சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
அவளிடம் ஒரு ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. அவளுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் தேவைப்பட்டால் எப்பொழுதுமே அவள் ஒரு வாரம் முன்பு சொல்ல வேண்டும். அப்போதுதான் அவளுடைய தந்தை அதனை ஏற்பாடு செய்து கொடுக்க முடியும். இப்படி திடீரென்று பணம் தேவைப்பட்டால் தாய் பெரியம்மாவிடம் தான் கேட்டு வாங்கி கொடுப்பாள். பெரியம்மாவும் சாதாரணமாக அந்த பணத்தினை எடுத்து கொடுத்து விடமாட்டார். லட்சுமியின் மனம் நோகும்படி ஏதாவது சொல்லிவிட்டுத்தான் கொடுப்பார். அதனாலேயே வெண்மதி அப்படி திடீரென்று பணம் கேட்பதை நிறுத்தி தேவையான பணத்தினை இரண்டு வாரங்களுக்கு முன்பு தந்தையிடம் கூறி விடுவாள்.
எப்பொழுதாவது திடீரென்று பணம் தேவைப்பட்டாலும் கவிதாவிடம் வாங்கி பின்பு திருப்பிக் கொடுத்து விடுவாள் இன்று அவள் பக்கத்தில் இல்லை. பெரியம்மாவிடம் கேட்பதை தவிர வேறு வழி கிடையாது என்று நினைத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
அப்போது “என்ன பிரச்சனை மதி?” என்று விஜய் குரல் கேட்க ஆர்வமாக திரும்பினாள்.
“இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று கேட்க அவள் எல்லாவற்றையும் அவனிடம் கூறினாள்.
“சரி இப்போ என்ன பண்ண போற?”
“என்ன பண்றதுன்னு எனக்கு புரியல விஜய்.”
“சரி அந்த லேப்டாப்பை என்கிட்ட குடு.” என்று அவன் கூற
“நாளைக்கு நான் இந்த லேப்டாப்பை அவங்ககிட்ட கொடுக்கணும். ஆனா இப்போ என்கிட்ட 15000 இல்லை.” என்று தயங்கியபடி கூறினாள்.
“சரி நான் பாத்துக்குறேன்.” என்று கூறிவிட்டு அந்த லேப்டாப்பை வாங்கிக்கொண்டு சென்றான். அடுத்த நாள் காலை பேருந்தை விட்டு கீழே இறங்கி நடந்து வந்து கொண்டிருக்கும்போது
“இந்தா மதி லேப்டாப்” என்று அவளிடம் நீட்டினான் விஜய்.
ஆச்சரியமாக அதை வாங்கியவள் திருப்பி பார்த்தாள்.
“லேப்டாப் ரிப்பேர் பண்ணியாச்சா?”
“பண்ணியாச்சு.”
“எப்படி பண்ணீங்க? ஒரு வாரம் ஆகும்னு சொன்னாங்க.”
“என்னோட பழைய லேப்டாப்பில் இருந்து ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் எடுத்து இதுல மாத்தி குடுத்துட்டாங்க. நல்லவேளை இதே பிராண்ட் லேப்டாப் என்கிட்ட இருந்துச்சு.”
“ஓ அப்படியா? ரொம்ப தேங்க்ஸ். எவ்வளவு ஆச்சு?” என்று கேட்டாள்.
“நான் என்ன லேப்டாப் கடையா வச்சிருக்கேன்?” என்று கேட்க
“சும்மா என்றால் வேண்டாம்.” என்று அவள் அந்த லேப்டாப்பை திரும்பி கொடுக்க
‘இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை.’ என்று தனக்குத்தானே கூறினாலும்
“சரி சரி. எப்போ முடியுமோ அப்போ காசு கொடுத்துடு. எங்க உன்னோட உயிர்த்தோழி எப்பவும் ஒட்டிக்கிட்டுதானே சுத்துவீங்க.”
“அவள் ஒரு கல்யாணத்துக்கு வெளியூர் போய் இருக்கா. வருவதற்கு நாலு நாள் ஆகும்.”
“ஓ அப்படியா ரொம்ப வசதியா போச்சு.”
“என்ன வசதியா போச்சு?”
“இல்ல உன்கூட தனியா பேசலாமே.”
“என்கூட என்ன தனியா பேசணும்?”
“இன்னைக்கு நாம வெளியே போய் சாப்பிடலாமா?”
“ஏன் இன்னைக்கு உங்களுக்கு பர்த்டே வா?” என்று கிண்டலாகக் கேட்க “இல்லை சும்மா உன் கூட கொஞ்ச நேரம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு தான். இப்படி எப்பவுமே உண்மையை சொல்லி பழகுங்க. நான் உங்க கூட வரேன்.” என்று கூறினாள்
அசிஸ்டன்ட் மேனேஜர் ரமேசை பார்த்து அந்த லேப்டாப்பை கொடுத்தாள்.
அவர் அதை வாங்கி பார்த்து “என்னமோ பண்ணி ரெடி பண்ணிட்டீங்க. இது எத்தனை நாளைக்கு வருமோ தெரியல. அந்த லேப்டாப் கொஞ்சம் காஸ்ட்லி அதனாலதான் அப்படி பேசிட்டேன். சரி. இனிமேலாவது கேர்ஃபுல்லா இருங்க”
என்று மறைமுகமாக மன்னிப்பு கேட்கும் விதமாக கூறினான் ரமேஷ். “இனிமே கேர்ஃபுல்லா இருக்கிறேன் சார்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து வந்தாள் வெண்மதி.
அவளிடமிருந்து எடுத்துச் சென்றிருந்த கணினியை சரி செய்து எடுத்து வந்து வைத்துவிட்டு சென்றான் டெக்னிகல் சப்போர்ட் சுந்தர். அவருக்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டு தன் வேலையை ஆரம்பித்தாள்.
அன்று மதியம் விஜய் அவளைத் வெளியே கூட்டி சென்றான்.
“என்னோட பைக்ல ஏறு.” என்று பைக்கை காட்டினான்.
“வேண்டாம் இங்கு என்னோடு சொந்தக்காரங்க சிலர் இருக்கிறார்கள். என்னை உங்க கூட பாத்துட்டா பெரிய பிரச்சனை ஆயிடும். நாம ஆட்டோல போலாம்.” என்று கூற அவன் ஒரு ஆட்டோவை பிடித்தான். அவள் துப்பட்டாவை எடுத்து தன் முகத்தை மூடிக்கொண்டாள். அவர்கள் இருவரும் ஒரு ஹோட்டலுக்கு சென்றனர்.
பேசிக்கொண்டே வெகுநேரம் சாப்பிட்டனர்.
“எங்க உங்க பிரண்டு செல்வா?”
“அவனை கழட்டி விட்டுட்டு வந்துட்டேன்.” என்று சிரித்தான்.
“ஏன்” என்று கேட்டாள்.
“அப்ப தானே உன் கூட தனியா பேச முடியும்.” என்று அவளை உற்றுப் பார்த்தான்.
“இந்த கம்மல் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு. இதுக்கு நீ ஃப்ரீ ஹேர் விட்டா ரொம்ப நல்லா இருக்கும். உனக்கு ரெட் கலர் நல்லா இருக்கு.”
“ அப்படியா?” என்று அவள் கேட்க
“ரெட் கலர் மட்டுமில்ல. கிரீன், எல்லோ கூட நல்லா இருக்கு. அப்புறம் உன்னோட ஐஸ் ரொம்ப அழகு. அப்புறம் லிப்ஸ்.” என்று அவன் கூற
“சரி போதும். நாம கிளம்பலாமா?” என்று வெண்மதி கேட்க
“இன்னைக்கு சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரமா கம்பெனியிலிருந்து கிளம்பி நாம பக்கத்துல இருக்கிற பார்க்குக்கு போகலாமா?” என்று கேட்டான்.
‘வேண்டாம்’ என்று சொல் என்று ஒரு மனம் கூறினாலும் உதடுகள்
“சரி போகலாம்” என்று கூறியது.
.
அன்று மாலை அவனுடன் பூங்காவிற்கு சென்று இருவரும் வெகு நேரம் பேசிவிட்டு பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
“சரி நாளைக்கு பார்க்கலாம்.” என்று அவன் கூற
“பாக்கலாம்.” என்று கூறிவிட்டு வீடு திரும்பினாள்.
வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகும் அவனுடைய ஞாபகமாகவே இருந்தது. அவளுக்கு அவனோடு பேசி சிரித்தது ஞாபகம் வந்து அவளும் தனியாக சிரித்துக்கொண்டாள். இயந்திரத்தனமாக சாப்பிட்டுவிட்டு வேலைகளை முடித்துவிட்டு படுக்கையில் படுத்தாள் வெண்மதி கண்ணை மூடினால் அவனது முகமே தோன்றியது. சுத்தமாக தூக்கம் வரவில்லை பெரும் அவஸ்தையாக இருந்தது.
பெரியம்மாவின் அதிகாரத்தின் கீழ் வளர்ந்து பழகிய அவளுக்கு அவனுடைய நட்பு புதிய உலகத்தை காண்பித்தது. அந்த உலகம் மிகவும் வண்ணமயமாக இருந்தது. அவனது பார்வை பேச்சு அவளுடைய மனதில் புதுவிதமான உணர்வுகளைத் தூண்டியது. இதுவரை அவள் உணர்ந்திராத உணர்வுகள். அவளுடைய வயது பெண்கள் ஆண்களை பற்றி பேசும்பொழுது இவள் ஆர்வம் காட்டியது கிடையாது.
இப்படி அவள் மாறியது அவளுக்கே வியப்பாக இருந்தது. அடுத்த நாள் தன்னிடமிருந்த ஒரு நல்ல சல்வாரை எடுத்து அணிந்துகொண்டு அதற்கேற்றார்போல தோடும் அணிந்துகொண்டு தயாராகி சென்றாள். கம்பெனிக்கு சென்றதும் விழிகள் அவனை தேடியது.
“ஹாய்” என்றபடி பின்னிருந்து கூப்பிட்டான். அவள் ஆர்வமாக திரும்பினாள்.
“இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க. இந்த சல்வார் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு.” என்று புகழ்ந்தான்.
“இன்னைக்கு மதியானம் நாம வெளியே போகலாமா?”
“மத்தியானம் சாப்பிட தானே? போகலாம்.” என்று அவள் கூற
“சாப்பிட போகலாம். சாப்பிட்டு முடிச்சிட்டு அப்படியே பார்க் போயிட்டு வரலாமா?” என்று கேட்க
“அவ்வளவு நேரம் பார்க் போர் அடிக்குமே” என்று கேட்க
“அப்போ பார்க் வேண்டாம். வேற எங்கேயாவது சுத்திட்டு வரலாம்.” “ஐயையோ என்னோட சொந்தக்காரங்க யாராவது என்னை பாத்துட்டா நான் என்ன செய்யறது?”
“நீ முகத்தை மூடிக்கொண்டு வா. பிரச்சனை வராது. நான் என்னோட பைக் எடுத்துட்டு வரேன். நாம பைக்கிலேயே போலாம்.” என்று கூறிவிட்டு சென்றான்.
அன்று மதிய உணவு இடைவேளையின் பொழுது இருவரும் பைக்கில் ஏறி ஊரை சுற்றினர். அடுத்து வந்த இரண்டு நாட்களும் அப்படியே சென்றது. அவளுக்கு பொழுது ஆனந்தமயமாக கழிந்தது.
அன்று கவிதா ஊரில் இருந்து திரும்பி வந்திருந்தாள். இவளை பார்த்ததும் ஓடி வந்து கட்டி பிடித்துக் கொண்டாள்.
“என்னடி நான் இல்லாம உனக்கு ரொம்ப போர் அடிச்சிதா?” என்று அக்கறையாக விசாரித்தாள் .
வெண்மதிக்கு சுத்தமாக கவிதாவின் ஞாபகம் இந்த நான்கு நாட்களாக வரவில்லை. அவளது மனம் முழுவதும் ஆக்கிரமித்து கொண்டிருந்தவன் விஜய் மட்டுமே. இதை அவளிடம் சொல்லாமல்
“ஆமாண்டி எனக்கு போர் அடிச்சது.” என்று பொய் சொன்னாள்.
“நானும் இந்த நாலு நாள் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன். சரி வா” என்று கூறி விட்டு இருவரும் பேருந்து நிலையத்துக்கு வந்து பேருந்தில் ஏறி கம்பெனிக்கு வந்தனர்.
இருவரும் கணினியின் முன்பு அமர்ந்தனர்.
“மதி இந்த நாலு நாளா நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்த? நான் எல்லாத்தையும் கேட்ச் அப் பண்ணனும். சீக்கிரம் சொல்லு.” என்று கேட்க. வெண்மதி தடுமாறினாள். அவள்தான் எதுவுமே செய்யவே இல்லையே “இல்லடி சிஸ்டம் கொஞ்சம் ரிப்பேர். அதனால எதுவுமே செய்யல. அதுவும் இல்லாம நீ இல்லாம செய்ய எனக்கு பிடிக்கல கவி.” என்று கவிதா தான் காரணம் என்பது போல கூறினாள்.
“அட போடி லூசு. இப்படியா இருப்ப. சரி பரவாயில்லை. நாம ரெண்டு பேரும் சேர்ந்து வேலையே சீக்கிரமா முடிச்சுடுவோம்.” என்று கூறி இருவரும் வேலையை ஆரம்பித்தனர்.