“அடிச் செருப்பால. அய்யன் இவ்வளவு சொல்றப்பல. நீ என்னன்னா நான் சீமையில போய் தான் படிப்பேன்னு நின்னுக்கிட்டு இருக்க. பணம் என்ன மரத்துல காய்க்குதா? இல்ல உன் ஆத்தா சீதனமா கொண்டு வந்தது அள்ள ஆள் இல்லேன்னு நீ அள்ளி சீமையில கொடுக்க நினைக்கிறியா?” என்று தெய்வநாயகி திட்டியதும் மணிமேகலை அமைதியாகி விட்டாள்.
இது வரை என்ன ஆனாலும் சரி. தன் விருப்பத்தை செய்து முடிக்க என்ன அடி திட்டு வாங்கினாலும் சரி நாம் மேல் படிப்பு படிக்க வெளிநாடு சென்றே ஆகவேண்டும் என்று நினைத்தவள் பணம் விஷயத்தை நினைக்க மறந்து விட்டாள்.
அவ்வீட்டில் தன் தந்தைக்கு அனைத்து உரிமை இருந்தும், தான் என்பதை விட தன் அன்னையும் அமைதியாக இருக்க காரணம் தன் தந்தை அவ்வீட்டுக்கு வருமானம் ஈட்டி தராது இருப்பது தான்.
தாத்தாவின் சொத்தை இரு சித்தாப்பாக்களும் இரு மடங்காய் ஆக்கி விட்டனர் என்று அய்யன் சொன்னால் அப்பத்தா என் இரு மருமகள் எடுத்து வந்த சீதனத்தை பார்த்து இந்த ஊரே மூக்கின் மீது விரல் வைத்துக் கொண்டது என்று பெருமை பட்டுக் கொள்வார்.
[the_ad id=”6605″]
பின் இருக்காதா? எந்த வயதானாலும் தன் தாய் வீட்டை எப்போதும் விட்டுக் கொடுக்காது பெருமையாக தானே பேசுவார்கள் . தன் வீட்டுக்கு மருமகளாய் வந்த இருமருமகள்களும் தன் அண்ணன் பெற்ற மகள்கள் ஆயிற்றே.
இப்படி அய்யன் அப்பத்தாவின் மூலம் தெரிந்துக் கொண்டவளுக்கு, அவளை அறியாது பணம் என்று வரும் போது தன் தேவைக்கு தயங்கி தயங்கி தான் கேட்பாள்.
இப்போது அதே பணத்தை வைத்து மணிமேகலையின் அப்பத்தா பேசவும், அதற்க்கு அடுத்து ஒன்றும் பேச முடியாது அமைதியாகி விட்டாள்.
அதை பார்த்த தெய்வநாயகி, “அது தான் யார் யாரு எதுக்கு ஆசை படனுமோ அதுக்கு தான் ஆசைப்படனும். என் நேரம் நல்ல இடத்து சம்மந்தம் வந்து இருக்கு ஒழுங்கு மரியாதையா அவனை கட்டிட்டு பொழைக்கிற வழிய பாரு.” என்று சொன்னவர்.
பின் அனைவரையும் பார்த்து, “என்ன மச மசன்னு நின்னுட்டு, அவ எல்லாம் ஒத்துப்பா போய் வேற வேலை பாருங்க.” என்று இதோடு முடிந்தது இந்த விசயம். மணிமேகலைக்கு இந்த சம்மந்தம் முடித்தே தீருவேன் என்பது போல் பேசி முடித்தார்.
“விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணா அப்புறம் பிரச்சனையில் தான் முடியும் அம்மத்தா…” என்று சொன்ன வீரா.
மணிமேகலையை பார்த்து, “எல்லா விஷயமும் சேகரிச்சியே, இந்த எஜூகேஷன் லோன்னு ஒன்னு இருக்கே அதை பத்தி ஏதாவது விசாரிச்சி வெச்சியா?” என்று வீரா தன்னிடம் கேட்டதும் தான் அவளுக்கு அந்த நினைவே வந்தது.
அவளுக்கும் கல்வி கடன் உதவி தொகையை பற்றி தெரியும். ஆனால் வெளிநாட்டு படிப்புக்கு எவ்வளவு கொடுப்பார்கள். அதற்க்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்ற முழுவிவரமும் தெரியாது.
அதோடு அல்லாது அப்பத்தா சொன்ன பணம் என்ற வார்த்தையே அவள் அடுத்து என்ன என்று யோசிக்காது மூளை சண்டித்தனம் செய்து அப்படியே நின்று விட்டது.
வீரா இப்படி சொன்னதும் அவனை பார்த்தவளுக்கு அந்த நேரத்திலும் ‘இவன் ஏன் அப்போதில் இருந்து எனக்கு சாதகமாகவே பேசிட்டு இருக்கான்.
இதில் ஏதாவது உள்குத்து இருக்குமா?’ என்று மனது யோசித்தாலும் வாய் தன்னால் அவனுக்கு பதில் சொன்னது.
“எஜூகேஷன் லோன் பத்தி தெரியும். ஆனால் வெளிநாட்டு படிப்புக்கு என்ன என்ன ப்ராஸஸ் அது தான் தெரியாது.”
இத்தனை ஆண்டில் அதே ஊரில் வசிக்கும் அத்தை மகனிடம் இப்போது தான் நேருக்கு நேர் பேசிக் கொள்கிறாள். இவனிடம் பேசவே கூடாது என்று தான் அவள் மனதில் வைராக்கியம் வைத்திருந்தாள்.
ஆனால் இந்த வைராக்கியத்தோடு தன் லட்சியமான வெளிநாட்டு வாழ்க்கை என்று வரும் போது, இது போல் ஒரு சிலதை தளர்த்திக் கொள்வதில் தவறு இல்லை என்று நினைத்தாள். கூடவே இவன் நமக்கு ஏதாவது உதவி செய்வானா? என்ற ஒரு ஆசையிலும், மணிமேகலை அவனிடம் பேசினாள்.
[the_ad id=”6605″]
“நான் அதுக்கு உதவி செய்கிறேன்.” என்ற வீராவின் பேச்சில், தெய்வநாயகி, “வீரா என்ன நான் என்ன சொன்னா நீ என்ன செய்துட்டு இருக்க.” என்று தன் பேரனை திட்டம் செய்ய பார்த்தவரை…
“தெய்வா படிப்பு பத்தி நமக்கு எதுவும் தெரியாது. தெரிஞ்ச வீரா பேசுறான் விடு.” என்று சொன்ன சங்கரலிங்கம்.
மணிமேகலையிடம், “நான் உன் விருப்பத்துக்கு படிப்பு படிக்க விடுறேன். நீ என் விருப்பத்துக்கு தான் கல்யாணம் கட்டனும். நான் எதை சொல்றேன்னு தெரியுதா?” என்ற சங்கரலிங்கத்தின் பேச்சுக்கு, மணிமேகலையின் மனசாட்சி குத்தினாலும், அதை ஓரம் கட்டி விட்டு மணிமேகலை தன் மண்டையை பலமாகவே ஆட்டினாள்.
பின் சங்கரலிங்கம் அந்த வீட்டின் தலைவனாய், தன் கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவர், அங்கு இருக்கும் ஆண்களை பார்த்து, “பத்திர பதிவுக்கு நேரம் ஆயிடுச்சி.” என்று சொன்னவர் தன் மனைவியை பார்த்து…
“இதோடு இந்த பேச்சை எடுக்கக் கூடாது.” என்று சொல்லி விட்டே சென்றார்.
எப்போதும் தன் வேலை முடிந்ததும், மேல் மாடியில் இருக்கும் தன் அறைக்குள் தன்னை புகுத்திக் கொள்ளும் மணிமேகலை, இன்று ஏதோ பிரம்மை பிடித்தது போல் அப்படியே நின்று இடத்தை விட்டு அகலாது இருந்தாள்.
அந்த பிரம்மையிலும், நாம் கனவு ஏதாவது காண்கிறோமா, என்று தன்னையே கிள்ளியும் பார்த்துக் கொண்டாள். அந்த கிள்ளலில் வலித்தும் தான் மேல் படிப்பு படிக்க வெளிநாடு செல்ல வீட்டில் அனுமதி கிடைத்து விட்டதை அவளால் நம்பவே முடியவில்லை.
அதிலும் தான் மேல் படிப்பு படிக்க அனுமதி வாங்கி கொடுத்ததில் வீராவின் பங்கு அதிகம் என்பதை அவள் அறிவாள். அதை தான் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இது எப்படி, என்று அவள் யோசனையில் மூழ்க, மூழ்கியவளை மீட்டெடுக்கும் விதமாய், “எப்போவும் இது போல் தரையிலேயே கண்ணு பதிச்சிட்டு இருக்காதே. அதோடு ஆம்பிள்ளைங்க ஒன்னும் பேயோ பிசாசோ இல்ல. அவங்களை நிமிர்ந்து பார்க்கலாம். வெளிநாடு போய் படிக்க ஆசைப்பட்டா மட்டும் போதாது. அதுக்கு உண்டான தைரியமும் இருக்கனும். நீ ஏன் ஆண்களை பார்க்க மாட்டேங்குற…” என்று சொல்லி சென்ற வீராவின் முதுகை பார்த்துக் கொண்டு இருந்த மணிமேகலைக்கு, சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது.
மணிமேகலைக்கு தன்னுடைய இந்த சந்தோஷத்தை, யாரிடமாவது பகிர்ந்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மூலை வெடித்து விடும் போல் இருக்க, அவளுக்கு இருக்கும் ஒரே தோழியான வசுந்தராவின் வீட்டை நோக்கி ஓடினாள்.
அங்கு சாப்பிட்டுக் கொண்டு இருந்த வசுவின் தட்டை பறித்து அதை கீழே வைத்தவள், சாப்பிட்ட கை என்று கூட பாராது, வசுந்தாரவின் கையை பற்றிக் கொண்டு ராட்டிணம் போல் சுற்றியவள்…
“ஏய் ஏய் எனக்கு மயக்கம் வருதுடி. நிறுத்துடி போதும்.” என்று இரண்டு மூன்று தடவை கத்திய பிறகே அவளை விட்ட மணிமேகலை ஆசையோடு தோழியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
பின் இன்று தன் வீட்டில் நடந்ததை வசுவிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே வாசு கல்யாணத்திற்க்கு எந்த மறுப்பும் சொல்லாது அமைதியாக இருந்தது மணிமேகலையின் மனதை உறுத்தினாலும் அதை வசுவிடம் சொல்லாது விட்டு விட்டாள்.
அவளுக்கே வீரா பேசாது இருந்து இருந்தால் வாசு தன் எதிர்ப்பை தெரிவித்து இருப்பானோ? இது தான் என்று தெரியாத ஒன்றை வசுவிடம் சொல்லி அவள் மனதை நோகடிக்க அவள் விரும்பவில்லை. அதோடு தன் வாழ்க்கையிலேயே இன்று தான் அவள் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கிறாள். அதை தன் தோழியுடன் கொண்டாட நினைத்து அதை விடுத்து அனைத்தையும் சொல்லி முடித்து விட்டு தோழியின் முகத்தை பார்த்தாள்.
தான் சொன்னதில் வசுந்தராவின் முகத்தில் மகிழ்ச்சியோடு கூடவே ஒரு குறு குறுப்பும் இருந்தது.
அவளின் முகத்தையே பார்த்திருந்த மணிமேகலை, “என்னடி என்ன?” என்று கேட்டதற்க்கு, “ஒன்னும் இல்லடி… உங்க வீட்ல உன்னோட மேல் படிப்புக்கு ஒத்துனது ரொம்ப சந்தோஷம்” என்று சொன்னவள் ஏதோ சொல்லாது விட்டது போல் தெரிந்தது மணிமேகலைக்கு…
“ஏய் என்ன விஷயம் உன் பார்வையே சரியில்லையே?” என்று மணிமேகலை மீண்டும் மீண்டும் கேட்டாள்.
“இல்ல ஊரில் இருக்க பசங்க எல்லோரையும் நீ பாக்குற. உன்னை யார் பாக்குறான்னு பாக்காம்ம விட்டுட்டியே… அத நினச்சி தான் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருதுடி.” என்று வசுந்தரா சொன்னது மட்டும் அல்லாது, அடக்க மாட்டாது சிரித்தும் விட்டாள்.
“ஏய் சீ லூசு மாதிரி சிரிச்சி தொலையாதே… என்னை யாரு பார்த்தா? அது முதல்ல சொல்லு.”
[the_ad id=”6605″]
இது வரை மணிமேகலை தான் பார்க்கும் பசங்களுக்கு கூட தெரியாது தான், தன் சைட்டை வைத்திருந்தாள். அதனால் ஒரு பையனும் இவளை தப்பான கண்ணோட்டத்தோடு பார்த்தது கிடையாது.
அதுவும் இல்லாது பெரிய வீட்டு பெண்ணை பார்க்கும் அளவுக்கு அந்த ஊரில் தைரியச்சாலி யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படி இருக்கும் போது யார் என்னை பார்ப்பது? அதுவும் எனக்கு தெரியாது என்று நினைத்து கேட்டாள்.
வசுந்தரா தன் சிரிப்பை விடாது, “எல்லாம் உங்க வீரா மச்சான் தான் புள்ள” என்று சொல்லி விட்டு மீண்டும் தன் சிரிப்பை தொடர்ந்தவளை…
“தோ பாருடி என் மேல ஏதாவது கோபம் இருந்தா இரண்டு அடி கூட அடிச்சிடு. ஆனா இந்த விஷயத்தை விளையாட்டுக்கு கூட சொல்லாதே. அவ்வளவு தான் சொல்லுவேன்.”
வசுந்தராவின் பேச்சில் இருந்த சந்தோஷம் பறந்தோட பேசியவளின் கை பற்றிய வசுந்தரா,
“ஏய் இல்லடி நீ சொன்னியே உன் படிப்புக்கு வீரா தான் காரணமுன்னு அது தான்.” என்று இழுத்து நிறுத்தியவளின் பேச்சில்…
“நான் யாரை பாக்குறேன்னா அது இல்ல விஷயம். என்னை பாக்குறவன் இந்த ஊரை சேர்ந்தவன் என்ன, இந்த நாட்டை சேர்ந்தவனா கூட இருக்க மாட்டான்.” என்று மணிமேகலை சொல்லிய அதே வேளையில்,
கலிபோனியாவில் இரண்டு அடுக்கு, ஸ்வும்மிங் புல் வசதியோடு அமைந்திருந்த அந்த மாளிகையில் தன் சட்டையை டக் செய்து விட்டு, கட்டிய டையை சரி செய்துக் கொண்டு இருந்தான் ஜான் விக்டர்.
கண்ணாடி முன் அப்படியும் இப்படியும் சுற்றி ஒரு முறை தன்னை சரிப்பார்த்துக் கொண்டவன், தன் சிவந்த நிறத்தில் சர்மம் வரண்டு விடாது இருக்க ஏதோ லோஷனை தடவிக் கொண்டே தன் குறுந்தாடியை நீவி விட்ட வாறே தன்னை முழுவதும் ஒரு முறை, மீண்டும் தன் எதிரில் இருக்கும் கண்ணாடியில் உருவத்தை பார்த்தவனின் மனதில் தன்னால் ஒரு பெருமை வந்து ஒட்டிக் கொண்டது.
பின் பெருமை இருக்கத்தானே செய்யும். கலிபோனியாவில் வெற்றிகரமாய் தொழில் செய்யும் வில்சன் விக்டருக்கும், மலர் விழிக்கும் பிறந்த ஒரே மகன்.
பணத்தில் மட்டும் அல்லாது ஆறடி உயரமும், சிவந்த நிறமும் கொண்டு ஆண் அழகனாய் அமைந்ததால், அந்த நாட்டு பெண்கள் இவன் மீது விழுந்து பழகினாலும், அவர்களை எட்டி நிறுத்தி இன்று வரை சுத்த பிரம்மச்சரிய விரத்தை கடைபிடித்து தன் மனமும் உடலும் ஒருத்திக்கு மட்டும் தான் என்று நினைக்கும் நேர்மையானவனுக்கு இருக்கும் அந்த நிமிர்வோடு திமிரும் இருக்க, ஒரு வித கர்வத்தோடு தன் குறுந்தாடியை மீண்டும் தடவிக் கொண்டே சாப்பிட வந்து அமர்ந்தான்.
அவன் பக்கத்தில் வந்து அமர்ந்த வில்சன், “உன் முடிவு இது தானா?” என்று கேட்டவர் மகனின் அமைதியில் அவன் தன் முடிவில் இருந்து மாற்றிக் கொள்ள மாட்டான் என்று தெரிந்தவராய் அடுத்து எதுவும் பேசாது அமைதியாகி விட்டார்.