சூரியனின் செந்நிற கதிர்களை மொத்தமாக வாரி சுருட்டி கொண்டிருந்த அந்தி மாலை பொழுது அது.
மெல்ல மெல்ல மெளனத்தை போர்வையாக போர்த்தி கொண்டிருந்தது கோபிசெட்டிபாளையம்.
சமையலறையில் பாத்திரங்கள் உருட்டும் சத்தத்தில் உறங்கி கொண்டிருந்த இளந்தளிர் விலுக்கென பயந்து வீறிட்டு அழுதாள்.
பிள்ளையின் அழுகையில் அவசரமாக நாற்காலியிலிருந்து எழுந்தவர் “அச்சோ அஸ்கா மிட்டாயி, பயந்துட்டீங்களா? தூரி, தூரி, ஒன்னுமில்லை டா, ஒன்னுமில்லை,..” என்று தொட்டிலை ஆட்டிக் கொண்டே குழந்தையை சமாதானம் செய்தவர் சமையலறையிலிருந்த மனைவியை அழுத்தமாக பார்த்தார்.
கணவரின் பார்வை தன் மீது படிவது உணர்ந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் தன் வேலையை மேலும் செய்தார் சௌந்தர்யா.
தியாகு தொட்டிலை ஆட்டியதும் அழுது கொண்டிருந்த இளந்தளிர் வாயை சாப்பிக் கொண்டே மீண்டும் உறக்கத்தை தொடர, மெல்ல தொட்டிலை விட்டவர் சமையலறை நோக்கி நடந்தார்.
“எதுக்கு இப்படி உருட்டிட்டு இருக்க, குழந்தை தூங்கறான்னு தெரியாதா..” மெல்லிய அதட்டலுடன் கேட்டார் தியாகு. அவருக்கு பதில் சொல்லாமல் கழுவிய பாத்திரங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.
“சௌந்து உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.பதில் சொல்லு, எதுக்கு இப்படி உருட்டிட்டு இருக்க, உன் பையன் மேல இருக்கிற கோபத்தை அவன் மேல காட்டாம பாத்திரத்தை போட்டு ஒடச்சா சரியாகிடுமா?…” நேரடியாகவே விசயத்திற்கு வந்தார் தியாகு.
கையில் வைத்திருந்த பாத்திரத்தை பட்டென்ற சத்தத்தோடு செல்ஃபில் வைத்தவர் திரும்பி கணவரை முறைத்தார்.
“இப்ப நான் என்ன பண்ணேண்ணு என்னை முறைக்கிற…” மெல்லிய புன்னகையுடன் கேட்டார். அவரின் புன்னகை இவருக்கு இன்னும் எரிச்சலை கொடுக்க
“எல்லாமே பண்ணது நீங்க தான். நீங்க இந்த வீட்டை விட்டு போனாதா எனக்கு நிம்மதி, முதல்ல இங்க இருந்து போங்க …” எனக் கத்தினார்.
எப்போதும் போல சௌந்தர்யாவின் சொற்கள் அவரை காயப்படுத்தியது. அந்த காயம் கோபமாய் உருமாறி நிற்க “ஏன் போக மாட்டேன்னு நினைக்கிறாயா? ஒவ்வொரு முறையும் நானா உன்னை தேடி வரேன்னு தானே வீட்டை விட்டு போ வீட்டை விட்டு போன்னு சொல்லிட்டு இருக்க, இனிமே பசங்க இருக்காங்கன்னு எல்லாம் பார்க்க மாட்டேன்.அவங்களுக்குன்னு ஒரு துணை வந்துருச்சு, இனி நான் இருந்தா என்ன இல்லைன்னா என்ன? போறேன்…” என்றவர் அங்கிருந்து நகர, கோபமாக திரும்பி கொண்டார் சௌந்தர்யா.
இரண்டு நாட்களாக மகன் மீதிருந்த கோபத்தை தற்போது கணவனின் மீது காட்டி விட்டதாலோ என்னவோ முன்பிருந்த கோபம் சற்றே விலகி நின்றது.
நிமிடங்கள் மெளனமாக கடக்க தியாகுவின் ஆரவாரம் துளியும் இல்லாமல் இருந்தது அவ்வீடு. “போயாச்சு, எப்பவும் போல என்னை விட்டுட்டு போயாச்சு… விடு சௌந்தர்யா, தெரிஞ்சது தானே… போயான்னு சொன்னா உடனே போயாகனும், ‘உன்னை விட்டு எங்க போவன்னு ஒரு வார்த்தை சொல்ல தெரியல…’ போ போ உனக்குண்ணு அப்பா, அம்மா, வீடுன்னு எல்லாம் இருக்கு.எனக்கு தான் இதெல்லாம் இல்லையே…” மெல்லிய குரலில் புலம்பிக் கொண்டிருந்தவர் பேச்சு
“அப்பா…” மணியின் பதட்டமான குரலில் நின்றது.
அவசரமாக முற்றத்திற்கு ஓடி வந்தார் சௌந்தர்யா… சோபாவில் மயக்க நிலையில் இருந்தார் தியாகு. கணம் ஒன்றுமே புரியவில்லை அவருக்கு “அப்பா,அப்பா என்னாச்சு ப்பா…” என்ற மகளின் குரலில் தன்னிலைக்கு வந்தவர் மெல்லிய பதட்டத்துடன் கணவனின் அருகில் சென்றார்.
“ஏங்க,ஏங்க…” என அழைக்க அவரிடம் பதிலில்லை.
‘அவருக்கு போன மாசம் மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்துருச்சு மா… டாடி தான் யார்கிட்டேயும் சொல்ல வேண்டான்னு சொல்லிட்டார். இப்ப நானும் அங்க இல்லை, சடன்லி அவருக்கு ஏதாவது ஒன்னுன்னா அம்மான்னாலும் வராது அப்பான்னாலும் வராது. அதான் இப்படியொரு சப்பைக் கட்டுக் கட்டி உங்க கிட்ட அனுப்பி வைச்சேன்…” என்றோ மகன் கூறியது நினைவு வந்தது. அக்கணம் நம்பினாலும் அதை பொய்யென்று தானே நினைத்தார். உண்மையாகவே கூறினானா? என நினைத்தவர் மகளிடம் திரும்பி “ஆல்ரெடி இவருக்கு மைல்ட் அட்டக் வந்து இருக்குன்னு தம்பி சொன்னான்…” என்றார் பதட்டமாக.
சட்டென தாயை திரும்பி பார்த்தவள் “அன்னைக்கு இல்லைன்னு சொன்னீங்க, என்கூடயே இருக்கிறார் எனக்கு இதுகூடவா தெரியாதுன்னு கேட்டீங்க…” எனக் கேட்டவள் தாயின் பதிலைக் கூட கேட்காது எதிர் வீட்டை நோக்கி ஓடினாள். அதற்கு பின்னான நேரம் எப்படி சென்றதென்று கேட்டால் நிச்சியம் பெண்கள் இருவருக்குமே பதில் தெரியாது…
**********
அதே கணம் இங்கு கோவையில்..
அந்தக்காரம், தரணியை மெல்ல மெல்ல ஆக்கிரமித்து கொண்டிருந்த அந்தி மாலைப் பொழுது அது.
ஒன்றிரண்டு வாகனங்களின் சத்தத்ததை தவிர ஆழ்ந்த அமைதியில் இருந்தது அந்த விதி…
விதியில் செல்லும் வாகனங்களை தன் வீட்டு மாடியில் நின்றபடி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரியா ரங்கநாயகி. மனம் முழுவதும் ஒருவித வெறுமையை பூசிக் கொண்டிருந்தது.
அவளின் வெறுமையை போக்க தென்றலும் நினைத்ததோ என்னவோ? மங்கையின் கேசத்தை மெல்ல வருடிவிட்டது.
தென்றலின் வருடலுக்கு ஏற்ப அசைந்த கேசத்தை செவியோரம் ஒதுக்கி விட்டபடி நின்றிருந்தவளின் பின்னால் யாரோ நிற்பது போல் ஓர் மாயை! சட்டென திரும்பினாள் அவள் நினைத்தது போலவே ஏகலைவன் தான் நின்று கொண்டிருந்தான்.
ஆதி கிளம்பிய உடனே இவளுக்கு தான் அழைத்தான். அழைப்பு சென்றதே தவிர அது ஏற்கப்படாது போகவும் “ஏன் என்கிட்ட பொய் சொன்னீங்க.போலீஸ்ன்னு சொன்னா பயந்துடுவேன் நினைச்சீங்களா? அந்தளவுக்கு சின்ன பையனா நான்?…”என்று அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான். அதற்கும் அவளிடம் பதில் இல்லாமல் போக மெல்லிய புன்னகை அவனிடத்தில்.. அதே புன்னகையுடன் அலுவலகம் சென்றான்.
அந்தோ பரிதாபம் அவள் அலுவலகம் இருக்கும் பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை. அவளிருந்து செய்ய வேண்டிய வேலைகள் அனைத்துமே காசி தான் பார்த்துக் கொண்டான். நான்கு மணி வரை அவளுக்காக காத்திருந்தவன் அதற்கு மேல் முடியாது மங்கையின் இல்லம் தேடி வந்துவிட்டான். வரும் வழியிலேயே அவள் மாடியில் நிற்பது தெரிந்தது. வீட்டிற்கு வெளியில் தான் மாடிக்கு செல்லும் படிகள் இருக்கிறது என்பதால் சுலபமாக மேலேறி வந்துவிட்டான்.
தற்பொழுது கலையின் பார்வை முழுவதும் எதிரில் நின்றிருந்த பாவையின் மீது மட்டுமே நிலைத்திருந்தது.
நைட் ட்ரெஷில் இருந்தாள். இடை தாண்டிய கேசம் காற்றின் வேகத்திற்கு ஏற்ப நர்தனமாடிக் கொண்டிருந்தது… விழிகள் எப்போதும் போல மெளன பாசை பேசிக் கொண்டிருந்தது.
மேல் கன்னத்தில் அரசியாய் வீற்றிருந்த அவளது மச்சம் ‘ அப்பப்பா…’ அதில் விழ துடித்தவன் சட்டென பார்வையை மங்கையின் இதழ்களுக்கு மாற்றினான். இயற்கையாக சிவந்திருந்த இதழ்கள் அதிலிருந்த மெல்லிய வரிகள் ஐயோ குப்பென்று வியர்த்தது ஆடவனுக்கு. கீழ் இதழ்களை அழுத்தி கடித்து கேசத்தை கோதிக் கொண்டவனுக்கு இதயம் படபடவென துடித்தது. இதயத்தை தடவிக் கொண்டே கிழே குனிந்து கொண்டான்.
“இப்ப இங்க எதுக்கு வந்து இருக்கீங்க ஏகலைவன்…” என்ற குரலில் நிமிர்ந்து மங்கையின் முகத்தை பார்த்தான். எப்போதும் போலவே அவளின் முகத்தை வைத்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது போகவும் “நீங்க ஏன் ஆபிஸ் வரல?…” எனக் கேட்டான்.
அவனை அழுத்தமாக பார்த்தவள் பதில் பேசாது திரும்பிக் கொள்ள, மென் புன்னகையுடன் அவளின் முன் சென்று நின்றவன் பாவையின் முகத்தை குறுகுறுவென பார்த்தான்.
முகமெல்லாம் வாடிக் கிடக்க “என்னாச்சுங்க, முகமெல்லாம் ஏன் இப்படி டல்லா இருக்கு?…” எனக் கேட்டான்.
அவனின் பார்வையில் இவளின் இமைகள் படபடவென அடித்துக் கொண்டதோ.அதை அவன் உணரும் முன் மறைத்து கொண்டாளோ அந்த மாயக்காரி..
பின் நினைவு வந்தவனாய் “அந்த கிழவி மறுபடியும் வந்துச்சா? ஏதாவது பிரச்சனை பண்ணுச்சா?…” எனக் கேட்டான்.
அவனின் எவ்வித கேள்விக்கும் பதில் சொல்லாது போக “ஸ்… ஏதாவது பேசு டி…” என்றவன் அதற்கு மேல் அவளின் பதிலை எதிர்பார்க்காத அசோக்கிற்கு அழைக்க அலைபேசியை கையில் எடுத்தான்.
“என்ன வேணும் உனக்கு, என்கிட்ட இருந்து என்ன எதிர்ப் பார்க்குற ஏகலைவன்…” எனக் கேட்டாள். அவள் குரலில் இருந்த ஏதோ ஒன்று இவனை நிமிர்ந்து மங்கையின் முகத்தை பார்க்க வைத்தது..
அவளின் கேள்வியில் பட்டென நிமிர்ந்து “என்ன கேட்டீங்க…” என்பதை போல் பார்த்தான்.
“என்கிட்ட இருந்து என்ன வேணும் ஏகலைவன்…செ*ஸ்…” எனக் கேட்டாள் அமைதியாக. இத்தனை நேரம் அவன் முகத்தில் ஒட்டியிருந்த மொத்த மென்மையும் சற்றே விலகி நின்று வேடிக்கை பார்த்தது.
கலையின் முகத்தை பார்த்துக் கொண்டே “நேத்து கிஸ் பண்ணதுக்கு எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல் இருந்ததால என்னை நீ தப்பா எடுத்துக்கிட்டு வீடு வரைக்கும் வந்திருக்கியா?…” எனக் கேட்டாள். இவனிடம் துளியும் பதிலில்லை ஆனால் அவன் முகம் அவள் பேச பேச இறுகிக் கொண்டே போனது.
“இல்லை யாருமில்லாத அனாதை.. என்னவேனா பண்ணிட்டு போகலாம்னு நினைச்சுட்டீயா?…” என்றதும் பட்டென கண்களை இறுக மூடித் திறந்தான்.
ஆடவனின் இறுகிய முகத்தை பார்த்தபடி “நேத்து நீ என்னை கிஸ் பண்ணும் போது நான் தடுத்து இருக்கணும்… ஆனால் தடுக்கல… அது ஏன் எதுக்குன்னு யோசிக்கிறேன் இப்ப வரைக்கும் என்கிட்ட பதில் இல்லை. ஆனால் உன்னை எப்ப பார்த்தாலும் ஒன்னு சொல்லணும் நினைச்சேன்…” என்றவள் நீண்ட நெடிய பெருமூச்சுடன்
“இனிமே அந்த எண்ணத்தோட என் பக்கம் வந்துடாத, அப்படி வந்தா எதை அறுக்கணுமோ அதை அறுத்து போட்டுட்டு போயிட்டே இருப்பேன்…” என்றாள் மிரட்டலாக. ஒரு வித நிமிர்வோடு அடிக்குரலில் மிரட்டிய பெண்ணை இமைக்காது பார்த்தவன் இதழ்களில் மெல்லிய புன்னகை…
பெருவிரலால் நெற்றியை கீறிக் கொண்டே “ம்ம்…அப்பறம்…” என்றபடி அவளை நெருங்கி செல்ல அவளோ பின்னால் நகர்ந்தாள். பட்டென அவளின் இடையை வளைத்து பிடித்தவன் மங்கையின் கன்னத்திற்கு மேலிருந்த மச்சத்தில் அழுத்தமாக இதழ் பதித்தான்.
கலையின் இதழ் ஒற்றலில் பட்பட்டென இதயம் துடிக்க, இமைகள் இரண்டும் படபடவென அடித்துக் கொண்டது. அவளின் படபடப்பை பார்த்துக் கொண்டே “இதுக்கு மேல போக எனக்கும் தெரியும்… ஆனால் வேண்டாம் எனக்குன்னு சில கட்டுப்பாடு இருக்கு அதை மீறி எதையும் பண்ணக் கூடாதுன்னு இருக்கேன். என்னை மீற வைச்சுடாதீங்க…” என்றதும் பல்லைக் கடித்தாள்.
“எனக்கும் மிரட்ட தெரியும் மேடம். இனிமே கொஞ்சம் பார்த்து பேசுங்க…” என்றவன் மொத்த கோபத்தையும் மங்கையின் இடையில் காட்டியபடி
“முன்ன என்ன கேட்ட? என்கிட்டயிருந்து என்ன வேணும் ? செக்ஸா ன்னா?… மே பீ இருக்கலாம்…” என்றதும் அனல் பார்வை பார்த்தாள்.
மங்கையின் அனல் விழியோடு தன் விழி சேர்த்து அவளின் இடையை இன்னும் இன்னும் இறுக்கி பிடித்தபடி “அது கூட லைஃப் லாங் உன்கிட்ட மட்டும் தான். காமமோ,காதலோ இனி மண்டைமூக்கி தவிர வேற யார் கிட்டயும் வராது..” என்றதும் காலால் அவனின் காலை ஓங்கி மிதித்தாள்.
“ஹா… ராட்சசி…உன்னை” எனக் கத்தியவன் மங்கையின் இடையில் இன்னும் அழுத்தம் கூட்டினான்.
” இந்தளவுக்கு கோபமா இருக்கிறவ ஏன் என்னோட குரலை கேட்க முயற்சி பண்ண? அதுவும் மயக்கம் போடற அளவுக்கு…” என புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டான்.
இவனுக்கு எப்படி இது தெரிந்தது என்ற கேள்வி மனதில் உதிர்த்த நொடி பொழுதில் வேலுவின் முகம் கண்களுக்குள் வந்து நின்றது… நேற்றிலிருந்து இவனின் ஆதீத உரிமை இதற்காக தானோ என எண்ணியப்படி ஆடவணை பார்த்தாள். அதற்கு அவனே விடையளிக்கும் விதமாக
“இதை வைச்சு, என் மேல உனக்கு ஈர்ப்பு, காதலிருக்குன்னு நான் ஃபிக்ஸ் பண்ண மாட்டேன். ஆனா அதையும் மீறி ஒன்னு இருக்கு. என்னனு சொல்லவா?…” எனக் கேட்டான். அடுத்து அவன் கூறிய வார்த்தைகளை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தவளின் விழிகள் இரண்டும் தன்னிச்சையாக விரிந்து கொண்டது. அவளின் நினைவுகள் மட்டுமல்ல கலையின் நினைவுகள் கூட அன்றைய நாளை நோக்கி பயணித்தது..