அத்தியாயம்….16
மணிமேகலையின் உடமைகளை அடுக்க அவளுக்கு உதவி செய்த வாறே சோனாலி… “தோ பார் மணி. இங்கு நடந்ததை எதுவும் சொல்லாதே… உங்க வீட்டில் பார்த்திருக்கும் மாப்பிள்ளையே உனக்கு நல்ல துணையா கூட இருக்கலாம். புரியுதா…?எது என்றாலும் கொஞ்சம் யோசிச்சி பேசு. யோசிச்சு செய். அவ்வளவு தான் நான் சொல்வேன்.”
ஒரு நல்ல தோழியாய் அவள் வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டு விட கூடாது என்று சொன்னாள்.
அனைத்திற்க்கும்… “சரி…சரி.” என்று தலையாட்டல் மட்டுமே மணிமேகலையிடம் இருந்து பதிலாய் கிடைத்தது.
மணிமேகலையிம் சோர்ந்து போன முகத்தை பார்த்து… “மணி தோ பார். உனக்கு எதுவும் ஆகல..புரியுதா..நீ எதுவும் தப்பா செய்யல.அதை முதல்ல உன் மண்டையில ஏத்திக்கோ…” என்று சோனாலி சொல்ல…
மணிமேகலை.. “எனக்கு ஒன்று மட்டும் புரிய மாட்டேங்குது சோனா…ஜான் சாரே தானே என் கிட்ட ஆர்வமா பேசினார்…?”
தான் தவறாய் புரிந்துக் கொண்டு விட்டமோ என்று மணிமேகலை தான் புரிந்துக் கொண்டதை தெளிவு படுத்திக் கொள்ள சோனாலியிடம் கேட்டாள்.
“ஆமா அவர் தான் உன் கிட்ட ஆர்வமா பார்த்தார். பேசினார். இது நம்ம காலேஜில நம்ம க்ளாஸ்ல படிச்ச அத்தனை பேருக்கும் தெரியும்.” என்று அழுத்தம் திருத்தமாக சோனாலி சொன்னாள்.
சோனாலி இப்படி அழுத்தி சொல்ல காரணம். இதே அர்த்தம் கொண்ட வார்த்தைகளை தான் மணிமேகலை இந்த ஒரு வாரமாக பல விதமாய் சோனாலியிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறாள்.
தான் தவறாய் அர்த்தம் கற்பித்துக் கொண்டு அவரை மணக்க கேட்டு விட்டோமா என்று தான் மணிமேகலையின் மிக பெரிய கவலையே…
“நீயே வலிய அவரிடம் போகவில்லை. அவர் தான் உன்னை தேடி வந்தார்.” என்று சொன்னாள்.
“அப்போ ஏன் என்னிடம் ஒன்னும் சொல்லாமல் என்னை பாக்காமல் கூட, இந்த கல்யாணத்தை நிறுத்தும் காரணம் என்ன…?அதை பத்தி ஒன்னும் சொல்லாமல் அவர்கள் குடும்பமே விட்டு விட்டது.” இதற்க்கு சோனாலியிடமே பதில் இல்லாத போது, அவள் மணிமேகலையிடம் என்ன என்று சொல்லுவாள்.
[the_ad id=”6605″]
“அது தான் மணி எனக்கும் தெரியல.ஆனா காரணம் ரொம்ப பெரிய காரணமா தான் இருக்கனும். இல்லேன்னா அவங்க குடும்பத்துக்கே உன்னை பிடிச்சி இருக்கும் போது, இப்படி நிறுத்தினதுக்கு ஏதாவது வலுவான காரணம் இருக்க தான் செய்யும்.” என்று சோனாலி தான் உணர்ந்ததை சொன்னாள்.
“அத தான் அந்த காரணம் என்ன என்றாலும், அவங்க சொல்லி தொலச்சி இருக்கலாம்லே…நானும் நிம்மதியா இந்தியா போய் அங்கு எனக்கு எவனை பாத்து வெச்சி இருக்கானோ அவனையே கட்டிட்டு…
திரும்பவும் அதே போல் ஏச்சி…பேச்சி வாங்கிட்டு, என் அம்மா அப்பா அவமானப்படுவதையும் பார்த்துட்டு, என் அம்மா போலவே என் வாழ்க்கை முழுமையும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு போவேன்.” என்று மணிமேகலை புலம்பும் இந்த புலம்பல் சோனாலிக்கு புதியது.
“மணி நீ ஏன் இப்படி நினைக்கிற…உங்க வீட்டில் பார்த்து இருக்கும் மாப்பிள்ளை உன் மனசை புரிஞ்சி.. நீ நினச்ச சுயமரியாதை வாழ்க்கை கொடுக்கலாம்லே…நீ இப்படி நல்ல படியா யோசியேன்.” என்று சோனாலி சொன்னதற்க்கு,
விரக்தியாய் ஒரு புன்னகை சிந்திய மணிமேகலை… “என் மனசு புரிய நினைப்பவனா இருந்து இருந்தா அவனை கல்யாணம் செய்துக்க எனக்கு விருப்பம் இருக்கான்னு கேட்டு இருந்து இருப்பான். ஆனா பார் இன்னை வரை எனக்கு மாப்பிள்ளை யாருன்னே தெரியாம…இதோ ஊருக்கு அவன் தாலிய வாங்கிக்க போறேன்.” என்று மணிமேகலையின் பேச்சை கேட்கும் போது…
ஆம் பெரியவர்கள்என்ன தான் பார்த்து வைத்த திருமணமாக இருந்தாலும், இந்த காலத்தில் பெண்ணை பார்க்காது பெண்ணிடம் … “என்னை உனக்கு பிடித்து இருக்கா..?.” என்று கேட்காமல் எப்படி கல்யாணம் செய்துக் கொள்ள முடியும்…?
இதோ முடியும் என்பது போல் தன் எதிரில் இருக்கும் மணிமேகலை உணர்த்த…அவள் கேள்விக்கு பதில் சொல்லாது…சொல்ல முடியாது அமைதியாகி போனாள்.
சோனாலி எப்போதும் எந்த விசயத்திலும் அதில் தங்களுக்கு சாதமாக என்ன என்ன அனுகூலமான விசயம் இருக்கும் என்று தான் தன்னம்பிக்கையுடன் பேசுவாள்.
ஆனால் இன்று தன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது முகம் குழப்பத்தில் இருப்பதை பார்த்து…என்னால் ஏன் இவளின் தன்னம்பிக்கை ஆட்டம் காண வேண்டும் என்று நினைத்து…
“விடு சோனா நீ சொன்னது போல எனக்கு பாத்து வெச்சி இருக்க மாப்பிள்ளை நல்லவனா கூட இருக்கலாம்.” என்ற மணிமேகலையின் பேச்சில்…
மகிழ்ச்சி மின்ன… “மணி நீ இப்படி நல்லதே நினைப்பா நல்லதே நடக்கும்.” என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள்.
சோனாலியின் இந்த மகிழ்ச்சி மணிமேகலைக்கு புன்னகை வர சிரித்துக் கொண்டே… சோனாலி எப்போதும் சொல்லும்…
“நல்லதே நினை. நல்லதே நடக்கும். நல்லா இருப்போம் நல்லா இருப்போம். எல்லோரும் நல்லா இருப்போம்.” என்ற வார்த்தையை மணிமேகலை அவளுக்கு திரும்ப படித்தாள்.
“வெரி குட்…இப்படி தான் இருக்கனும்.” என்று சொல்லிக் கொண்டு மணிமேகலையின் கன்னம் இரண்டையும் பிடித்து கிள்ளி விட்டு சென்றாள்.
சோனாலி அந்த இடத்தை விட்டு சென்ற பின்… ‘அவன் நல்லவனா இருந்தாலும், நான் நல்லவே இல்லையே சோனா…நிறைய பேரை சைட் அடிச்சி இருக்கேன். அது எல்லாம் அப்போ எனக்கு பெருசா தெரியல…இப்போ தெரியுது. என் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை கட்ட பிடிக்காது , வேறு ஒருவனை திருமணம் செய்ய சம்மதம் கொடுத்து, கல்யாணம்,வரை சென்று விட்டு அவன் என்னை மறுத்ததால் திரும்ப என் வீட்டில் பார்த்து இருக்கும் மாப்பிள்ளைக்கே கழுத்தை நீட்ட போகிறேன். நான் என்ன மாதிரி பொண்ணு.’ என்று நினைத்தவளுக்கு மனதை ஏதோ அழுத்துவது போல் இருந்தது.
[the_ad id=”6605″]
சோனாலிக்கு பயிற்ச்சி பெற்ற இடத்தில் தேர்ச்சி பெற்று இதோ கலிபோனியாவிலேயே நல்ல வேலை கிடைத்து விட… மணிமேகலைக்கு ஒரு பரிசை வாங்கி கொடுத்தவளாய் அவளை விமானத்தில் ஏற்றி விட்டாள்.
மணிமேகலை தான் ஒரு தோத்து போன உணர்வில் விமானத்தில் கண்ணை மூடிக் கொண்டவளுக்கு எதுவும் இனி இல்லை என்பது போல் ஒரு நிலை.
என்ன தான் இப்படி நினைக்க கூடாது என்றாலும், சோனாலி வெற்றி பெற்று, ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து அவள் இங்கு இருக்க…தான் தோல்வியோடு இந்த நாட்டை விட்டு செல்வது ஏதோ போல் இருந்தது.
மணிமேகலைக்கு நன்கு தெரியும். படிப்பில் சோனாலி சுமார் ரகம் தான். ஆனால் நான் நல்லா படித்து நல்ல மதிப்பெண் எடுத்து என்ன பிரயோஜனம்…? முடிவு எடுக்க தெரியாது எடுத்து, இப்படி தோத்து போய் இருக்கேனே…வாழ்க்கைக்கு நாம் பள்ளியில் படித்து எடுக்கும் மதிப்பெண் எல்லாம் ஒரு கணக்கே இல்லையோ… இப்படி தான் அவளுக்கு நினைக்க தோன்றியது.
இவ்வாறு பல நினைவுகளின் தாக்கத்தில் இருந்து வெளி வராமலேயே இந்தியா வந்து இறங்கினாள். அனைத்து பரிசோதனைகளையும் முடிந்து அவள் விமான நிலையத்தை விட்டு வெளி வரும் போது…
இதே விமானநிலையத்தில் இருந்து தான், நான் மனதில் பல கனவுகளும், ஒரு ஓரத்தில் சிறிது பயமாய் பறந்தது அவள் நினைவடுக்கில் வந்து போனது.
இப்போது அவள் மனதில் கனவும் இல்லை…நெஞ்சில் பயமும் இல்லை.இனி என்ன நடந்து விடப்போகிறது என்ற ஒரு எண்ணம், இப்போது அவள் நெஞ்சில் வர, ஏதோ ஒரு தைரியம் பெற்றவளாய் தன்னை அழைத்து போக யார் வந்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் போதே அவள் மனதில் வீரேந்திரன் வந்து போனான்.
அப்போது தான் அவளுக்கு ஒன்று தோன்றியது. இரண்டு வாரமாய் ஏன் அந்த வட்டிக்காரன் போன் போடவில்லை. அமெரிக்கா சென்றதில் இருந்து வாரத்திற்க்கு நான்கு நாட்கள் அவனிடம் இருந்து அழைப்பு வந்து விடுமே…ஏன் அழைக்கவில்லை என்று நினைத்தவளுக்கு கூடவே…
அவன் போன் செய்தாலும் அவனிடம் பேசும் அளவுக்கு தன் மனநிலை இல்லை. போன் செய்யாததே ஒரு வகையில் நல்லது என்று நினைத்தவளுக்கு கூடவே… ஏன் அழைக்கவில்லை ஒரு சமயம் அவனுக்கு உடல் நிலை சரியில்லையோ…
சே அப்படி அவன் உடல் நிலை சரியில்லை என்று இருந்தால், நாம் அழைத்து பேசி இருக்க வேண்டும். அவன் தனக்கு என்ன என்ன செய்தான் என்று அவன் என்ன என்ன செய்தான் என்று யோசிக்கும் போதே…
அய்யோ வட்டிக்காரனுக்கு எப்படி பணம் கொடுப்பது. ..? இப்போது தான் தன் படிப்புக்கு அவனிடம் வாங்கிய பணமே நியாபகத்தில் வந்தது… கூடவே அன்று வீதியில் ஒருத்தனை அடிப்பதையும் அவள் மனக்கண்ணில் வர…கடவுளே என் உடம்பு பஞ்சி உடம்புடா அந்த அடியாள் அடியெல்லாம் என் உடம்பு தாங்காது… எப்படியோ எனக்கு நகைப்போட்டு தான் கட்டிக் கொடுப்பாங்க…அதை மொத்தமா வித்திட வேண்டியது தான் என்று அவளுக்கு அவளே கேள்வியும் கேட்டு…அதற்க்கு பதிலும் சொல்லிய வாறு…
சரி யாரும் வரல போல…நாமே ஏதாவது ஏற்பாடு செய்து நம் ஊரை பார்க்க போகவேண்டியது என்று அவள் நினைத்து முடிப்பதற்க்குள் அவள் முன் வீரேந்திரன் வந்து நின்றான்.
ஊருக்கு போக ஏதாவது ஏற்பாடு செய்ய நினைத்தாளே ஒழிய, எப்படி போவது…?என்று கொஞ்சம் யோசனையாக இருக்கும் வேளயில் தன் முன் வந்து நின்ற வீரேந்திரனை பார்த்ததும் தன்னால் அவள் முகம் மலர்ந்தது.
“இப்போ தான் உங்கல நினச்சேன்.” என்று மகிழ்ந்து கூறவும்.
“என்னை எல்லாம் கூட நீ நினைப்பியா…” என்ற வீரேந்திரனின் உள்குத்து தெரியாது.
“யாரும் வரலையே எப்படி ஊருக்கு போவதுன்னு நினச்சிட்டு இருந்தேன். உங்கல பார்த்ததும் தான் அப்பாடி என்று இருந்தது.” என்று மணிமேகலை சொல்லவும், தான் வீரேந்திரன் தன் குதர்க்கம் பேச்சை கை விட்டவனாய்….
“சாரி மணி வழியில ட்ராபிக்.” என்று வீரேந்திரன் சொல்லி முடிக்கவும்..அந்த இடத்திற்க்கு வசுந்தரா வாசுதேவன் வரவும் சரியாக இருந்தது.
வசுந்தரா மணிமேகலையை பார்த்ததும் ஓடி வந்து கட்டி பிடித்தவள்… “என்னடி என்னை எல்லாம் மறந்துட்டியா…?நான் போன் போட்டா எடுக்கவே மாட்டேங்குற…” என்னவோ தினம் அழைத்து தான் எடுக்காதது போல் பேசி வைத்தாள்.
மணிமேகலை அவள் அணைப்பில் இருந்து யாரும் வித்தியசமாய் என்னாத வாறு தன்னை விடுவித்துக் கொண்டவள்… “படிப்பு இருந்தது.” என்று மெல்ல முனு முனுத்தாள்.
திருமணம் பேச்சு எழுந்ததும் அதுவும் தன்னை வைத்து வசுந்தரா தீட்டிய திட்டம் தெரிந்து, அவளுக்கு பேசியில் அழைத்து …
“என்ன செஞ்சி வெச்சி இருக்க வசு. நான் உன்னிடம் இருந்து இப்படி பட்ட நம்பிக்கை துரோகத்தை எதிர் பார்க்கல.” என்று கொஞ்சம் சத்தமாக சண்டை போடுவது போல் தான் கேட்டாள்.
ஆனால் அதற்க்கு பதிலாய் வசுந்தரா சொன்ன… “நான் ஒருத்தனை தான் பார்த்தேன். அவனையே தான் காதலிச்சேன். அவனையே தான் கல்யாணமும் செய்ய போறேன். இதில் எங்கே நம்பிக்கை துரோகம் வருது மணி.” என்று சொன்ன வசுந்தரா…
தொடர்ந்து… “மணி நாம ஒன்னா பழகினோம். இப்போ ஒரே குடும்பத்துக்குள்ள இருக்க போறோம். நாம ஏன் வீணா சண்டை போட்டுக்கனும். அப்புறம் நம்ம குடும்பத்துக்கு தான் நல்லது இல்லாம போயிடும். அதனால நாம் எப்போவும் போல இருக்கலாம்.” என்ற வசுந்தராவின் ஒவ்வொரு பேச்சும் மணிமேகலையை ஒவ்வொரு வகையாக தாக்கியது என்று சொல்லலாம்.
வசுந்தரா சொன்ன நான் ஒருவனை தான் பார்த்தேன். நான் பலரை பார்த்தேன் என்று மறைமுகமாய் தன்னை தாக்குவது போல் இருந்தது. அடுத்து வசுந்தரா சொன்ன ஒரே குடும்பம் ஏன் வீணா பிரச்சனை அப்புறம் குடும்பத்துக்கு நல்லது இல்லை என்று சொல்வது அவள் சொன்னதை நான் சொன்னால் நான் பார்த்ததை அவள் சொல்லி விடுவாள் என்று மறைமுகமாய் அவளை மிரட்டுவது போல் இருக்க…
[the_ad id=”6605″]
பின் அவள் அழைத்த அழைப்பை இந்த இரு வாரமும் மணிமேகலை எடுக்கவில்லை. அதற்க்கு காரணம் ஒன்று அவள் இந்த இரு வாரமும் பேசும் சூழ்நிலையில் இல்லை. இரண்டு மணிமேகலைக்கு வசுந்தராவிடம் பேசவே பிடிக்கவில்லை. அதனால் தான் அவள் அழைப்பை ஏற்காது விட்டு விட்டாள்.
இப்போது அனைவரும் முன்னும் தன்னை கட்டி பிடிப்பது.அவள் என்றும் தன்னுடன் பாசம் இருப்பது போல் நடந்துக் கொள்வது தன்னை நல்லவள் போல் காட்டிக் கொள்ள தான், என்று மணிமேகலைக்கு தெரிந்தாலும் சும்மா வேனும் கூட அவளை பார்த்து சிரிக்கவோ பேசவோ பிடிக்காது..
தலையை தேய்ப்பது போல் தேய்த்துக் கொண்டவள்… வீரேந்திரனிடம்… “ ரொம்ப தலை ரோதனையா இருக்கு.” என்று சொல்லி விட்டு…
“சாரி சாரி தலை வலியா இருக்கு.” என்று தன் பேச்சை திருத்திக் கொள்வது போல் சொன்ன மணிமேகலை வசுந்தராவை வெட்டுவது போல் ஒரு பார்வையும் பார்த்து வைத்தாள்.