அத்தியாயம்….3
மணிமேகலை சொன்ன, “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை.” என்ற அவளின் பேச்சில், அனைவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர் என்பதை விட, ஆச்சரியத்தோடு பார்த்தனர் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
அவ்வீட்டில் அவள் இது வரை, இது வேண்டும். இது வேண்டாம், என்று சொன்னது கிடையாது. சொல்லும் அளவுக்கு அவளிடமும் இது வரை அவளின் விருப்பத்தை கேட்டதும் கிடையாது.
அதே போல் தான் இந்த திருமண பேச்சும் அவளிடம் கேட்காது, பெரியவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது, தானே முன் வந்து எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொன்னதும், அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
யார் என்ன பேசுவது என்று தெரியாது முழித்திருந்தனர். கமலக்கண்ணன் தன் மனைவியின் கை அசைவில் தன் மகளின் திருமண பேச்சை கேட்டவர் தான்.
எப்போதும் போல் அமைதியாக அனைவரின் முகபாவத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தவருக்கு, மகள் பேசும் போது அவள் முகத்தை பார்க்க தவறியதால், தன் மகள் என்ன சொன்னாள் என்று தெரியவில்லை என்றாலும்,
அங்கு நிலவிய சூழ்நிலையை பார்த்து, ஏதோ இவர்கள் விருப்பத்திற்க்கு எதிராக சொல்லி இருக்கிறாள், தன் மகள் என்று மட்டும் புரிந்தவராய் தான் அமர்ந்து இருந்த இடத்தை விட்டு எழுந்தவர், தன் மகளின் அருகில் போய் நின்று தன் கை பிடியில் மகளின் கை பற்றியவர், அதில் ஒரு அழுத்தத்தை கொடுத்ததும், தன்னை பார்த்த மகளிடம் கண் மூடி திறந்தவரின் செயல், மணிமேகலைக்கு தைரியமாக இரு, உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்வது போல் இருந்தது.
இது அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்தது. இதை பார்த்த தெய்வநாயகிக்கு என்ன தோன்றியதோ… எப்போதும் பேசாதவள் பேசியதால், எப்போதும் திக்காத தெய்வநாயகியின் பேச்சு திக்கி திணறி,
“எ…ன்…ன…? சொ..ன்ன எ..னக்கு பு..ரியல. எ…துக்கு விரு…ப்பம் இல்லே…ன்னு சொ…ன்ன?”
ஒரு சமயம் மணிமேகலை தாங்கள் என்ன பேசுகிறோம் என்று கவனிக்காது, ஏதோ ஒரு நினைப்பில் பதில் அளித்து விட்டாளா? என்று கொஞ்சம் தடுமாற்றத்தோடு தான் தெய்வநாயகி கேட்டார்.
அப்போதும் அவர் மனதில் அது தான் ஓடிக் கொண்டு இருந்தது. ‘ஏதோ நினைப்பில், ஏதோ அர்த்தம் கொண்டு சொல்லி இருந்தாலுமே, எப்படி விருப்பம் இல்லை என்ற பதில் அவளிடம் இருந்து வரலாம்?’ என்று தான் எண்ண தோன்றியது அவருக்கு.
இப்போது கூட தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லி இருக்க மாட்டாள் என்றே நம்பினார். ஆனால் இவன் ஏன் மகள் பக்கத்துல போய் நின்னான். தன் மகனையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே தான் மணிமேகலையிடம் கேட்டார்.
[the_ad id=”6605″]
தெய்வநாயகியின் கேள்விக்கு திரும்பவும் நிறுத்தி நிதானமாக, “எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்ல அப்பத்தா. நான் மேலே படிக்கனும்.நான் கல்யாணம் ஒரு ஐந்து வருடம் கழிச்சி செஞ்சிக்கிறேன்.”
மணிமேகலை முதலில் சொன்ன போதாவது, கொஞ்சம் பேச்சு தடுமாறி குரல் மெலிந்து தான் கேட்டது. ஆனால் இரண்டாம் முறையாக அவள் அளித்த பதில், சும்மா நறுக்கு தெரித்தார் போல் இருந்தது.
முதன் முதலில் எதிர்த்து பேசும் போது தான், என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ, என்ற பதட்டம், பயம், எல்லாம். பின் இவர்கள் என்னை என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தில், அடுத்து அடுத்து அவர்கள் பேச தயங்க மாட்டார்கள். அந்த நிலைக்கு தான் மணிமேகலை வந்து விட்டாள்.
மணிமேகலையின் திருமண பேச்சை அப்பத்தா எடுத்ததும், ஏதோ ஒரு தைரியத்தில் “எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை.” என்று சொல்லி விட்டவளுக்கு, உள்ளுக்குள் கொஞ்சம் என்ன, ரொம்பவே பயம் இருக்க தான் செய்தது.
ஆனால் தான் சொன்னதில் அங்கு இருந்தவர்களின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி, ஆச்சரியத்தை பார்த்து, அட இது கூட நல்லா இருக்கே, என்று தான் மணிமேகலை நினைத்தாள்.
அதுவும் தன் அப்பா தன் பக்கத்தில் நின்று அவர் கை அழுத்தத்திலும், அவர் பார்த்த பார்வையிலும், ஏதோ மனதிற்க்குள் ஒரு திடம் உண்டாகியது.
அதன் எதிரொலி தான் தெய்வநாயகியின் கேள்விக்கு எந்த வித தயக்கமும் இல்லாது, தன் விருப்பத்தை சொல்ல வைத்தது.
மணிமேகலையின் இந்த பதிலில் “என்ன சொன்ன? என்ன சொன்ன…? விருப்பம் இல்லையா?” என்று கேட்ட தெய்வநாயகி,
“உனக்கு எங்கு இருந்து இவ்வளவு தைரியம் வந்தது…? உன்னை எல்லாம் குச்சி கட்டுன உடனே, பந்தலும் கட்டி இருக்கனும். ஏதோ வூட்டு ஆம்பிள்ளைங்க சொன்னாங்களேனு பக்கத்து டவூனுக்கு படிக்க அனுப்பிச்சா, நீ என் கிட்டியே வியாக்கியனம் பேசுற…” என்று பேத்தியிடம் எகிறிய தெய்வநாயகி, தன் கணவன் பக்கம் திரும்பியவர்…
“ஏனுங்க முதல்ல அந்த பரந்தாமன் குடும்பத்துக்கு போன போடுங்க. நாளு நல்லா இருந்தா இன்னைக்கே பொண்ணு பார்த்துட்டு போகட்டும்.” என்று சொன்னவருக்கு, பதிலாய் தன் கணவனிடம் இருந்து எதுவும் வராது போக,
“என்னங்க…” என்று ஏதோ சொல்ல வந்த தெய்வநாயகியை, கை காட்டி எதுவும் பேசாதே என்பது போல் சைகை செய்த சங்கரலிங்கம்…
மணிமேகலையை பார்த்து, “எதுக்கு நீ வேண்டாமுன்னு சொல்ற?” என்று காரணம் கேட்டார்.
“நான் மேலே படிக்கனும்.” என்று மணிமேகலை எந்த உறவு முறையும் வைத்து அழைக்காது, வெறுமையாக தான் பேசினாள்.
தெய்வநாயகி திட்டவாவது மணிமேகலையிடம் பேசி இருக்கிறாள். அதனால் அவருக்கு பதில் சொல்ல, “சரி அப்பத்தா… இல்ல அப்பத்தா.” என்று பேச உறவு முறைக் கொண்டு அழைத்து இருக்கிறாள்.
ஆனால் சங்கரலிங்கம் தன்னை அழைத்து பேசியது எப்போது, என்று யோசித்தவளுக்கு அது எப்போது என்று நியாபகத்திலேயே இல்லை. அப்படிப்பட்ட உறவு முறையில் இருப்பவரை இப்படி தானே அழைக்க முடியும்.
அது என்னவோ சங்கரலிங்கத்திற்க்கு, இன்று தன் பேத்தியிடம் அமைதியாக பேச வேண்டும் என்று நினைத்து பேசினாரா? இல்லை தன் மகன் எப்போதும் யார் முன்நிலையிலும் எதிர் வராது, எதிர்த்து நிற்க்காது, ஒதுங்கி செல்பவன், தன் மகள் என்று வரும் போது நான் உனக்கு துணையாக இருப்பேன் என்று மணிமேகலையின் பக்கத்தில் சென்று நின்றது அவருக்கு என்ன உணர்த்தியதோ…
நிதானமாகவே, “இந்த கல்யாணத்தால் உன் படிப்பு கெடாது. உன் காலேஜ் இருக்கும் இடம் தான் அவங்க ஊரே…பரந்தாமன் பொண்ணு கேட்கும் போதே நான் மேல படிக்க வைக்கிறேன் என்று சொல்லி தான் கேட்டார்.” என்று பேசிய அய்யனை அவரின் இரு மகன்களும் அதிசயத்து தான் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அவர்களுக்கு தெரிந்து இவர் யாரிடமும் இது போல் மிக பொறுமையாக பேசி அவர்கள் பார்த்தது கிடையாது. அப்படி இருக்க அந்த வீட்டில் இது வரை ஒரு பொருட்டாகவே மதிக்காத மணிமேகலையிடம், தன் அப்பா அமைதியாக பேசியதை வாய் பிளந்து கேட்டுக் கொண்டு இருந்தனர்.
“நான் மேலே படிக்கிறேன் என்று சொன்னது. இப்போ நான் படிக்கும் B.E COMPUTER SCIENCE கிடையாது. அடுத்து நான் படிக்கும் P.G படிப்பை சொல்றேன். அதாவது நான் P.G அமெரிக்கா, இல்லேன்னா ஆஸ்திரேலியாவில் படிக்க விருப்பம்.” என்று சொன்னவள்.
தொடர்ந்து “அதுக்கு உண்டான பயிற்ச்சி நம் ஊரில் பக்கத்து டவுனிலேயே இருக்கு. இந்த வருஷம் தான் அதுக்கு உண்டான தேர்வு எழுதி வெச்சா, நான் இந்த படிப்பு முடிஞ்சதும், அந்த வருடமே நான் அங்கு போய் படிக்கலாம். நான் இந்த மாதம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க நினச்சி இருந்தேன்.” என்று அவள் சொன்ன விதத்திலேயே, இந்த எண்ணம் அவளுக்கு இன்று நேற்று வந்தது கிடையாது, வருட கணக்கில், இதை தான் படிக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறாள், என்று அங்கு இருந்த அனைவருக்கும் தெரிந்தது.
தெரிந்த விஷயம் அங்கு இருப்பவர்களுக்கு ஏற்றுக் கொள்ள கூடியதாய் இல்லை போல். அதுவும் மணிமேகலையின் இரு சித்தப்பா மார்களுக்கு, ஆண் பிள்ளை தங்கள் மகன்களே இங்கு இருக்கும் சென்னையில் தான் படித்தார்கள். பெண்பிள்ளைக்கு அமெரிக்கா ஆஸ்திரேலியா கேட்குதோ என்ற பொறாமையில் கொதித்து இருந்தாலும், வாய் திறக்கவில்லை.
அவர்களுக்கு தெரியும். மணிமேகலை தன் ஆசை கனவு லட்சியம் என்று என்ன தான் சொன்னாலும், தன் அன்னை தெய்வநாயகி இதற்க்கு ஒப்புதல் அளிக்கமாட்டார் என்று.
[the_ad id=”6605″]
எதற்க்கு நாம் கேட்டு நம் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அமைதியாக அங்கு நடப்பதை பார்க்க தொடங்கினர். இதன் நடுவில் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாது இருந்த கமலக்கண்ணனுக்கு மணிமேகலை தான் படிக்கும் படிப்பை பற்றி சொன்னாள்.
அதை கேட்ட கமலக்கண்ணனுக்கு குழப்பமாக இருந்தது. அவருக்கு வெளி அனுபவம் என்பது கிடையாது. அதோடு அவர் சுயமாய் இது வரை எந்த முடிவும் எடுத்தது கிடையாது என்பதை விட, எடுக்க விட்டது கிடையாது என்று சொன்னால் சரியாக இருக்கும்.
மற்றவர்களின் விருப்பத்தின் படியே நடந்துக் கொண்டு வந்தவருக்கு, தன் மகள் விஷயம் என்றதும், நாம் அப்படியே இருக்க கூடாது என்று தன் மகளுக்கு பக்க பலமாய் இருக்க வேண்டும் என்று நினைத்து தான் தன் மகளின் கை பற்றியது.
ஆனால் இந்த வெளிநாட்டு படிப்பு என்று சொன்னதும், அவருமே என்ன பொம்பள பெண்ணை அவ்வளவு தூரம் சென்று படிப்பதா? இப்படி தான் நினைத்தார் அவர்.
தந்தையான கமலக்கண்ணனுக்கே அவ்வளவு தூரம் செல்வது நல்லதா, கெட்டதா என்று யோசிக்கும் போது, பெண் என்பவள் அடுப்பாங்கரையில் ஆக்கி போடவும், கணவன் சொல்லுக்கு கீழ்பட்டு நடக்கவுமே படைக்கப்பட்டவள் என்று கருத்தில் கொண்டுள்ள தெய்வநாயகி இதற்க்கு எப்படி ஒத்துக் கொள்வாள்?
இது வரை வாய் திறவாது ஊமை போல் இருந்தவளுக்கு இப்போது இந்த வாய் எங்கு இருந்து வந்தது. அதுவும் பெரியவங்க பேசும் போது அது என்ன நடுவாப்பல வந்து அவள் விருப்பத்தை சொல்வது என்ற ஆத்திரத்தில், அமர்ந்து இருந்த இடத்தை விட்டு எழுந்தவர், சாப்பிட்ட கை கூட கழுவாது எச்சை கையிலேயே மணிமேகலையின் கூந்தலை பற்றி ஆட்டிய வாறே…
“என்னடி பேச்சு எல்லாம் ஒரு தினுசா இருக்கு. மேல படிக்கனுமா? அதுவும் வெளிநாட்டுக்கு போய் படிக்கனுமா? பணம் என்ன மரத்துலயா காய்க்குது.” என்று வெறி வந்தது போல் கத்திக் கொண்டு இருந்தவரை வீரா வந்து அவர் கை பிடியில் இருந்து மணியின் கூந்தலை விடுவித்து விட்டு,
“என்ன அம்மத்தா…? என்ன இது? எதுன்னாலும் பேசுங்க. இப்படி எல்லாம் செய்யிறது நல்லாவா இருக்கு.” என்று சொல்லிக் கொண்டே தெய்வநாயகியை கை அலும்பும் இடத்திற்க்கு கொண்டு சென்றவன் அவர் கை கழுவியதும் அங்கு இருந்த இருக்கையில் அமர வைத்து விட்டு…
“எதுன்னாலும் பொறுமையா பேசுங்க.” என்று சொன்னவன் தன் தாத்தாவுக்கு கண் காட்டினான்.
“தெய்வா நான் பேசுறேன்.” என்று தன் கணவர் சொன்னதும், தெய்வநாயகிக்கு வாய் மூடி அமைதி காத்து இருப்பதை தவிர வேறு வழி இல்லாது போய் விட்டது.
பெண்கள் ஆண்களுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்று நினைத்தப்பவருக்கு, அதை நடை முறையிலும் கடைப்பிடித்துக் கொண்டு இருப்பவர் தான் தெய்வநாயகி.
சங்கரலிங்கம் வீட்டு விசயம் என்பது பெண்கள் முடிவு செய்ய வேண்டியது. வீணாக நாம் தலையிட்டு வீட்டில் பிரச்சனை ஏற்படுத்தக் கூடாது என்று வீட்டு விசயம் எதிலும் அவர் தலையிட மாட்டார்.
அதானால் அந்த வீட்டு ராஜங்கம் மொத்தமும் தெய்வநாயகி வசம் தான். ஆனால் தான் பேசும் போது… “தெய்வா நீ பேசாதே.” என்று சொன்னால் அடுத்த வார்த்தை தெய்வநாயகியிடம் இருந்து வராது.
அதன் தொட்டு மனதில் பேத்தியின் மீது ஆத்திரம் இருந்தாலும் கணவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு அமைதி காத்தவருக்கு மனது அமைதி காக்க முடியாது போனது.
[the_ad id=”6605″]
‘அமெரிக்கா போய் படிக்கனுமா. அதுக்கு எவ்வளவு பணம் ஆகுமுன்னு எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினச்சிட்டாளா… போன வருஷம் என் அண்ணன் பேரன் படிக்க வைக்க அறுபது லட்சம் கொட்டிக் கொடுத்து விட்டது மட்டும் இல்லாம, இப்போவும் அப்போ அப்போ பணம் அனுப்பிட்டு தான் இருக்கான். பொட்ட கழுதைக்கு அமெரிக்கா படிப்பு கேட்குதா?’ என்று தெய்வநாயகி மனதில் தன் பேத்தியை திட்டி தீர்த்துக் கொண்டு இருக்கும் வேளயில்…
சங்கரலிங்கம்… “இது நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராது.எனக்கு கல்யாணம் இப்போ வேண்டாம் என்று சொன்னா அதுக்கு உன் அப்பனும், ஆத்தாலுமே ஒத்துக்கிட்டா எனக்கு ஒன்னும் இல்ல. வேண்டாம். நான் பரந்தாமன் கிட்ட பேசுறேன்.
இந்த படிப்பு இங்கே இருந்தா போல ஏதாவது படிப்பு இருந்தா படி. அதுவும் இப்போ இருக்க படிப்போடு இரண்டு வருஷம்னா பரவாயில்ல. அதுக்கு மேல எல்லாம் நம்ம சாதி ஜனத்து பொம்பள பெண்ணை கட்டி கொடுக்காது வீட்ல வெச்சிக்கிறது இல்ல.” என்று பொறுமையுடன் சொன்னவரிடம்,
“இல்ல நான் M.S அமெரிக்கா போய் படிக்க தான் ஆசை.” என்று மணிமேகலை அழுத்தம் திருத்தமாய் தன் விருப்பத்தை தன் தாத்தனிடம் சொன்னாள்.