மொழி அல்லாது வியப்புடன் திகைத்த யாழினியிடம் சிந்தியா மலர்க்கொத்தினை நீட்டி முகை நட்பை அலர் போல் மலரவைத்தாள். இருவரின் நட்பும் பூக்கத்தொடங்கியதுடன் நறுமணமும் கமழ நிறைந்தருந்தது. ஓவிய வகுப்பில் கண்ணாடியில் வண்ணங்களுடன் இவர்களின் வாழ்வில் நட்பு வண்ணமும் ஜொலிக்கத் தொடங்கியது.
அலைபேசியின் அழைப்பிற்கு பிறகு சிந்தியா தனது விடுமுறை நாட்களில் யாழினியின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று தனது அம்மாவிடமும் மாமாவிடமும் பிடிவாதமாக கேட்டுக்கொண்டு தஞ்சை வந்திருந்தாள். நேராக யாழினியின் வீட்டிற்கு சென்றிருந்த சிந்தியா சங்கமித்ராவிடம் யாழினியின் ஓவிய வகுப்பறையை கேட்டுக்கொண்டு இன்ப அதிர்ச்சிக்காக யாழினியின் முன்னே நின்றாள் மலர்க்கொத்துடன். பிரிந்திருந்த நட்புடன் இவர்கள் பயணம் இணையத் தொடங்கிவிட்டது போல் பூமி சுழன்று கொண்டிருந்தது.
தஞ்சாவூரைச் சுற்றி இருந்த தலையாட்டி பொம்மைகளுக்கு மத்தியில் இவர்கள் தலை மட்டும் தினமும் உலாவிக் கொண்டிருந்தது. சிந்தியா யாழினிக்கு சிவப்பு உடை அணிந்த தங்க கிரீடம் சூட்டிக் கொண்டு ஆபரணங்களுடன் கூடிய ராஜாவும், பச்சை பட்டுடன் கூடிய ஆபரணங்கள் அணிந்த ராஜகுமாரியும் இணைந்த கைகளுடன் தலையை ஆட்டிக் கொண்டிருக்கும் தலையாட்டி பொம்மையை நட்பின் வெளிப்பாடாக பரிசளித்தாள்.
பெரிய கோவிலைச் சுற்றிய உரையாடல்களினால் இவர்களது நட்பும் பெரிதாகிக் கொண்டே இருந்தது. இவர்களது ஓவியங்கள் யாழினியின் வீட்டு சுவற்றில் தத்துரூபமாக நின்றுகொண்டிருந்தன.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நாளன்று யாழினியின் வீட்டிலேயே தனது தேர்வு முடிவை தெரிந்துகொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக தங்கியிருந்தாள் சிந்தியா. யாழினி தன் மனதில் ஒரு படபடப்புடன் தேர்வு முடிவை எதிர்நோக்கி இருந்தாள். வீட்டில் யாழினியின் படிப்பு மட்டும் அல்லாது சமூகம் சார்ந்த தேடல்களின் வசதிக்காக இணைய வசதியுடன் சத்யவர்தன் சிறிய கணிப்பொறி வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். சத்தியவர்தன் கணிப்பொறியில் அமர்ந்து இருவரின் பதிவு எண்ணையும் பதிவிட்டுக் கொண்டிருந்தார். சரியாக 10 மணி அளவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. யாழினி 478/500, சிந்தியா 491/500 என்று வெள்ளைத்தாளில் அச்சு இயந்திரம் அச்சடித்துக் கொண்டிருந்தது.
தன் மகள் யாழினியைவிட சிந்தியா அதிகமான மதிப்பெண்களைப் பெற்ற போதும் சத்தியவர்தனும், சங்கமித்ராவும் மிகவும் பூரிப்படைந்திருந்தனர். இனிப்புகளும், கேக்குகளும் சிந்தியாவிற்கும், யாழினிக்கும் வெற்றி மழையை பொழிந்துக் கொண்டிருந்தன. யாழினியின் நட்பின் தொடக்கத்துடன் விடை பெற்றுக்கொண்டாள் சிந்தியா. இவர்கள் நட்புடன் அடுத்த அத்தியாயமும் தொடரும்…