இதனை கேட்க நேர்ந்த பெரியம்மா “அம்மா கிட்ட எப்படி பேசுறா பாரு. கொஞ்சம்கூட மரியாதை தெரியல. இப்படியே செல்லம் கொடுத்து பெண்ணை எப்படி வளத்து வச்சிருக்க பாரு லட்சுமி. அதுக்கு தான் கண்டிச்சு வளர்க்கணும்னு சொல்றது.
நாலெழுத்து படிச்ச திமிரு. இன்னும் வேலை வேற கிடைச்சிடுச்சுன்னா இவளை கையில பிடிக்க முடியாது. அதுக்கு முன்னாடி கல்யாணத்தைப் பண்ணி அனுப்பி விடுவது உனக்கு நல்லது.” என்று வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பொரிந்து தள்ளினார் பெரியம்மா.
தேவையில்லாமல் எரிந்து விழுந்த மகளை கண்டிக்க நினைத்த லட்சுமி லலிதாவின் இந்த பேச்சினை கேட்டதும் அமைதியாகி விட்டார். எதுவும் சொல்லாமல் அறைக்கு சென்றுவிட்டார்
தாயைப் பின்தொடர்ந்து சென்ற வெண்மதி
“சாரிமா. இன்னைக்கு கம்பெனியில் ஒரு சின்ன பிரச்சனை. அந்த டென்ஷனை உன்கிட்ட காட்டிட்டேன். இனிமே இப்படி பண்ணமாட்டேன். சாரி.” என்று கேட்க.
தாயின் மனம் இளகியது. “சரி பரவால்ல. இனிமே இப்படி பண்ணாத. போய் ஒழுங்கா சாப்பிடு. ரொம்ப சோர்வா தெரிகிறாய். நல்லா சாப்பிடு.” என்று அக்கறையாக கூறினார் லட்சுமி.
தாயின் பாசத்தைக் கண்டு நெகிழ்ந்தாள் வெண்மதி.
சாப்பிட்டு முடித்ததும் ‘வெண்மதி’ என்று வழக்கம்போல பெரியம்மா அழைத்தார். ‘இன்னைக்கும் நாம படிச்ச மாதிரிதான்’ என்று நினைத்துக்கொண்டு அங்கு சென்றாள்.
“என்னோட காஸ்ட்லி பட்டுப்புடவை எல்லாம் கொஞ்சம் அயன் பண்ணி கொடு.” என்று வேலை வாங்கினார். இவளுக்கும் அன்று படிக்கும் மனநிலை இல்லாததால் அந்த வேலையை மறுப்பேதும் சொல்லாமல் செய்து கொடுத்தாள்.
அன்று கேபினில் கணினி முன்பு உட்கார்ந்த வெண்மதி பாஸ்வேர்டை போட்டாள். ஆனால் கணினி தவறான பாஸ்வேர்ட் என்று காட்டியது. வெண்மதி திரும்பத்திரும்ப பாஸ்வேர்டை போட்டு பார்த்தாள். அது தவறான பாஸ்வேர்ட் என்று திரும்பத் திரும்ப கூறியது. பக்கத்தில் இருந்த கவிதா “மதி கேப்ஸ் லாக் ஆன்ல இருக்கு பாரு.” என்று கூற வெண்மதி அப்போதுதான் அதை கவனித்தாள்.
“ஆமாண்டி நான் கவனிக்கவே இல்லை. சரி ஆப் பண்ணிட்டு பாஸ்வேர்டு போடு மதி.”
“ஓகே கவி” என்று கூறிவிட்டு கேப்ஸ் லாக் ஆப் பண்ணிவிட்டு பாஸ்வேர்ட் போட்டாள்.
“ஓபன் ஆயிடுச்சு கவி.” என்று விட்டு தன் வேலையை தொடர்ந்தாள். அப்பொழுது அங்கு வந்த அசிஸ்டன்ட் மேனேஜர் ரமேஷ் “இஸ் எவ்ரி திங் ஓகே?” என்று கேட்க அனைவரும் “ஓகே சார்.” என்று கூறினார்கள்.
வீடு திரும்பிய பின் மதி விஜயின் நினைவிலேயே இருந்தாள். படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அன்றும் பெரியம்மா ஏதோ வேலை சொல்ல இவளும் இயந்திரத்தனமாக செய்து விட்டு வந்து படுத்து உறங்கினாள்.
மதி “நான் நாலு நாள் வெளியூர் போறேன். என்னோட மாமா பொண்ணுக்கு கல்யாணம். நாங்க அங்க போய் தங்கி இருந்து கல்யாணத்த முடிச்சுட்டு தான் வருவோம். அதனால நாலுநாள் நான் வரமாட்டேன்.” என்று கூற
“அப்படியா எனக்கு இந்த நாலு நாள் ரொம்ப போர் அடிக்க போகுது. சரி பரவால்ல. நான் சமாளிச்சுக்கறேன். நீ என்ஜாய் பண்ணிட்டு வா.” என்றாள் வெண்மதி.
அடுத்தநாள் கணினி முன்பு உட்கார்ந்த வெண்மதி கணினியை ஆன் செய்தாள். ஆனால் அது ஆன் ஆகவில்லை. இரண்டு மூன்று முறை முயற்சி செய்து பார்த்தும் எந்த பலனும் இல்லை. எனவே டெக்னிக்கல் சப்போர்ட் சுந்தர் எண்ணினை கேட்டு வாங்கி அவருக்கு தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறினாள். அவர் அங்கு வந்து அந்த கணினியை பரிசோதித்துவிட்டு “ஏதோ பெரிய பிரச்சனை என நினைக்கிறேன். இப்போதைக்கு இதை சரி பண்ண முடியாது. நான் ஆபீஸ் லேப்டாப் உங்களுக்கு இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தருகிறேன். நீங்க அதில வொர்க் பண்ணுங்க.” என்று கூறிவிட்டு ஒரு லேப்டாப்பை எடுத்து வந்து கொடுத்துவிட்டு அந்த கணினியை அங்கிருந்து எடுத்து சென்றுவிட்டார். அவள் அந்த லேப்டாப்பை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு தன்னுடைய வேலையை செய்தாள்.
மதிய உணவு இடைவேளையின் பொழுது விஜய்யை பார்த்தால் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.
வெண்மதியை தனியாக பார்த்த விஜய் அங்கு வந்தான். அவனை பார்த்த வெண்மதி
“ஐ அம் சாரி. நான் அப்படி செஞ்சிருக்க கூடாது.” என்று உண்மையாகவே மன்னிப்பு கேட்டாள். அவன் “நான் உங்க சாரியை அக்செப்ட் பண்றேன். ஆனால் ஒரு கண்டிஷன். நாம ரெண்டு பேரும் இனிமே ஃப்ரெண்ட்ஸ். ஓகேவா?”
“ஓகே” என்று வெண்மதியும் ஒப்புக்கொண்டாள். இருவரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர். கவிதா இல்லாத குறையை அவன் தீர்த்து வைத்தான்.
மாலை 4 மணி அளவில் லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது விஜயின் குரல் கேட்க வேகமாக அந்த சுழல் நாற்காலியை திருப்பி எழுந்தாள். அவள் தன் மடி மீது இருந்த லேப்டாப்பை மறந்து எழுந்த வேகத்தில் லேப்டாப் கீழே விழுந்து உடைந்தது. அவள் அந்த லேப்டாப்பை எடுத்து ஆன் செய்து பார்த்தாள். ஆனால் அது ஆன் ஆகவில்லை. எனவே திரும்பவும் டெக்னிக்கல் சப்போர்ட் சுந்தர் எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரத்தைக் கூறினாள். அவர் சலித்துக்கொண்டே அங்கு வந்து அந்த லேப்டாப்பை எடுத்து ஏதேதோ செய்து பார்த்தார். ஆனால் எதற்கும் அந்த லேப்டாப் ஆன் ஆகவில்லை. அந்த நேரம் பார்த்து அங்கு வந்த அசிஸ்டன்ட் மேனேஜர் ரமேஷ்
“அங்க என்ன பிரச்சனை?” என்று கேட்க
“இவங்க லேப்டாப்பை உடைச்சிட்டாங்க.” என்று வெண்மதியை போட்டு கொடுத்தான்.
“என்ன? யாருடைய லேப்டாப்?” என்று புரியாமல் கேட்டான் ரமேஷ். “லேப்டாப் ஆபீஸ் லேப்டாப் தான். ரமேஷ்.”
“அதை ஏன் இவங்க வச்சிருக்காங்க? காலையில இவங்களோட கம்ப்யூட்டர் வொர்க் ஆகல. அதனால எனக்கு கால் பண்ணி கம்ப்ளைன்ட் பண்ணாங்க. நா வந்து செக் பண்ணி பாத்துட்டு அந்த கம்ப்யூட்டரை சரிசெய்ய கொடுத்துட்டு இந்த லாப்டாப்பை அதுக்கு பதிலா கொடுத்தேன். இவங்க இந்த லேப்டாப்பையும் ஏதோ பண்ணிட்டாங்க.” என்று அவள் தான் அந்த கணினியையும் வீணாக ஆக்கியது போல சேர்த்து கூறினான்.
ஏற்கனவே மேனேஜரிடம் திட்டு வாங்கி விட்டு வந்த ரமேஷ், மேனேஜர் மீது இருந்த கோபத்தை இவர்மீது காட்டினான் “ஆள் மட்டும் வளர்ந்தா போதாது. அறிவும் வளரனும். காலேஜ் பைனல் இயர் படிக்கிறீங்க. இப்படியா ஒரு லேப்டாப்பை ஹேண்டில் பண்ண தெரியாம போட்டு உழைப்பீங்க? கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாதா? நீங்க எல்லாம் படித்து டிகிரி வாங்கி என்ன செய்யப் போறீங்க?” என்று தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தன் மொத்த கோபத்தையும் அவளிடம் காட்டினான்.
வீட்டில் பெரியம்மாவிடம் அவள் திட்டு வாங்குவது சாதாரண விஷயம்தான். அதற்கே அவள் எப்பொழுதாவது ரகசிய கண்ணீர் விடுவது உண்டு. பள்ளி கல்லூரியில் ஆசிரியர்களிடம் அவள் எப்பொழுதும் நல்ல பெயரே எடுப்பாள். திட்டு வாங்கியது கிடையாது. இன்று முதன்முறையாக இப்படி பல பேர் முன்பு திட்டு வாங்கியது அவளுக்கு அவமானமாக இருந்தது. அவள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக நின்றாள்.
ரமேஷ் மேலும் தொடர்ந்தான்.
“என்ன தப்பு பண்ணிட்டு இந்த மாதிரி அமைதியா இருந்தா சரியா போயிடுமா?”
அவள் “சாரி சார்” என்று மெல்லிய குரலில் கூற
“உங்க சாரி யாருக்கு வேணும்? இந்த லேப்டாப் 40,000 இந்த லேப்டாப்பை நாளைக்கு நீங்க ரிப்பேர் பண்ணி எடுத்துட்டு வாங்க. ஒருவேளை உங்களால ரிப்பேர் பண்ண முடியலைன்னா புதுசா ஒரு லேப்டாப் வாங்கிட்டு வாங்க.”
சுந்தரிடம் திரும்பி “இதில் இருக்கும் ஹார்ட் டிஸ்க் எடுத்து வச்சிக்கிட்டு இந்த உடைந்து போன லேப்டாப்பை அவங்க கிட்டயே கொடுத்து அனுப்புங்க.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
அவள் அந்த லேப்டாப்பை வாங்கிக்கொண்டு “இங்கே எங்கேயாவது லேப்டாப் ரிப்பேர் பண்ற இடம் உங்களுக்கு தெரியுமா?” என்று சுந்தரை கேட்டாள்.
“இந்த தெரு முனையில் ஒரு கடை இருக்கு . நீங்க அங்க போய் செக் பண்ணி பாருங்க.” என்றான்.
அவள் அந்த லேப்டாப்பை எடுத்துக் கொண்டு அந்த கடைக்கு சென்று அந்த கடையில் இருந்த ஒருவனிடம் காட்டினாள். அவன் அதனை வாங்கி பார்த்துவிட்டு “ரொம்ப டேமேஜ் ஆயிடுச்சு. ரிப்பேர் பண்றதுக்கு 15,000 ஆகும். அதுக்கு பதிலா நீங்க கொஞ்சம் பணம் கூட போட்டு புது லேப்டாப் வாங்கிடலாம். என்ன சொல்றீங்க?”
“இல்லை. எனக்கு நீங்க இதை ரிப்பேர் பண்ணி கொடுத்தாலே போதும்.” என்று வெண்மதி கூறினாள்.
“சரி கொடுத்துட்டு போயிட்டு ஒரு வாரம் கழிச்சு வாங்க. நான் ரிப்பேர் பண்ணி வைக்கிறேன்.”
“ஒரு வாரமா? எனக்கு நாளைக்கு வேண்டும்.”
“நாளைக்கு வேணுமா? அப்ப நான் சொன்னதுதான் ஒரே வழி. இந்த லேப்டாப்பை என்கிட்டயே வித்துட்டு நீங்க வேற லாப்டாப் வாங்கிக்கோங்க. இதை நான் இருபதாயிரத்துக்கும் வாங்கிக்கிறேன் நீங்க இன்னும் 20 ஆயிரம் கொடுத்தீங்கன்னா புது லேப்டாப் கொடுக்கிறேன்.” என்று கூற அவள் என்ன செய்வது என்று புரியாமல் நின்றுகொண்டிருந்தாள்.
அப்பொழுது கடைக்காரன் “என்னமா யோசிச்சிட்டு இருக்கீங்க? சரி யோசிச்சு எனக்கு சீக்கிரமா பதில் சொல்லுங்க.” என்று கூறிவிட்டு அவனுடைய வேலையை செய்ய ஆரம்பித்தான்.
அவள் அங்கே இருந்த ஒரு இடத்தில் உட்கார்ந்தாள்.