பெரிதினும் பெரிது…நேர்மை!
இளஞ்சூரியக் கதிர்கள்… வீட்டு வாசலில்
போடப்பட்டிருந்த செம்மண் கோலத்தின்
அழகை பளிச்சிட, தானிட்ட கோலத்தின்
அழகை ரசித்து, அதனை மேலும் மெருகூட்ட காயத்ரி நினைத்த போது…
வீட்டனுள்ளிருந்து செல்பேசியின் ஒலிக்
கேட்டபோது, அதனை எதிர்ப்பார்த்தவள்
போல விரைந்து உள்ளே சென்றாள்.
“ஹலோ ரேவதி! காலேஜிலிருந்து ஏதாவது தகவல் வந்ததா?”
எனக் கேட்டாள் காயத்ரி.
“ஆமா காயத்ரி! வர்ற 20-ம் தேதிக்குள்ள ஃபீஸ் கட்டணும்மாம். டொனேஷன் வேற இரண்டு லட்சம் கேட்கிறாங்களாம். நல்ல காலேஜ்னு எங்கப்பா இன்றைக்கே கட்டலாம்னு சொல்லிட்டாரு. நீயும் உடனே பணம் கட்ட வழியப்பாருடி.
மத்த காலேஜ்ல இருந்தும்
கூப்பிடுவாங்கன்னு ஏற்கனவே இரண்டு
வாரம் தாமதம்செய்து விட்டோம் . கட்ஆஃப் எல்லாம் நம்பிக்கிட்டு இருந்தா
வேலைக்கே ஆகாது. சரி, நான் எங்க
அப்பாக்கூடப் போய்விட்டு வந்து உன்கிட்ட பேசறேன்” என்று பேச்சை
முடித்தாள்.
சோர்வுடன் கீழே அமர்ந்த காயத்ரியிடம்…அவள் தாய் பவானி,
” என்னம்மா! உன் தோழி என்ன சொல்றா?” எனக் கேட்டாள்.
” ஏற்கனவே சொன்னதுதாம்மா. பணம்
தாம்மா பேசுது. வாங்கின மார்க் அதுக்கு முன்னாடி ஒன்றும் இல்லை.
அம்மா! அப்பா பணம் ஏற்பாடு பண்றேன்
என்று சொன்னாரே… ஏதாவது உன்கிட்ட
காலையில வேலைக்குப் போகும் முன்
சொன்னாராம்மா? என்று ஏக்கத்துடன்
கேட்டாள்.
மகளின் வருத்தத்தைக் காணச் சகியாதவளாய்,
” கண்டிப்பா இன்னிக்கு ஏற்பாடு செய்வேனென்று சொல்லிட்டுதான்
உங்கப்பா வெளியில் போனார்.” என்று
பவானிக் கூறினாள்.
தங்கமுத்து, பவானி தம்பதியரின் இளைய மகள்தான் காயத்ரி. மூத்த மகள்
விமலாவிற்கு இந்த வருடம்தான்
திருமணமானது. படிப்பில் வெகு சுட்டியான காயத்ரி பிளஸ்டூவில் அதிக மதிப்பெண் பெற்றுக் கல்லூரியில் பிஎஸ்ஸி கணிதம் படிக்க விருப்பம் கொண்டிருக்கிறாள்.
சிறுவயதிலிருந்தே கணிதத்திலும்,
ஆசிரியர்ப் பணியிலும் மிகுந்த விருப்பம்
கொண்டவள். கணிதத்தில் பிஎச்டி செய்து… டாக்டர் பட்டம் பெற்றுப் பேராசிரியராக வேண்டும் என்பதே
அவள் இலட்சியம். தனது இலட்சியத்திற்குத் துணை நிற்கக்
கூடியக் கல்லூரி லிஸ்ட் வைத்துக் கொண்டு… தனது மதிப்பெண் கட்ஆஃப் மூலமாகத் தேர்வாகி விட முடியும் என்ற நம்பிக்கையுடன் ஐந்தாறுக் கல்லூரிகளில் விண்ணப்பித்து இருந்தாள். அவளது தோழி ரேவதியும் இவள் போலவே விருப்பம் கொண்டிருந்ததால் இருவரும்
முயற்சித்திருந்தனர்.
ஆனால் இருவாரங்களாகியும் எந்தக்
கல்லூரியிலிருந்தும் அழைப்பு வரவில்லை. நேற்றுதான் அன்னை
மற்றும் விக்டரி கல்லூரியிலிருந்து
அழைப்பு வந்தது. ஈமெயிலில் வந்த
தகவலின்படி இருபதாம் தேதிக்குள் கட்டணம் கட்டிவிடக் கூறியிருந்தார்கள். இருக் கல்லூரியிலுமே முப்பதாயிரம் ரூபாய் பருவக் கட்டணமாகக் குறிப்பிட்டிருந்தது.
ஆனால், விக்டரிக் கல்லூரியிலிருந்து
தொலைபேசி மூலமாக அழைப்பு வந்தது. கல்லூரி டொனேஷனாக
இரண்டு லட்ச ரூபாய் கட்டுமாறுக்
கூறினார்கள்.
இவ்விஷயமாக வீட்டில் பெரும் விவாதம்
நடந்தது. தங்கமுத்து காயத்ரியிடம்,
“இங்கப் பாரும்மா! உனக்கு வீட்டு நிலம
நல்லாத் தெரியும். உன் அப்பா ஆட்டோ
ஓட்டி குடும்பத்தை நடத்தறேன். வருமானம் பத்தாம உங்கம்மா வீட்டு வேலைக்குப் ஐஞ்சு வருஷமாப் போயிட்டிருந்தாங்க. இப்ப உடம்பு முடியாம வீட்ல இருக்காங்க.
அவங்க மருத்துவச் செலவிற்கென
தனியா ஒரு தொகை செலவாகுது.
அடிக்கடி ஆட்டோ மக்கர் பண்ணுதுன்னு
ரிப்பேர், சர்வீஸுக்கும் பணம் செலவாகுது. உன் அக்கா
கல்யாணத்திற்கு வாங்கின கடனை
இன்னும் அடைக்க முடியாம வட்டியே
பெருந்தொகையா நிக்குது. இதோட
தினசரி செலவிருக்கு. உனக்கு
ஆரம்பத்திலிருந்து வீட்டு நிலவரம்
தெரியும். நீ ரொம்ப புத்திசாலி மட்டும்
இல்ல சூழ்நிலைப் புரிஞ்ச சூட்டிகையானப் பொண்ணு. அதனால
பொறுப்பா நடந்துப்பன்னுப் பார்த்தா…
டொனேஷனாக கொடுக்க இரண்டு இலட்சம் வேணும்னு சொல்றியேம்மா…
ஃபீஸ் மட்டும் கட்ட முப்பதாயிரம் ரூபாய்
புரட்டறதே ரொம்ப சிரமம்.அத நான்
எப்படியோ சரிக்கட்டிடறேன். ஆனா டொனேஷனுக்கு நான் எங்கேம்மா
ஏற்பாடு பண்றது? கடனாக் கேட்டாலும்
கொடுக்க ஆளில்லம்மா.” என்றவரிடம்
” அப்பா! இந்த ரெண்டு காலேஜ் பத்தியும் கூகிள்ல தேடிப்படிச்சும்… என்
சீனினர்ஸ்கிட்டக் கேட்டும் தெரிஞ்சிக்கிட்டேன்ப்பா.
விக்டரி காலேஜ்ல நல்ல ஸ்கோப்
இருக்குப்பா. அவங்க டொனேஷன்
வாங்கிறதே எங்களுக்கு காம்பஸ்
இன்டர்வியூல தேர்வாகிறதுக்குப்
பயிற்சிக் கொடுக்கவும் எங்க ஆளுமைத்
திறனை வளர்த்துக்கிறதுக்கும், எக்ஸ்டிரா கரிக்குலர்ஸ், நிறைய
போட்டிகள், கலைநிகழ்ச்சிகள்ல
கலந்துக் கொள்ளவும் தானப்பா.
நான் இங்க இரண்டாவது வருஷப் படிப்புப் படிக்கும்போதே, எங்கள காம்பஸ் இன்டர்வியூக்குத்த தயார் செய்வாங்க. இந்தப் பணத்தைக் கட்டினப் பிறகு வேற தனிக் கட்டணம் எதுவும் நாமக் கட்ட வேண்டாம். பெரிய கம்பெனிங்க எல்லாம் இந்தக்
கல்லூரியிலிருந்துதான் வேலைக்கு
எங்கள எடுத்துக்கிறாங்களாம்ப்பா.
ஆனா, அன்னைக் கல்லூரியில இந்த
ஸ்கோப் இல்லப்பா. எல்லாமே நாங்களேதான் பார்த்துக்கனும். கோச்சிங்ல இருந்து எங்கத் திறமைய வளர்த்துக்கிறது வரை. நல்ல கல்லூரிதான். ஆனா காம்பஸ் தேர்வுமுறை அன்னை காலேஜ்ல இல்லப்பா நான் எல்லாமே
விசாரிச்சிட்டேன். விக்டரியில நான்
பிஎஸ்ஸி முடிச்சி, காம்பஸ்ல தேர்வானா
வேல கிடைத்து நானும் சம்பாதிப்பேன்
அப்பா!அப்படியே என் மேற்படிப்பையும் பார்த்துக்குவேன். உங்க சுமையும்
குறையும்ப்பா.
“கேட்க நல்லாத்தான்ம்மா இருக்கு. ஆனா பணத்த சுலபமா புரட்ட முடியலையே. நானும் சொல்லித்தான்
வச்சிருக்கேன். பார்க்கலாம். சரி, நான்
சவாரிக்குக் கிளம்பறேன். நீ ஒண்ணும்
மனசப் போட்டுக் குழப்பிக்காதம்மா.
எல்லாம் கடவுள்விட்டவழி. நல்லதே
நடக்கட்டும்” என்றபடி தங்கமுத்து சென்றார்
தனது நண்பர்கள், உறவினர்கள் என்று
எல்லோரிடமும் பண உதவிக் கேட்டதில்
ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஏற்கனவே
விமலா திருமணத்திற்கு, மனைவியின்
வைத்திய செலவிற்கென கடன் வாங்கி
வட்டிக்கூடக் கட்ட முடியாமல் அந்த
பாரமே அழுத்துகிறது. இதில் திரும்ப
கடன் கேட்டால்.. முகம் கொடுத்துப்
பதில் கூறக்கூட ஆளில்லை. பணம்
என்றால் பத்தும் பறந்துப் போகும்
என்பார்களே…. அதில் மானத்தோடு
நட்பும் பறந்துப் போகும் போல. உறவைப்
பற்றிச் சொல்லவே வேண்டாம்.
வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும் ஏசும்.
இப்படிப் பலதரப்பட்ட சிந்தனைகளுடன்
ஆட்டோ ஸ்டாண்டில் சவாரிக்குக்
காத்திருந்த தங்கமுத்துவிடம், அருகில்
இருக்கும் வங்கிக்கு செல்லும்படி ஒருவர் கேட்க, அவரைக் குறிப்பிட்ட வங்கியில்
இறக்கிவிட்டுக் கிளம்ப எண்ணிய போது
” கே.கே.நகர் வர்றியாப்பா? எனக்
கேட்டார் ஒரு வயதானவர். அறுபது
வயது மதிக்கத்தக்க அந்நபர் மிகுந்த
பதட்டத்துடன் இருந்தார். கையில்
தோல்பையும் ஒரு மஞ்சள்பையும்
வைத்திருந்தார்.
“வர்றேங்க! எழுபது ரூபாய் தர்றீங்களா?”
என்ற தங்கமுத்துவிடம்…
“தர்றேன்ப்பா…..என்றபடி ஆட்டோவில்
ஏறினார். சிறிது தூரம் ஆட்டோ சென்றதும்,
“கொஞ்சம் அந்த ஸ்வீட் கடைக்கிட்ட
வண்டிய நிறுத்துப்பா… ” என்று
வண்டியிலிருந்து இறங்கி இனிப்பு, பூ,
பழம் எல்லாம் வாங்கிவிட்டு மீண்டும்
வண்டியில் ஏறினார்.
” ரொம்ப தாங்க்ஸ்ப்பா….” என்றவரிடம்
” எதுக்குங்க! பரவாயில்லை. ஆமா… ஏன் சார் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க?”
என்றார் தங்முத்து அக்கறையுடன்.
“தம்பி! என் பொண்ணுக்கு அடுத்த
மாசம் கவ்யாணம்ப்பா. அதான்
எல்லோருக்கும் பத்திரிக்கை வச்சிட்டு
வர்றேன். வயசாயிடுச்சா உடம்பு முன்ன
மாதிரி ஒத்துழைக்க மாட்டேங்குது.
மனைவிக்கும் முடியல. அவளையும்
கூட சேர்த்துக்கிட்டு அலைய முடியாதுனு தான் நானே கொடுத்துட்டு
வர்றேன்.
கல்யாண ஏற்பாடப் பண்றதுக்குள்ள
போதும் போதும் என ஆகிவிட்டது.
பொண்ணுக்கும் இருபத்தியைந்து
வயசாயிடுச்சு. நான் செக்ரடேரியட்ல
வேலை செய்து ஓய்வுக் கிடச்சப் பிறகு
வந்தப் பணத்த நம்பித்தான் கல்யாணப்
பேச்சையத் தொடங்கினேன்.அரசாங்க
உத்யோகம்னு பேரு. எங்க நாலுகாசை
சேர்க்க முடியுது. அதுவும் என்னை
மாதிரி லஞ்சம் வாங்காம நேர்மையாக
இருந்துட்டா….தலையிலத் தூக்கி
வச்சிக்கிட்டா ஆடுவாங்க… வந்த
வருமானம் வாய்க்கும் கைக்குமே சரியாகப் போச்சு. இதுல எங்க சேமிப்பு.
ஏதோ வந்தப் பணத்திலத்தான் எல்லா
கல்யாண செலவும். இப்பத்தான்
பேங்க்ல இருந்துப் பணத்த எடுத்தேன்.
இங்கதான்ப்பா லெஃப்ட்லத் திருப்பி
மூணாவது வீடு.. ஆமா அந்த க்ரீன்கேட்டு. நிறுத்திக்கப்பா” என்று
கீழே இறங்கி பணம் கொடுத்தவரிடம்..
” ஸார்! வெயிட் பண்ணட்டுமா” என்றான்.
“வேணாம்ப்பா! ரொம்ப நாள் கழித்து வந்திருக்கேன். உறவுக்காரங்களாச்சே.
நேரமாயிடும். நீ கிளம்புப்பா…” என்று
வீட்டினுள் சென்று விட்டார்.
மதியநேரம் என்பதால் அந்தத் தெருவே
வெறிச்சோடியிருந்தது. மெயின்ரோடுவரை ஓட்டிச் சென்ற
தங்கமுத்து.. சவாரி ஏதாவது கிடைக்குமா எனப் பார்த்தார் . ஒருமணிநேரம் சுற்றி சுற்றி வந்ததுதான் மிச்சம். ஒரு பயணியும் வரவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியதால், இரண்டு பச்சைவாழைப்பழமும் வாட்டர் பாக்கெட்டும் வாங்கிவந்து…..
சாப்பிடலாம் என பின்சீட்டில் உட்காரச்
சென்றார். அதிர்ந்துப் போனார் அவர். அந்தப் பெரியவர் கையிலிருந்த
தோல்பை பின்சீட்டில் இருந்தது.
சிறிதுத் தயக்கத்துடன் பையைத் திறந்துப் பார்த்தார்.
நூறு ரூபாய்க் கட்டுகளாக மூன்று
லட்சத்திற்கு இருந்தது.நல்லவேளையாக
யாரும் பார்க்கவில்லை. அதிர்ஷ்டம் நம்
பக்கம் இருக்கிறது போல….
மனம் கணக்குப் போட்டது. அப்பா!
கடவுளுக்கு நம்ம வேண்டுதல் கேட்டு
விட்டதுப் போல….மூணு லட்சத்தில
இரண்டு லட்சம் டொனேஷனுக்கு.
மீதி ஒரு லட்சத்துல கடன அடைச்சிடலாம். பவானிக்கு நல்லா
வைத்தியம் பாக்கலாம் என்றபடி…அவ்விடத்திலிருந்து உடனே
நகர்ந்துவிட உத்தேசித்து….
வண்டியை ஸ்டார்ட் செய்தபோது….
” ஐயா! ரொம்பப் பசிக்குதுங்க… ஏதாவது சாப்பிடக் கொடுங்கைய்யா…
என ஈனக்குரலில் ஒரு மூதாட்டி பிச்சைக்
கேட்டாள். அவள் தோற்றம் மனதைப் பிசைய கையில் இருந்த பழம் தண்ணீரைக் கொடுத்து பத்து ரூபாயும்
கொடுத்தார்.
” நீ நல்லாருக்கனும்யா ” என வாழ்த்திச்
சென்றாள் அந்த மூதாட்டி.
அவள் போகும் போது அவருக்குத் தன்தாயின்
நினைவு வந்தது. வறுமையிலும்
செம்மை என்பதற்கேற்ப, தன்னையும்
தன் தம்பிதங்கையரையும் நேர்மையுடன்
வளர்த்தார். தந்தையின் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நன்முறையில் நடத்தினார். பிள்ளைகள்
என்றும் நேர்மையுடன் வாழவேண்டும்
என்பதில் உறுதியாயிருந்தவர்.
அச்சமயத்தில் தங்கமுத்துவுக்கு ஒரு
நிகழ்வு நினைவிற்கு வந்தது.
ஒரு சமயம் அவன் பாட்டி உடல்நலம்
குன்றியிருந்தார். அவருக்கு மருத்துவம்
பார்க்கக் கையில் பணமில்லாமல் அவன் பெற்றோர் திண்டாடினர். அச்சமயம் அவன் பள்ளி செல்லும் வழியில் கீழே ஒரு பை கிடந்தது. அதையெடுத்துப் பார்த்தபோது…. உள்ளே ஒரு ஜோடி
வெள்ளிக் கொலுசும் இரண்டு நூறு
ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
அட! பாட்டியின் வைத்திய செலவிற்காக
இது போதும்…என்றபடி அதைக் கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்தான்.
கன்னத்தில் அடிவிழுந்தது அவனுக்கு.
” முத்து! எப்போதும்… என்ன கஷ்டம் வந்தாலும் அடுத்தவங்கப் பொருள் மேல ஆசக்கூடாது. அந்தப் பொருள் மேல நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது. நீ உடனே இதை போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சிடு.
அவங்க… இது யாருதோ அவங்கக்கிட்டக் கொடுத்துடுவாங்க.
இனிமேல் கீழே எந்தப் பொருளோ பணமோ கிடைத்தாலும்… ஒண்ணு நீ
அத எடுக்காம வந்தடு. இல்லேன்னா
போலீஸ்கிட்ட கொடுத்துடு. பொருள இழந்தவங்களோட வலியும் வேதனையும் அவங்களுக்குத்தான் தெரியும். அந்த பாவம் நமக்கு வேண்டாம். பாட்டிக் குணமாக கடவுள் வழி செய்வார்.” என்றார்.
அதன்பிறகு எப்படியோப் பாட்டிக்கு
வைத்தியம் நடந்து பாட்டியும் நலமாக
நடமாட ஆரம்பித்தார்.
அந்நிகழ்வு இப்போது நினைவிற்கு வந்தது. அம்மூதாட்டியின் ரூபத்தில்
தன்தாயே வந்து, தவறேதும் புரியாமல்
தன்னைத் தடுக்க வந்ததாகவேத்
தெளிந்தார். எவ்வளவுப் பெரிய சோதனை வந்தாலும், நேர்மையில்
இருந்து சிறிதும் விலகாமல் வாழ்வதே
மனிதவாழ்வின் பொருள் கூறும் என்று
உணர்ந்தார். தன் தாய் அடிக்கடி கூறும்
வாசகமான”கெட்டாலும் மேன்மக்கள்
மேன்மக்களே” என்பதற்கேற்ப பணப்
பிரச்சனை தன்னைக் கீழோனாக்க
தான் அனுமதிக்ககூடாது என உறுதிக்
கொண்டார்.
எதற்கும் மார்க்கம் உண்டு
நடப்பது நல்லதாகவே நடக்கும் என்ற
நம்பிக்கையுடன்… மீண்டும் அந்தப்
பையை சோதித்ததில், உள்ளே ஒருத்
திருமணப் பத்திரிக்கை இருந்தது.
நல்லவேளையாக அதில் அந்தப்
பெரியவரின் முகவரியும் இருந்தது.
உடனே தங்கமுத்து விரைந்து, வண்டியை அவர் வீடு
நோக்கி ஓட்டிச்சென்றார்.. வீட்டை
நெருங்கிய போதே வீட்டின் நிலைமைப்
புரிந்தது. மிகுந்த வருத்தத்துடனான
உரையாடல் அங்குப் பலமாக நடந்துக்
கொண்டிருந்தது.
தரையில் அமர்ந்து சுவரில் தலைசாய்த்து மிகுந்தத் துயரத்துடன்
அப்பெரியவர் இருக்க, அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர் அவர்
மனைவியும் மகளும்.
அவர்மகன்தான் மிகுந்தக் கோபத்துடன்
காரசாரமாகப் பேசினான்.
” ஏம்ப்பா! நகை, பட்டுப்புடவைங்க, பாத்திரம், இப்படி எல்லா கல்யாண
செலவுக்காக பேங்க்ல இருந்துப் பணத்த
எடுத்தவுடனே…. நேரா வீட்டுக்கு வராம
எதுக்காக நீங்க சரோ அத்தை வீட்டுக்குப்
போனீங்க? அது உங்க உழைப்புக்குக்
கிடைத்த பணம். கஷ்டப்பட்டு சேர்த்த
சேமிப்பை இப்படியா அலட்சியமா
விடுவீங்கப்பா? அயோக்கியங்க நிறஞ்ச
உலகம் இதுனு அடிக்கடி சொல்லி எங்கள எச்சரிப்பீங்களே! அந்தப் பணத்தை ஆட்டோக்காரன் பார்த்ததும்
அதை அப்படியே சுருட்டியிருப்பானே.
எப்படீப்பா இனிமே நாம கல்யாண
செலவ சமாளிக்கப் போறோம்? என்றுப்
புலம்பினான் அவர் மகன்.
“சேச்சே! அப்படியெல்லாம் சொல்லாதப்பா….ஒருத்தர பார்த்தாலேத்
தெரியாதா… அந்த தம்பியப் பார்க்கும்
போதே நல்லவன்னு தெரிஞ்சுதுப்பா.
அதுவும் பொண்ணுக் கல்யாணத்துக்கு
நான் ஏற்பாடு பண்ணியிருக்கேன்கிற
விவரமும் நான் சொன்னத அந்தத்
தம்பிக் கேட்டுதே” என்றார் வெகுளியாக.
” ரொம்ப நல்லதாப் போச்சு! நீங்களே
இந்த விவரத்தை எல்லாம் அவன் கேட்காமலேச் சொல்லிட்டீங்களா…
நீங்க மறந்துப்போய் பையை வச்சிட்டீங்களா…. இல்ல அவனே அத
அபேஸ் பண்ணீட்டானோ என்னமோ”
என்றுப் பொரிந்துத் தள்ளினான்.
பதில் கூற முடியாமல் மலங்க மலங்க
விழித்த அவருக்குப் பரிந்துப் பேச
அவர் மகள் முற்பட்டபோது….வீட்டு வாசலில் நின்று அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த தங்கமுத்து..
தன்னைக் குறித்தான அவர் மதிப்பீட்டை
அறிந்து நெகிழ்ந்தான். நல்ல வேளையாக அவருக்குத் துரோகம்
புரியாமல் செய்த தன் நல்ல நேரத்தைக்
குறித்து கடவுளுக்கு மனதார நன்றிக்
கூறினார். அவர்கள் பேச்சில் குறுக்கிட்டு…
” ஸார், ஸார்….” என்றார் தங்கமுத்து.
அவரதுத் தோற்றம் உணர்ந்து, அடுத்து
நிகழப் போவதை அறிந்து, சிறிதுக்
குற்ற உணர்வுடன் அவரது மகன்
அவரை ஏறிட்டான். குரல் கேட்டுத்
திரும்பிய பெரியவர் தங்கமுத்துவைக்
கண்டதும் முகம் மலர்ந்தார். தனது
அபிப்ராயம் உண்மையானது என்பதை உணர்த்தும் வண்ணம் தன் மகனை
அர்த்தத்துடன் பார்த்தபடி….
“வா தம்பி! எனக்குத் தெரியும்ப்பா…
நான் ஏதோ மறதியா உன் வண்டியில்
என் பணத்தை வெச்சிட்டு இறங்கிட்டேன்
வீட்டுக்கு வந்ததும்தான் தோல்பைய
விட்டதைத் தெரிஞ்சிக்கிட்டேன். ரெண்டுப் பை இருந்ததால ஒண்ணை விட்டு வந்துட்டேன் போல.
ஆனா எனக்கு நம்பிக்கை இருந்தது.
நீ நல்லவன். திருப்பிக் கொடுத்துடுவனு.
அநாவசியமா அலைச்சல், மன உளைச்சல்னு நாங்க கஷ்டப்படும் படியாக இல்லாம உடனே நீ கொண்டு வந்துட்டியேப்பா.
எப்படி வீடுக் கண்டுப்பிடிச்ச? எனக் கேட்டார்.
” பையில் இருந்த பத்திரிகையில் உங்க
வீட்டு முகவரி இருந்தது. அதாங்க.
இப்படி கவனக்குறைவா இருக்கலாமா?
பொண்ணப் பெத்தவன்கிற முறையில..
கல்யாணத்த நல்லபடியா நடத்திறது
அவ்வளவு சுலபமில்ல, எவ்வளவு சிரமம்
என்கிறது எனக்கும் தெரியும். அதனால்
தான் பணத்தப் பார்த்ததும் அதை இழந்து நீங்க எவ்வளவுப் பதட்டமா
இருப்பீங்கன்னுத் தெரியாதா?.
அதான் உடனே வந்தேன்.” என்றவரிடம்
“ரொம்ப நன்றிப்பா! கல்யாண வேலே, டென்ஷனால.. பதட்டத்தால் மறந்துட்டேன்ப்பா. எனக்கு வார்த்தையே வரல. என் குடும்பமே
உனக்கு நன்றிக் கடன் பட்டிருக்குப்பா.
அந்தப் பத்திரிக்கை உனக்குத்தான்.
நீ உன் குடும்பத்தோட கல்யாணத்திற்கு
வந்து வாழ்த்தனும். சரி, உட்காருப்பா.
மாலதி! போய் காபி கொண்டு வாம்மா..
” உன் பிள்ளைங்க என்ன செய்றாங்க? ஆமா! உன் பேர் என்னப்பா? அத சொல்லு முதல்ல….”
எனக் கேட்டார் பெரியவர் முத்துசாமி.
” என் பேரு தங்கமுத்துங்க. என் மனைவி பவானிங்க. பெரிய பொண்ணக் கட்டிக் கொடுத்து விட்டேன். அது வீட்டிலேயே தையல் வேலைப் பார்க்குது. மாப்ள செக்யூரிட்டியா இருக்காரு.
சின்னது இப்பத்தான் காலேஜ் சேரப்
போகுது. பிளஸ்டூவோடு நிறுத்திட்டு
வேலைக்குப் போகச் சொன்னா, இல்ல
மேலப் படிக்கனும்குது. கையில் காசு
இருந்தா வஞ்சனையில்லாமல் படிக்க
வைக்கலாம். பியெச்டி வரைக்கும்
படிக்கனும்கிற கனவெல்லாம் நடுத்தர
வர்க்கத்துக்கு சரியாகுமா? டொனேஷன்
கொடுத்து சேர்க்கிற அளவு நம்மகிட்ட
பணம் புழங்கலையே. எங்கப் புரியுது
பசங்களுக்கு நம்ம கஷ்டம்?” எனக்
கூறியவனிடம்..
” என்ன தம்பி! படிப்பு எல்லாருக்கும்
சுலபமா வந்திடாது. இந்த ஆர்வமெல்லாம் முடங்கிப் போய்விடக்
கூடாது. சுடர் விளக்கா அவங்க பிரகாசிக்க நாம் தூண்டுகோலா இருக்க
வேணாமா?
எந்தக் காலேஜ்ல விண்ணப்பிச்சிருக்கு?
” விக்டரி காலேஜ்ங்க…அங்கேதான்
டொனேஷன் கேட்கிறாங்க”
” அது நல்ல காவேஜ்தான.பசங்களுக்குத் தரமான கல்வியக் கொடுக்கப் பணம்
தேவைப்படுதே. அதனால அவங்க
டொனேஷன் வாங்கிறாங்கப் போல.
நீ கவலைப்படாதப்பா. என் மேலதிகாரிக்கு என்மேல ரொம்பப் பிரியம் அதிகம். அவர் பேச்சுக்கு செல்வாக்கு உண்டு. கல்வித்துறையிலயும் பல்கலைக்கழகத்திலயும் அவருக்குத் தெரிந்த உயரதிகாரிங்க இந்த விஷயத்தில கட்டாயம் அவருக்கு சலுகைக் கொடுப்பாங்க.அந்தக்
காலேஜ்ல டொனேஷன் கொடுக்காம
உன் பொண்ண காலேஜ்ல சேர்க்க
நான் ஏற்பாடு பண்றேன்.
இந்தப் பணத்த வச்சி நீ அதைக் கட்டி இருக்கலாம். ஆனா உன் நேர்மை அதுக்கு இடம் தரலை. அதான் உன் பேருக்கு ஏத்த மாதிரி தங்கமான குணம் உனக்கு. அதுக்குப் பரிசா..
நன்றிக்கடனாக உனக்கு நான் இதத்தான் செய்யப் போறேன்.
நான் அவர்க்கிட்ட இன்னிக்கேப்
பேசிடறேன்.நாளைக்கு உன் பொண்ணக் கூட்டிக்கிட்டுக் காலேஜ்ககுப் போ. நிச்சயம் சீட்டு..
டொனேஷன் கட்டாமலேக் கிடைக்கும்”
என்று நம்பிக்கையூட்டினார்.
அவர் வீட்டிலிருந்து தங்கமுத்து தன்
வீடு நோக்கி வண்டியில் விரைந்தார்.
“நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே
இல்லையே” என்ற பாடல்வரி அவருக்கு
அப்போது நினைவிற்கு வந்தது.
அப்பெரியவர் சொன்னவண்ணமே…
தனிக்கட்டணம் எதுவும் கட்டாமலே
காயத்ரிக்குக் காலேஜில் சீட்டுக் கிடைத்தது. நடந்த விஷயம் அனைத்தும்
நேற்றே அவர்கள் எல்லோரிடமும் தஙகமுத்து கூறியிருந்ததால் தன் தந்தையின் நேர்மைக் குணத்திற்குக் கிடைத்த அன்புப்பரிசே இத்தருணம் என்பதை உணர்ந்து தன் தந்தையைக் குறித்து பெருமைக் கொண்டாள் காயத்ரி. “பெரிதினும் பெரிது கொள்”
என்ற மகாகவியின் வரிகள் நேர்மைக்
குணத்தைத்தான் குறித்திருக்கும்
என அவள் பொருள் கொண்டாள்
தன் தந்தையை மனதில் இருத்தி!!!
______________________________