ஆகாயம் 8:
திருமணத்திற்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சக்ரபாணி மரியாதை நிமித்தமாக ஆதித்ய வர்மாவை சந்தித்து விட்டு சென்றார். இந்த தகவல் கருணைநாதனின் காதிற்கு செல்ல, மனுஷன் அடைந்த அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் அளவே இல்லை.
“இந்த நேரத்துல இந்த ஆளு எதுக்கு ஆதித்யாவை பார்க்க போகணும்..? ஏற்கனவே வரும் தகவல் எல்லாமே முன்னுக்கு பின் முரணாக இருக்க, இந்த செய்தியும் அவரின் பிரஷரை ஏற்றிக் கொண்டிருந்தது.
“கண்டிப்பா இது வேற சந்திப்பா இருக்காதுப்பா..” என்று சசிதரன் தான், அவரின் கோபத்தை குறைக்க, முயற்சி செய்து கொண்டிருந்தான்.
“இல்லை சசி..!ஏற்கனவே ஆதித்ய வர்மாவுக்கு அந்த சக்ரபாணி மேல நல்ல அபிப்ராயம் இருக்கு. இவங்க நட்பை இப்படியே வளர விட்டா, அது நமக்குத்தான் ஆபத்து..” என்றார் கருணை நாதன்.
“அப்பா, இன்னும் ரெண்டு நாள்ல அவன் நம்ம வீட்டு மாப்பிள்ளைப்பா. நீங்க எதைப் பத்தியும் யோசிக்காம, கல்யாண வேலையை மட்டும் பாருங்க. கல்யாணம் முதல்ல நல்ல படியா முடியனும். அதுக்கு பிறகு என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்..” என்றான் சசிதரன்.
அதே நேரத்தில்,அங்கே ஆதித்ய வர்மாவும் குழப்பத்தில் தான் இருந்தான், சக்ரபாணி சொல்லிச் சென்றதைக் கேட்டு.
“என்ன ஆதி..? எப்பவும் யோசனையிலையே இருக்க மாதிரி இருக்க..? முகத்துல ஒரு சந்தோஷமே இல்லை. அங்க துவாரகியும் அப்படித்தான் இருக்கா. எனக்கு சில சமயம் பயமா இருக்கு. இது சரியா வருமான்னு..” என்று பார்கவி வருத்தமாய் கூறினார்.
“நான் தான் ஏற்கனவே இதைப் பத்தி தெளிவா சொல்லிட்டேன் மாம். எனக்கு துவாரகியை பிடிச்சிருக்கு. ஆனா, அவங்களுக்கு எப்படின்னு இன்னும் என்னால சொல்ல முடியலை. அவங்களை சுத்தி பிரச்சனை இருக்கா, இல்ல.. நான் அதுல சம்பந்தப்பட்டிருக்கேனா..? இப்படி சில விடை தெரியாத கேள்விகள் இருக்கு, அவ்வளவு தான். மத்தபடி ஒரு பிரச்சனையும் இல்லை..” என்றான் ஆதித்ய வர்மா.
“நான் இப்பவும் சொல்றேன் ஆதி. அவங்க வீட்ல இருக்கவங்க எப்படின்னு எனக்குத் தெரியாது. ஆனா, துவாரகி தங்கம்..அது தான் உண்மை..” என்றார் பார்கவி.
“அந்த சக்ரபாணி எதுக்காக வந்துட்டு போனார் ஆதி..? என்ன பேசினிங்க ரெண்டு பேரும்..?” என்றார் சேதுராமன்.
“நாங்க எதைப் பத்தியும் பேசலைப்பா. மரியாதை நிமித்தமா, ஒரு நட்பு ரீதியான சந்திப்பு தான். என்னோட திருமணத்திற்கு வாழ்த்து சொன்னார், அவ்வளவு தான்..” என்றான் ஆதி.
“நம்புற மாதிரி இல்லையே ஆதி..” என்றார் சேது.
“நீங்க நம்பலைன்னாலும், அது தான் நிஜம். ஒரு அரசியல் தலைவரை அரசியல் நோக்கத்துக்காக மட்டும் தான் பார்க்கனுமா என்ன..?” என்றான்.
“வரப் போற எலக்சன்ல, நீ அவருக்கு சாதகமா அறிக்கை விடப் போற மாதிரி தான் மீடியா நியூஸ் போகுது. இதைப் பார்த்து சம்பந்தி டென்சன் ஆகிட்டார் போல. அது தான் கேட்டேன்..” என்றார் சேதுராமன்.
“அப்படியா..? இன்னைக்கு தான் அவர் உங்களுக்கு சம்பந்தி. ஆனா, என்னைக்குமே அவர் எனக்கு உறவாகவே முடியாது. அவர் எனக்கு குடுத்த டார்ச்சர் எல்லாம் நீங்க மறந்திருக்கலாம், நான் எப்பவும் மறக்க மாட்டேன்..” என்றான் ஆதித்ய வர்மா. அவன் முகத்தில் தோன்றிய பாவனையைப் பார்த்த பார்கவி தான் அதிர்ந்து போனார்.
“நீ அவரைப் பழி வாங்குறதா நினைச்சு, துவாரகியை கல்யாணம் பண்றியா ஆதி..?” என்று வாய் திறந்து கேட்டே விட்டார் அவர்.
“என்னைப் பத்தி எவ்வளவு உயர்வா நினைச்சு வச்சிருக்கிங்க நீங்க..? அவரைப் பழிவாங்க, ஒரு பொண்ணோட வாழ்க்கையில் விளையாடும் அளவிற்கு நான் தரம் தாழ்ந்து போயிடலை. நீங்க என்னை அப்படி வளர்க்கவும் இல்லை. இந்த சந்தேகம் உங்களுக்கு வந்ததே தப்பும்மா..” என்றான் தீர்க்கமாய்.
“சாரி ஆதி..! நான் ஏதோ ஒரு வேகத்துல கேட்டுட்டேன்..!” என்றவருக்கு மகனை நினைத்து கொஞ்சம் என்ன, நிறைய பெருமை தான்.
திருமணம் மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடக்கவிருந்தது. திரையுலகினர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அனைத்து அரசியல் தலைவர்களின் வருகையும் கண்டிப்பாக இருக்கும். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ஏற்பாடு செய்திருந்தார் கருணை நாதன்.
ஆதியின் சார்பாக, அவனின் பெற்றோரே அனைத்தையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்க, திருமணத்திற்காக, இருவீட்டிலும் ஒரு பெரிய தொகையை செலவிட்டிருந்தனர். அவரவர் ஸ்டேட்டஸை தக்க வைத்துக் கொள்ளும் போட்டியில், இரு வீடும் மிளிர்ந்தது.
துவாரகியின் கூடவே இருந்த திவ்யாவிற்கு கொஞ்சம் ஏக்கமாகக் கூட இருந்தது. ஆனால் அதெல்லாம் சில நிமிடங்கள் மட்டும் தான். அவளுக்கு அவளுடைய அப்பா முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கனவு மட்டுமே இப்போது இருந்தது. துவாரகியை விட ஒருபடி மேலே செல்ல வேண்டும் என்ற போட்டி எண்ணம், அவள் மனதில் நங்கூரமாய் இருந்தது.
அதை கனகவேலிடம் சொல்லவும் மறக்கவில்லை. அதைக் கேட்ட கனகவேலிற்கு மகளை நினைத்து பெருமையாக இருந்தது.
“நம்ம நினைச்சது கண்டிப்பா நடக்கும் திவ்யா. அந்த ஆதித்ய வர்மாவுக்கும், கருணைநாதனுக்கும் சுத்தமா ஆகாது. எப்படியும் மாப்பிள்ளை ஆனவுடன், அவன் பவுசை அவன் காட்டுவான், மாமனார் பவுசை இவன் காட்டுவான். ரெண்டு பெரும் அடிச்சுகிட்டு சாவானுக. அந்த நேரத்துல உள்ள புகுந்து ஆட்சியை நான் பிடிக்கணும். கண்டிப்பா பிடிப்பேன். அப்போ, இந்த ஆதித்ய வர்மா என்னமா ஆளு, அவனை விட எல்லா விஷயத்திலும் தகுதியான ஒருத்தனைப் பார்த்து, ஊரே மெச்ச, இந்த அப்பா உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன்..” என்றார் கனகவேல்.
“முதல்ல ஆட்சி தான் முக்கியம்ப்பா..! கல்யாணத்துக்கு ஒரு அவசரமும் இல்லை…” என்று அவரின் கனவிற்கு உரமிட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா.
இவர்கள் இப்படி நினைத்துக் கொண்டிருக்க , அங்கே கருணை நாதன் வேறு திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார். இதில் எதிலும் சம்பந்தப்படாமல் அமைதியாக இருந்தது துவாரகி மட்டும் தான்.
நலங்கு வைப்பதில் தொடங்கி, மாப்பிள்ளை அழைப்பு முதல் அவள் எதிலும் ஆர்வம் காட்டவில்லை. அதே சமயம் மனதிற்குள் தோன்றிய சிறு குறுகுறுப்பையும் அவள் தனக்குத் தானே ரசித்துக் கொண்டிருந்தாள். சாதரணமாகவே ஜொலிக்கும் அவள் முகம், இப்போது மேலும் பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது. செயற்கை பூச்சிற்கு அவளின் இயற்கை அழகை கண்டு பயம் என்று தான் சொல்லவேண்டும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் போட்டி போட்டுக் கொண்டு மினுமினுத்தது.
மணமேடையில் இருந்த ஆதித்ய வர்மாவோ, கொஞ்சம் கூட கம்பீரமும், செருக்கும் குறையாமல் அமர்ந்திருந்தான். மாப்பிள்ளை வேடத்தை பல படங்களில் அவன் நடித்திருந்தாலும், இந்த உண்மையான மாப்பிள்ளை வேடம் அவனுக்குள்ளும் சின்ன சலனத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கனவே அவன் மனதில் மறையாமல் இருந்த துவாரகியின் உருவம், இப்போது மணப்பெண் கோலத்தில், அப்படியே காலத்திற்குள் அழியாததைப் போல் ஒட்டிக் கொண்டது.
இருவரும் எதிலும் சளைத்தவர்கள் இல்லை என்பது, அவர்களை பார்க்கும் அனைவருக்கும் தெரிந்தது. பல முக்கிய திரை பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து சொல்ல, அரசியல் தலைவர்களின் வருகை தொடர்ந்து இருந்த வண்ணம் இருந்தது. ஆதித்யா அனைத்தையும் எளிதில் கையாண்டான் என்றால், துவாரகி அவனையும் மிஞ்சி விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
வந்திருந்த அனைவரும், இருவரையும் பொருத்தமான ஜோடி என்று புகழ்ந்து தள்ள, இரு குடும்பத்தினர் முகத்திலும் அப்படி ஒரு பெருமிதம்.
ஆதியை அடைய வேண்டும் என்று நினைத்த பல நாயகிகள் அங்கு பொறாமையுடன் அமர்ந்திருந்தனர். துவாரகியை மனைவியாக அடைய வேண்டும் என்று எண்ணிய, பல பிரபலங்களின் மகன்கள் நடப்பதை கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், பார்க்க வேண்டிய இருவரும் பார்க்காமல் அவரவர் வேலையில் இருக்க, இதையெல்லாம் இரு ஜோடிக் கண்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தது.
“என்ன துவாரகி..? பிடிச்சாலும் பெரிய ஆளா பிடிச்சிருக்க..? மனுஷன் என்னமா இருக்கார்..? என்ன ஒரு மேனரிசம்..?” என்று வந்திருந்த ஒன்று இரண்டு தோழிகள் அவள் காதில் சொல்லிவிட்டு செல்ல, தனக்குள் தோன்றிய படபடப்பை மறைத்தபடி, ஓரக்கண்ணால் ஆதித்யாவை பார்த்தாள் துவாரகி.
அவளின் தோழிகள் சொன்னதைப் போல், தான் எதற்கும் சளைத்தவன் இல்லை என்பதைப் போல் கம்பீரமாய் நின்றிருந்தான் அவன். அவள் பார்ப்பது அவனுக்கும் தெரிந்து தான் இருந்தது. ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தவன்,
“என்ன துவாரகி..? ரொம்ப நேரமா என்னோட முகத்துல என்ன தேடுறிங்க..?” என்றான் சன்னமான சிரிப்புடன். அவன் அப்படி கேட்பான் என்று எதிர்பார்க்காத துவாரகி, தனக்கு எதுவும் கேட்கவில்லை என்ற பாவனையில் திரும்பிக் கொண்டாள். அவளின் முகத்தைப் பார்த்த ஆதிக்கு தான் சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக இருந்தது.
“சும்மாவே ஆளு அழகா இருந்து கொல்லுவா..? இன்னைக்கு அப்படியே ஜொலிக்கிறா..? இவளையா வேண்டாம்ன்னு சொன்னேன்..?” என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டவன், அவள் அருகில் குனிந்தான்.
“என்ன..?” என்றாள் படபடப்புடன்.
“சாரி..” என்றான்.
“எதுக்கு..?” என்றாள்.
“இவ்வளவு அழகையும் முதல்ல வேண்டாம்ன்னு சொன்னதுக்கு…” என்றான்.
அவள் பேந்த பேந்த விழிக்க,
“இப்படி முழிக்கும் போது கூட செம்ம கிக்கா இருக்க..” என்று இடதுபக்க தலைமுடிக்குள் கையை விட்டு அவன் கோதிக் கொள்ள,
“இது கல்யாண மேடை..” என்றாள் அவளும் அமைதியாக.
“அது தான் தெரியுதே. நான்தான் மாப்பிள்ளை.. நீங்கதான் இங்க பொண்ணு..” என்றான் சிரிப்புடன்.
“என்ன கிண்டலா..?” என்றாள்.
“இல்லை டாக்டர்..! நீங்கதான் அதை மறந்துட்டு பேசுறிங்க..?” என்றான்.
“நல்லா பேசுறிங்க..?” என்றாள்.
“பேச்சு மட்டுமில்ல..எல்லாமே நல்லா வரும்..” என்றவன் உதட்டோரம் ஒரு கிண்டல் புன்னகையை சிந்த, அவளுக்குத் தான் எங்காவது முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது.
“இந்த மாலையை மாத்துங்கோ..” என்று ஐயர் சொல்ல,
அவளின் கண்களை பார்த்துக் கொண்டே அவன் மாலையை அவள் கழுத்தில் போட, அந்த விழிகளின் பாஷையில் சிக்குண்டவளின் கைகள் தானாக ஆதியின் கழுத்தில் மாலையைப் போட்டது. பிறகு மூன்று முடிச்சைப் போட்டு, அவளைத் தன்னில் சரிபாதியாய் ஏற்றுக் கொண்டான் ஆதித்ய வர்மா.
திருமணம் நல்லபடியாக முடிந்ததில், கருணைநாதனுக்கு தான் அப்படி ஒரு பேரானந்தம். அவர் முகத்தில் ஒரு வெற்றி புன்னகை இருக்க, அதையெல்லாம் தாண்டி சேது ராமனின் முகத்தில் தான் அப்படி ஒரு வெற்றி புன்னகை. அது எதனால் தோன்றிய புன்னகை என்று அவருக்கு மட்டுமே தெரியும்.
அனைவரின் காலிலும் விழுந்த ஆதித்ய வர்மா, ஏனோ கருணை நாதனின் கால்களில் மட்டும் விழவில்லை. துவாரகியும் அவனைக் கட்டாயப் படுத்தவில்லை. அவளின் அந்த ஒரு செயலிலேயே மனம் குளிர்ந்து விட்டான் ஆதித்யா.
அனைத்து தொலைக்காட்சிகளிலும் அவனுடைய திருமணம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
வந்திருந்த கூட்டம் எல்லாம் ஒரு வழியாக குறையத் துவங்க, அருணாவும், பூமிகாவும் வந்திருந்தவர்கள் அனைவரையும் ஒரு குறையுமில்லாமல் கவனிக்கும் வேலையை செவ்வனே செய்து முடித்திருந்தனர்.
“அப்போ, நாம வீட்டுக் கிளம்பலாமா அம்மா..” என்றான் ஆதி.
“என்ன ஆதி..? உடனேவா..? அவங்க ஏதாவது நினைச்சுக்க போறாங்க..?” என்றார் பார்கவி.
“இதுல நினைக்க ஒண்ணுமில்லை. வெளிய எவ்வளவு பந்தபஸ்து இருந்தாலும், ரசிகர்கள் வரத்தான் செய்வாங்க. தேவையில்லாம ரசபாசம் ஆகும். (Ambien) அதான் சொல்றேன், வீட்டுக் கிளம்பிடலாம்..” என்றான்.
“அதெல்லாம் எந்த பிரச்சனையும் வராது தம்பி. நாங்க எதுக்கு இருக்கோம். பொண்ணு வீட்டுக்கு போறது தான் எங்க முறை..” என்றார் கருணைநாதன்.
ஆதித்யா ஏதோ பேசப் போக,
“முதல்நாளே சண்டை வேண்டாம் ஆதி. நமக்கு துவாரகி தான் முக்கியம், அவளுக்காக செய்ய மாட்டியா..?” என்றார் பார்கவி.
“ம்ம்..” என்று பல்லைக் கடித்துக் கொண்டான் ஆதித்யா. அவன் விருப்பமில்லாமல் தான், தன்னுடன் வருகிறான் என்று அவளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.
ஒருவழியாக அவர்களின் வீட்டிற்கு அனைவரும் செல்ல, ஆதிக்கு அங்கு சென்றது ஏதோ முள்ளின் மேல் நிற்பதைப் போல் இருந்தது. மண்டபத்திலும் அவன் சரியாக சாப்பிடவில்லை. அதுவே அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. கருணைநாதன் அவனின் பொறுமை சோதிக்க வேண்டும் என்பதற்காகவே, ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருந்தார்.
“கிளம்பலாமா..?” என்றான்.
“பர்ஸ்ட் நைட், பொண்ணு வீட்ல நடக்குறது தான் எங்க வழக்கம்..” என்றார் கருணைநாதன்.
“இன்னும் என்னென்ன வழக்கமெல்லாம் உங்களுக்கு இருக்கும்ன்னு சொல்லிட்டிங்கன்னா ரொம்ப வசதியா போய்டும். எல்லாமே நம்ம வசதிக்காக நம்ம ஏற்படுத்திக்கிட்டது தான். மாத்திக்கிறதுல தப்பில்லை. என்னால இங்க தங்க முடியாது..” என்றான் ஆதி கோபமாய்..
“இப்போ நீங்க இந்த வீட்டு மாப்பிள்ளை. எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு எதையும் செய்ய முடியாது..” என்றான் சசிதரன்.
“நீங்கலாம் உங்க மாமனார் வீட்ல தான் இருந்திங்களா என்ன..?” என்றான் ஆதி.
“எங்க..?” என்று பூமிகா சலித்துக் கொள்வதில் இருந்தே தெரிந்து போனது அவனின் லட்சணம்.
“ஆதி கண்டிப்பா இன்னைக்கு நைட் இங்க இருப்பான்..” என்று பார்கவி உறுதி குடுக்க, அவரை முறைத்தான் ஆதி.
“துவாவைப் பாரு..? இன்னைக்கு கல்யாணம் முடிஞ்ச பொண்ணு மாதிரியா இருக்கா..? என்ன பிரச்சனை வருமோன்னு தான் அவ முகம் புல்லா யோசனை இருக்கு. ஒரு நாள் தானே ஆதி, ஆர்ஜஸ் பண்றதில் தப்பில்லை. உனக்காக காலம் முழுக்க வாழப் போற பொண்ணு. அவளுக்காக இதை கூட செய்யலைன்னா எப்படி..?” என்றார் பார்கவி.
“நான் இதை செய்ய மாட்டேன்னு சொல்லலை. ஆனா, இங்க..” என்று யோசித்தவன்,
“ம்ம்ம்..” என்றான் அப்போதும்.
“தம்பியை உன்னோட ரூம்க்கு கூட்டிட்டு போமா..” என்றார் அருணா.
‘வாங்க ஆதி..” என்றவள் முன்னே செல்ல,
“என்னடா எல்லாமே தலைகீழா இருக்கு..” என்று யோசித்தபடியே அவளின் பின்னால் சென்றான் ஆதித்யா.
“நீங்க ரெஸ்ட் எடுங்க..” என்றவள் கிளம்ப எத்தனிக்க,
“நீ எங்க கிளம்புற..?” என்றான்.
“உங்களுக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்..” என்றாள்.
“ஒன்னும் வேண்டாம்..!” என்றவன், அங்கிருந்த பிரிட்ஜில் வாட்டர் பாட்டிலை எடுத்து, தண்ணீரை வாய்க்குள் சரித்துக் கொண்டவன், அங்கிருந்த சோபாவில் அப்படியே படுத்து விட்டான்.
“என்ன இவன்..? தயக்கமே இல்லாம, இவன் ரூம்ல இருக்க மாதிரி இருக்கான். எனக்குதான் உள்ளுக்குள்ள ஜன்னியே வந்திரும் அளவுக்கு நடுக்கம் இருக்கு..” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டவள்,
மேக்கப் கலைத்து, கொஞ்சம் பிரஷானவள், கீழே சென்றாள்.
“மாப்பிள்ளை எங்க துவா..?” என்றார் அருணா.
“தூங்குறாங்கம்மா..!” என்றவள்,
“பார்கவி ஆன்ட்டி எங்க..?” என்றாள்.
“அவங்க கிளம்பிட்டாங்க துவா. நாளைக்கு உங்களை அங்க வர சொல்லியிருக்காங்க..” என்றார்.
“அதெல்லாம் வேண்டாம்..!” என்ற கருணைநாதனின் பேச்சில் திகைத்து விட்டாள் துவாரகி.
“என்னப்பா சொல்றிங்க..?” என்றாள்.
“அங்கெல்லாம் போகவேண்டாம். அவன் இங்க வீட்டோட மாப்பிள்ளையா, நான் சொல்றதை கேட்டு இங்க தான் இருக்கணும்..” என்றார் அவர்.
“ஏங்க..? அதெப்படி இருக்க முடியும்..? ஒரு நாளைக்கே அவர் எவ்வளவு கோபப் பட்டார்ன்னு பார்த்திங்க தானே..?” என்றார் அருணா.
“அதெல்லாம் பார்த்துக்கலாம்..! துவாரகி, இதெல்லாம் உன்னோட பொறுப்பு. ஆதித்யா இங்க இருந்து நகரக் கூடாது. ரிஷப்ஷன் வரைக்கும் இங்க இருக்க மாதிரி நீ பேசு. அதுக்கு பிறகு என்ன பண்ணனும் அப்படின்றதை நான் சொல்றேன்..” என்றார்.
“கண்டிப்பா அப்படி மட்டும் நடக்காதுப்பா..” என்றாள்.
“எனக்கு நடந்தாகணும்..” என்றார்.
“என்னால முடியாது..” என்றார்.
“உன்னால முடியும், நீ செய்ற. அந்த சக்ரபாணியோட கட்சில ஆதித்யா சேரப் போற மாதிரி பேச்சு அடிபடுது. அதனால தேர்தல் வரைக்கும் அவர் இங்க தான் இருந்தாகணும்..” என்றார்.
அவரைப் பார்த்து, அவள் சிரித்துக் கொள்ள தான் முடிந்தது. இதையெல்லாம் அவன் கேட்டால் என்ன நடக்கும் என்பதை நினைத்துக் கொண்டதால் வந்த சிரிப்பு தான் அது.
அவள் மனதில் நினைத்தது சரியே என்பதைப் போல தான், ஆதியும் அவர் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு வந்த கோபத்தில் அங்கிருந்த பொருட்கள் எல்லாம் ஒரு நிமிடத்தில் சுக்கு நூறாக உடைந்திருக்கும். ஆனால், அவையனைத்தும் அவனுக்கு சொந்தமானது இல்லை என்ற ஒரு காரணத்திற்காக பல்லைக் கடித்துக் கொண்டு உள்ளே சென்றான்.
அடுத்த அரைமணி நேரத்தில், அவர்களுக்கான அறை, பிரம்மாண்டமாக ரெடியாக, அதில் எதிலும் ஒட்டாமல் பால்கனியில் நின்று நிலவை வெறித்துக் கொண்டிருந்தான் ஆதித்யா. அறைக்குள் நுழையும் போதே, அவன் அப்படி நின்றிருப்பதைப் பார்த்த துவாரகிக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஆதி..” என்றாள். அவன் எதுவும் பேசாமல் அமைதியாக திரும்ப,
“பால்..!” என்றாள்.
“எனக்கு பால் பிடிக்காது..” என்றான் ஒற்றை வார்த்தையுடன்.
அவன் அப்படி சொல்லவும், அதை அங்கே வைத்தவள், அவனின் அருகில் சென்று நின்றாள்.
“இங்க இருக்குறது உங்களுக்கு அவ்வளவு கஷ்ட்டமா இருக்கா..?” என்றாள் பட்டும் படாமல்.
‘அவ அப்பன் சொன்னதைக் கேட்டுட்டு வந்து, என்னை மயக்கப் பார்க்கிறாளோ..?’ என்று மனதிற்குள் எண்ணியவன், அடுத்த நிமிடம்..
‘இருக்காது, இவளைப் பார்த்தா அப்படி தெரியலை..’ என்று பதிலும் அவனே கூறிக் கொண்டான்.
அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதை பார்த்த துவாரகிக்கு, மனதிற்குள் மணியடித்தது. அவனின் முகம் இரும்பைப் போல் இறுக்கமாய் இருக்க, என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக நின்றாள்.
“ரொம்ப அழகா இருக்க துவாரகி..” என்றான் திடீரென்று. அவள் பதில் பேசாமல் அவன் முகத்தையே பார்க்க,
“ஆனா, அந்த அழகை என்னால் ஆராதிக்க தான் முடியுமே தவிர, அந்த அழகுக்கு அடிமையாக முடியாது..” என்றான்.
அவன் குரலில் இருந்தது, கோபமா, குழைவா என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு முழித்துக் கொண்டிருந்தாள் துவாரகி.
“குழப்பமா இருக்கா..?” என்று நிறுத்தியவன்,
“உன்னைச் சுத்தி பல குழப்பம் இருக்கு எனக்கு. அந்த குழப்பத்தை எல்லாம் தெளிவாக்காம, முதல்ல உன்னை கல்யாணம் பண்ணதுக்கு காரணம் என்னோட அம்மா, அப்பா தான் அப்படின்னாலும், எனக்கும் உன்னை பிடிச்சிருந்தது. இது மறுக்க முடியாத உண்மை. நான் நடிகன், எனக்கு நடிக்கிறவங்களையும் தெரியும், காக்கா பிடிக்கிறவங்களையும் தெரியும்..” என்றான்.
மனதிற்குள் தோன்றிய படபடப்பை மறைத்தவள், “இதெல்லாம் என்கிட்டே எதுக்கு சொல்லிட்டு இருக்கீங்க ஆதி..?” என்றாள் அமைதியான குரலில்.
“சொல்லனும்ன்னு தோணுச்சு..” என்றான்.
“வேற எதுவும் தோணலையா..?” என்றாள் எதார்த்தமாய். அவள் அப்படி கேட்கவும், அவளை மேலும் கீழும் பார்த்தவன்,
“வேற என்னென்னமோ தான் தோணுது. எங்க..? அதையெல்லாம் வெளிய சொல்ற நிலமையிலையா நான் இருக்கேன்..” என்றான் பெருமூச்சுடன்.
அவள் கைகள் பால்கனியின் கம்பியினை இறுகப் பற்ற,
“உங்கப்பன், வாழ்க்கையிலே செஞ்ச ஒரே உருப்படியான விஷயம், அப்சரஸ் மாதிரி உன்னைப் பெத்து, அதை எனக்குக் குடுத்தது தான்..” என்றான் அவளை நெருங்கி நின்று. அவனின் அருகாமையில் அவளுக்கு அனைத்தும் மறக்க,
அவளை பின்நின்று அணைத்து, அவளின் தோளின் மேல் முகத்தை வைத்தவன்,
“உனக்கு வேற எதுவும் தோணலையா..?” என்றான்.
“ஆத்தி..! என்ன இப்படி பேசுறான். பேசுறதுல பிஹெச்டி வாங்கியிருப்பான் போல. துவா, மயங்கிடாத..” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
“நீ மயங்க வேண்டாம்..! நான் தான் மயங்கி, கிறங்கிப் போயிருக்கேனே..” என்று அவன் சொல்ல,
“மனசுல நினைச்சதை எப்படி சரியா சொல்றான்..” என்று எண்ணியவள், நெளிய ஆரம்பித்தாள்.
“விடுங்க ஆதி..! ஒரு மாதிரி கூச்சமா இருக்கு..” என்றாள். ஒரு சிரிப்புடன் அவளை விட்டவனுக்கு, பெரிய சோதனையாகத்தான் இருந்தது. இருந்தாலும், அவளைச் சுற்றி இருக்கும் மர்ம முடிச்சுகள் அவிழாமல், காதல் முடிச்சை அவிழ்ப்பதற்கு அவன் தயாராக இல்லை.
அவளை அணைத்தபடியே, அவள் காதோரத்தில் முத்தமிட்டு, அவளை குறுகுறுக்க செய்தவன்,
“குட்நைட்..” என்று விலகி சென்று விட்டான். துவாரகி தான் பொங்கிய உணர்வுகளை கட்டுப்படுத்த வழி தெரியாமல் சிலையாகி நின்றாள்.
“வந்து தூங்குங்க டாக்டர்…!” என்றான். அவளும் உள்ளே சென்று தயங்கி நிற்க,
“உங்க வீடு, உங்க கட்டில்.. எதுக்கு இப்படி ஒரு தயக்கம்..? நான் மட்டும் தான் புதுசு. தூங்கு துவாரகி. உன்னோட முகத்துல அப்படி ஒரு களைப்பு தெரியுது..” என்று அவன் சொல்ல, அவள் எந்த பிகுவும் பண்ணாமல் படுத்தவுடன் உறங்கிவிட்டாள். ஆனால் ஆதிக்கு தூக்கம் என்பது துளியும் வரவில்லை. ஒரு ஆண்மகனுக்கே உரிய எதிர்பார்ப்பு, குழப்பம் எல்லாம் சேர்ந்து அவனை அலைகழித்துக் கொண்டிருந்தது.
“தூங்குன்னு சொன்ன உடனே தூங்கிட்டாளே..?” என்றவன் அவளைப் பார்க்க, முகம் அமைதியாய் இருந்தது.
“இந்தாளுக்கு இவ தப்பிப் பிறந்த பொண்ணா..? சம்பந்தமே இல்லையே..?” என்று யோசிக்க,
“இந்த யோசனை இப்போ ரொம்ப முக்கியமா..?” என்றது மனசாட்சி.
தூங்கும் அவளை போட்டோவாக, தன்னுடைய போனில் அடக்கிக் கொண்டான்.
வெளியே பேச்சு சத்தம் கேட்க, மெதுவாய் எழுந்து கதவருகே சென்றான்.
“துவாரகி உள்ள போயாச்சா..?” என்று சசி தான் மனைவியிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
“நீங்களும் கூட போங்களேன்..” என்று பூமிகா கடுப்பாக சொல்ல,
“கேட்டேண்டி..” என்றவன், அறைக்குள் சென்று கதவை அடைக்கும் சத்தம் கேட்டது ஆதிக்கு.
“ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு தினுசில் இருக்காங்க. ஆனா, இவ மட்டும் ஒரு தினுசா இருக்கா..” என்று அவளின் அருகில் சென்று படுத்தவன், சில நிமிடங்களில் உறங்கி விட்டான்.
ஆனால் பொய்யாய் உறங்கிக் கொண்டிருந்த துவாரகிக்கு தூக்கம் என்பது இல்லை. அவனின் முகத்தையே பார்த்திருந்தவள், விடியும் வேளையில் கண்ணயர்ந்தாள்.
அதிகாலையிலேயே அவன் கிளம்பிக் கொண்டிருக்க,
“எங்க கிளம்பிட்டிங்க..?” என்றபடி எழுந்தாள் துவாரகி.
“வீட்டுக்கு..!” என்றான்.
“இப்பவேவா..?” என்றவளுக்கு, என்ன செய்வதென்று புரியவில்லை.
“இப்பவே தான். அதான், நைட் இங்க தங்குறது முறைன்னு சொன்னாங்க. தங்கியாச்சு. இப்போ கிளம்பறது தான முறை..” என்றான் ஆதித்ய வர்மா.
“இவ்வளவு காலையில்..” என்று அவள் இழுக்க,
“சாரி ரகி… இதுவே லேட்..” என்றவன் கீழே செல்ல, அவளும் வேகமாய் கிளம்பி அவன் பின்னேயே சென்றாள். அவள் சென்ற போது, அங்கே பார்த்த காட்சியில் கண்கள் தெரித்தது.
கருணைநாதனும், ஆதித்ய வர்மாவும் முறைத்துக் கொண்டு நின்றதைத் தான் பார்த்தாள்.
“கிளம்புறேன்னா என்ன அர்த்தம்..?” என்றார்.
“இது கூடவா தெரியாது..? கிளம்புறாங்கன்னு அர்த்தம்..” என்றான் ஆதி நக்கலாக.
“உடனே என் பொண்ணை அனுப்ப முடியாது..” என்றார்.
“உங்க பொண்ணை நான் அனுப்ப சொல்லலையே..? என் பொண்டாட்டியைத் தான் கூட்டிட்டு போக முடியும்..” என்றான் அவனும் கிண்டலாக.
“ஒரு பத்து நாள் போகட்டும்..” என்றார்.
“வாய்ப்பில்லை..! பத்து நாள் கழிச்சு உங்க பொண்ணை அனுப்புங்க.. நான் கிளம்புறேன்..” என்றவன் துவாரகியைப் பார்க்க,
“அவர் கூட நானும் போறேன்னு சொல்றாளா பாரு..” என்று பல்லைக் கடித்தான்.
“கல்யாணம் முடிஞ்சு முழுசா ஒரு நாள் ஆகலை, அதுக்குள்ளே இப்படி ஒரு பஞ்சாயத்தா..? இப்பவே கண்ணைக் கட்டுதே..” என்று மனதிற்குள் நினைத்தவள்,
“அப்பா..நான்..!” என்று அவள் முடிக்கவில்லை.
“உள்ள போ துவாரகி..!” என்றார் அவர்.
“என்னங்க நீங்க..? நம்ப பொண்ணு வாழ்க்கையை நாமளே கெடுத்த மாதிரி ஆகிடும். அவ அங்க போறது தான் முறை..” என்று அருணா சொல்ல, அவரை ஓங்கி அறைந்தார் கருணைநாதன். அவரின் அந்த செயலில் துவாரகி திகைத்தாள் என்றால், ஆதித்யாவுக்கு கோபம் தலைக்கேறியது.
“நான் தான் சொன்னேன்ல தலைவரே.. எந்த பிளானும் இல்லாம, உன் பொண்ணை எனக்குக் குடுக்க உனக்கு கிறுக்கா பிடிச்சிருக்கு..? எனக்கு அப்பவே தெரியும்யா, உன்னோட தில்லாலங்கடி வேலையெல்லாம். உன்னோட பருப்பு இந்த ஆதித்ய வர்மாகிட்ட வேகாது..” என்றான் ஆதி.
“கல்யாணம் ஆன அடுத்த நாளே பொண்டாட்டி உன்கூட இல்லைன்னா, உன்னோட திரை உலகம் பைசாவுக்கு உன்னை மதிக்காது..” என்றார் அவர்.
“யோவ்..? நீ என்னை மடக்குறதா நினைச்சு, உன் பொண்ணோட வாழ்க்கையில விளையாடிட்டு இருக்க..?” என்றான் மீண்டும்.
“அது எனக்குத் தெரியும். என் பொண்ணு என்னை மீறி உன்கூட வரமாட்டா. உனக்கு வேற வழி இல்லை, இங்க தான் இருந்தாகணும்..” என்றார்.
“அதுக்கு வேற ஆளைப் பாரு..! உன்கிட்ட வீட்டோட மாப்பிள்ளையா இருக்க, நான் என்ன ஒன்னும் இல்லாதவனா… யோவ், நான் வர்மாயா.. ஆதித்ய வர்மா. எதுக்கும் அவ்வளவு சீக்கிரம் அசர மாட்டேன்…” என்றவன் துவாரகியைப் பார்க்க, அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டு நின்றாள்.
“இப்போ முடிவு உன்னோட கையில…! நீதான் முடிவு பண்ணனும். என்னோட வரணும்ன்னு நான் கட்டாயப் படுத்த மாட்டேன். ஆனா, என்னோட வந்தா தான் எனக்கு கவுரவம்..” என்றான் ஆதி இறுகிய குரலில்.
“என்னை மீறி நீ போயிடுவியா துவாரகி. நான் தப்பா ஒன்னும் கேட்கலை. கொஞ்ச நாள் நம்ம வீட்ல இருக்கட்டும். அதுக்கப்பறம் அங்க போகலாம்..” என்றார் கருணைநாதன்.
துவாரகி தான் முழித்துக் கொண்டு நின்றாள். ஒரு பக்கம் கணவன், ஒரு பக்கம் தகப்பன்.
அரசியல் பகடைக்கு தன்னை எதிர்நோக்கும் தந்தை, நேசத்தை நெஞ்சில் வைத்துக் கொண்டு அழைக்கும் கணவன். வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் விஷயங்கள். இப்படி அவள் முழித்துக் கொண்டு நிற்க, ஆதியின் கோபம் எல்லை மீற துடித்துக் கொண்டிருந்தது.