சாப்பிட்டு முடித்தவுடன் இருவரும் கேபினுக்கு சென்றனர்.
வெண்மதி அவளுடைய வேலையை தொடர விஜய் கவியின் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருந்தான். வேலைக்கு நடுநடுவே இருவரும் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். இதனால் வேலை சற்று பொறுமையாகவே நடந்து கொண்டிருந்தது. நேரம் நாலரை மணி ஆனது. எல்லா மாணவர்களும் எழுந்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.
“அய்யோ நாலரை மணி ஆயிடுச்சு. இன்னும் என்னோட வேலை முடியல. எல்லாம் உங்களால தான். பேசிப்பேசி டைம் ஆயிடுச்சு. நாளைக்கு கவி கிட்ட நான் திட்டு தான் வாங்க போறேன்.” என்று கவலையாக கூறினாள் “வெண்மதி இன்னும் எவ்வளவு நேர வேலை இருக்கு?”
“இன்னும் ரெண்டு மணி நேரம் வேலை இருக்கு.”
“சரி நான் உனக்கு ஒரு ஐடியா சொல்லட்டுமா? இந்த ஐடியா ரெண்டு பேருக்குமே நல்லது.”
“சரி சொல்லுங்க பாப்போம்.”
“உங்க வீட்டுக்கு கால் பண்ணி இரண்டு மணி நேரம் லேட்டா வருவேன்னு சொல்லு. சொல்லிட்டு இந்த வேலையை முடிச்சுட்டு ஆறரை மணிக்கு கிளம்பலாம். நீயும் உன்னோட வேலையை முடித்துவிடு. நானும் உன் கூட நிறைய நேரம் ஸ்பென்ட் பண்ண மாதிரி இருக்கும்.” என்று கூறினான்.
“சூப்பர் ஐடியா.” என்றவள் தாய்க்கு போன் செய்து இரண்டு மணி நேரம் தாமதமாக வருவாள் என்று கூறி வைத்தாள். பிறகு வேலையை தொடர்ந்தாள்.
ஆறரை மணியளவில் “ஏசி ஜாஸ்தியா இருக்கு. எங்க போய் குறைக்கிறது?”
“ஆமாம் கொஞ்சம் ஜாஸ்தியா தான் இருக்கு. உனக்கு பின்னாடி இருக்கிற கிலாஸ் விண்டோவை திற. ஏசி தெரியாது.” என்று விஜய் யோசனை கூற
“ஓகே.” என்றபடி அந்த ஜன்னலை திறந்தாள். நெடுநாட்களாக திறக்காமல் இருந்த அந்த ஜன்னல் சிறிது குப்பையாக இருந்தது. ஜன்னல் வழியாக வந்த காற்று அந்த குப்பையை கிளற பக்கத்தில் உட்கார்ந்திருந்த வெண்மதியின் கண்ணில் அது பட்டது.
கண்களை கசக்கினாள் வெண்மதி. “என்ன ஆச்சு வெண்மதி? கண்ணுல ஏதோ பட்டுடுச்சு. ரொம்ப எரியுது.” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே கண்களிலிருந்து நீர் வழிந்தது. கண்கள் சிவந்தது.
“சரி நீ என்கிட்ட வா. ஊதி விடறேன்.”
அவள் அருகில் வர இவன் அவள் கண்களை திறந்து ஊதி விட்டான். இருள் சூழும் அந்த மாலை நேரத்தில் அவனுக்கு மிக அருகில் அவள் இருக்க…..
விஜய் “உன்னோட லிப்ஸ் ரொம்ப அழகா இருக்கு.” என்று கூறியபடி அவளது இதழ் மீது தன் இதழை பதித்தான். முதன் முறையாக ஒரு ஆணின் தொடுதலை உணர்ந்த அவள் சற்று தடுமாறினாள். பின்பு ஏதோ ஒரு உள்ளுணர்வு அவளை சுயநினைவுக்கு கொண்டுவர தன் பலம் முழுவதையும் திரட்டி அவன் மார்பினில் கை வைத்து அவனை தள்ளிவிட்டாள்.
“என்ன பண்றீங்க?” என்று கேட்டாள்.
“நீயும் நானும் லவ் பண்றோம். கல்யாணம் பண்ணிக்க போறோம். இதுல என்ன தப்பு இருக்கு?” என்று அவன் கேட்க
“அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் வெச்சுக்கலாம்.”
“அவனஅவன் கல்யாணத்துக்கு முன்னாடி என்னென்னமோ பண்றான். நீ என்ன இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி ரியாக்ட் பண்ற.”
“அது அவங்கஅவங்க இஷ்டம். நான் இப்படித்தான் இருப்பேன்.” என்று கோபமாக கூற அங்கு ஒரு அமைதி நிலவியது.
“ப்ளீஸ் விஜய் என்னை புரிஞ்சுக்கோங்க. நான் ஒரு கிராமத்தில பிறந்து வளர்ந்த பொண்ணு. நீங்க பாத்த பொண்ணுங்களுக்கு வேணும்னா இதெல்லாம் சாதாரண விஷயமா இருக்கலாம். எனக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.” என்று கெஞ்சும் குரலில் கூற அவன் சமாதானம் ஆனான்.
“சரி உன் இஷ்டம்.” என்று மனமில்லாமல் கூறினான்.
“ஓகே டைம் ஆயிடுச்சு. நான் கிளம்பனும்.” என்று கூறியவள் தன்னுடைய புத்தகப் பையை எடுத்து மாட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள். பேருந்திலிருந்து இறங்கி கவிதாவின் வீட்டை தாண்டி நடந்து கொண்டிருந்தாள்.
அப்பொழுது “மதி” என்று குரல் கேட்க திரும்பினாள்.
கவிதா தான் அங்கு நின்று கொண்டிருந்தாள். “என்னடி இப்பதான் வீட்டுக்கு வர்ற?”
வெண்மதி “பஸ்சை மிஸ் பண்ணிட்டேன்” என்று பொய் கூறினாள்.
விஜய்யிடம் பேசிக் கொண்டிருந்ததால் வேலையை முடிக்க முடியாமல் தாமதமாகிவிட்டது என்று அவளிடம் சொல்ல முடியாது அல்லவா அதனால் இப்படி பொய் சொன்னாள்.
“ஓ அப்படியா. அதுக்குன்னு ரெண்டு மணி நேரமா லேட் ஆச்சு?
“அடுத்த பஸ் ரொம்ப கூட்டமா இருந்துச்சு. அதனால அந்த பஸ்சை விட்டுட்டு இந்த பஸ்ஸில் வந்தேன்.” என்று கூறி சமாளித்தாள் வெண்மதி. “சரி அதை விடு. நீ ஏன் இவ்வளவு டல்லா இருக்க?” என்று அவள் நெற்றியைத் தொட்டாள் . “என்னடி இவ்வளவு சூடா இருக்கு? உனக்கும் ஃபீவர் வந்துடுச்சா?” அவளுக்கு உண்மையாகவே உடல்நிலை சரியில்லாதது போலவே இருந்தது.
“இல்லடி ஐ அம் ஆல் ரைட். ரொம்ப நேரம் நின்னுகிட்டு இருந்ததால டயர்டா இருக்கேன். தூங்கி எழுந்தா சரியாயிடும்.”
“சரி வேலை எல்லாத்தையும் முடிச்சிட்டியா?”
“ஆம் முடிச்சிட்டேன் கவி.”
“முடிச்சிட்டியா? ரொம்ப சந்தோஷம். எங்க முடிக்க முடியாமல் போய் விடுமோன்னு பயந்துகிட்டே இருந்தேன். முன்னாடி மாதிரி இப்ப எல்லாம் நீ படிப்பில் அக்கறை காட்ட மாட்டேங்குற. படிப்பதா நம்மள மாதிரி பொண்ணுங்களுக்கு அத்தியாவசியம். இதை நான் உனக்கு சொல்லி நீ தெரிஞ்சுக்க வேண்டியது கிடையாது. உனக்கே தெரியும் இருந்தாலும் நான் உனக்கு ஞாபக படுத்தறே. நம்ம ரெண்டு பேருக்குமே இந்த வேலை ரொம்ப முக்கியம். அதுக்கு நாம இந்த டிகிரியை ஒழுங்கா முடிக்கணும். என்னை விட உனக்கு இந்த வேலை ரொம்ப ரொம்ப முக்கியம். இதை எல்லாத்தையும் ஞாபகத்துல வச்சிக்கோ.” என்று அக்கறையுடன் கூறினாள் கவிதா.
“கண்டிப்பா எனக்கு எல்லாமே ஞாபகத்துல எப்பவுமே இருக்கும்” என்றாள் தன் உயிர் தோழியின் அக்கறையை கண்டு நெகிழ்ந்து.
“சரி. நீ வீட்டுக்குப் போ. நாளைக்கு பார்க்கலாம்.” என்று அவளை அனுப்பிவிட்டு வீடு திரும்பினாள் கவிதா.
அடுத்த நாள் வெண்மதி, கவிதா இருவரும் சேர்ந்து வேலை செய்தனர். “இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. ப்ராஜெக்ட் அல்மோஸ்ட் முடிஞ்சிடுச்சு.” என்று உற்சாகமாக கூறினாள் கவிதா.
“ஆமாம் ப்ராஜெக்ட் முடிஞ்சிடுச்சு. நாம இன்னும் ஒரு வாரம் தான் இந்த கம்பெனிக்கு வருவோம்.” என்று சோகமாக கூறினாள் வெண்மதி. சோகத்தின் காரணம் விஜய்யை இனிமேல் இப்பொழுது மாதிரி அடிக்கடி பார்க்க முடியாது என்பதுதான். அவள் சோகத்தைப் புரிந்து கொண்ட கவிதா அதை கவனிக்காதது போல
“ஆமாம் ப்ராஜெக்ட் முடிய போகுது. எக்ஸாம் வரப்போகுது. எக்ஸாம் முடிஞ்சதுக்கு அப்புறம் நமக்கு வேலை கிடைக்கப் போகுது.
நம்முடைய கனவு நிறைவேறப் போகுது.” என்று அவளை உற்சாகப்படுத்த முயன்றாள்.
“நீ சொல்றது கரெக்டு தான் கவி.” என்று வெண்மதியும் ஒத்துக்கொண்டாள்.
அன்று மதிய உணவு இடைவேளையின் பொழுது விஜய், செல்வா அங்கு வந்தனர்.
செல்வா பத்திரிக்கையை நீட்டி “எங்க அக்காவோட கல்யாணம் அடுத்த மாசம் இருக்கு. நீங்க ரெண்டுபேரும் கண்டிப்பா வரணும்.” என்று அழைத்து விட்டு சென்றான்.
வீட்டுக்கு வந்த வெண்மதி சாப்பிட்டு முடித்துவிட்டு வந்து படுத்தாள். கவிதாவின் அறிவுரை அவளுக்கு ஞாபகம் வந்தது. இனி அவனுடன் தனிமையில் இருக்கக்கூடாது. படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டாள்.
அலைபாயும் தன் மனதை அடக்கிக் கொண்டு தூங்கினாள்.
அதற்குப் பிறகு விஜய் பலமுறை வெண்மதியை தனியாக அழைத்து பார்த்தான். ஆனால் அவள் வரவில்லை. கவிதாவை காரணம்காட்டி அவள் அவனுடன் தனியாக செல்வதை தவிர்த்தாள். அவனுக்கும் ப்ராஜெக்ட் முடிக்கவேண்டிய நாள் நெருங்கவும் அவனுடைய வேலையில் மூழ்கி விட்டான். எல்லா மாணவர்களும் அவரவர் ப்ராஜெக்டை முடித்துவிட்டனர். அன்றுதான் அந்த கம்பெனிக்கு வர வேண்டிய கடைசி நாள். விஜய் அவளைப்பார்த்து கண்களாலேயே கெஞ்சி தனியாக கூப்பிட்டான் கவிதாவிடம் ஏதோ காரணம் சொல்லிவிட்டு அவனிடம் வந்தாள்.
“இன்னையோட பிராஜெக்ட் முடிகிறது. இனிமே நாம இப்படி தினமும் பார்த்து பேச முடியாது.”
“ஆமாம் விஜய். எனக்கும் அதை நினைச்சா தான் ரொம்ப கஷ்டமா இருக்கு .”
“சாட்டர்டே சண்டே. நான் உன்னை தேடி உன் ஊருக்கு வரட்டுமா?”
“வேண்டாம் விஜய். எங்க ஊர்ல எனக்கு நிறைய சொந்தக்காரங்க இருக்காங்க. யாராவது பாத்துடுவாங்க.”
“சரி அப்புறம் நம்ம எப்படித்தான் சந்திக்கிறது?”
“நாம போன்ல பேசிக்கலாம். அதுவே போதும் ரெண்டு பேருக்கும் வேலை கிடைச்சப்புறம் நம்ம வீட்டில நம்ம காதலை சொல்லி அவங்க சம்மதத்தையும் வாங்கி நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.”
“இதைத் தவிர வேறு வழியே கிடையாதா மதி?” என்று சோகமாக கேட்டான் விஜய்.
“இந்த வழி தான் நமக்கு நல்லது. ப்ளீஸ் விஜய்.” என்று அவனை சமாதானப்படுத்தி விட்டு அவனிடம் பிரியாவிடை பெற்று வந்தாள். அதற்குப் பிறகு செல்போன் மூலம் அவர்களது காதல் வளர்ந்தது.