நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
வீட்டுக்குள் நுழைந்த வெண்மதியை பார்த்த லட்சுமி
“என்னம்மா இப்படி நனைந்து போயிருக்கிற? அந்த சின்னக் குடையை மாற்றி பெரிய குடை எடுத்துட்டு போ.” என்றார் அக்கறையாக.
“பரவாயில்லை அம்மா. இந்த குடைதான் ஹேண்ட் பேக்கில் வைக்க வசதியா இருக்கு. ஒரு கார் வேகமா போச்சா அந்த கார் ரோட்ல இருந்த தண்ணியை என்மேல அடிச்சிருச்சு.”
“இந்த மழையில எந்த முட்டாள் காரை வேகமா ஓட்டியது? கார்ல போனா இவங்களுக்கு எல்லாம் ரோட்டில் நடக்கிறவர்கள் கண்ணுக்கு தெரிவது கிடையாது. சரி மா நீ போய் குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வா.”
வெண்மதி குளித்துவிட்டு வேறு உடைக்கு மாறி வெளியில் வந்தாள். அப்பொழுது வசந்த் ஒரு போலீஸ்காரர் உடன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. பேசி முடித்தவன் வெண்மதியை நோக்கி வந்தான்.
“வெண்மதி வந்துட்டீங்களா? உங்களை தான் எதிர் பார்த்துட்டு இருந்தேன்.” என்றான் நிம்மதிப் பெருமூச்சுடன்.
“என்ன வசந்த் ஏதாவது பிரச்சனையா?” என்று திரும்பி சென்று கொண்டிருந்த போலீஸ்காரரை பார்த்தபடி கேட்டாள்.
“ஆமாம் பிரச்சனை தான். வெண்மதி பக்கத்து ஏரியாவில் செயின் ஸ்னாட்ச்சிங் நடந்து இருக்கு. அதுல ஒரு பொம்பளை கழுத்துல இருந்த நகையை கட் பண்ணும் போது அந்த பொம்பளை கழுத்துல கத்தி பட்டு அந்த பொம்பள உயிருக்கு போராடிக்கொண்டு இருக்காங்க போல இருக்கு. அதான் அந்த ஆளை தேடிட்டு இருக்காங்க. அந்த பொம்பளை அந்த திருடனை பாக்கலையாம். திருடன் முகமூடி போட்டு இருந்தானாம். அதான் எல்லாரையும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்க சொன்னாரு. நைட்டு எட்டு மணிக்கு மேல எங்கயும் தனியா போக வேண்டாம்னு சொன்னார். உங்க வீட்டில சொல்லிடுங்க.”
“ஓகே வசந்த் கண்டிப்பா சொல்லிடறேன். உள்ள வாங்க காபி சாப்பிடலாம்.” என்று கூப்பிட்டாள்.
“இல்லை வெண்மதி டைம் ஆயிடுச்சு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் கிளம்புறேன்.” என்று கூறிவிட்டு சென்றான்.
வீட்டுக்குள் நுழைந்த வெண்மதி தாயிடம் விபரத்தைக் கூறினாள்.
“ பெரியம்மா எங்கே” என்று விசாரித்தாள்.
“அவங்க அம்மா வீட்டுக்கு போய் இருக்காங்க. நாளைக்கு வருவாங்க.”
“சரிமா வந்தவுடனே நீ இந்த விஷயத்தை பெரியம்மா கிட்ட சொல்லிடுங்க.” “நானா?” என்று இழுத்தார் லட்சுமி.
லலிதா லட்சுமியிடம் பேசுவதை நிறுத்தி இருந்தார். லட்சுமி அவரை கூப்பிட்டாலும் அவர் நின்று பேச மாட்டார். எனவே தான் லட்சுமி தயங்கினார். “ஆமாம் நீங்கதான் சொல்லுங்க. நான் அவங்கள முதல்ல பார்த்தா நான் சொல்லிடுவேன். இல்லன்னா நீங்க சொல்லுங்க. அவங்க நமக்கு பதில் சொல்லாட்டியும் பரவால்ல. இந்த விஷயத்தை அவுங்க காதுல போட்டுடுங்க.”
“ஆமாம் மதி நீ சொல்றது கரெக்டு தான். இந்த விஷயத்தை நான் அவங்க கிட்ட சொல்லிடறேன் .” என்றார் லட்சுமி.
கதிர்வேலன் முத்து, மணி இருவரையும் ஒரு ஆள் மூலம் பணம் கொடுத்து வேலைக்கு போகாமல் செய்தது மட்டுமல்லாது அந்த இரு பையன்களை வைத்தே புதிதாக வேலைக்கு சேர்ந்த வேறு இரண்டு பையன்களையும் வேலைக்கு போக விடாமல் பணம் கொடுத்து தடுத்து விட்டான். ஆனால் செல்வியின் மூலம் வேலைக்கு சேர்ந்து இருந்த இரு பெண்களிடமும் இவனது எண்ணம் பலிக்கவில்லை. இவன் பணத்துடன் அனுப்பியிருந்த ஆள் தோல்வியுடன் திரும்பினான். எனவே அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான். சில நாட்களாகவே அவனுடைய தோல்விகளை எண்ணி துவண்டு போயிருந்தால் கதிர்வேலனால் வேலையில் கவனத்தை செலுத்த முடியவில்லை. அப்பொழுது அவனது இன்டர்காம் ஒலித்தது. எடுத்து பேசியவன் மேலாளார் அழைக்கவே, ஏதோ ஒருஇனம் புரியாத பயம் அவன் நெஞ்சு கூட்டில் பரவியது. அவன் பயத்துடனேயே மேலாளர் கேபினுக்கு சென்றான்.
“வாங்க கதிர். உட்காருங்க.” என்று மேலாளர் கூற அவன் பதட்டத்துடன் உட்கார்ந்தான்.
“நான் ஆல்ரெடி உங்க கிட்ட சொல்லி இருந்தேன். ஆனா நீங்க அதை சீரியஸா எடுத்துக்கிட்ட மாதிரி தெரியல. உங்க பர்பாமன்ஸ் இன்னும் டவுன் ஆயிடுச்சு. என்னால எதுவும் பண்ண முடியாது. மேனேஜ்மென்ட் கிட்ட உங்களைப் பத்தி கம்ப்ளைன்ட் போயிருக்கு. ஐ யம் சாரி. யூ ஆர் நோ லாங்சர் நீடெட் பார் தே கம்பனி. (இனி நீங்கள் எங்கள் கம்பெனிக்கு தேவை இல்லை) என்றார்.
இதனை ஓரளவு எதிர்பார்த்து இருந்தாலும் கதிர்வேலனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.
“ராஜேஷ்” என்று ஏதோ கூற வாய் எடுத்த அவனை கையை தூக்கி தடுத்து
“இது என்னோட டசிஷன் கிடையாது. மேனேஜ்மெண்ட் எடுத்த டிஸ்கஷன். ஐயம் சாரி கதிர். யூ மே கோ நவ். உங்களுக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. அதை வச்சு வேற எங்கேயாவது நல்ல வேலை வாங்கிக்கோங்க. ஆல் த பெஸ்ட்.” என்று முடித்து விட்டார்.
இதற்கு மேலும் எதுவும் பேச முடியாது என்று நினைத்த கதிர்வேலன் தன் கேபினுக்கு சென்று தன் பொருட்களை எடுத்துக்கொண்டு அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்தான். வீட்டிற்கு செல்ல பிடிக்காமல் பக்கத்தில் இருந்த பூங்காவில் அமர்ந்தான்.
இவனுடன் வேலைக்கு சேர்ந்த அனைவரும் பொறுப்பாக வேலை செய்து முன்னேறிக் கொண்டிருக்க இவன் மட்டும் வெண்மதியை முன்னேற விடாமல் தடுப்பதில் தன் கவனத்தை செலுத்தி வேலையில் கவனத்தை செலுத்தாமல் அக்கறை இன்றி நடந்துகொண்டதால் ஏற்பட்ட விளைவு இது.
தாய்க்கு அடுத்தபடி அவன் மதித்தது அவன் வேலையை தான். அந்த வேலை இப்பொழுது அவனிடம் இல்லை. அதனை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த தோல்வி அவனை பெரிதும் தாக்கியது.
‘இனிமேல் எப்படி அம்மா முகத்துல முழிக்க போகிறேன்? இதை எப்படி வீட்டில் சொல்ல போறோம்?
அவனுக்கு வைஷ்ணவியை பிடிக்கும். அவளுக்கும் அவனைப் பிடிக்கும். இருவருக்கும் திருமணம் செய்ய பெரியவர்கள் ஆசைப்பட்டு கொண்டிருந்தனர்.
இந்த விஷயம் தெரிஞ்சா வைஷ்ணவி என்னை மதிப்பாளா?
மாமா எனக்கு பெண் கொடுப்பாரா? எனக்கு இதே மாதிரி நல்ல வேலை கிடைக்குமா? கிடைக்காதா? இப்படியே இருந்து விடுவோமா?
அப்பாவுக்கு தெரிஞ்சி ஏன் வேலை போயிடுச்சின்னு கேட்டா, நான் என்ன சொல்றது? என்று ஏகப்பட்ட கேள்விகள் அவன் மனதில் தோன்றின. அவை எவற்றிற்கும் பதில் தெரியாமல் மிகவும் சோர்ந்து போனான்.
வெண்மதி முன்னேற கூடாதுன்னு அவளுக்கு கெட்டது நினைச்சேன். ஆனால் அந்த கெட்டது எனக்கே நடந்துடுச்சு. ஒரு தடவை வேலை இல்லைன்னு தெரிஞ்சதுக்கே எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு. இதே மாதிரி வெண்மதி எத்தனை தடவை கஷ்டப்பட்டு இருப்பா. அவளை கஷ்டப்படுத்தின பாவம்தான் எனக்கு இப்படி ஆயிடுச்சு.’ என்று மனம் நொந்தான். கண்ணீர் வழிந்தது.
அலுவலக வேலையில் மூழ்கி இருந்தாள் வெண்மதி. அப்பொழுது அவளுடைய இன்டர்காம் ஒலித்தது. எடுத்து பேசினாள். மேலாளர் தான் பேசினார்.
“வெண்மதி உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசனும். என் ரூமுக்கு வாங்க.” என்று கூறியவர் இன்டர்காமை வைத்தார்.
வெண்மதி மேரி இடம் திரும்பி “மேனேஜர் என்னை கூப்பிட்டு இருக்கிறார். என்ன விஷயம்னு தெரியல.” என்றாள் யோசித்தபடி .
மேரி “அவர் சொன்ன ப்ராஜெக்ட் தான் நாம போன வாரமே முடிச்சி கொடுத்துவிட்டோமே. வேற என்ன விஷயமாய் இருக்கும்? ஒருவேளை கிளையன்ட் ஏதாவது நம்ம ப்ராஜெக்ட்ல ஃபால்ட் கண்டுபிடிச்சு இருப்பாங்களோ?” என்று கவலையாக கேட்டாள்.
“அதுக்கெல்லாம் சான்ஸே கிடையாது. நாம நம்ம வேலையை பர்ஃபெக்ட்டா பண்ணி இருக்கிறோம். அதனால எனக்கு அந்த பயமெல்லாம் கிடையாது. ஆனாலும் மேனேஜர் கொஞ்சம் டென்ஷனா இருக்கிற மாதிரி தெரியுது. சரி நான் போய் பார்த்துட்டு வரேன்.” என்று எழுந்து மேலாளர் அறைக்கு சென்றாள்.
“வெண்மதி டேக் யுவர் சீட் “என்று நாற்காலியைக் காட்டினார்.
அதில் வெண்மதி உட்கார்ந்தாள்.
“சொல்லுங்க சார். என்ன விஷயம்?”
அவர் அவளை ஆழமாக பார்த்தார். பின்பு
“இந்த கவர் இன்னிக்கு எனக்கு கொரியரில் வந்துச்சு.” என்று அதனை அவளிடம் கொடுத்தார்.
அதனை வாங்கி அவள் பிரித்து பார்த்தாள்.
அதனுள் சில புகைப்படங்களும் ஒரு கடிதமும் இருந்தது. அந்த புகைப்படங்களை பார்த்த அவள் திகைத்தாள் .
வெண்மதி விஜயின் பின்னே உட்கார்ந்து கொண்டிருக்க இருவரும் பைக்கில் சிரித்தபடி சென்று கொண்டிருந்தனர் ஒரு புகைப்படத்தில். மற்றொன்றில் அவர்களிருவரும் ஒரு பூங்காவில் பக்கத்து பக்கத்தில் உரசியபடி உட்கார்ந்து கொண்டு இருந்தனர். இன்னொரு புகைப்படத்தில் விஜயின் தோள்மீது வெண்மதி சாய்ந்து கொண்டிருந்தாள். மற்றொன்றில் வெண்மதி சந்துருவுடன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள். இன்னொன்றில் சந்துரு வெண்மதியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். மற்றொன்றின் வெண்மதி வசந்த் மீது மோதிக் கொண்டு இருந்தாள். ஒவ்வொன்றையும் பார்த்து முடித்தவள் கடிதத்தை எடுத்து படித்தாள்.
அந்த கடிதத்தில் “உங்களைப்போலவே உங்களிடம் வேலை செய்பவர்களும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் அந்த ஒழுக்கம் உங்களிடம் வேலை செய்யும் வெண்மதியிடம் இருக்கிறதா என்று இந்த புகைப்படங்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.” என்று எழுதி இருந்தது.
இந்த புகைப்படங்களை எல்லாவற்றிற்கும் அவளால் விளக்கம் கொடுக்க முடியும். ஆனால் மேலாளர் இவள் கொடுக்கும் விளக்கத்தை நம்புவாரா என்பது சந்தேகம்தான். எப்படி ஆரம்பித்து எப்படி இவரிடம் தன் விளக்கத்தை கொடுப்பது? எந்த சூழ்நிலையில் இதையெல்லாம் எடுத்திருக்கிறார்கள் என்று எப்படி கூறி புரிய வைப்பது என்று யோசித்து குழம்பியபடியே எதுவும் பேசாமல் அவரை பார்த்துக் கொண்டிருந்தாள்.