சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“மதி முதல்ல என்னோட முகத்தை பார்த்து பேசு.” என்று கவிதா அவள் கன்னத்தை பிடித்து திருப்பினாள்.
“சரி என்ன சொல்லு.” என்று சலித்துக்கொண்டே வெண்மதி கேட்டாள். “நானும் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கேன். நீ ரொம்ப மாறிட்ட. ஏதோ டிஸ்டர்ப்டா இருக்க. என்ன நடக்குது?” என்று கேட்க “ஒன்னும் நடக்கல. நம்ம வேலையை பார்ப்போமா?” என்று பேச்சை திசை திருப்ப முயன்றாள் வெண்மதி.
“இல்லை. நீ என்கிட்டே எதையோ மறைக்கிற. நான் உன்னையும் விஜயையும் பாத்துக்கிட்டு தான் இருக்கேன். உங்களுக்குள்ள ஏதாவது…..” என்று முடிக்காமல் கேட்டாள் கவிதா.
வெண்மதி அமைதியாக இருக்கவும் “அப்ப ஏதோ இருக்கு. இதெல்லாம் நமக்கு தேவையா? நம்மளோட சூழ்நிலை இதுக்கு எல்லாம் சரியா வருமான்னு யோசிச்சியா? வெண்மதியும் கவிதாவும் பள்ளி பருவத்திலிருந்து தோழிகள். வெண்மதி கவிதாவிடம் எந்த ஒரு சாதாரண விஷயத்தைக்கூட மறைத்தது கிடையாது. இருவர்களும் அவரவர் வீட்டில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை கூட பகிர்ந்து கொள்வார்கள். எனவே வெண்மதியின் சூழ்நிலை, அவளுடைய படிப்பு, அவளுக்கு கிடைக்கப்போகும் வேலை இவையெல்லாம் எவ்வளவு முக்கியம் என்பது கவிதாவுக்கு நன்றாகவே தெரியும்.
இந்த சூழ்நிலையில் தோழி படிப்பில் கவனத்தை செலுத்தாமல் மனதை அலை பாய விடுவது அவளுக்கு நல்லது இல்லை என்று வருத்தப்பட்டாள். எனவே விடாப்பிடியாக அவளை இதைப்பற்றி கேட்டாள்.
“சொல்லுடி உன்னைத்தான் கேட்கிறேன். உனக்கு இப்போ இதெல்லாம் தேவையா?” என்று கேட்க, இவள். வெண்மதி விஜய் நட்பினை பற்றி கேட்காமல் இருக்க செய்ய வேண்டும் என்று நினைத்தவள் கோபமாக பேசினாள்.
“எனக்கு தேவையோ தேவை இல்லையோ. இதைப்பற்றி நீ இனிமே கேட்காதே.”
“ஏண்டி கேட்கக்கூடாது?”
“கேட்காதே என்றால் கேட்காதே. அவ்வளவுதான். நான் சொல்லுவேன்.”
“கேட்டால் என்னடி செய்வ?”
“கவி எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. நீ அந்த லிமிட்டை தாண்டி பேசுற.”
“யாரு நான் லிமிட்டை தாண்டி பேசுறேன். சரிதான். உனக்கு என்னமோ ஆயிடுச்சு.”
“ஆமாம். எனக்கு என்னமோ ஆயிடுச்சு. நீ இந்த விஷயத்திலே தேவையில்லாமல் மூக்கை நுழைக்காதே. உன்னோட வேலையை பாரு.”
“மூக்கை நுழைத்தால் என்னடி செய்வ?”
“மரியாதை கெட்டுப் போயிடும்.” என்று கோபமாக கூற கவிதாவின் முகம் சுருங்கியது.
கோபத்தில் வெண்மதி அப்படி பேசி விட்டாலும் அவளுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. எனினும் அவளாக கவிதாவிடம் சென்று இதைப்பற்றி பேசினால் திரும்பவும் அவள் விஜய் பற்றி பேச ஆரம்பித்து விடுவாள். எனவே இரண்டு மூன்று நாட்கள் போகட்டும் அப்புறம் சமாதான படுத்தலாம் என்று அமைதியாக இருந்து விட்டாள்.
அடுத்த வந்து நான்கைந்து நாட்களில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. கோவிந்தன் வெண்மதியை கவிதாவின் வீட்டில் வழக்கம்போல விட இருவரும் அமைதியாகவே நடந்து பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்தில் ஏறி பேசிக் கொள்ளாமலேயே கம்பெனிக்கு வந்து அவரவர் வேலைகளை செய்து வீடு திரும்பினார்.
பேசாமல் இருப்பது இருவருக்குமே மிகவும் கடினமாகவும் வருத்தமாகவும் இருந்தது. ஒருநாள் மதிய உணவின் பொழுது வெண்மதியே கவிதாவிடம் பேச்சு கொடுத்தாள்
“கவி நான் சொல்றதை கொஞ்சம் கேளு. வீட்ல பெரியம்மா என்னை படிக்கவே விட மாட்டேங்கிறாங்க. படிக்கலாம்னு புக் எடுத்தா ஏதாவது வேலை சொல்றாங்க. செய்யாமல் இருக்க முடியல. அதனாலதான் நான் கொஞ்சம் டென்ஷனா இருந்தேன். மத்தபடி வேற எதுவும் கிடையாது. ப்ளீஸ் சாரி டி.” என்று கூற கவிதாவுக்கு இவள் சொல்வதில் முழு உண்மை இல்லை என்பது தெளிவாக தெரிந்தாலும் வெண்மதி இப்பொழுது இருக்கும் மனநிலையில் கவிதா எது சொன்னாலும் அவளுக்கு புரிய போவது கிடையாது என்பது நன்றாக தெரிந்ததால் அவளும் சமாதானமாக பேச ஆரம்பித்தாள்.
“ஓ அப்படியா? அவங்களுக்கு தெரியிற மாதிரி இடத்தில உட்கார்ந்து படிக்காத. தூங்கப் போறேன்னு சொல்லிட்டு போய் படி.” என்று அவளுக்கு தெரிந்த வழி ஒன்றைக் கூறினாள்.
கவிதா சாதாரணமாக கூறினாலும் அதில் ஒரு நல்ல தீர்வு இருப்பதாகவே நினைத்தாள் வெண்மதி.
அதன்படி அன்று வீட்டுக்கு திரும்பிய வெண்மதி தாயிடம் “அம்மா இன்னைக்கு நான் ரொம்ப டயர்டா இருக்கேன். அதனால தூங்க போறேன்.” என்று சொல்லி விட்டு அறைக்கு சென்று பெரிய விளக்கை அணைத்து விட்டு மேசை விளக்கின் ஒளியில் படித்தாள். அப்படியே பின்வந்த நாட்களிலும் தன்னுடைய படிப்பை தொடர்ந்தாள். பெரியம்மாவின் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக படிக்க முடிந்தது. இதனை அன்று கவிதாவிடம் கூறினாள் வெண்மதி.
“நீ கொடுத்த ஐடியா சூப்பர்டி. பெரியம்மாவோட டிஸ்டபன்ஸ் இப்பல்லாம் எனக்கு கிடையாது. நிம்மதியா படிக்கிறேன்.” என்றாள். எனினும் அடிக்கடி கவிதாவிடம் ஏதாவது சொல்லி விட்டு தனியாக விஜய்யை பார்த்து பேச ஆரம்பித்தாள். இதை கண்டும் காணாதது போல இருந்தாள் கவிதா. வெண்மதி விஜய் மீது ஆசை படுவது அவளுக்கு தெரிந்தது. ஆனாலும் விஜய் மீது அவளுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. இதனை இப்பொழுது வெண்மதி இருக்கும் மனநிலையில் சொன்னால் பலன் இருக்காது. எனவே வாய்ப்பு கிடைக்கும் பொழுது எடுத்து சொல்லலாம். என்று காத்துக் கொண்டிருந்தாள். எனினும் கவிதா வெண்மதி இடம் பழையபடி சகஜமாக பேச முடியவில்லை. அவர்கள் இருவருக்கும் நடுவில் கண்ணுக்குத்தெரியாத திரை ஒன்று விழுந்தது. இவர்கள் இருவரையும் கவனித்த விஜய் ஒரு நாள் வெண்மதி இடம் கேட்டான் “என்ன பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்? முன்ன மாதிரி சாதாரணமா பேச மாட்டேங்கிறீங்க? உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஏதோ சேஞ்ச் தெரியுது. என்ன விஷயம்? ஏதாவது சண்டை போட்டு விட்டீர்களா? என்று அக்கறையாக விசாரித்தான். ஒரு மனம் இவன் வந்த பிறகு தான் இவளுக்கும் இவளுடைய உயிர் தோழியான கவிதாவுக்கும் மனஸ்தாபங்கள் ஏற்பட்டுள்ளன என்று அவன் மீது குற்றம் கூறினாலும் இன்னொரு மனம் அவனுக்கு பரிந்து பேசியது. ‘இதில் இவனோட தப்பு என்ன இருக்கு? கவி தான் என்னை புரிஞ்சுக்காம என்கிட்ட கோபமா இருக்கா.’ என்று கவிதா மீது தவறு கண்டுபிடித்தது. ‘சரி எல்லாம் சரியாகிவிடும்’ என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள் வெண்மதி.
“என்ன யோசிச்சிட்டு இருக்க? கேட்டதுக்கு பதில் சொல்லலியே.”
“ஒன்னும் இல்ல. சின்ன பிரச்சனைதான். நாங்க அதை சரி பண்ணிடுவோம்.” என்று கூறி முடித்து விட்டாள்.
இப்படியே நாட்கள் விரைந்து ஓடியது. வெண்மதி விஜயின் காதலும் வளர்ந்தது. இதை அறிந்திருந்தாலும் கவிதா எதுவும் வெண்மதி இடம் கேட்கவில்லை. அவளுக்கு தெரிந்தது போல காட்டிக் கொண்டால் இன்னும் அதிகமாகவே ஊர் சுற்றுவார்கள். எனவே அவள் தெரியாதது போலவே நடந்து கொண்டாள். வேலைக்கு நடுவில் கவிதாவிடம் ஏதாவது காரணம் சொல்லி விட்டு விஜய்யை சந்தித்து பேசிவிட்டு திரும்புவதை வழக்கமாக கொண்டாள்.
ஒருநாள் கவிதா வெண்மதிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு “அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. இன்னைக்கு நான் உன்கூட வர முடியாது.” என்று கூறினாள்.
“என்ன ஆச்சு அம்மாவுக்கு கவி?”
“ஒன்னும் இல்லை மதி . கொஞ்சம் ஃபீவர் இருக்கு. நீ பெண்டிங் வச்சிருக்கிற வேலை எல்லாத்தையும் இன்னைக்கு முடிச்சிடு.”
வெண்மதி, கவிதா இருவரும் நன்கு படிக்கும் மாணவர்கள். ஆனால் வெண்மதி இப்பொழுது கவிதாவை விட சிறிது பின்தங்கி இருந்தாள். அதனால்தான் அவள் செய்ய வேண்டிய வேலையை அன்று முடித்துவிடும் படி அறிவுரை கூறினாள் கவிதா.
“சரி கவி. நான் இன்னைக்கு கண்டிப்பா முடித்துவிடுவேன்.” என்று அவளிடம் நிச்சயமாக கூறிவிட்டு போனை வைத்தாள்.
அன்று, கணினி முன்பு உட்கார்ந்த வெண்மதி வேகமாக தன்னுடைய வேலையை ஆரம்பித்தாள். கவனத்தை சிதறவிடாமல் வேலையில் மூழ்கினாள். மதிய உணவு இடைவேளையின் பொழுது கேண்டீனுக்கு சென்றாள். அப்போது அங்கு விஜய் வந்தான்.
“கவிதா எங்கே?” என்று கேட்கவும்
“அவள் இன்னிக்கு வரல.”
“ஓ சூப்பர். அப்புறம் ஏன் இன்னைக்கு காலைலேயே என்கிட்ட இந்த குட் நியூசை சொல்லலை.”
“இது உங்களுக்கு குட் நியூஸ்!”
“ஆமாம். எங்கேயாவது வெளியே போய் இருக்கலாமே.”
“அதனால தான் சொல்லல. நான் முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு. கவிதா அதை எல்லாத்தையும் முடித்து வைக்க சொன்னா.” “கண்டிப்பா இன்னைக்கு முடிக்க வேண்டுமா? இல்லை வெளியே எங்கேயாவது போயிட்டு வந்து அதுக்கப்புறம் முடிக்கலாமா?” என்று அவளை கெஞ்சும் குரலில் கேட்டான் விஜய்.
அவன் கண்களை பார்த்த வெண்மதி சற்று தடுமாறினாள். எனினும் சுதாரித்துக்கொண்டு பார்வையை அவனிடமிருந்து எடுத்து
“அய்யய்யோ இன்னைக்கி மட்டும் நான் என்னோட வேலையை முடிக்கலனா, கவி என்னை கொன்னே போட்டுடுவா.” என்று கூறி அவனை கையெடுத்து கும்பிட்டாள்.
“ஆளை விடு சாமி. எனக்கு நிறைய வேலை இருக்கு.” என்று எழுந்திருக்க முயன்றாள்.
“சரி சரி. உனக்கு உன்னோட வேலை தான் முக்கியம். எனக்கு நீ தான் முக்கியம். கவியோட சீட் காலியா தானே இருக்கு. நான் அங்க வந்து உட்கார்ந்து உன்கிட்ட சும்மா பேசிக்கிட்டு இருக்கேன்.”
“அப்புறம் உங்களுடைய வேலையை நீங்க எப்ப செய்வீங்க?”
“அதை எல்லாம் நான் பாத்துக்குறேன். உனக்கு ஓகேவா?”
“டபுள் ஓகே.” என்று உற்சாகமாக கூறினாள் வெண்மதி.