெளியேறினான்.
நன்மாறனின் இதயம் நொறுங்கிய கண்ணாடியாக ஆனது. குழப்பத்தில் தடுமாறி நின்றிருந்தவன் அருகில் இருந்த பாறை ஒன்றின் மேல் அமர்ந்து விட்டான்.
அதே வேளையில்…. குடந்தையின் சீத்தலையார் மாளிகையில் நலங்கிள்ளி இரு கைகள் மற்றும் கால்களில் சங்கலிகளால் பிணைக்கப்பட்டு அந்தரத்தில் தொங்கவிடப்பட்டிருக்க, வேல்விழியை மேல் மாடத்து அரை ஒன்றில் மஞ்சனையில் பிணைத்து கட்டியிருந்தான் நெடுங்கிள்ளி.
வேல்விழி பிடிவாதம் வேண்டாம்…. என்னோடு இணைந்து விடு. ஓராண்டுக்குள் நம் வாரிசை உருவாக்குவோம். இந்த பரந்த தேசத்தை அவனுக்கு நான் பரிசளிப்பேன் வா… இந்த தாலியை ஏற்றுக்கொள். உன்னை மனைவியாக ஆக்கிக்கொண்டு தான் மஞ்சனையில் படுப்பேன் என்று உறுதி கொண்டுள்ளேன் என்ற நெடுங்கிள்ளி… கையில் வைத்திருந்த திருமாங்கல்யத்தை வேல்விழிக்கு பூட்ட நெருங்கினான்..
தொடரும்..