“நீங்க பயப்படாதீங்க. நாம ரெண்டு பேருமே இவங்ககிட்ட இருந்து தப்பிச்சு போயிடலாம். அவங்க ரெண்டு பேர் கால்லையும் நல்ல காயம் இருக்கு. அவங்களால நம்மள துரத்த ஓட முடியாது. அதுவுமில்லாம இது நம்ம ஏரியா. இந்த பாழடைந்த வீட்டில் எது எங்க இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும். சின்ன வயசுல நான் விளையாடி இருக்கேன். இந்த திருடர்களை பார்த்தா நம்ம ஏரியா மாதிரி தெரியல. அவர்களுக்கு இந்த வீட்டைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவனுங்க முதல்ல உள்ள வரட்டும். வந்ததும் நாம அவங்க பின்னாடி போய் மண்டையில அடிச்சு போட்டுடலாம். போட்டுட்டு தப்பித்துவிடலாம். அதுக்கு கட்டை வேணும். அது மட்டும் கிடைச்சுட்டா போதும் . நீங்க கொஞ்சம் வேகமா வாங்க.” என்று அவர் கையை பிடித்துக்கொண்டு அவசரப்படுத்தினாள்.
லலிதாவும் தன்னால் முயன்ற வரை வேகமாக நடந்தார். அந்த வீட்டுக்குள் நுழைந்த இரு திருடர்களும்
“டேய் நீ அந்தப் பக்கம் போய் தேடு. நான் இந்த பக்கம் போய் தேடற.” என்று கூறிவிட்டு இரு வேறு திசையில் அவர்களை தேடினர்.
கொள்ளையர்கள் பேசியதை கேட்ட லலிதா
வெண்மதி “அவனுங்க உள்ள வந்துட்டாங்க போல இருக்கு.” என்று நடுங்கும் குரலில் கூறினார் லலிதா. வெண்மதிக்கும் பயம்தான் எனினும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “பேசாதீங்க” என்றாள் அவருக்கு மட்டும் கேட்கும்படி.
அப்போது ஒருவனின் தலை அருகில் தெரியவும் இருவரும் வாயை பொத்திக்கொண்டு சத்தம் எதுவும் போடாமல் அமைதியாக அந்த சுவற்றின் பின் மறைந்து கொண்டனர். அவன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு யாரும் இல்லை என்று நினைத்துக்கொண்டு அவர்களைத் தாண்டி சென்றான். இருவரும் சிறிது நிம்மதியானார்கள்.
வெண்மதி நின்றுகொண்டிருந்த இடத்திலேயே உட்கார்ந்து இவர்களை தாக்குவதற்கு தன் கைக்கு ஏதாவது கிடைக்கிறதா என்று தன் கைக்கு எட்டிய தூரம் வரை தடவி பார்த்தாள். இரண்டு கட்டைகள் அவள் கைக்கு கிடைத்தது. ஓசையில்லாமல் மிக மெதுவாக அதனை எடுத்தாள். அதில் ஒன்றை பெரியம்மாவிடம் கொடுத்தாள்.
தோளில் வெட்டு பட்டதால் இருந்த வலியையும் தாண்டி இவர்களிடம் இருந்து தப்பித்து ஆகவேண்டும் என்ற எண்ணம் மேலோங்க
இவர்களைத் தாண்டி சென்று கொண்டிருந்த ஒரு திருடனின் தலையை குறிவைத்து ஓங்கி ஒரு அடி அடித்தாள்.
அவன் ‘ஆ’ என்று கத்தவும் இன்னொருவன் அந்த சத்தத்தைக் கேட்டு அங்கு வந்தான்.
அப்போது பெரியம்மா அவன் தலை மீது ஓங்கி ஒரு அடி அடித்தார் . 2, 3 அடி மேலும் இருவரும் சேர்ந்து அடித்தனர்.
அதில் அவர்கள் இருவரும் மயங்கி விழுந்தனர்.
வெண்மதி லலிதாவிடம் கட்டையை கொடுத்து கொள்ளையர்களை அடிக்க சொன்ன பொழுது லலிதா “என்னால முடியவே முடியாது” என்று கூறினார்.
எனினும் வெண்மதி கொடுத்திருந்த தைரியத்தால் அவர் அடிக்க ஒத்துக் கொண்டார். தன் முழு பலத்தையும் திரட்டி அவனை அடித்த போதும் அவனுக்கு பெரிதாக அடிபடவில்லை எனினும் வெண்மதியும் சேர்ந்து அடித்ததால் அவன் மயங்கி விழுந்தான் .
அதேநேரம் அந்த வீட்டுக்கு முன் வசந்தின் கார் வந்து நின்றது. அதிலிருந்து கோவிந்தனும் வசந்தும் இறங்கினர்.
“வெண்மதி வெண்மதி” என்று கூறியபடி உள்ளே வந்தனர்.
தந்தையின் குரலை கேட்ட வெண்மதிக்கு அப்போதுதான் உயிர் வந்தது. ஓடிச்சென்று அவரை கட்டிப்பிடித்துக்கொண்டாள் .
கலைந்திருந்த கேசமும் வியர்த்து விறுவிறுத்து போயிருந்த முகமும் கிழிந்து தொங்கிக்கொண்டிருந்த உடையும் பதட்டத்தை அளித்தாலும் அவள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நினைத்து ஆறுதல் அடைந்தான் வசந்த்.
“என்னமா என்ன ஆச்சு?” என்று அவளது கிழிந்த சல்வாரை பார்த்து பதறியபடி கேட்டார். அவள் எதுவும் பேசமுடியாமல் ‘ஓ’வென்று அழுது கொண்டிருந்தாள்.
அப்போது லலிதா காலை தாங்கி தாங்கி பொறுமையாக நடந்து வந்து கொண்டிருந்தார். வசந்த் அவரிடம் சென்று கை தாங்கலாக அழைத்து வந்தான்.
“என்னாச்சு நீங்களாவது சொல்லுங்க” என்று லலிதாவை பாclர்த்து கேட்டார். கோவிந்தன் “அது அது வந்து” என்று தட்டுத்தடுமாறி வேர்வையை துடைத்தவாறு ஆரம்பித்தார்.
அதற்குள் சமாளித்துக்கொண்டு வெண்மதி அங்கு நடந்தவற்றை கூறினாள்.
இதனைக்கேட்ட வசந்த்
“அவனுங்க எங்க?” என்றான் உள்ளே பார்த்தபடி,
லேசான நிலவின் வெளிச்சம் மட்டுமே இருந்தது.
வெண்மதி “அந்த சுவற்றுக்கு பின்னாடி மயங்கி விழுந்து கிடக்கிறார்கள். எந்த நேரத்துலயும் எழுந்து வரலாம்.” என்றாள் பதட்டத்துடன்.
“நான் போய் பார்க்கிறேன்.” என்று கூறியவன் அங்கு போய் பார்த்தான். நிலவொளியில் ஓரளவிற்கு அவர்கள் இருவரையும் அவனால் பார்க்க முடிந்தது. அவர்கள் இருவரையும் இரு கைகளிலும் இழுத்து கொண்டு வெளியில் வந்தான். வந்தவன் அவர்களை கீழே போட்டுவிட்டு தன் சட்டைப் பையில் இருந்த செல்போனை எடுத்து போலீசுக்கு தொடர்பு கொண்டு விபரத்தைக் கூறி அவர்களை இங்கே வரவழைத்தான்.
போலீஸ் அங்கு வருவதற்குள் ஒருவன் எழுந்து விட அவனை நன்றாக அடித்து துவைத்தான்.
‘என்னோட வெண்மதியையா இவ்வளவு கஷ்ட படுத்து இருக்க?’ என்று மனதில் நினைத்துக்கொண்டு மொத்த கோபத்தையும் அவனிடம் காண்பித்தான்.
அவன் அடி தாங்க முடியாமல் கீழே விழுந்தான். போலீஸ் வந்து இருவரையும் கைது செய்து இழுத்து சென்றது. வசந்த் லலிதா, வெண்மதி, கோவிந்தன் மூவரையும் அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு சென்று வெண்மதியின் காயத்திற்கும் லலிதாவின் கால்களுக்கும் சிகிச்சை அளிக்க சொன்னான். இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. வீட்டிற்கும் செய்தி அனுப்பப்பட்டது. இந்த செய்தியை கேட்ட அனைவரும் அந்த மருத்துவமனைக்கு வந்தனர்.
வெண்மதியின் குறுஞ்செய்தியை பார்த்த வசந்த் பதட்டத்துடன் காரை எடுக்க வரவும் கோவிந்தன் தனக்கு வந்திருந்த குறுஞ்செய்தியையும் போனையும் பார்த்து பதறியடித்துக்கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
குறுஞ்செய்தியை பார்த்த கோவிந்தன் லட்சுமியிடம் எதுவும் கூறவில்லை. என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியாத இந்த நிலையில் லட்சுமியிடம் எதையும் சொல்லி அவரையும் பதற வைக்க வேண்டாம். என்று நினைத்து அவர் எதுவும் சொல்லவில்லை. அந்த நேரத்தில் லட்சுமி தவிர வேறு எவரும் வீட்டில் இல்லை.
டிவிஎஸ் 50யை எடுக்க வந்தவர் அங்கு அது இல்லாததை கண்டார். அப்போதுதான் வசந்த் அவரை பார்த்தான். அவர் முகத்தைப் பார்த்தே இவருக்கும் அந்த குறுஞ்செய்தி வந்திருக்கும் என்று கணித்து இருந்த வசந்த் அவரிடம்
“வெண்மதியை தேடி தானே போறீங்க?” என்று கேட்டான்.
அவர் “ஆமாம்.” என்று கூற
“வாங்க. நாம ரெண்டு பேரும் போகலாம்.” என்று வசந்த் அவரையும் அழைத்துக் கொண்டு அந்த பாழடைந்த பெரிய வீட்டிற்கு வந்தான் .
கோவிந்தன் வீட்டுக்கு தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். அவர் கூறவும் தான் லட்சுமிக்கு விபரம் தெரிந்தது. அவர் அவசர அவசரமாக வீட்டை பூட்டிக்கொண்டு திரும்பவும் கார்த்திகேயன், கிருஷ்ணன் இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். லட்சுமி மூலம் விபரத்தை அறிந்த இருவரும் கிருஷ்ணனின் காரில் ஏறிக்கொண்டார். மூவரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர் .
கதிர்வேலனுக்கு போன் மூலம் விஷயத்தை கார்த்திகேயன் கூற அவனும் மருத்துவமனைக்கு வந்தான்.
நால்வரும் மருத்துவமனையில் அந்த அறைக்குள் நுழைந்தனர்.
லலிதாவின் பதட்டமும் கால் வலியும் குறைய மருந்துகள் கொடுக்கப்பட்டு ஒரு படுக்கையில் படுத்திருந்தார்.
வெண்மதியின் தோள்பட்டை காயத்திற்கு மருந்து இடப்பட்டு கட்டு போட்டிருந்தனர். அவள் இன்னொரு படுக்கையில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தாள்.
கதிர்வேலன், கார்த்திகேயன் “அம்மா” என்று லலிதாவிடம் சென்று விட
“வெண்மதி” என்று லட்சுமி வெண்மதியிடம் சென்றார் .
கிருஷ்ணன்” லலிதா” என்று கூறியபடி அவரிடம் சென்றார் .
லட்சுமி “என்னமா ரொம்ப வலிக்குதா?” என்று அவளுடைய தோள் பட்டையை மிக மிருதுவாக தடவியபடி கேட்டார்.
“இல்லமா பெயின் கில்லர் கொடுத்து இருக்காங்க. அதனால வலி ரொம்ப தெரியல.” என்றாள்.
கிருஷ்ணன் லலிதாவிடம் “என்ன ஆச்சு லலிதா? என்ன நடந்தது?” என்று விசாரித்தார்.
அப்போது வசந்த் எல்லா விபரத்தையும் கூற
கார்த்திகேயன் தான் முதலில் பேசினான்.
“அக்கா நான் உங்க மெசேஜை பார்க்கவே இல்லை. சாரி அக்கா. பார்த்திருந்தா உடனே ஓடி வந்து இருப்பேன்.”என்றான்.
“எனக்கு தெரியும் கார்த்திக். பரவாயில்லை.
அதான் நாங்க சேபா வந்துட்டோமே. நீ அதை நினைச்சு கவலைப்படாதே.” என்றாள் ஆறுதலாக.
“நல்லவேளை வசந்த் வந்தாரு. ரொம்ப தேங்க்ஸ்.” என்றான் கார்த்திகேயன். “தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு? கார்த்திக் உங்க அக்காவே அவனை அடிச்சு போட்டுட்டாங்க. நான் போய் சும்மா அவங்களை கூட்டிட்டு வந்தேன். அவங்க இன்டெபெண்டண்ட் பிரேவ் லேடி. .” என்று பாராட்டினான்
“ஆமாம் வெண்மதி ரொம்ப தைரியமா அவங்க கூட போராடினா. இவள் மட்டும் அந்த நேரத்தில் அங்கு வரலன்னா இந்நேரத்துக்கு நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்.” என்று உணர்ச்சி பெருக கூறினார் லலிதா.
கதிர்வேலன் “என்ன சொல்வது?” எல்லோர் முன்பும் என்ன சொல்வது என்று புரியாமல் தனிமையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு இந்த உலகத்திலேயே அதி முக்கியமான நபர் ஒன்று இருப்பது என்றால் அது அவனுடைய தாய் தான். அவரை இப்படி ஒரு பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிய வெண்மதி மீது அவனுக்கு மதிப்பு வந்தது. இவளையா இவ்வளவு தூரம் கஷ்டப்படுத்தினான் என்று வெண்மதிக்கு அவன் செய்த தீங்கினை எண்ணி மனம் வருந்தினான்.
சற்று நேரத்தில் மருத்துவர் வந்து இருவரையும் பரிசோதித்துவிட்டு
“நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போகலாம் .கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. போதும்.” என்றார். அனைவரும் வீடு வந்தனர்.
மணி 12 தாண்டியிருந்தது. வசந்த் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு அவன் வீட்டிற்கு கிளம்பினான்.
லலிதா அவர் அறைக்கு சென்று படுத்து உறங்கினார்.
லட்சுமி வெண்மதி உடன் அவளது அறையிலேயே தூங்கினார்.