அவர் “என்னமா எதுவுமே பேச மாட்டேங்கறீங்க?” என்று கேட்டார்.
எனினும் அவள் கடந்து வந்த பாதை அவளுக்கு பக்குவத்தை கொடுத்திருக்க தைரியமாக “சார் நீங்க இந்த போட்டோஸ் எல்லாத்தையும் பார்த்து என்னை தப்பா நினைக்கிறீர்களா?” என்று கேட்டாள்.
அப்பொழுது அங்கு வந்த மேலாளரின் மனைவி மேலாளர் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
மனைவி வெண்மதியை பார்த்து
“இந்த போட்டோஸ் எல்லாத்தையும் பார்த்து உன் மேல சந்தேகப்பட்டு உன்னை விசாரிக்க கூப்பிடல. நீ இங்க வேலைக்கு சேர்ந்து ஏழு எட்டு மாசம் இருக்கும். இந்த ஏழு எட்டு மாசமா நான் உன்னை கவனிச்சுட்டு தான் இருக்கேன். அப்படி நான் கவனித்ததிலிருந்து எனக்கு ஒன்னு தெளிவா தெரியுது. இந்த லெட்டரை நம்ப வேண்டியது கிடையாது. இருந்தாலும் உன்னை கூப்பிட்டு எதுக்காக உன்கிட்ட இந்த போட்டோஸ் எல்லாத்தையும் காட்டினேன்னா, நீ இத பத்தி தெரிஞ்சுக்கணும். உன் பெயரை கெடுப்பதற்காக யாரோ இந்த மாதிரி வேலையெல்லாம் பண்ணிகிட்டு இருக்காங்கன்னு நீ தெரிஞ்சுக்கணும். அதுனாலதான் உன்னை கூப்பிட்டு இதையெல்லாம் காட்டுறேன். மத்தபடி உன்னை நான் சந்தேகப்படல. அதனால நீ இந்த போட்டோஸ் பத்தி எந்த எக்ஸ்பிளநேஷனும் கொடுக்க வேண்டாம் . இந்த போட்டோஸ், லெட்டர் எல்லாத்தையும் நீயே வச்சுக்கோ. யார் இப்படி பண்ணாங்கன்னு தேடி கண்டுபிடி.” என்று அதனை அவளிடம் கொடுக்க.
அவள் “ரொம்ப தேங்க்ஸ் மேடம் ரொம்ப தேங்க்ஸ் சார்.” என்று கூறியபடி நிம்மதி பெருமூச்சுடன் அதனை வாங்கினாள்.
“அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். இந்தா இந்த கவரையும் பிரிச்சு பாரு.” என்று இன்னொன்றை நீட்டினார்.
அதனை வாங்கி பிரித்தவள் படித்தாள். படித்து முடித்தவள் பூரிப்புடன் இருவரையும் பார்த்து
“என்னால நம்பவே முடியல சார். 15000 இன்கிரிமெண்ட் கொடுத்திருக்கீங்க.” “ஆமாம் இனிமே உன்னோட சம்பளம் 40000. நீயும் மேரியும் பண்ணின ப்ராஜெக்ட் பிக் ஹிட். கிளையன்ட் ரொம்ப ஹாப்பி. அவர் நமக்கு இன்னும் நிறைய ப்ராஜெக்ட் கொடுத்திருக்கிறார். நம்ம கம்பெனி அடுத்த லெவலுக்கு போகுது. அதனால நாங்களும் ரொம்ப ஹேப்பி. ஏற்கனவே சொன்ன மாதிரி உங்க ரெண்டு பேருக்குமே இன்கிரிமெண்ட் கொடுக்கிறோம். மேரி கிட்டயும் சொல்லிடு. வீட்டுக்கு போகறதுக்கு முன்னாடி வந்து என்னை பாத்துட்டு போக சொல்லு. இன்னிக்கி சாயந்திரம் ஒரு சின்ன பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கேன். வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிவிடுங்கள். பார்ட்டி முடிய 8 மணி ஆகலாம் .
“இதை நினைத்து எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் இன்னொரு பக்கம் கவலையா இருக்கு.” என்று சிறிது சோர்வாக கூறினார் மேலாளர்.
“ஏன் சார் இதில் கவலைப்பட என்ன இருக்கு?”
“எனக்கும் என் மனைவி தாமரைக்கும் வயசு ஆயிட்டு இருக்கு. எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. எங்களுக்கு பிறகு இந்த கம்பெனியை யார் பார்த்துக் கொள்வது?” என்றார் சோகமாக.
“நீ இந்த கம்பெனிக்கு வந்ததுக்கப்புறம் நம்ம கம்பெனி குரோத் நல்லா இருக்கு. ஃபெய்லியர் பார்த்து டயட் ஆகாம திரும்பத் திரும்ப ட்ரை பண்ணி அச்சீவ பண்ற உன்னோட இந்த குவாலிட்டி தான் நம்ம கம்பெனியோட வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
இது இப்படியே வளர்ந்தா, நம்ம கம்பெனி நம்ம ஊரிலேயே நம்பர் ஒன் கம்பெனி ஆகிடும். ஆனா இந்த கம்பெனியை என்னால தொடர்ந்து நடத்த முடியாது. எனக்கும் சரி தாமரைக்கும் சரி உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது. டாக்டர் எங்களை ரெஸ்ட் எடுக்க சொல்கிறார் . அதான் இந்த கம்பெனியை யார்கிட்டயாவது வைக்கலாம்னு பார்க்கிறேன். உன்னால முடிஞ்சா நீயே வாங்கிக்கோ. நீ வாங்கிகிட்ட நான் சந்தோஷப்படுவேன்.” ,.
இதை கேட்டதும் அவள் முதலில் அதிர்ந்தாள். பிறகு
“சார் இந்த பெரிய கம்பெனியை என்னால வாங்க முடியாது. என் கிட்ட அவ்ளோ பணம் இல்லை. லோன் போட்டு வாங்குவதற்கும் என்கிட்ட பெரிய சொத்து எதுவும் கிடையாது.” என்றாள் .
“சரிமா நான் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்டயும் இதைப்பற்றி சொல்லியிருக்கேன். நீயும் உனக்கு தெரிஞ்சவங்க யாராவது வாங்க முடியும்னா என்கிட்ட சொல்லு. நீ சிபாரிசு பண்ணா, நான் அவங்களுக்கு இந்த கம்பெனியை கொஞ்சம் விலை குறைத்து கூட கொடுப்பேன். உன் மேல எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.” என்றார் புன்னகையுடன்.
“என் மேல நீங்க வச்சிருக்கிற நம்பிக்கைக்கு ரொம்ப தேங்க்ஸ் சார் .” என்றாள் அவர் அவள் மீது வைத்திருந்த நம்பிக்கையை கண்டு நெகிழ்ந்து.
“எங்க மேல பாசமா இருக்கிற தம்பி பசங்களுக்கு இந்த கம்பெனியை வித்து பணம் கொடுத்துட்டு நிம்மதியா இருக்கலாம்னு நினைக்கிறோம்.”
“அந்த தம்பி பசங்களையே இந்த கம்பெனிய பாத்துக்க சொல்லலாம் இல்ல சார்?” என்று வெண்மதி யோசனை கூறினாள்.
“இல்லமா அவங்களுக்கு வேற பிசினஸ் இருக்கு. இந்த கம்பெனியை நடத்த அவங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லை.” என்றார் சிறிது வருத்தம் காட்டி.
“அப்படி யாரையாவது எனக்கு தெரிய வந்தால் நான் உங்களுக்கு கண்டிப்பா சொல்றேன் சார்.”
“ஆனா ஒன்னு வெண்மதி. இந்த போட்டோ, லெட்டர் இரண்டையும் யாரு அனுப்பினானு கண்டுபிடி. இன்கிரிமெண்ட் கிடைச்ச சந்தோஷத்துல இந்த போட்டோவை மறந்துடாத. இந்த மாதிரி இன்னொரு தடவ நடக்காமல் பாத்துக்கோ. அது தான் உன்னோட கேரியருக்கு நல்லது.” என்று அறிவுரை கூறினார்.
“கண்டிப்பா யார் இப்படி பண்ணதுன்னு கண்டு பிடிச்சு இன்னொரு தடவ நடக்காம பாத்துக்குறேன் மேடம். தேங்க்ஸ் .” என்று கூறி விட்டு எழுந்து அவளது இருக்கைக்கு சென்று மேரி இடம் விபரத்தை கூறி சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டாள்.
அலுவலகத்தில் எல்லோருக்குமே ஆனந்தமே. அனைவர் முகத்திலும் சந்தோஷம்.
கேக் வெட்டி கொண்டாடினர். அனைவருக்கும் குளிர்பானம், இனிப்பு, நொறுக்கு தீனி கொடுக்கப்பட்டது. ஆனால் வெண்மதியால்தான் அந்த சந்தோஷத்தில் முழுமனதாக கலந்துகொள்ள முடியவில்லை. அவள் கைப்பையில் இருந்த புகைப்படமும் கடிதமே அதற்கு காரணம்.
‘சில நாட்களுக்கு முன்புதான் விஜய்யின் கோபத்தை தூண்டுமாறு பேசியிருக்கிறாள் ஒருவேளை அவன் இந்த லெட்டரை அனுப்பி இருப்பானோ? என்று யோசித்தாள். இல்லை கதிர்வேலன் அனுப்பி இருப்பானோ? கதிர் கதிர்வேலன் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போயிட்டானா? இந்த அளவுக்கு இவன் இறங்கிட்டான்னு கன்ஃபார்மா தெரிஞ்சு போச்சுன்னா, கண்டிப்பா பெரியப்பா கிட்ட இந்த விஷயத்தை எடுத்துட்டு போய் தான் ஆகணும். இதுக்கு மேலயும் பொறுமையா இருக்கக்கூடாது. அப்படி பொறுமையா இருந்தா நான் தான் முட்டாள் ஆகிடுவேன். ஒருவேளை பெரியம்மா இப்படி பண்ணி இருப்பாங்களா? பெரியம்மா லெட்டர் எழுதி போட்டிருக்க மாட்டார்கள். ஆனா இந்த போட்டோஸ் எல்லாத்தையும் யார் எடுத்து இருப்பா? இந்த போட்டோஸ்ல விஜய் இருக்கிறான். ஒருவேளை அவனே ஆள் வெச்சு எடுத்து இருப்பானோ? இல்லை கதிர்வேலன் ஆள் வெச்சு எடுத்திருப்பானோ?’ என்று யோசித்து குழம்பினாள்.
ஆனால் எந்த முடிவுக்கும் வர முடியாமல் தவித்தாள். எப்பொழுது அலுவலக நேரம் முடியும் என்று காத்திருந்தாள்.
இவள் ஒரு இடத்தில் தனியாக உட்கார்ந்து கொண்டு யோசித்துக் கொண்டிருப்பதை கவனித்த மேலாளர் அவளிடம் வந்தார்.
“ என்னமா அந்த போட்டோஸ், லெட்டர் பத்தி யோசிச்சிட்டு இருக்கியா?”
ஆழ்ந்த யோசனையில் இருந்த அவள் அவரின் குரலை கேட்டு திடுக்கிட்டு நடபிற்கு வந்தாள்.
“ஆமாம் ஆமாம் சார். என்னால நார்மலா இருக்க முடியல. சாரி சார்.” என்றாள் மெல்லிய குரலில்.
“அவர் இட்ஸ் ஓகே. ஐ அண்டர்ஸ்டாண்ட். நீங்க வீட்டுக்கு கிளம்புங்க.” என்றார் பரிவாக.
“தேங்க்ஸ் சார். நான் கிளம்புறேன்.” என்று அவரிடம் கூறிவிட்டு மேரி இடமும் சொல்லிவிட்டு வீட்டுக்கு திரும்பினாள்.
அவசரஅவசரமாக வீட்டுக்குள் நுழைந்த வெண்மதியை எதிர்கொண்டார் லட்சுமி. “என்னம்மா இன்னிக்கு வீட்டுக்கு வர 9 மணி ஆகும்னு சொன்ன. எட்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துட்ட.” என்று விசாரித்த லட்சுமியிடம்
“ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் எல்லாத்தையும் அப்புறம் உங்ககிட்ட சொல்றேன்.” என்று கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து கதிர்வேலனையும் பெரியம்மாவையும் தேடினாள். வீட்டில் இருவருமே இல்லை. “பெரியம்மா எங்கே?” என்று தாயிடம் கேட்டாள் வெண்மதி.
“கோயிலுக்கு போயிருக்காங்க. வரதுக்கு ஒரு மணி நேரம் ஆகும்னு நினைக்கிறேன்.” என்றார் லட்சுமி.
“சரிமா நானும் கோயிலுக்கு போயிட்டு வரேன்.” என்று கூறிவிட்டு அவளுடைய டிவிஎஸ் 50யை எடுத்துக்கொண்டு கோயிலை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.
அவள் கைப்பையிலிருந்த புகைப்படத்தை காட்டி பெரியம்மாவிடம் நியாயம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் கண்டது அவள் நினைப்பை தலைகீழாக மாற்றியது.
அந்த பெரிய நீளமும் அகலமும் ஆன தெருவில், 2 தெரு விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. சாலையில் யாரும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு பாழடைந்த பெரிய வீடு தவிர வேறு எந்த வீடும் இல்லாமல் காலி மனைகள் மட்டுமே தெருவின் இரு பக்கங்களிலும் இருந்தன. அந்த இடத்தின் அமைதி அவளுக்கு சிறிது அச்சுறுத்துவதாக கூட இருந்தது. அன்று வசந்த் எச்சரித்தது ஞாபகம் வந்தது.
இந்த நேரத்தில் இங்கு வந்தது தவறு என்று நினைத்தாள். சரி வீட்டுக்கு திரும்பலாம் என்று நினைத்தாள். அப்பொழுது தெருவின் அந்த முனையில் இவளுக்கு எதிர்த்திசையில் பெரியம்மா நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் திரும்ப நினைத்த அவள் அவரை நோக்கி வண்டியை ஓட்டினாள்.
அப்பொழுது ஒரு பைக்கில் இரு வாலிபர்கள் முகமூடி அணிந்து கொண்டு வேகமாக பெரியம்மாவிடம் வருவதை கவனித்தாள் . அவர்கள் பெரியம்மாவின் கழுத்தில் இருக்கும் சங்கிலியை பறிக்க வருகிறார்கள் என்று புரிந்து கொண்டவள். அவர் மீது இருந்த கோபம் எல்லாம் பறந்து போக
பெரியம்மாவை உஷார் படுத்த விரும்பி
“பெரியம்மா பின்னாடிபாருங்க.” என்று வேகமாக கத்தினாள்.