செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 44_2
மூர்த்தி கிளம்பிய பின்னும் வெகு நேரம் மரத்தடியிலேயே அமர்ந்திருந்தாள். உள்ளுக்குள் ஏதோ பிசைந்தது. ஆனால் எப்பொழுதுமே அப்படி தானே. மூர்த்தி இல்லாமல் அணுவும் அசைய மறுத்தது, துளசிக்கு.
“இப்படியே சிரிச்ச முகமா இரு. பத்தாந்தேதி காலையில வந்திடுவேன்..” என்று கன்னம் தட்டி சென்றிருந்தான்.
“ஏன் அழுதா பாக்க மாட்டீங்களா?” என்று வம்பு வளர்த்ததுக்கு
“ம்ம்ஹூம்… நீ என்னைப் பார்த்து சிரிச்சா மட்டும் தான் பார்ப்பேன்.. நான் கிளம்பினதும் நீ அழுதா எனக்கு அதுவும் தெரிஞ்சுடும். சோ அழக்கூடாது. பாப்பாக்கு ஆகாது. ரெண்டு பேரும் பத்திரம்” என்று பத்திரம் கூறி சென்றவனையே மனம் அசை போட்டது.
‘மூர்த்தி சார்..’ நீண்ட மூச்சு வெளிவந்தது. மரத்தை சுற்றி வந்தாள். இந்த சின்ன இடத்தை சுற்றி, நினைத்துப் பார்க்க டன் கணக்கில் அழகிய தருணங்கள் கொட்டிக் கிடந்தது. மூர்த்தியோடான வாழ்க்கை… கடந்து வந்த அழகான பயணத்தில், அவளின் அத்தனை உணர்வுக்கும் மதிப்பு கொடுத்து, எப்படி எல்லாம் தாங்கினான்… நினைக்க நினைக்கக் கலவையான உணர்வுகள் உள்ளுக்குள் வந்து அமர்ந்தது.
‘ஏன் மூர்த்தி சார் இத்தன பாசம் என் மேல..’ சில கேள்விகளுக்குப் பதில் இருப்பதில்லை. இதற்கும் அப்படி தான். அவனுக்குமே விடை தெரியா கேள்வி இது!
வயிற்றை வருடிக் கொண்டாள். ‘நல்ல படியா பெத்து எடுக்கணும்’ வேண்டுதலோடு பத்து நிமிடம் தோட்டத்தை சுற்றினாள்.
முதல் முறை தோட்டத்தின் தனிமை பிடிக்கவில்லை. பானு வந்த பின் தான் மூர்த்தி கிளம்பியிருந்தான். மரிச்சினி பிழுது வருவதாக கூறி அவர் சென்றிருக்க.. வீட்டிற்குள் சென்றாள்.
கையிலிருந்த சிகப்பு பொதியைப் பிரித்தாள். உள்ளங்கைக்குள் அடங்கிய குட்டி கொலுசு சிணுங்கியது. மகளுக்காக மூர்த்தி வாங்கியது. ‘பொண்ணு தான்’ வயிற்றைத் தடவிக் கொண்டாள்.
கொலுசைக் கொஞ்சமாக அசைத்தாள். சலங்கையிலிருந்து புறப்பட்ட சத்தம் மனதோடு அறையையும் நிறைத்தது. குஷியாய் போனது. மூர்த்தியின் பிறந்த நாளுக்காக வாங்கி வைத்திருந்த அனைத்தையும் எடுத்து கட்டிலில் பரப்பினாள். அம்மா.. மகள் இருவர் கொலுசும் ஒரே போல் இருக்க.. ஆசை தீரப் பார்த்தாள்.
“அம்மாவும்.. அப்பாவோட அம்மு குட்டியும் மேட்சிங்கா தான் எல்லாம் போட்டுக்கணும்.. நீங்க அப்பாவோட குட்டி கண்ணமாவா..” பிள்ளையோடு கொஞ்சி பேச ஆரம்பித்தாள். “உன்ன பத்திரமா பாத்துக்கணுமாமே… அப்பா சொன்னாங்க.”
இடது கையில் ஜிமிக்கி எடுத்து ஆட்டிப் பார்த்தாள். ‘மூர்த்தி சார்.. நீங்க வந்ததும் இந்த கொலுசு ஜிமிக்கி எல்லாம் பார்த்து ஷாக் ஆக போறீங்க’ சிரித்து கொண்டாள்.
உள்ளுக்குள் ஏகாந்தம். முகம் முழுவதும் இன்ப அலைகள். கேரளத்து புடவை.. கண் மை.. ஜிமிக்கி, கொலுசு.. சந்தனம்… “எல்லாம் ரெடி… ஆனா இந்த கொலுசை எப்படி குனிஞ்சு போடுவேன் மூர்த்தி சார்? பேசாம இடுப்பில சொருவி வச்சுக்கிறேன்… நீங்களே போட்டு விடுங்க” தானாய் பேசிக்கொண்டிருந்தாள்.
மூர்த்தியோடு வாழ்ந்த நாட்கள்.. தெவிட்டாத தெள்ளமுதாய் தோன்றியது. நிறைவான வாழ்க்கை. மடித்து வைத்திருந்த வேட்டி எடுத்து கட்டிலில் அமர்ந்த வாக்கிலேயே அதில் முகம் புதைத்தாள். வேட்டியில் இதழ் உராய, “லவ் யூ மூர்த்தி சார்” வாய் விட்டு கூறினாள்.
படுக்கை அறை வாசலில் அரவம் கேட்டு பார்வையை உயர்த்த, மணி நின்றிருந்தான்.
அவள் பின்னால் சுற்றும் செல்வன் கூட இப்படி படுக்கையறை வரை வந்ததில்லை. வெளியே நின்று கொண்டே “மைனி” என்று குரல் கொடுப்பான். மூர்த்தி இல்லை என்றால், திண்ணையில் தான் காவல் கிடப்பான். யாரேனும் இருந்தால், நடு கூத்திற்கோ… அடுக்களைக்கோ வருவான். இத்தனைக்கும் இருவருக்குள்ளும் அப்படி ஒரு நெருக்கம்.
வேட்டியை மெத்தையில் வைத்துவிட்டு, கை ஊன்றி மெல்ல எழுந்தவள், இழுத்துப் பிடித்துப் புன்னகைத்தாள்.
“அவர் கிளம்பிட்டார்..” என்றாள். மூர்த்தியைப் பாக்க வந்திருப்பான் என்ற எண்ணத்தில்.
“ம்ம். நீ வா போகலாம்..” என்றான், தலையுமின்றி வாலுமின்றி.
முதலில் புரியவில்லை. வீட்டிற்கு அழைத்துப் போக வந்திருப்பானோ..? எதேனும் விடயம் இருந்தால் செல்வன் தானே இவளிடம் கூறுவான். இவன் எதற்கு?
“இல்ல நாங்க எல்லாம் இங்க தான். நீங்களும் சின்னவரும் தான் அங்க..”
“எங்க?” – மணி
அவன் முகத்தில் கடினம். இவன் என்ன லூசா.. பெண்ணிற்கு எரிச்சல் வந்தது.
‘நீ எங்க கூப்பிடுறியோ அங்க தான் டா..’ “நம்ம வீட்டில?”
“ம்ம்.. நம்ம வீட்டுக்கு தான். கிளம்பு.” என்றான்.
ஆங்… இப்போ தானே இங்க இருக்க போறதா சொன்னோம். திரும்பவும் கூப்பிடுறான். லூசே தான்! தீர்மானித்து விட்டாள்.
இவனை இது வரை நேரில் அழைத்தது இல்லையே.. எப்படி அழைக்க… என்ன முறை.. அண்ணியின் மகனா? நந்தியின் அண்ணனா?
மகன் அளவுக்கு எல்லாம் யோசிக்க முடியவில்லை. அண்ணன் ஸ்தானத்தை தந்தாள்.
“அண்ணா..” அவள் ஆரம்பிக்கக் கூட இல்லை..
“வாய மூடு. யாருக்கு யாரு அண்ணா? மணின்னு கூப்பிடு”
‘ஏன் இத்தனை காரம் மிஸ்டர்.மணி?’ கேட்டாளில்லை.
‘அண்ணன் வேண்டாமா? மகனா இவன் எனக்கு? போய் தொலையட்டும்!’
“மணி, நான் இங்க தான் தங்க போறேன். சோ, என்னால உங்க கூட வர முடியாது. அப்படியே எனக்கு அங்க வர தோணினா… நானே வந்திடுவேன். கூட ஆள் இருக்கணும்ன்னு அவசியம் இல்ல. உங்களுக்கு வேலை எதுவும் இருக்கும். அத பாருங்க.. எதுக்கு என் கிட்ட நேரத்த வேஸ்ட் பண்ணிகிட்டு?”
அவன் அவசரம் அவனுக்கு. செல்வன் வீட்டில் இல்லை. மருத்துவமனை சென்றிருந்தான். இன்னும் அரை மணியேனும் எடுக்கும் அவன் வந்து சேர. வீட்டுப் பெண்களும் அடுக்களையில்.. அவர்கள் வருவதற்குள் அவளை அழைத்துக் கொண்டு, வெளியே காத்திருக்கும் காரில் எங்கேனும் சென்றுவிட வேண்டும். இவளுக்கு ஏன் புரியவில்லை. அவனுக்கும் கோபம் வந்தது. அதனால், “கிளம்புன்னா கிளம்ப மாட்டியா நீ?” சத்தம் வைத்தான்.
அவளுக்குக் கோபம் அதிகமானது.
“என்ன வேணும் உங்களுக்கு? எதுக்கு அவர் இல்லாத நேரம் வந்து என் கிட்ட கூச்சல் போடுறீங்க? எனக்கு பிடிச்ச இடத்தில் நான் இருந்துட்டு போறேன். உங்களுக்கு அதுல என்ன பிரச்சினை? எதனாலும் அவர் வந்த பிறகு அவர் கிட்ட பேசுங்க. எனக்கு படுக்கணும்.”
“அடம் பண்ணாம கிளம்பு.” அவளைக் கிளப்புவதிலேயே குறியாய் இருந்தான்.
ஏன் கிளம்புவதில் இத்தனை அவசரம் இவனுக்கு? கண்டிப்பாக ஏதோ சரியில்லை இவனிடம். என்ன? அவனையே பார்த்து நின்றாள்.
குடித்திருப்பான் போலும். கண்கள் சிவப்பேறி இருந்தது. ‘குடிச்சுட்டு வந்து கலாட்டா பண்றானா?’ கோபம் வந்தது.
“ப்ச்… எனக்கு டையர்டா இருக்கு. எதனாலும் அப்புறம் பேசலாமா?” வெளியே போ என்றாள் நாசுக்காக. அவன் கேட்டானில்லை.
“என்னங்க நீங்க.. கிளம்பு கிளம்புன்னு சொல்றீங்க? வா-ன்னா உடனே உங்க கூட கிளம்பிற அளவுக்கு நமக்கு ஒன்னும் பழக்கமில்லையே. தெரியாதவங்க கூட எல்லாம் எங்கேயும் போய் பழக்கம் இல்ல. இப்போ கிளம்புங்க தயவு செய்து!”
எதோ முடிவெடுத்தவன் போல் மூச்சை இழுத்து விட்டான்.
“நீ இங்க இருந்தது போதும். இனி மேல் என் கூட தான். அவசரத்துக்கு வேணுங்கறத மட்டும் எடித்துட்டு கிளம்பு. போதுமா.. இன்னும் விளக்கமா சொல்லணுமா?”
பைத்தியமா இவன் என்று பார்த்தாள்.
“எங்கேயும் வர முடியாது. இடத்தை காலி பண்றீங்களா? போதுமா.. இன்னும் விளக்கமா சொல்லணுமா?”
“நீ இல்லாம எங்கேயும் போறதா ஐடியா இல்ல! நீ தான் வேணும்.. வா கோமல். நீயா வாராட்டா வலுகட்டாயமா தூக்கிட்டு போக நான் ரெடி. உன் நிலமையில அது உனக்கு சம்மதமா? சொன்னத செய்வேன். வா” கொஞ்சம் கூட அசராமல் அழைத்தான்.
அவன் பேச்சு… அவன் அழைப்பு.. அவன் கோபம்.. அவன் அவசரம்… எதுவுமே புரியவில்லை.
“எங்க போறதா ப்ளான்?”
“பாம்பேக்கு” என்றான்.
என்ன உளறல் என்று பார்த்தாள். முகத்தில் அப்பட்டமாக எரிச்சலை காட்டினாள். இருந்தும் அந்த ஊரின் பெயர் கேட்டதும் துளசிக்கு மெல்ல வியர்க்கத் தான் செய்தது.
“என்ன மணி பிரச்சினை? பாம்பேல என்ன இருக்கு? எதுக்கு அங்க போகணும்? நான் எதுக்கு உங்க கூட.. எனக்கு ஒண்ணும் புரியல.”
“அங்க தான் நான் தங்கி இருந்த வீடு இருக்கு. ரெண்டு பேருக்கு அது போதும். வா போகலாம்.. அங்க உனக்கு வேண்டாம்னா… வேற எங்க விருப்பப்படுறியோ அங்க போகலாம்” என்றான் மீண்டும்.
‘மரை கழண்டுவிட்டதோ? டேய் லூசு.. குடுச்சுட்டு வந்து உளறுதே.. சாமி இவன் கிட்ட இருந்து காப்பாத்தேன்! டேய் போயேண்டா வெளில..’ கோபத்தையும் காட்ட முடியவில்லை. கத்தவும் முடியவில்லை!
“வா கோமல்..”
‘கோமல்? பாம்பே?’ ஏதோ இடறியது. “நீ யார்ன்னு எனக்கு தெரியல. ஏன் என்னை கூப்பிடுற.. தெரியல! தெரியவும் வேண்டாம். ஆனா, உன் கூட பெரிய வீட்டுக்கு கூட வர தயார இல்ல. அப்புறம் தானே பாம்பே எல்லாம்! நீ கிளம்பு” என்றாள். வார்த்தையில் கடினம். மரியாதை எல்லாம் காற்றோடு கரைந்து போயிருந்தது.
“என்னை நிஜமாவே தெரியலையா? பொய் சொல்லாத!”
சட்டையின் மேல் நான்கு பொத்தானைக் கழட்டினான்.
“ஏய்… என்ன பண்ற? போ வெளியில..” எரிச்சல் வந்தது.
மார்பில், தையல் போட்ட பழைய தழும்பைக் காட்டினான்.
“ஐஞ்சரை வருஷம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. நீ எனக்கு கொடுத்த காதல் பரிசு. இது வெறும் வெளி தழும்பு. உள்ள உன் உருவத்தை பச்சை குத்தி.. உன் கூட வாழ்ந்திட்டு இருக்கேன். இனி மேலும் உன்ன விட முடியாது. வா போகலாம். சேந்து வாழலாம்… ” என்றான், கெஞ்சலாய்.
‘ஓ’.. அவன் உரைத்த ஊரின் பெயரும்.. அவன் காட்டிய தழும்பும்.. கூறும் கதையும் எதையோ நினைவு படுத்தியது. அவளிடம் வந்த பலரை இப்படி தான் தாக்கியிருக்கிறாள். தெரியாமலில்லை. இருந்தும் காட்டிக் கொள்ள முடியாதே. நீயும் அந்த ஓநாய்களில் ஒருவனா? கேட்க முடியவில்லை! அவனைப் பார்க்கவே கேவலமாகத் தோன்றியது. கூடவே அவன் கெஞ்சுவதைப் பார்க்க பாவமாகவும் தோன்றியது!
அவன் கண்களை பார்த்தாள். சிகப்பேறிய கண்களில் யாசகம். ‘வந்துவிடேன்’ என்ற யாசகம்.
அவளிடம் யாசிக்கும் கண்களில் நிச்சயம் காதல் தான். மறுக்க முடியாது. ஆனால் இது வரம்பு மீறிய ஆசை என்று புரியும் வயது தானே.
“சத்தியமா நீங்க பேசறது எனக்கு புரியல. நான் இந்த வீட்டில தான் முதல் முதலா உங்கள பார்த்திருக்கேன். அதுக்கு முன்ன பார்த்தது கூட இல்ல. இந்த ஐஞ்சு வருஷ கதை? எனக்கு தெரியல! தெரிய வேண்டாம். ஆனா.. நீங்க தப்பான ஆள் கிட்ட பேசிட்டு இருக்கீங்க, அத மட்டும் தெரிஞ்சுக்கோங்க. இப்போ தயவு செஞ்சு இங்க இருந்து கிளம்புங்க” என்றாள் இழுத்து பிடித்த பொறுமையோடே.
“நீ தான் தப்பான ஆள் கூட வாழ்ந்துட்டு இருக்க. அவன் வேண்டாம் உனக்கு. என் கூட வா கோமல்.. உன்ன நான் சந்தோஷமா வச்சுக்கிறேன்..” கெஞ்சாத குறையாக அழைத்தான்.
கேட்கவே கூசியது. பொறுமை போனது. இவனுக்குச் சொன்னால் புரியாத? மாமன் மனைவியிடம் பேசும் பேச்சா இது? “நான் மூர்த்தியோட வைஃப். நீ கிளம்பு. ரெண்டு நாள் கழிச்சு வா. இப்போ நீ என் கிட்ட சொன்னதை, ஆம்பளையா அவர் கண் பார்த்து சொல்லு.. சொல்லிட்டு, முடிஞ்சா முழுசா போ! இப்போ இடத்த காலி பண்ணு!”
சத்தமாய் வாய்விட்டுச் சிரித்தான்.
“யாரு? மூர்த்தி.. உன் புருஷனா? எப்படி? கழுத்தில ஒண்ணு தொங்குதே அதுனாலையா..? இல்ல உன் வயத்தில ஒண்ணு இருக்கே அதனாலையா?
ரெண்டையுமே என்னால தரமுடியும்”
“வெளில போடா நாயே.. உன் ஆம்பிளை திமிற அவர் கிட்டக் காட்டு. இப்போ போஓஓ டாஆஆ” மூச்சு வாங்கக் கத்தினாள்.
அந்த சத்தம் அவனை அசைத்ததாகத் தெரியவில்லை.
“அன்னைக்கு நான் உன்ன பாக்கும் போது கருப்பு மணிய, தாலின்னு போட்டிருந்த. எவனுக்கோ பொண்டாட்டியா இருக்கும் போது தான்.. முதல் முதலா உன்ன தொட்டேன். எனக்கு அது எல்லாம் அப்போ புதுசா.. சரியா சமாளிக்க தெரியலை. உன்ன தவற விட்டுடேன்.
இப்போ தங்க தாலி போட்டுகிட்டு வேற எவனுக்கோ பொண்டாட்டியா இருக்க. அவ்வளவு தான் வித்தியாசம். இந்த முறை தவற விட மாட்டேன்.
இந்த கலர் கலர் தாலி எல்லாம் உன் திருப்திக்கு.
எனக்கு அப்பவும் இப்பவும் அதே கோமல் தான் நீ. நான் பார்த்து ரசிச்சு எனக்கே வேணும்ன்னு நினைச்ச அதே கோமல் தான். உனக்கு தெரியுமா.. மூர்த்திக்கு முன்னாடியே உன்ன தொட்டது நான் தான். அப்போ நியாயபடி நான் தானே உனக்கு எல்லாம்?”
நாராசமான வார்த்தைகள். பெண் துடித்துப் போயிருக்க வேண்டுமோ? இவன் தன்னை தொட்டு விட்டதை எண்ணிக் கூனி குறுக வேண்டுமோ?
அப்படி எல்லாம் ஒன்றும் நடப்பதாய் தெரியவில்லை. ‘பேசி முடிச்சுட்டியா’ என்ற பார்வை பார்த்தாள். இப்படி ஒரு அலட்சிய பார்வையைக் கண்டிப்பாக எதிர்பார்த்திருக்க மாட்டான்.
“ஏதோ பஸ்-ல கர்சீப் போட்டு இடம் பிடிச்சமாதிரி உளறிட்டே இருக்க.. நீ இல்ல…. உன்ன மாதிரி நிறைய பொறுக்கி நாய் எல்லாம் என்னை உரசிடுச்சு. அதுக்கு கூப்பிடுற நாய் கூட எல்லாம் போக முடியுமா? ப்ச்.. உன் கிட்ட பேச கூட பிடிக்கல! வெளியில போடா.” என்றாள் அசராமல்.
அழைத்ததும் வர மாட்டாள் என்று தெரியும் தான். இருந்தும் ஆழம் பார்த்தான். இவளிடம் பேசி புரியவைக்க முடியாது என்று தோன்றியது. மயிலிடம் யாரவது இறகைக் கேட்டால் அது தருமா? எடுத்துக் கொள்ளத் துணிந்தான்.
“இப்போ நீயா வந்தா.. உனக்கு மரியாத. இல்ல ஊர் பூரா நீ யாரு… என்ன செஞ்சிட்டு இருந்தேன்னு சொல்லி.. அவங்கள வச்சே உன்ன ஊர விட்டு துரத்த வச்சிடுவேன். அப்புறம் திரும்பவும் உன்னோட பழைய வாழ்க்கைய தான் வாழணும்.. வாழ வைப்பேன்.. நீ சொன்னியே நாய்ங்க.. அதுங்க கூட!” மிரட்டலில் இறங்கினான்.
“ஐயோ… அம்மா… பயந்து நடுங்கிட்டேன். போதுமா? ஆமா.. நீ, ஊரு பூரா என்ன சொல்ல போற? நீ என்னை அங்க பார்த்தேன்னா? அங்க உனக்கு என்ன வேலைன்னு உன் கிட்ட கேக்க மாட்டாங்களா? அப்போ என்ன சொல்லுவ?
என்னை அங்க வாழ வைப்பியா? அப்போ அது தான் நீ பாம்பேல செய்யறியா…? வெறும் ஓநாய் மட்டுமில்ல.. குள்ள நரியும் நீ தான்.. இல்லையா?
நீ என்ன.. என்னைப் பத்தி வெளியில சொல்லறது. நான் பானு..ம்மாட்ட சொல்றேன்.. உங்க தவ புதல்வன், பொம்பளைங்கள கூட்டி கொடுத்து.. அவங்க கண்ணீர்ல சோறு பொங்கி தின்றான்னு.
நான் சொல்றேன் நந்தினிட்ட… உன் அண்ணன் கெடுத்து, உடம்போட உணர்வையும் சூரையாடுற பொண்ணுங்களுக்கு தான் உன் புருஷன் வாழ வழி காட்டறான்னு!
வந்துட்டான் ப்ளாக் மெயில் பண்ண. போட வெளில.” என்றாள்.
பார்வையில் தான் எத்தனை ஏளனம்? இவளுக்குப் பயம் வராதா? கொஞ்சம் கூட அசரவில்லையே.
பார்த்தான். சிரித்தான். ரசித்தான்.
அவள் தைரியம்! அது தானே அவனை அவளிடம் இழுத்தது. அவன் முரட்டுப் பசு, அவனை இன்றும் முட்டி பார்த்தது. பெண்ணிடம் மயங்கிப் போனான்.
அவள் கண்ணில் பயத்தைப் பார்த்தே ஆகவேண்டும். அவளை தன்னோடு அழைத்துச் சென்றே ஆகவேண்டும்.
மீதம் இருந்த பொத்தானைக் கழட்டினான். சட்டையைத் தூரப் போடவும், பெண்ணை பயம் கவ்விப் பிடித்தது. முகத்தில் பயத்தை காட்டாமலிருக்க பாடுபடுவது தெரிந்தது. புன்னகைத்தான்.
கை வயிற்றை பிடித்துக் கொண்டது. ‘மூர்த்தி சார்… ஏன் என்ன விட்டுட்டு போனீங்க’ மனம் கதற ஆரம்பித்தது.
வாசலை அடைத்துக் கொண்டு அவன் நிற்க எப்படி வெளியே செல்ல?
போதையில் யோசிக்க முடியாத.. நிதாமில்லாத முரடனாய் தெரிந்தான். இவனிடமிருந்து தன்னையும் காத்து பிள்ளையும் காக்க வேண்டுமே! கண்டிப்பாக, இந்த நிலையில் ஓட முடியாது. எதிர்த்துப் போராட முடியாது. மூர்த்தியை தவிர வேறு ஒருவன் தன்னை தீண்டுவதா? ‘மூர்த்தி சார்’ அழுகை பீரிட்டு வந்தது. இவன் முன் அழுவதா? அவள் கண்ணீர் அவள் கணவன் முன் மட்டும் தான். அன்றும் இன்றும்!
இடி போல் இடிக்க ஆரம்பித்த இதயத்தை கட்டுப்படுத்த தெரியவில்லை. முத்து முத்தாக வியர்க்க ஆரம்பித்தது. இது என்ன கொடுமை… இவர்களிடம் இருந்து விடிவே இல்லையா? இவனிடம் எப்படி விளக்குவது? முன்பு நடந்ததாக இவன் சொல்லுவதெல்லாம் எப்படியோ.. இன்று இது? அதே செயல் தான், ஆனால் பாவமில்லையா?
“தப்பு மணி… இது ரொம்ப பெரிய தப்பு! நீ ஆசை பட்டவ நான் இல்ல. நான் உன் சொந்த தாய் மாமன் மனைவி. உனக்கு அம்மா மாதிரி”
“வாய மூடு”
“மணி கொஞ்சம் யோசி. இதுனால உனக்கு என்ன கிடைக்க போகுது. உன் கை என்மேல படுறதுக்கு முன்ன என் உயிர் போகாட்டியும்.. அதுக்கு அப்புறம் அது கண்டிப்பா போயிடும். உன்னால எனக்கு ஏதாவது ஆச்சுனா.. இந்த உலகத்தில எந்த மூலையில நீ ஒளிஞ்சாலும்.. என் புருஷன் உன்ன தேடி பிடிச்சு அழிச்சிடுவார். இதோட முடிவு யாருக்குமே நல்லா இருக்க போறது இல்ல. ப்ளீஸ்.. போயிடு! நான் யார் கிட்டையும் இத பத்தி மூச்சு கூட விட மாட்டேன்.”
“ஓ.. என் மேல இவ்வளவு அக்கறையா?” சிரித்தான். “உன்னால தான் என் வாழ்க்கையே தடம் மாறிச்சு தெரியுமா? வெறும் சரக்கு மட்டும் தான் பழகியிருந்தேன். ஃப்ரெண்ட்ஸோட ஊர் ஊரா ஜாலியா சுத்திட்டு இருந்தேன். இந்த பொண்ணு.. பணம்.. இது பத்தி எல்லாம் யோசிச்சது கூட கிடையாது. என்னைக்கு உன்ன பார்த்தேனோ… அப்போ சருக்கினேன். அந்த இடம் பிடிக்கலனா கூட, உனக்காக… உன்ன மட்டுமே நினைச்சுகிட்டு அங்கேயே சுத்திட்டு, வேண்டாத வேலை எல்லாம் உனக்காக செஞ்சுட்டு இருந்தா.. நீ இங்க இவன் கூட. ச்சீ… நினைக்கவே முடியலை!
நீ இல்லனாலும் நான் அழிஞ்சு போயிடுவேன். அதுக்கு உன் கூட வாழ்ந்திட்டு.. உனக்காக என் உயிர குடுக்கவும் தயார் தான். உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது..? என் உயிர உனக்காக குடுக்கற அளவுக்கு எனக்கு உன்ன பிடிக்கும்! ஐஞ்சு வருஷம் உன் நினைவா வாழ்ந்திருக்கேன்… இனி எதனாலும் நீயும் நானும் தான். வந்திடு.. எங்கேயாவது போய் புதுசா ஆரம்பிப்போம்.!”
“மணி உன் காதல் புனிதம் தான். ஆனா நீ காதலிக்கிற ஆள் தப்பு மணி. நீ பேசறது அபத்தமா இல்ல? தாரத்துக்கும் தாய்க்கும் கூடாவ வித்தியாசம் தெரியல? நான் உன் மாமன் பொண்டாட்டி, மணி! உன் கூட பிறந்தவளுக்கு அக்கா முறை. எப்படி சுத்தி வந்தாலும் உனக்கும் எனக்கு.. ஐயோ… நினைக்கவே கேவலமா இல்லியா?” இதற்கும் மேல் என்ன கூறுவதென்றே புரியவில்லை.
“அவ்வளவு தான உன் பிரச்சினை…?”
அவனுக்கு அவள் வேண்டும் அவ்வளவு தான். அவள் எதிர்பார்க்கும் முன் தாலியைக் கழட்டி கட்டிலில் விட்டெறிந்தான்.
துளசியின் உயிரே போனது. “பாவி.. அது புனிதம் தெரியுமா உனக்கு? நீ இந்த குடும்பத்துலயா பிறந்தா?” சீரிக்கொண்டே கட்டில் அமர்ந்து தாலியை எடுக்கும் முன்..
“அது ஒண்ணு தானே இத்தன பிரச்சினைக்கும் காரணம். இப்போ ஒரு முறையும் இல்ல.. நமக்கு. நீ கோமல். நான் மணி. இப்போ வா..” என்று அவளை நெருங்க எத்தனிக்க..
“தொடாத என்னை. அந்த தாலி என் கழுத்தில இருந்தாலும் இல்லேனாலும் நான் மூர்த்தி பொண்டாட்டி தான்.. என்னை ஒண்ணும் பண்ணிடாத.. கிட்ட வரதா ப்ளீஸ்..” கண்ணில் பயம்.. குளம் கட்ட ஆரம்பித்தது.
அவள் பயம் பார்க்க விரும்பினவனுக்கு அந்த நீர் கோர்த்த கண்கள் பிடிக்கவில்லை. “ப்ச்! ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேன்ற.. இந்த நிலமைல உன்ன என்ன பண்ண போறேன்.. எத்தன வருஷம் ஆனாலும் உன் மனசு மாற காத்திருப்பேன். இப்போ வா போலம்..” கை நீட்டி தன்மையாகத் தான் அழைத்தான். இந்த நிமிடம் வரை அவளைத் தீண்டும் நோக்கமில்லை. ஆனால் அது அவனுக்கு மட்டும் தானே தெரியும்!
“அவ மட்டும் போதுமா? நந்தினியையும் தங்கத்தையும் வரச் சொல்லவா?” சத்தம் அவன் பின்னாலிருந்து வந்தது.
திரும்பி பார்க்காமலே தெரிந்தது அது யார் என்று. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது போல்.. சும்மா நின்றவன் மனதில் கோபத்தை ஊட்டியது வந்தவர் பேச்சு.
“எந்த அம்மாக்கும் இப்படி ஒரு பாக்கியம் கிடைக்காது. நான் என்ன புண்ணியம் செய்தேனோ… இந்த காட்சியைப் பார்க்க!
அவ மூர்த்தியோட பொண்டாட்டி டா. உன் மாமன் மனைவி!
ச்ச.. என்ன மனுஷன் நீ? நீ செத்துட்டன்னு நினைச்சுக்குறேன். போயிடு இங்க இருந்து.”
உள்ளே இறங்கி இருந்த போதையோ.. கட்டிலில் அவன் முன் இருந்த போதையோ.. பானுவின் பேச்சு எரிச்சலை மூட்டியது.
இன்றும் மூர்த்தி தானா…? திரும்பி பானுவை பார்த்தான். ஒரு கையில் கத்தியும் மறுகையில் அருவட்டியில் மரிச்சினியுமாக நின்றிருந்தார்.
“என் வாழ்க்கைய இது வரைக்கும் பாழாக்கினது போதலியா.. குத்தி கொல்ல வந்து நிக்கறியா? என்னைக்கு நீ எனக்கு அம்மாவா இருந்திருக்க? உனக்கு எல்லாமே மூர்த்தி தானே.. போ அவன் கிட்டயே.. எனக்கு நீங்க யாருமே வேண்டாம். யாருமே எனக்குன்னு இல்ல… நீ குடுக்கற உறவு முறை மட்டும் எதுக்கு? எனக்கு அதுவும் வேண்டாம். நீ யாரோ… இனிமே நான் யாரோ! போ என் கண்ணு முன்ன இருந்து..” கண் மண் தெரியாத கோபம். நிதானம் இழந்தான். அவன் வந்த நோக்கம் என்ன? நடந்துகொண்டிருப்பது என்ன? ம்ம்ஹூம்.. இதற்கு மேல் பொறுத்து பயன் என்ன? பொறுமைக்கு எல்லை உண்டு தானே.. ஐந்து வருட காத்திருப்பு கையை விட்டு நழுவுவதா?
பானு சுதாரிக்கும் முன்.. அவரை வெளியே தள்ள.. அவன் தள்ளிய வேகத்தில் அவர் கீழே விழ.. திரும்பி துளசியைப் பார்க்க.. அவள் அவனோடு வருவதற்கான அறிகுறி தெரியவில்லை! “மரியாதையா வான்னா வர மாட்ட இல்ல… அப்போ சரி… உன் இஷ்டம்”
கதவை தாழிட்டான்.