அந்த இரவு நேரத்தில் வானத்தில் இருந்த விண்மீன்களுக்கும் நிலவுக்கும் போட்டியாக அந்தச் செயற்கை பறவை பறந்து கொண்டிருந்தது. அது சேர வேண்டிய இடம் வந்ததும் அது மெல்ல மெல்லத் தனது இறக்கைகளைத் திருப்பி சிறிது தூரம் ஓடி நின்று, தனது வேகத்தைக் கட்டுப்படுத்தியது.
அந்தப் பறவையில் இருந்து, மக்கள் கூட்டம் சிறிது சிறிதாக இறங்கத் தொடங்கியது. அந்த இடம், சென்னை விமான நிலையம். பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியே வந்து தங்களுக்காகக் காத்திருப்போரைக் கண்டு பேசி மகிழ்வுற்றனர். அந்த ஜன பேரலையில் ஆதித்யன் மட்டும் தனித்து வெளியேறத் தொடங்கினான்.
முன்னரே பதிவு செய்து இருந்த வாகனம் அவனுக்காக காத்திருக்க, அதில் ஏறி அமர்ந்தான். இரவு நேரமாதலால் வாகன நெருக்கடி இல்லாமல் அந்த வாகனம் அமைதியாக சென்று கொண்டிருந்தது. அமைதியான சுற்றுப்புறம், ஜன்னல் அருகில் அமரும் வாய்ப்பு, குழப்பமான மனது போன்ற இயற்கையை ரசிப்பதற்குத் தேவையான அனைத்தும் ஆதித்யனுக்கு இருக்க, மெல்ல அவன் நினைவுகள் கிளர்ந்தெழத் தொடங்கின.
ஒரே நாளில், நம் வாழ்வில் அனைத்து அதிர்ச்சிகளும் ஒன்றாக வரக் கூடுமா ? இந்தக் கேள்வியை ஆதித்யனிடம் கேட்டால், “ஆம்” என்று கூறும் நிலையில் இருந்தான் ஆதித்யன்.
தன்னை விட வயதில் சிறிய பெண்ணின் அறிவாற்றல், அவள் தனது அத்தையின் உருவத்தைக் கொண்டு இருப்பது, அவளது விழிகள் ஒரு நொடி எனினும் தங்க நிறத்தில் ஜொலித்தது போன்ற காட்சிகள் மாறி மாறி வந்து கொண்டிருக்க, இடையில் வேறு ஒரு நினைவும் அதனுடன் சேர்ந்து கொள்ள, அதன் தாக்கத்தைத் தாங்க முடியாமல், “இல்லை” என்று வாய்விட்டுக் கத்தி விட்டான்.
வாகன ஓட்டுநர் அவனைத் திரும்பிப் பார்க்கவும், “ஒண்ணுமில்ல” என்று தனக்குத் தானே சமாதானம் கூறிக்கொண்டான். பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, முழுவதையும் குடித்தும், அவன் மனது சமன்படவில்லை.
அவன் மனம் மட்டும் அப்படி ஏதும் இருந்துவிடக் கூடாது என்பதை மந்திரம் போல் ஜெபித்துக் கொண்டிருந்தது. ஒரு மணி நேரப் பயணத்தில் வீட்டுக்கு வந்துவிட, தனது பையை எடுத்துக் கொண்டு இறங்கினான். வீட்டின் வாசலுக்கும் கதவுக்கும் இடையே இருந்த பெரிய இடத்தில் தனது அன்னை சித்ரா மற்றும் பாட்டி சிவகாமியின் கைவண்ணத்தில் அமைக்கப் பட்டிருந்த தோட்டத்தை வழக்கம் போலவே மெய்மறந்து ரசித்தான்.
தான் இங்கு வந்து எத்தனை நாட்கள் இருக்கும் என்பதை விட, எத்தனை மாதங்கள் இருக்கும் என்று யோசிப்பது தான் சரியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான் அவன்.
வீட்டு வாசலுக்கு வந்து கதவைத் தட்ட, கதவைத் திறந்த சித்ராவின் முகம் முதலில் மகிழ்ச்சியைக் காட்டி, பின்னர் கோபத்தைக் காட்டியது.
அதே வேகத்தில், “ஏங்க யாரோ உங்கள பார்க்க வந்திருக்காங்க ?” என்று கோபமாகக் கூறிவிட்டு உள்ளே சென்றார்.
மனதிற்குள் சிரித்துக் கொண்டு ஆதி நிற்க, “இந்த நேரத்துல யாரு வந்திருப்பாங்க ?” என்று எண்ணிக் கொண்டு வந்த சிவகாமி ஆதியைக் கண்டதும்,
“படவா ராஸ்கல் …. ஏன்டா வெளியே நிக்கிற ? உள்ள வாடா …” என்று கோபமாக அழைத்தார்.
‘வாணலியில் இருந்து தப்பித்து நெருப்பில் விழுந்து விட்டோமே’ என்று எண்ணிய ஆதி, சிவகாமியின் அருகே சென்று மண்டியிட்டு அமர, சிவகாமி அவன் காதைப் பிடித்து திருகினார்.
“ஆ … ஆ …” என்று அவன் கத்திய சத்தம் கேட்டு ஸ்ரீதரும், ஸ்ரீநிவாசனும் வெளியே வந்தனர்.
“இப்பதான் ரொம்ப மாசம் கழிச்சு, தொரைக்கு வீட்டுக்கு வர வழி தெரிஞ்சிருக்கு” என்று நொடித்துக்கொண்டார் சிவகாமி.
“பாட்டி, நான் வேலை செய்யுற இடம் அப்படி. இப்பகூட வீக்கெண்ட் அப்படின்றதால தான் வரமுடிஞ்சது. திங்கட்கிழமை மறுபடியும் நான் போயாகணும்” என்றான் ஆதி.
“அடேய் தில்லிக்கே ராஜான்னாலும் … இந்த பாட்டிக்கு நீ பேரன் தான்டா …” என்றார் சிவகாமி, சிரித்துக்கொண்டே.
கடைசியில் இந்த இக்கட்டில் இருந்து தப்பிக்க, தான் வழக்கமாக உபயோகிக்கும் பிரம்மாஸ்திரமான, “பாட்டி, நான் மதியானத்துல இருந்து சாப்பிடவே இல்ல, இங்க வந்து பாத்தா எல்லாரும் Cross Question (குறுக்கு விசாரணை) பண்ணிட்டு இருக்கீங்க” என்று பாவமாக கூறினான் ஆதி.
சித்ரா உடனே சமையல் அறைக்குச் சென்று, விரைவாக தோசை வார்க்கத் தொடங்கினார். பின்னர், சிறிது நேரத்தில் நெய் மணக்கும் தோசையை ஒரு தட்டில் வைத்து ஆதித்யனிடம் கொடுத்தார். ஆனால் அவனிடம் பேசவில்லை.
அதில், “நமது ராஜ தந்திரம் பலிக்கவில்லையோ ? இன்னும் சிறிது பயிற்சி வேண்டுமோ ?” என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டான் ஆதி.
அவன் உண்டு முடிக்கும் வரை அமைதியாக காத்திருந்தவர்கள், அதற்குப் பிறகு சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்தனர்.
ஆதியும், “இவ்வளவு நாள்” என்று கூறத் தொடங்கியவன் சித்ராவின் முகத்தைக் கண்டதும்,
“சரி … சரி … இவ்வளவு மாசமா கொஞ்சம் முக்கியமான வேலையா இருந்துட்டேன். இனிமே முடிஞ்ச அளவுக்கு எப்பலாம் வரமுடியுமோ அப்போலாம் கண்டிப்பா வந்துடுறேன், சரியா” எனப் பலவாறு பேசி தாஜா செய்து கடைசியில் தன் அம்மாவையும் பாட்டியையும் சமாதானப்படுத்தி விட்டான்.
பிறகு பொதுவாக அனைவரிடமும், “நான் இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேச தான் இன்னக்கி வந்தேன். அது வந்து..” என்று கூறத் தொடங்கியவனை இடைமறித்து,
“ஆதி ஏற்கனவே இரவு ஆயிடுச்சு. இனிமே எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம். இப்ப எல்லாரும் போய் தூங்குங்க” என்றார் ஸ்ரீநிவாசன்.
அவர் கட்டளையை மதித்து அனைவரும் தங்களது அறைக்குச் சென்றனர். ஆதித்யன் தனது அறைக்குச் சென்று குளித்து, உடை மாற்றி விட்டுப் படுத்தான்.
படுத்ததும், அவனுக்கு உறக்கம் வரவில்லை. திடீரென்று ஏதோ யோசனை வந்தவனாக, தனது திறன் பேசியை எடுத்து, அதில் அன்று மதியம் நந்தினியோடும் ஆரியனோடும் எடுத்த நிழற்படத்தைப் பார்த்தான்.
“பார்க்கக் குறும்புத் தனத்துடன், கண்களில் விளையாட்டுடன் இருக்கும் இவளுக்கு இவ்வளவு பெரிய பிரச்சனையா ? இதனை வரம் எனக் கொண்டாடுவதா ? அல்லது சாபம் என்று கவலைப் படுவதா ?” என்று எண்ணிக்கொண்டான்.
தூக்கம் வராமல் சிறிது நேரம் புரண்டவன், “கொஞ்ச நேரம் தோட்டத்திற்கு போய் உலாவி விட்டு வரலாம்” என்று எண்ணிக் கிளம்பும்போது, அவர்கள் வீட்டின் ஸ்டோர் ரூமில் இருந்த ஒரு பழைய அலமாரி நியாபகம் வந்தது.
அந்த அலமாரியில்தான், ஒரு முறை தான் தன் அத்தையின் நிழற்படத்தைப் பார்த்த ஞாபகம் வர, உடனே அதைத் தேடத் தொடங்கினான். அவன் எவ்வளவு தேடியும், அந்த நிழற்படம் கிடைக்கவில்லை. ரொம்ப நேரம் தேடிய பிறகு, அவனுக்கு அந்த முப்பது வருட பழமையான நிழற்படம் கிடைத்தது.
அதில் ஸ்ரீநிவாசனும் சிவகாமியும் நாற்காலியில் அமர்ந்திருக்க, ஜெயஸ்ரீயும் ஸ்ரீதரும் இருபுறமும் நின்றிருந்தனர். அந்த நிழற்படத்தில் இருந்த தனது அத்தை ஜெயஸ்ரீயையும், தனது திறன் பேசியில் இருந்த நந்தினியின் படத்தையும் ஒப்பிட்டு பார்த்தான் அவன்.
அவ்விரண்டு படங்களுக்கும் இடையில் எள்ளளவும் வித்தியாசம் தெரியவில்லை. இதுவரை, ஆதித்யனுக்கு இருந்த குழப்பம் முழுமையாக நீங்கியது. “தன்னிடம் இறந்து விட்டதாகக் கூறப்பட்ட அத்தைக்குத் திருமணம் நடந்திருக்கிறது, அவருடைய பெண்தான் நந்தினி” என்று உறுதியாக நம்பினான் அவன். ஆனால், அவனுக்கு புரியாத ஒரே விஷயம், “ஏன் அனைவரும் இந்த விஷயத்தைத் தன்னிடமிருந்து மறைக்க வேண்டும் ?” என்பதே.
அன்று இரவே, ஆதி ஆரியனைத் திறன் பேசியில் அழைத்துப் பேசியவன், அவனிடம் ஓர் உதவியைக் கேட்டான். ஆதித்யன் கேட்டவற்றைத் தரத் தயங்கினாலும், ஆதி, ‘எல்லாம் நல்லதற்கே’ என்று உறுதி அளித்ததும், அவன் கேட்டதை அனுப்பினான் ஆரியன்.
*****
இடம் : இன்டர்ஸ்டெல்லர்
அந்த வாகனம் விண்வெளியில் அசையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. அந்த வாகனம் சிறிதளவு ஒளியை வெளியிட்டால் அதையும் ஒரு நட்சத்திரமாகவே கருதக்கூடும்.
வெளியே அமைதியாக இருப்பது போலக் காட்சியளித்தாலும், உள்ளே பொசய்டன் தன்னுடைய ஒற்றன் சற்று முன் கூறிய செய்தியைக் கேட்டு நிலைகுலைந்து போயிருந்தார்.
“ப்ரொமேத்தியஸைப் பற்றி நான் நினைத்தது சரிதான் என்று நிரூபணம் ஆகி விட்டதே. வெகு சாதுர்யமாக திட்டம் தீட்டி என்னைச் சரியான நேரத்தில் கயா கிரகத்தில் இருந்து அனுப்பி தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டானே. அவனுடைய சக்திகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இனியும் நாம் தாமதிக்கக் கூடாது. ஏதாவது ஒன்று செய்தே ஆக வேண்டும்” என்று அவருக்கு தோன்றினாலும், என்ன செய்வதென்று தான் புரியவில்லை.
“இப்படியே ஒவ்வொரு கிரகத்துக்கும் தாவிக் கொண்டிருப்பதில் தான் என்ன பயன் ? சீரஸின் வாரிசையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஈரின் கல்லை அடைவதற்கும் எந்த வழியும் தென்படவில்லை. ஆனால், இவ்வளவு யோசிக்கும் ப்ரொமேத்தியஸ், தன்னை கண்காணிக்காமல் இருப்பானா ?” என்ற சந்தேகம் எழுந்தவுடன்,
“முதலில் இந்த வாகனத்தை விட்டு வெளியேற வேண்டும், அதற்குப் பிறகு பயணம் செய்ய நாமே ஒரு வாகனத்தைத் தயார் செய்ய வேண்டும், அடுத்ததாக ப்ரொமேத்தியஸை ஏமாற்ற வேறு ஒரு கேலக்சிக்கு சென்று, பின்னர் அங்கு இருந்து தப்பித்து கயா கிரகத்திற்குச் செல்ல வேண்டும். இனிமேல் சீரஸின் வாரிசின் மீது நம்பிக்கை வைப்பது வீண்” என்று தனக்குள்ளேயே திட்டங்களைத் தீட்டியவர், தான் இறங்கப் போகும் காரியம் எவ்வளவு ஆபத்தானது என்று தெரிந்தும் அதை நிறைவேற்ற முற்பட்டார்.
உடனே தனது கைடில், தான் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் கேலக்ஸியைத் தேடினார். அதைக் கண்டு பிடித்தவுடன், அதன் கோ-ஆர்டினேட்ஸை வாகனத்தில் செலுத்திவிட்டு, தனது வேலையைக் கவனிக்கச் சென்றார்.
வாகனம் பால்வழி மண்டலத்தை ( Milky way galaxy ) நோக்கி நகர ஆரம்பித்தது.
*****
கிரகம் : பூமி
தனது மனதில் தோன்றிய காட்சிகள் அனைத்தையும் சிறிது நேரம் கூட ஓய்வெடுக்காமல், ஓவியமாக வரைந்து முடித்தாள் நந்தினி. கதிரவன் தன் கிரணங்களால் அவற்றை அழகுபடுத்தவே, விடிந்ததை உணர்ந்தாள் நந்தினி.
அதுவரை அவளது மனதில் இருந்த பாரங்கள் நீங்கினார் போல இருக்க, நிம்மதியாக உறங்கத் துவங்கினாள்.
ஆனால், அவள் வரைந்த ஓவியங்கள் தங்களுக்குள் ஒளித்து வைத்திருந்த ரகசியங்களை யாரிடமாவது கூற முயற்சி செய்து கொண்டிருந்தன.
அன்று ஞாயிற்றுக் கிழமையாக இருக்கவே, சிறிது தாமதமாகவே துயில் கலைந்து எழுந்தார் துர்கா. அவருக்கு ஏதோ சொல்ல முடியாத பல துயரங்கள் மனதை அடைப்பது போல உணர்ந்தார்.
பழைய ஞாபகங்கள் வந்து வந்து அவரது சிந்தனைகளைச் சிறை பிடித்துக் கொண்டிருந்தன. ஏதோ ஒன்று பெரிதாக நடக்கப் போவதாக அவரது உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது. ஆனால், அது நல்ல விஷயமா அல்லது கெட்ட விஷயமா என்று அவரால் அறிய முடியவில்லை.
அன்று காலையில் வெகு நேரமாகியும் மகள் வெளியே வராததால் அவளைக் காணச் சென்றார். அறையில் அவரது மறு பிம்பம் உறங்கிக் கொண்டிருக்க, அவளையே வாஞ்சையாகப் பார்த்தார்.
“ஒருவேளை நேற்று நடந்த செமினாரில் மிகவும் சோர்ந்து போய்விட்டாளோ ?” என்று எண்ணி, அவளை எழுப்பாமல் கீழே இறங்கச் சென்றார்.
அப்பொழுதுதான், அந்த அறையில் இருந்த ஆறு ஓவியங்களைக் கண்டார். ஒவ்வொரு ஓவியமும் மிகவும் அழகாக இருக்க, அதனை ஒவ்வொன்றாகப் பார்க்க ஆரம்பித்தார்.
அதில் ஆறாவதாக இருந்த ஓவியத்தைக் கண்டதும் அவர் கை தானாகவே அந்த ஓவியத்தை நழுவ விட்டது. அவர் உடம்பில் அவசரக்கால சுரப்பிகள் சுரக்க ஆரம்பிக்க, அவர் முகம் முழுவதும் வியர்வையால் நனையத் தொடங்கியது.
இத்தனை நாள் தான் கனவிலும் எதிர்பார்க்காத ஒன்று தன் கண்முன்னே விரிய அதனைக் கண்டு பயந்தார் துர்கா. உடனே அந்த ஓவியத்தை மட்டும் கையோடு எடுத்துக் கொண்டு தங்களது அறைக்கு வந்தார்.
அப்பொழுது, கண்ணன் செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருக்க, தன் கையிலிருந்த ஓவியத்தை அவரிடம் காட்டினார் துர்கா. காலையில் வியர்த்த முகத்துடன் நின்றிருந்த மனைவியின் கையில் இருந்த ஓவியத்தைப் பார்த்த பொழுது, அவர் செய்தித்தாளை நழுவ விட்டு அந்த ஓவியத்தை வேகவேகமாக ஆராய்ந்தார்.
அந்த ஓவியத்தில் ஒரு கைக்குழந்தை இருக்க அதை ஒரு தம்பதியர் பார்ப்பது போல இருந்தது. அவர்கள் கூடவே ஒரு சிறிய கிளியும் இருந்தது. இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், நடந்த சம்பவத்தைச் சிறிதும் வேறுபாடு இல்லாமல் வரைந்து இருந்தாள் நந்தினி.
கண்ணன் இன்னும் திகைப்பில் இருந்து வெளியேறாமல் இருக்க, துர்கா, “என்னங்க நாம இவ்வளவு நாளா மறைச்ச உண்மை நந்துக்கு எப்படி தெரிஞ்சிச்சு ? அதுவும் நாம அன்னிக்கு போட்டு இருந்த ட்ரெஸ்ஸ கூட தெளிவா வரைஞ்சு இருக்காளே ? எனக்கு என்னமோ மனதே சரியில்லாத மாதிரி இருந்துச்சுங்க. இப்போதாங்க அதுக்கான காரணம் புரியுது” என்றார் கலக்கம் நிறைந்த குரலில்.
“எனக்கு ஒரு விஷயம் மட்டும் சுத்தமா புரியல, துர்கா. ஆனா, நீ இந்த பெயின்டிங்க இங்கே எடுத்துட்டு வந்து தப்பு செஞ்சுட்ட. இதை எந்த இடத்தில் இருந்து எடுத்தியோ அங்கேயே போய் வச்சுட்டு வா” என்றார் கண்ணன்.
அவர் சொல்வது புரியாவிட்டாலும், அவர் கூறியதைச் செய்ய நந்தினியின் அறைக்கு அந்த ஓவியத்தை எடுத்து சென்றார் துர்கா. இன்னும் நந்தினி உறங்கிக் கொண்டிருக்க, அவர் அந்த ஓவியத்தை எப்படி இருந்ததோ அப்படியே வைத்துவிட்டு கீழே வந்தார்.
கண்ணன் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்திருக்க, துர்கா அவரது தோளை மெதுவாகத் தொட்டார்.
“துர்கா நான் இப்போ சொல்ல போறத நீ பொறுமையா கேட்கணும். இனிமே, நாம நந்தினிகிட்ட இருந்து உண்மையை மறைக்கிறது சரியில்லனு தோணுது. இதைப்பத்தி நம்பளே அவகிட்ட சொல்றதுதான் நல்லது” என்றார் கண்ணன்.
“இல்ல, என் பொண்ண என்கிட்ட இருந்து பிரிக்கப் பார்க்காதீங்க. இதுவரைக்கும் அவளைத் தேடி ஒருவரும் வரலேல, அதுமட்டும் இல்லாம, அவளைக் கொலை செய்றதுக்கு தானே அவங்க முயற்சி பண்ணாங்க. உண்மையை நந்துகிட்ட சொல்லப் போய், அவ அவங்கள தேட முயற்சி பண்ணி, ஏதாச்சும் ஆபத்துல மாட்டிக்கிட்டானா என்ன பண்றது ?” என்று கேட்டார் துர்கா.
“துர்கா இத்தனை வருஷம் ஆகிடுச்சு, நந்தினியோட பெற்றோர்னா அது நாம ரெண்டு பேரும் தான். அதுல கொஞ்சம் கூட மாற்றம் இல்ல. ஆனா, இது நம்ம பொண்ணுக்குத் தேவைனு சொல்றத விட இத தெரிஞ்சிக்குறது அவளோட உரிமைனு சொல்றதுதான் சரி” என்றார் கண்ணன்.
“நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க. ஆனா, நந்து கிட்ட இதை பத்தி சொல்ல நான் ஒத்துக்க மாட்டேன்” என்றார் துர்கா.
“இது ஒரு சாதாரண சூழ்நிலையா இருந்தா பரவாயில்ல, துர்கா. ஆனா, நந்தினி ஏற்கனவே ஒரு தடவை மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கா. இந்த விஷயத்த, அவ வேறு யார் மூலமாவோ தெரிஞ்சுகிட்டா, அவளோட நிலைமை என்ன ஆகும்னு நம்பளால உறதியா சொல்ல முடியாது, இப்போ ஏதோ ஒரு காரணத்துக்காக தான் அவளுக்கு பழைய ஞாபகங்கள் நினைவுக்கு வர ஆரம்பிக்குது. அதை நாம தடுக்கக் கூடாது” என்று துர்காவுக்கு புரியும்படியாக எடுத்துக்கூறினார் கண்ணன்.
அவர் கூறியதைக் கேட்ட துர்கா, அதில் இருந்த உண்மை சுட தனது மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “எனக்கு யோசிக்க டைம் வேணுங்க” என்று கூறிவிட்டு கண்ணனின் தோளில் சாய்ந்து கொண்டார்.
*****
இடம் : ஆதித்யனின் வீடு
முதல் நாள் இரவு, வெகு நேரம் கழித்து உறங்கி இருப்பினும் ஆதித்யன் தான், முதலில் எழுந்தான். பல வருடப் பழக்கத்தினால் ஏற்பட்ட விழிப்பு அது. பிறகு காலைக் கடன்களை முடித்துவிட்டு ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தான். அதற்குள் வீட்டில் அனைவரும் எழுந்திருந்தனர். வெகு நாட்கள் கழித்து, மகன் வந்திருப்பதால் உணவு மெனுவை அவனுக்குப் பிடித்தவாறு தயாரித்தார் சித்ரா.
தான் வந்த காரியம் ஞாபகம் வர, “இன்னும் சிறிது நேரம் போகட்டும். சாப்பிட்டு முடித்த பின்பு பேசலாம்” என்று எண்ணினான் ஆதித்யன்.
காலை உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து முடித்தப் பின் சோபாவில் ஓய்வாக அமர்ந்தனர். ஆதித்யன் முந்தைய நாள் இரவு அலமாரியில் பார்த்த நிழற்படத்தை எடுத்து அனைவர் முன்னும் வைத்தான். அதைக் கண்ட அனைவரும் துணுக்குற்றனர்.
எத்தனை ஆண்டுகள் ஆகி இருந்தாலும், அனைவர் மனதிலும் அந்தக் காட்சி அழியாமல் இருந்தது. அவன் அடுத்து என்ன கேட்கப் போகிறான் என்று தெரிந்தும், அனைவரும் வாய் மூடியே அமர்ந்திருந்தனர்.
இத்தனை நேரம் அங்கு இருந்த இதம் மறைந்து ஓர் இறுக்கமான சூழ்நிலை உருவானது.
அவர்கள் அனைவரையும் பார்த்து ஆதி தானாகவே முன்வந்து, “பாட்டி, இந்த போட்டோல இருக்கிறது என்னோட அத்தை தானே ? இவங்க இறந்து எத்தனை வருஷம் ஆகிருக்கும் ? ஆனா ஏன் இவங்களுக்கு வருஷா வருஷம் நாம திவசம் கொடுக்குறதில்ல ? அது கூட பரவாயில்ல நம்பளோட வீட்டுல அவங்களோட படத்தை மாட்டி அதுக்கு ஒரு பூ கூட வக்கிறதில்லயே ? ஏன் பாட்டி ?” என்று கேட்டான்.
ஆதித்யனின் கேள்வியில் ஸ்ரீநிவாசனும் சிவகாமியும் கண் கலங்கி நிற்க, ஸ்ரீதரோ ஒரு படி மேலே போய், “ஆதி” என்று கத்திவிட்டார்.
அவர்கள் பழைய நிலைக்குத் திரும்ப ஆதி சிறிது நேரம் கொடுத்து, தாத்தாவிடம் சென்று, “இப்போ சொல்லுங்க, தாத்தா. சின்ன வயசுல இருந்தே இதைத்தான என்கிட்ட சொல்லி வளர்த்தீங்க. இப்போ என்ன திடீர் மாற்றம் ?” என்று சிறிது கோபமாகவே கேட்டான்.
இளமையின் வேகத்தில் நாம் எடுக்கும் பல முடிவுகள், தோல் சுருங்கி வாழ்க்கையின் நிதர்சனம் அறிந்து முதுமைப் பருவம் அடையும்போது, எவ்வளவு முட்டாள்தனமாகத் தோன்றுகிறது. இதுதான் மனித குணம். அத்தகைய நிலையில் தான் ஸ்ரீநிவாசனும் சிவகாமியும் இருந்தனர்.
தற்போது பேரன் கேட்கும் கேள்விக்குப் பதில் கூற வேண்டிய நிலையில் இருப்பதை உணர்ந்து சிவகாமி, “அவ என்னோட பொண்ணுதான், ஆதி. உன் அப்பாவோட பிறந்த இரட்டைக் குழந்தையான ஜெயஸ்ரீ துர்கா. ரெண்டு பேரும் ஒரு சின்ன குறை கூட சொல்ல முடியாத பிள்ளைகளாக தான் வளர்ந்தாங்க.
அவங்களுக்குத் திருமண வயசு வந்தப்ப ரெண்டு பேர்கிட்டயும் கேட்டுட்டு தான் கல்யாணத்துக்கு நிச்சயம் பண்ணோம். ஆனா, கல்யாணத்துக்கு மொத நாள் காலையில, வேறு ஒரு பையன கல்யாணம் செஞ்சு கிட்டு கழுத்துல தாலியோடு வந்து நின்னா உன் அத்தை” என்று கூறியவர், அதற்கு மேல் தொடர முடியாமல், சிறிது இடைவேளி விட்டு,
“அவள அப்படி பார்த்தோன, எங்களோட மானம் மரியாதை போயிடுச்சுனு கூட நாங்க கவலைப்படல. நாங்க ஆசை ஆசையா வளர்த்த பொண்ணு எங்க்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம இவ்வளவு பெரிய காரியம் செஞ்சிருக்கானு தெரிஞ்ச உடனே, எங்களோட கோபம் அதிகமாகிடுச்சு. அதுக்கப்புறம் உன் அப்பாவோட கல்யாணத்த எப்படியோ நடத்திட்டோம். இந்த வீட்டை பழையபடி உன் அம்மாதான் மாத்துனா. அப்போ இருந்த கோபத்துல உன்கிட்டயும் அப்படியே சொல்லி வளர்த்துட்டோம். ஆனா, இப்ப கண்ண மூடுறதுக்கு முன்னாடி எங்க பொண்ண ஒரு தடவையாச்சும் பார்த்துட மாட்டோமானு மனசுக்குள்ள ஏங்கிகிட்டு இருக்கோம், ஆதி” என்று கூறி அழுத சிவகாமியைப் பின் சித்ரா தான் சமாதானப்படுத்தினார்.
“இப்படியே இருந்தா அத்தையின் உடல் நிலை கெட்டுவிடும்” என்று உணர்ந்த சித்ரா,
“எங்களை இப்படி கேள்வி கேக்குறதுக்குதான் ஊருல இருந்து வந்துருக்கியா, ஆதி ?” என்று கோபமாகக் கேட்டார் தன் மகனிடம்.
ஆதியோ அவரது கேள்வியைப் பொருட்படுத்தாமல், ஸ்ரீதரிடம் சென்று, “அப்பா, தாத்தா பாட்டியையாவது ஒரு வகையில் சேர்த்துக்கலாம். ஆனா, உங்கள… அத்தை உங்க கூட பிறந்தவங்க. அவங்களோட உணர்வுகள உங்களைத் தவிர வேறு யாராலயும் உணர்ந்திருக்க முடியாது.
ஆனா, நீங்க இவங்க சொன்னத இல்லனு கூட என்கிட்ட சொல்லலையேப்பா. அத்தை பக்கம் ஏதாவது நியாயம் இருந்திருக்குமானு ஒரு தடவை யோசிச்சு, அவங்கக்கிட்ட கேட்டிருந்தா கூட இவ்வளவு பெரிய பிரச்சனையா இது மாறியிருக்காதே ?” என்று கேட்டான் ஆதித்யன்.
“உன் வார்த்தையால என்ன குத்தாத, ஆதி. அன்னைக்கு ஒரு நாள் நான் அமைதியாக இருந்ததனால, ஏற்பட்ட விளைவுகள நினைச்சு இந்த இருபத்து ஆறு வருஷமா நான் வேதனை பட்டுட்டு இருக்கேன். இதுவரைக்கும் பலமுறை அவளிடம் நான் மானசீகமா மன்னிப்பு கேட்டுட்டேன். ஆனா, இன்னமும் அந்த வருத்தம் என்னை விடல” என்று கூறி வேதனைப்பட்டார் ஸ்ரீதர்.
“இனி என்ன பேச” என்று நினைத்த ஆதி, அப்படியே ஒரு சோபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.
அங்கிருந்த அனைவர் மனதிலும் ஆதியின் பேச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அனைவரும் தத்தமது நினைவுகளில் ஆழ்ந்திருந்தனர். எதற்கும் கலங்காத ஸ்ரீநிவாசன் கூட கண்கலங்கியிருந்தார்.
பின்னர் ஆதித்யன், “அத்தை எங்க இருக்காங்கன்னு எனக்குத் தெரியும்” என்று கூறினான்.
அனைவரின் விழிகளும் ஒரே நேரத்தில் அவனை நோக்கி படையெடுத்தன.
******
நந்தினி மெல்லக் காலை பத்தரை மணிக்கு விழித்தெழுந்து, மணியைப் பார்த்து விட்டு வேக வேகமாக குளித்துவிட்டு கீழே செல்ல, அவள் எழுவதற்காகக் காத்திருந்த கண்ணனும் துர்காவும் அவளுக்குக் காலை உணவை அளித்து விட்டு, சுந்தரம் ஜெயந்தி தம்பதியினருடன் கோயிலுக்குச் சென்றனர்.
திரும்பி வந்த நந்தினி, அவள் வரைந்த ஓவியங்களைப் பார்க்க, “தான் எப்படி ஒரே இரவில் ஆறு ஓவியம் வரைந்தோம் ?” என்று வியந்து நின்றாள்.
அதுவும் ஒவ்வொரு ஓவியத்தையும் வரைய சுமார் நான்கு மணி நேரங்கள் தேவைப்படும் போல் இருந்தது. யோசித்து யோசித்து, தலை வலிக்க ஆரம்பிக்க, ஆரியனுக்கு அழைத்து வீட்டுக்கு வரச் சொன்னாள்.
அவன் என்னமோ ஏதோவென்று பதறி ஓடி வர, இங்கு நந்தினியோ சுகமாகக் கட்டிலில் அமர்ந்து, டீ அருந்தி கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்ததும் சுர்ரென்று வந்த கோபத்தில், “ஏன்டி இங்க ஒருத்தன வான்னு ஒரு வார்த்தை சொல்லி போனை கட் பண்ணிட்டு, அவன அரக்க பறக்க கிளம்பி வர வச்சிட்டு ஹாயா உட்கார்ந்து டீ குடிக்கிறியா ?” என்று காய்ந்தான் ஆரியன்.
“கத்தாத டா எருமை, ஏற்கனவே, தலைவலில இருக்கேன். எல்லாம் நீ கொடுத்த ஐடியா தான். அந்த பக்கம் பாரு” என்று ஆரியனைத் துரத்தினாள் நந்தினி.
ஆரியன் பின்னால் திரும்பி, அந்த ஓவியங்களைப் பார்த்தவன், “ ஹேய் நந்து, சூப்பரா இருக்கு. அடுத்த வருஷம், எல்லாத்தையும் ஆர்ட் எக்ஸிபிஷன்ல (Art Exhibition) வச்சுட வேண்டியது தான். செம்ம டப்பு தேறும்” என்று கூறியவன்,
மனதில் திடீரென ஏதோ தோன்ற, “நந்து, நேத்து தான் உன்னைய பெயின்டிங்க்ஸ் வரைய ஆரம்பிக்கச் சொன்னேன். அதுக்குள்ள, ஆறு படம் வரைஞ்சு இருக்க. எல்லாரும் ஓவர் நைட்ல ஒபாமா தான் ஆவாங்க … ஆனா, நீ ஓவர் நைட்ல ஒரு பிக்காசோவா ஆகிட்டியே” என்று ஆரியன் கூறி முடிப்பதற்கும், அவன் தலையை நோக்கி ஒரு பூ ஜாடி வரவும் சரியாக இருந்தது.
அதை அவன் கேட்ச் பிடித்து ஏதோ பெரிய உலக சாதனை படைத்தவன் போல் நிற்கவும், அவனை “வெட்டவா ? குத்தவா ?” என்ற ரேஞ்சுக்கு முறைத்துப் பார்த்தாள் நந்தினி.
பிறகு தான் ஆரியன் சீரியஸாக, “எப்படி நந்தினி ஆறு ட்ராயிங்ஸ ஒரே நைட்டுல முடிச்ச ? அதுவும் ஒவ்வொன்னும் ரொம்ப தத்ரூபமா இருக்கு” என்றான்.
“அதான்டா நானும் யோசிச்சி யோசிச்சி பார்த்தேன். ம்ஹூம்… தலைவலி வந்தது தான் மிச்சம்” என்றாள் நந்தினி.
முதல் ஓவியத்தில், ஒரு தம்பதியர் ஒரு குழந்தையைப் பார்ப்பது போலிருந்தது. ஆனால், அந்தக் குழந்தை ஒரு வித்தியாசமான வாகனத்தில் இருப்பது போல இருந்தது.
இரண்டாவது ஓவியத்தில், இரு குழந்தைகள் ஒரு கடற்கரையில், மணலில் ஏதோ ஒரு கோட்டை கட்டுவது போல் இருந்தது. அந்தக் கோட்டையை மிகவும் துல்லியமாக முப்பரிமாணத்தில் ( 3D ) வரைந்து இருந்தாள் நந்தினி.
மூன்றாவது ஓவியத்தில், ஒரு யுவனும் யுவதியும் ஒரு கல் மேடையில் அமர்ந்து இருந்தனர். அந்தத் தோட்டத்திலிருந்து சின்ன சின்ன புற்களைக் கூட நந்தினி நுணுக்கமாக வரைந்திருந்தாள்.
நான்காவது ஓவியத்தில், முன்னர் கண்ட ஓவியத்தில் இருந்த இருவரும் நடுவில் நிற்க, அவர்களைச் சுற்றி பலர் நின்று கொண்டிருந்தனர்.
ஐந்தாவது ஓவியத்தில், இந்த உலகமே வெடித்துச் சிதறுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
ஆறாவது ஓவியத்தில், பூமிக்கு அருகே ஒரு விண்வெளி விமானம் வருவது போல இருந்தது.
கடைசி இரு ஓவியங்களையும் கண்ட ஆரியனின் உடலில் அவனை அறியாமல் ஒரு சிலிர்ப்பு எழுந்தது.
ஆரியன் அந்த ஓவியங்களைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு, நந்தினியிடம், “நந்து, பெயின்டிங்க வச்சு ஒருவரோட மனச கணிக்கப் பயன்படுத்தும் வழிகளில் DAM-உம் ( DRAW – A – MAN ) ஒண்ணு.
அதாவது ஒரு மனிதன முழுமையா வரையறது, அப்படி வரையும்போது யாரை வரையுறாங்களோ அவங்கள விட வரையுறவங்கள பத்திய செய்திகளே பெயின்டிங்க்-ல அதிகமாக கிடைக்கும்.
உதாரணமா, வரையப் பயன்படுத்தும் பேப்பர், கலர்ஸ், எந்த இடத்துல அடிக்கடி அழிச்சு அழிச்சு வரைஞ்சிருக்காங்க, இது மாதிரி சின்ன சின்ன விஷயங்கள வச்சு வரையறவங்களைப் பத்திய செய்திகள தெரிஞ்சுக்கலாம். ஆனா, இப்போ நீ வரைஞ்ச பெயின்டிங்க்ஸ பாக்கும் போது, நீ நிறைய கலர்ஸ் பயன்படுத்தி இதை வரைஞ்சிருக்க.
அப்படினா நீ ஒவ்வொரு விஷயத்தையும் கனவுல ரொம்ப துல்லியமா அப்சர்வ் பண்ணிருக்க. ஒரு இடத்துல கூட அடித்தல் திருத்தல் இல்ல. அப்படினா இந்த காட்சிகள் உன் மனசுல ஆழமா பதிஞ்சிருக்கு. இவ்வளவு நேர்த்தியா ஒரு விஷயத்த நேர்ல பாத்துக்கிட்டு வரையறதுக்கே, பல மணி நேரம் தேவைப்படும். அதாவது, நீ இந்த ஆறு பெயின்டிங்க்ஸையும் கேப்பே ( Gap ) இல்லாம வரைஞ்சிருந்தா கூட, ஒரே நைட்ல முடிக்குற வேலை இல்ல இது” என்று தன்னுடைய கணிப்பைக் கூறினான்.
நந்தினி சிறிது ஆச்சரியமடைந்து, “பரவால்ல டா … உனக்குக் கூட ஏதோ கொஞ்சம் தெரிஞ்சு இருக்கே” என்று கூறி நிலைமையைச் சகஜமாக்க,
“ஏய் …” என்று கத்தினான் ஆரியன்.
நந்தினி, “பொறுமைடா, நீ சொன்னது எல்லாமே சரி, ஆரி. ஆனா, இந்த முதலாவது பெயின்டிங்கையும், ஆறாவது பெயின்டிங்கையும் நான் என் கனவுல இதுவரைக்கும் ஒரு தடவை கூட பார்த்ததில்ல“ என்றாள். இதைக் கேட்டதும் ஆரியன் முற்றிலும் குழம்பிப் போனான்.
*****
இடம் : இன்டர்ஸ்டெல்லர்
அந்த விண்வெளி விமானம் தன் வழியில் வரும் இடர்களை உடைத்துக்கொண்டு வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அதன் நோக்கத்தைப் பார்க்கும்பொழுது, போர் வீரன் ஒருவன் தனக்கு எதிரே எத்தனை படைவீரர்கள் வந்தாலும் அவர்களை வீழ்த்திவிட்டு தன் லட்சியம் ஒன்றே குறிக்கோளாய் கொண்டு நகர்வது போல் இருந்தது.
அந்த விமானம் மெல்ல மெல்ல சூரியக்குடும்பத்தில் நுழைந்தது.
அந்த விண்கலத்தின் தலைவர், “வீரர்களே ! குளிரில் ஓய்வெடுக்கும் வீரர்களை எழுப்புங்கள். பத்து பத்து வீரர்களாக ஆறு அணிகளாக ஒன்று சேருங்கள். ஒவ்வொருவரும் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இடங்களுக்குச் செல்லுங்கள். அங்கிருந்து ஒவ்வொரு அணியும் 20 உயிரினங்களைப் பிடித்து வர வேண்டும். அதற்காக எத்தனை உயிரினங்கள் இறந்தாலும், சரி எத்தனை கட்டடங்கள் தகர்ந்தாலும் சரி. உங்கள் வேலையை முடித்துவிட்டு நான் அனுப்பும் கோ – ஆர்டினேட்ஸ்க்கு எல்லாரும் திரும்பி விடுங்கள்” என்றார்.
அவர் கட்டளையை நிறைவேற்ற வீரர்கள், அங்குமிங்கும் ஓட, தலைவர் அந்த விமானத்தின் இயக்கத்தை மாற்றிக் கொண்டிருந்தார்.
“இதற்கு மேல் பூமி கிரகத்தால் நாம் வருவதை அறிய முடியாது. நாம் பூமியில் இறங்கிய பிறகு அவர்கள் அறிந்தாலும், அவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் நம் வேலையை முடித்துவிட்டு கிளம்பி விடலாம்” என்று நினைத்துக் கொண்டார்.
தங்களை நோக்கி வரும் ஆபத்தை அறியாமல் பூமி கிரகத்தினர் தங்கள் அன்றாட வாழ்வில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர்.
கயா கிரகத்தினரின் தாக்குதலில் இருந்து பூமி கிரகத்து மனிதர்கள் தப்புவார்களா ?