ஆதி கத்த கத்த நிற்காமல் காரை கிளப்பிக்கொண்டு சென்றவளைக்கண்டு அவனுக்கு ஆத்திரம் மிக, அதை தன் நடையில் காட்டியபடி பார்க்கிங்கில் இருந்து வெளியே வந்தான் ஆதி.
கோகுல் பைக்கில் அமர்ந்து இவன் வருகைக்காக காத்திருப்பதை கண்டதும், பின்னே ஏறி அமர்ந்தவன், “போ…டா” என்றான் தொலைவில் புள்ளியாய் தெரியும் தன்யாவின் காரை வெறித்துக்கொண்டே.
கோகுல், “எங்கடா? பாம்பே’க்கா?” என்றிட, சட்டென திரும்பி அவன் முகம் பார்த்த ஆதி, அவன் சிரிப்பை அடக்கிக்கொண்டு இருப்பதை கண்டு தன் ஆத்திரத்தை அவன் முதுகில் கொட்டினான்.
ஆதி அடித்த அடியில், “ம்மாஆஆ” என கோகுல் அலற, “பேசுனதை ஒட்டுக்கேட்டியாடா?” என்றான் சீற்றமாய்.
வலியை தாங்கிக்கொண்டு, “ஊருக்கே கேக்குறமாறி கத்துனது நீ? இதை ஒட்டு வேற கேட்கணுமா?” என்றான் எட்டியவரை முதுகை தேய்த்துக்கொண்டே.
முகம் பதற்றம் காட்ட, சுற்றி முற்றி பார்த்தபடி, “அவ்வளோ சத்தமாவா கேட்டுச்சு?” என ஆதி கேட்டதும், அவன் பதட்டம் உணர்ந்தவனாய், “வாட்ச்மேன் அப்போவே டீ குடிக்க போயிட்டாரு! நீ பேசுன பேச்சை நான் ஒருத்தன் தான் கேட்டு தொலைச்சேன்” என்றான் கோகுல்.
‘உப்ப்’ என காற்றை ஊதித்தள்ளிய ஆதி, “எனக்கு இன்னைக்கு பீர் வேணும்! நேரா கடைக்கு போ!” என உத்தரவாய் சொல்லிவிட்டு, கோகுலின் முதுகில் சயனம் கொண்டான்.
காருக்குள் இருந்த தன்யாவுக்கு கவனம் சாலையில் இருந்தாலும், அதில் சரிப்பாதி பங்கு வகித்தான் ஆதி.
‘இத்தனை நாள் இல்லாம இப்போ என்ன என்மேல அக்கறை இவனுக்கு? வேற எவளையாது கல்யாணம் செஞ்சுக்க வேண்டியது தானே? இவனுக்கு என்ன பொண்ணா கிடைக்கல? அதான் அப்போவே ரெடியா இருந்துச்சே!’ மெலிதாய் வாய்விட்டே புலம்பிக்கொண்டிருந்தாள்.
‘அவன் தொட்டப்போவே நான் அவனை கன்னம் கன்னமா அறைஞ்சுருக்கணும்! அப்படியே நின்னது தான் அவனுக்கு இன்னும் வசதியா போச்சு… ச்சை!’
‘லவ் பண்ணப்போ பின்னாடி வரல… ப்ரேக் அப் பண்ணதுக்கு அப்புறம் எதுக்கு வரான்? இந்த ஆம்பளைங்கக்கிட்ட இருக்க பழக்கமே அதானே! இருக்குற வரைக்கும் மதிக்க மாட்டாங்க, விலகி போலான்னு பார்த்தா விடவும் மாட்டாங்க’
இன்னும் அவனையும், ஆண் சமூகத்தையும் புகழ்ந்தபடியே வீட்டை அடைந்தாள் தன்யா.
போர்டிகோ’வில் காரை நிறுத்திவிட்டு தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தாள். அதுவரை மனம் ஆதியையே வசைப்பாடிக்கொண்டிருக்க, ஹாலில் வாசலை பார்த்தபடி அமர்ந்திருந்த அன்னையை கண்டதும் தான் ஆதி நகர்ந்து, வீட்டின் சூழல் நினைவு வந்தது அவளுக்கு.
‘எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு’ என முதல் நாள் அவள் சொல்லி விட்டதன் பின்னே, இன்னமும் வீட்டில் யாரிடமும் அவள் உரையாடியிருக்கவில்லை.
ஏதோ ஒரு வேகத்தில் அன்று சொல்லிவிட்டவளால் இப்போது அன்னையின் கண்களை நேர்க்கொண்டு சந்திக்க முடியாது போக, தலை குனிந்தபடி வேகமாய் மாடியேறப்போனாள் தன்யா.
அவளையே பார்த்துக்கொண்டிருந்த லட்சுமி அதட்டல் குரலில், “இன்னும் பத்து நிமிஷத்துல சாப்பிட கீழ வர!” என்றார். அவரை தவிர்ப்பதற்க்கெனவே, “இல்லம்மா, எனக்கு பசிக்கல” என அவள் சொல்ல,
“நீ வரியா இல்லையான்னு நான் கேட்கல! ‘வர’… அவ்வளோதான்” என்றார்.
அன்னையில் அதட்டலில் அவள் தலை தன்னால் உருண்டது.
மேலே சென்று உடைமாற்றி அவர் கொடுத்த நேரத்திற்க்குள் கீழே வந்தவளை பார்த்தவர், மௌனமாய் உணவு பரிமாறினார்.
எப்போது கேள்விகணைகள் வருமா? எப்படி பதில் சொல்வதோ? என்ற சஞ்சலத்துடனே கடினப்பட்டு உணவை விழுங்கினாள் தன்யா. அவன் சாப்பிடும் வரை அமைதியாய் இருந்தவர், அதன் பின்னே ஆரம்பித்தார்.
ஆனால், அவரிடம் வேறு கேள்வியை அவள் எதிர்ப்பார்த்திருக்க, லட்சுமி கேட்ட கேள்வியில் வாயடைத்து போனாள் தன்யா.
“நீ காலேஜ விட்டு ஏன் டிஸ்கண்டின்யூ பண்ணுன?” அவரிடம் இருந்து இப்போது இந்த கேள்வியை அவள் எதிர்ப்பார்த்திருக்கவில்லை என்பதை அவளது திடுக்கிட்ட முகமே காட்டிக்கொடுத்தது.
அவள், “ம்மா?” என கண்கள் சுருக்க,
“நான் கேட்ட கேள்விக்கு பதில் வேணும்! உங்க அப்பாக்கிட்ட அடம்பிடிச்சு, கஷ்டப்பட்டு படிச்சு என்ட்ரன்ஸ் கிளியர் பண்ணி, மகாராஷ்டிரா காலேஜ்ல ஆசையா சேர்ந்த நீ, திடீர்ன்னு கடைசி வருஷ படிப்பை மட்டும் விட்டுட்டு ஏன் வந்த?”
எனக்கு பதில் வேண்டும்’ என்ற பிடிவாதத்துடன் நின்றிருந்தார் லட்சுமி.
“அது… எனக்கு காலேஜ் பிடிக்கல” என சொன்னவளை துளியும் நம்பாது, “காலேஜ் புடிக்கலையா? இல்ல, காலேஜ்ல இருந்த யாரையாவது பிடிக்கலையா?” என்று கேட்டிருந்தார் லக்ஷ்மி.
அதில் இன்னும் திடுக்கிட்டு போனவள், “எதுக்கும்மா சம்பந்தமே இல்லாம கேட்டுட்டு இருக்கீங்க?” என்றிட,
“சம்பந்தம் இருக்குமோன்னு சந்தேகத்துல தான் கேட்குறேன்… உன் சிநேகிதிங்க யாரு பாஷையும் எனக்கு தெரியாது! அதுவுமில்லாம, இதுவரைக்கும் அவங்கக்கிட்ட விசாரிக்கணும்ன்னு எனக்கு தோணவும் இல்லை! இப்ப நீ உண்மையை சொல்லலன்னா, நான் சுரேனை விட்டு அவங்க கிட்ட பேச சொல்லுவேன்! என்ன சொல்ற நீ?” என்றார் கிடுக்குப்பிடியாய்.
பதறிப்போனவள், “ம்மா… எதுக்குமா இப்போ இவ்வளோ சீரியஸா பேசுறீங்க?” என்றாள்.
“இப்போக்கூட நான் பேசாம இருந்தா சரியிருக்காதே தன்யா! நீ ‘அந்த’ காலேஜ் தான் போகணும்ன்னு சொன்னப்போவும் நான் அமைதியா தான் இருந்தேன், பாதில படிப்பை விட்டுட்டு வந்தப்போவும் அமைதியா தான் இருந்தேன்!
ஆனா, இப்போ எனக்கு உண்மை என்னன்னு தெரியனும்! நீ எங்களை விட்டு தூரமா இருந்தப்போ தான் என்னவோ நடந்துருக்குன்னு என் மனசு சொல்லுது!!” என்றார் சரியாக.
அவருக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறிக்கொண்டு நின்றாள் தன்யா.
[the_ad id=”6605″]
“சொல்லு தன்யா” லட்சுமி உலுக்க, அறைக்குள் இருந்து வெளி வந்தார் ராஜகோபால். பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்திருப்பார் போலும்.
“யாரும் எதுவும் சொல்ல வேணாம்! ரூமுக்கு போக சொல்லு லட்சுமி” என்றார் அவர்.
“இல்லங்க அவ…” என மறுத்து சொல்ல தொடங்கும்முன்னே, “போக சொல்லு….” என அவர் அழுத்தி சொல்ல, அதற்குமேல் லட்சுமி எதுவும் பேசவில்லை. தன்யாவும் ‘விட்டதே போதும்’ என அறைக்கு சென்றுவிட்டாள்.
மகள் சென்றதும், “என்னங்க நீங்க? நீங்களும் அவக்கிட்ட பேசமாட்டீங்க… இப்ப என்னையும் பேச விட மாட்டேங்குறீங்க? கல்யாணம் வேண்டாம்ன்னு விளையாட்டா, ஏதோ இப்போ இருக்க பிள்ளைங்க பேஷன்க்கு சொல்றமாறி தான் இவ்ளோ நாளும் சொல்றான்னு நான் அசட்டையா இருந்தேன்! ஆனா எப்போ அவ ‘எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆச்சு’ன்னு சொன்னாலோ அந்த நிமிஷத்துல இருந்து என் வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு உட்காந்துருக்கேன்…
என்ன நடந்துருக்கும்? எவனாவது இவளை ஏமாத்திட்டு போயிட்டானா? ஒன்னும் புரியல! சுரேனுக்கு கூட ஒன்னும் தெரியலன்னு சொல்றான்… அவனுக்கு தெரியாம இவ எதுவுமே பண்ண மாட்டா! அவன்கிட்டேயே மறைச்சுருக்கான்னா எனக்கு ஒன்னும் சரியாப்படலங்க” லட்சுமி படபடவென பொரிந்தார்.
“ஷ்! லட்சுமி! நீ ரொம்ப பதறாத! என் பொண்ணுக்கிட்ட நான் பேச மாட்டேன் தான்! அதுக்காக அவளை ‘எப்படியோ போ’ ன்னு விடுற அப்பன் நான் இல்லை!” என ராஜகோபால் சொல்ல,
“அதுக்கில்லங்க…” என ஏதோ சொல்ல வந்த லட்சுமியின் உதட்டில் விரல் வைத்து தடுத்தவர், “எனக்கு பசிக்குது, சாப்பாடு எடுத்து வை” என அவர் கெஞ்சும் முகத்தை கண்டு கொஞ்சமும் இளகாது அனுப்பிவைத்தார்.
மேலே தன் அறைக்கு வந்துவிட்ட தன்யாவுக்கு ஆதியின் மேல் ஆத்திரமாய் வந்தது.
‘இவன் ஒருத்தனால எனக்கு எவ்வளோ தொல்லை!’ என நடப்பதற்க்கெல்லாம் அவன் ‘மட்டுமே’ காரணம் என உருவகித்து அவனை வார்த்தைகளால் வஞ்சித்துக்கொண்டிருக்க, சரியாய் ஒன்பது மணிக்கு அழைப்பு வந்தது அவள் அண்ணன் சுரேனிடம் இருந்து.
காணொளி அழைப்பை ஏற்ற தன்யா, திரையில் தெரியும் அண்ணனின் முகம் பார்த்து சிரித்தபடி, “குட் ஈவனிங் சுரேன்” என்றாள்.
அவனோ பதிலுக்கு புன்னகைக்காது, “என்ன நடக்குது தன்யா அங்க?” என எடுத்ததும் காய, இந்தப்பக்கம் வாடிப்போனது அவள் முகம்.
‘இப்போதான் ஒண்ணுல இருந்து தப்பிச்சேன்… அதுக்குள்ள அடுத்ததா?’ என்று ஆயாசமாய் வந்தது அவளுக்கு.
சுரேன், “என்ன நடக்குது அங்க தன்யா?” என்றான் மீண்டுமாய்.
அவள் பதிலின்றி எங்கோ வெறித்துக்கொண்டிருக்க, குரலின் சூட்டை சற்றே குறைத்தவன், “நீ என்ன பைத்தியமா? கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்ல, எந்த காரணமும் கிடைக்கலயா? அதுக்காக இப்படியா ஏற்கனவே ஆகிடுச்சுன்னு சொல்லுவ நீ?” என்றான்.
அவன் தங்கை யாருக்கும் சொல்லாமல் மணம் முடித்திருப்பாள் என்பதை அவனால் ஏற்க முடியவில்லை. தந்தையை சமாளிக்க முடியாமல் அவள் சொல்லிவிட்ட பொய் என்று திண்ணமாய் எண்ணி பேசினான் சுரேந்தர்.
அவள் அதற்க்கும் எதுவும் சொல்லாமல் இருக்க, கனிந்த குரலில், “அம்மாவை கொஞ்சமாவது நினைச்சு பார்த்தியா நீ? அவங்க ரொம்ப அப்சட் ஆகிட்டாங்கடா” என்றான். அதற்குமேல் அவளிடம் அவனால் கோபத்தை இழுத்துப்பிடித்து வைக்க முடியவில்லை.
சுரேனின் கோபம் குறைந்தது தெரிந்ததுமே அவன் முகம் பார்க்க ஆரம்பித்தாள் தன்யா. தங்கையிடம் பேசிட வேண்டும் என்ற வேகத்திலா, அல்லது கோவத்தில் மறந்தானா என்று தெரியவில்லை, அன்று சுரேன் அவனது கூலர்சை போடவில்லை.
அவன் முகத்தை முழுதாய் பார்த்தவள் தன் கவலையை அறவே மறந்தாள்.
‘இவனுக்கு இப்படி ஆகாம இருந்திருந்தா, எவ்வளோ நல்லா இருந்துருக்கும்’ என வருந்தியது அவள் உள்மனம்.
அதை முகமும் அப்படியே வெளிப்படுத்த, தங்கையின் கவனம் தன் மீது குவிவதை உணர்ந்ததுமே, அவசரமாய் அருகே கிடந்த கூலர்சை எடுத்து கண்களில் மாட்டிக்கொண்டான் சுரேன்.
அவன் அப்படி செய்ததும், “ப்ச்… அண்ணா?” என தன்யா சலிக்க, “இப்ப நான் பேச வந்தது உன்னை பத்தி தான்! நோ மோர் அதர் டாக்ஸ்” என கண்டிப்பாய் சொன்னவன்,
“பிரகாஷ் இஸ் அ குட் சாய்ஸ் பார் யூ தன்யா! நீ அவனை கன்சிடர் பண்ணலாம் தப்பில்லை” என்று ஒரு அண்ணனாய் சொன்னதும், கோவம் கொள்வது தன்யாவின் முறையாயிற்று.
“ஐயோ… கல்யாணம் கல்யாணம் கல்யாணம் ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க? என்ன இப்போ எனக்கு அவசரம் கல்யாணத்துக்கு?”
“வீட்ல ஒரு கல்யாணமாவது நடக்கணும்ன்னு ஆசைப்படுறாங்க… அது தப்பா?”
சுரேன் அவ்வாறு சொன்னதும், “அப்போ உனக்கே பொண்ணு தேடலாம்ல? பொண்ணு கிடைக்கிறது என்ன அவளோ கஷ்டமா?” தன்யா முகத்தை திருப்ப,
“என் போட்டோ மட்டும் காட்டி பொண்ணு தேடுங்க! நம்ம சொத்து பணம் காசு எதையும் பாக்காம, என்னை மட்டும் பிடிச்சு எந்த பொண்ணு வந்தாலும் நான் அடுத்த நாளே கல்யாணம் பண்ணிக்குறேன்” என்ற சுரேன் ‘அப்படி யாரும் வரப்போவதில்லை’ என மனதில் எண்ணிக்கொண்டான்.
தன்யா, “ஏன் உனக்கென்ன குறைச்சல்?”
சுரேன், “அது உனக்கே தெரியும்…!!!”
அங்கே அதன்பின் மௌனமே குடி கொண்டது.
அதற்க்கு நேர்மாறாய் கோகுலின் வீட்டில்,
“அவ என்னை ஏ…ன் விட்டுட்டு போனான்னு தெரியுமா?”
“தெரி…..யுமா?”
“தெரியு…..மா….டா?” என போதை ஏறிப்போய் உளறிக்கொண்டிருந்தான் ஆதித்யா.
தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்த கோகுல், ‘மூணு பீரை உள்ள தள்ளிக்கிட்டு, இதே கேள்வியை கேக்குறியே தவிர, பதிலையும் சொல்ல மாட்டேங்குற, என்னை குடிக்கவும் விட மாட்டேங்குற!’ என வயிற்றெரிச்சலில் ஆதி கையில் இருந்த கடைசி பீர் பாட்டிலை ஏக்கமாய் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான்.
மடமடவென பாட்டிலை வாயில் சரித்த ஆதி, கொஞ்சமே கொஞ்சம் சுருதியை மாற்றி, “அவ்…வ ஏன் என்னை விட்டுட்டு போன்…னாஆஆன்னு தெரியுமாடா?” என்று கேட்க,
பொறுமையிழந்த கோகுல், “சொல்லித்தொலையேன்டா! குடிக்கவும் விடாம, கதையும் சொல்லாம ஒரு மணி நேரமா ஒரே கேள்வியை கேட்டுக்கிட்டு இருக்க?” என்று கத்தியே விட,
“அவ ஏ…ன் என்னை விட்டுட்டு போனா தெரி…யுமா?” என மீண்டும் ஆதி ஆரம்பிக்க, “ஐயோ சத்தியமா தெரியாதுடா சாமி! சொல்லித்தொல” என்றான் கோகுல் அலுத்துப்போய்.
ஆதியோ, “எனக்….கேஏஏ…. தெரியலையே, அப்பறம் உனக்கெப்படி தெரி…யும்?” என்று நடிகர் திலகம் போல அபிநயத்துடன் சொல்ல, அருகே கிடந்த காலி பாட்டிலை எடுத்து அடிக்கவே வந்துவிட்டான் கோகுல்.
கோகுல், “செத்துருவடா நீ! என்னை பார்த்தா எப்படி இருக்கு உனக்கு?”
ஆதி, “என் அஞ்சலை மச்சான் அவ!!!”
கோகுல் ஓங்கிய பாட்டிலை கீழே வைத்துவிட்டு, “ஐயோ கொல்றானே!” என நெத்தியில் அடித்துக்கொள்ள,
“என் டேடி பேச்சை கேட்டிருந்தா இப்படி அவ பின்னாடி நான் அலையுற நிலைமை வருமா? ராட்சஸி மச்சான் அவ” என்றான்.
பின் அடுத்த நிமிடமே, “லவ் எவ்ளோ சுகம்ன்னு எனக்கு சொல்லிகுடுத்தவ மச்சான் அவ! மை டார்லிங்!” என கொஞ்ச,
‘அரசியல்வாதியை விட, லவ் பெய்லியர் ஆனவன் ரொம்ப மோசம்டா, இப்படி நிமிஷத்துக்கு நிமிஷம் மாத்தி மாத்தி பேசுறானே!’ என கோகுல் நினைக்கும்போதே,
“அவ என்ன பெரிய இவளாடா? பேச பேச நிக்காம போறா? எனக்கும் அவ வேணாம்டா! இப்போவே நான் அவளை விட செம்ம பிகரா பார்த்து கட்டுறேன் பாரு” என சொன்ன ஆதி, ஒரு மிடறு சோமபானத்தை உள்ளே தள்ளிவிட்டு,
“ஆயிரம் பேர் வந்தாலும் என் தனு டார்லிங் பக்கத்துல கூட வர முடியாதுடா! இது அவ இருக்க இடம்! வேற ஒருத்தி எப்டி வருவா? இடம் இல்லையே?” என்றான் போதையில் வலப்பக்க நெஞ்சை தடவிக்கொண்டு.
“உஸ்ஸ்… இப்போவே கண்ணை கட்டுதே!” நிலை தான் கோகுலுக்கு.
அடுத்து, “என்னை மதிக்காதவ எனக்கு வேணாம்டா!” என ஆவேசமாய் சொன்ன ஆதி, “என் நைனாவை நான் எவளோ திட்டுவேன் தெரியுமா? ஆனா அவர் எப்பவும் என்னை ‘ப்ரேக்அப்’ பண்ணதே இல்லை” என்றவன், உடனே போனை எடுத்து அவன் தந்தைக்கு அழைத்திருந்தான்.
மறுப்பக்கம் அழைப்பு எடுக்கப்பட்டதும், “அலோ நைனா” என ஆதி சொன்னதும் தான் அவன் காதில் போன் இருப்பதை பார்த்த கோகுல் பதட்டம் கொண்டான்.
‘டேய்… பேசாத! உஸ்… உஸ்…’ என சைகை காட்டியதை எல்லாம் ஆதி மதித்தால் தானே!!!
ஜெயதேவ் ஆதியின் குரலை கேட்டு அமைதியாய் இருந்தார். ‘இவன் நமக்கு போன் எல்லாம் பண்ண மாட்டேனே?’ என்ற ஆராய்ச்சி அவருள்.
ஆதியோ அன்பு மிகுதியில், “டேடி, ஐ லவ் யூ டேடி! ஐ லவ் யூ சோ மச்! உம்மா உம்மா!!! மிஸ் யூ டேடி” என சொல்லிக்கொண்டிருக்க, அவசரமாய் பாய்ந்து வந்து போனை அவனிடம் இருந்து பிடுங்கி அழைப்பை துண்டித்தான் கோகுல்.
அங்கே தெய்வானை “என்னங்க ஆச்சு?” என்று கேட்க, போனை டேபிள் மீதி வைத்தவர், “ம்ம்ம்… உன் அருமை மவன், முழு போதையில உளறிக்கிட்டு இருக்கான்!” என்றார் ஜெயதேவ்!
‘மகனை பற்றி அறியாதவரா?’
இங்கேயோ, ‘குடுடா போனை’ என கோகுலிடம் சண்டைக்கு போய்க்கொண்டிருந்தான் ஆதி.
“லூசுத்தனமா பண்ணாதடா! உன் அப்பா சும்மாவே உன்னை திட்டிட்டு இருப்பாரு! இதுல நீயே போய் அவருக்கு கன்டென்ட் குடுக்குற!” என கோகுல் சொல்ல, “உனக்கு என் மேல எவ்வ……..ளோஓஓ அக்கறை…. ஐ லவ் யூ மச்சான்! ஐ லவ் யூ…!!” என்ற ஆதி, அடுத்து, ‘உம்மா….’ என முத்தம் கொடுக்க நெருங்கி வர, தெறித்து போய் அங்கிருந்து பத்தடி நகர்ந்தான் கோகுல்.
“அடச்சீ! லூசே! நீ உன் கதையும் சொல்ல வேணாம்! கண்ட கன்றாவியும் பண்ண வேணாம்!” என எரிச்சலாய் சொன்னவன், “காலைல இருந்து கிஸ்ஸிங் மூட்லயே சுத்துவான் போல” என முனகிக்கொண்டான்.
“இல்ல, இல்ல நான் கதை சொல்றேன்! கதை சொல்றேன்!” என சின்ன பிள்ளையாய் ஆதி கையை கட்டிக்கொண்டு அமர, ‘இன்னைக்கு விட மாட்டான் போலயே’ என புலம்பிய கோகுலும், “சொல்லித்தொல” என அனுமதி கொடுத்தான்.
ஆதி, “ஆமா, எங்க விட்டேன்?”
[the_ad id=”6605″]
கோகுல், “ம்ம்ம்? நீ மேடம்க்கு டியூஷன் எடுக்க ஆரம்பிச்சியே, அங்க விட்ட!!”
ஆதி, “ஹா…..ன்!!! ஆமா! ஆமா! டெய்லி ஒரு சேப்டர்ல டவுட்ன்னு புக்கை தூக்கிட்டு வந்துடுவா மச்சான் என் தனு… நானும் நல்ல பிள்ளையா சொல்லி குடுப்பேன்! இதுவே ஒரு பத்து பதினைஞ்சு நாள் நடந்துச்சு!” என ஆரம்பித்தான் ஆதி.
கொசுவர்த்தி சுருள் ரோல்லிங்…!!!
ஆதியிடம் பாடம் படிக்கவென கையில் கிடைக்கும் புத்தகத்தை தூக்கிக்கொண்டு அவனைத் தேடித்தேடி வர ஆரம்பித்தாள் தன்யா. தோழிகளுக்கு அவள் மேல் சிறு சந்தேகம் வந்தபோதும், அவர்களிடம் விதவிதமான காரணங்கள் சொல்லி ஏமாற்றிக்கொண்டிருந்தாள் அவள்.
உடன் இருப்பவர்களிடம் பொய் உரைத்துவிட்டு, இவனை ஏதோ ஒரு சாக்கிட்டு தினமும் தேடி வந்து பார்க்குமளவு அவனிடம் என்ன இருக்கிறது? அவனுக்கும் தனக்கும் என்ன உறவு? என நல்லவிதமாய் தன்யாவுக்கு யோசனை வரும்போதெல்லாம்,
‘இன்னைக்கு நம்ம அவனை பாக்க போகவே கூடாது’ என திடமாய் முடிவெடுப்பாள்.
ஆனால், அந்த திடமெல்லாம் மாலை நெருங்கும் வரை தான்! ஐந்து மணி தாண்டியதுமே, கால்கள் தானாய் அவன் இருக்கும் இடத்திற்கு சென்றுவிடும்! அது என்ன விந்தை என அவளே அறியவில்லை.
அன்று ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு துள்ளிகுதித்தபடி தன்யா புட்பால் கிரவுண்டை நோக்கி ஓட, எப்போதும் ஆதி அமர்ந்திருக்கும் கல்பெஞ்சில் அவன் அருகே, அவள் இடத்தில் இருந்தால் வேறொருத்தி!!!
துள்ளல் நடை அப்படியே தேங்கிப்போனது தன்யாவுக்கு. அவர்களை பார்த்தபடியே வாடிப்போன வதனத்துடன் அருகே சென்றாள். அவர்கள் பேசுவது கேட்கும் தொலைவு வரை சென்றதும், ‘மேற்கொண்டு செல்லலாமா? வேண்டாமா?’ என இவள் பட்டிமன்றம் நடத்த, ஆதி சட்டென திரும்பினான் இவளை நோக்கி.
தன்யாவை கண்டு பளிசென்ற புன்னகையை அவன் சிந்த, ஒரு நொடியில் பழைய துள்ளல் வந்து ஒட்டிக்கொண்டது அவளிடம். வேகமாய் ஓடி சென்றாள் ஆதியின் அருகே.
அங்கே அமர்ந்திருந்த பெண்ணவள், தன்யாவை முகம் சுருக்கி, ‘யாரிது தொல்லை?’ என்பதை போல பார்க்க, அதை தன்யாவும் உணர்ந்துக்கொண்டாள். இருப்பினும் அங்கிருந்து நகரவில்லை.
அங்கிருந்தவளும் தமிழ் தான் போலும்! ஆதியிடம், “கொஞ்சம் தனியா பேசணும்” என்றாள் தன்யாவை ஒரு பார்வை பார்த்தபடி.
ஆதி சிரித்த முகம் மாறாது, “இவளோ நேரம் பேசிட்டோமே! அது போதும்ன்னு நினைக்குறேன்! இன்னும் பேசணும்ன்னா நாளைக்கு வீட்டுக்கு வா! நான் ப்ரீ தான்!” என்றான்.
தன்யாவோ, ‘என்ன வீட்டுக்கு எல்லாம் கூப்புடுறான்?’ என ஆதியை அதிர்ந்த பார்வை பார்க்க, அவன் சொன்னதை கேட்டு சிரிக்க வேண்டியவளோ, முகம் இறுக, “பை ஆதி” என சொல்லிவிட்டு எழுந்துக்கொண்டாள்.
தன் ஹீல்ஸ் செருப்பின் ஓசை கேட்குமளவு அவள் அங்கிருந்து செல்ல, அவள் விட்டு சென்ற இடத்தில் அமர்ந்த தன்யா, செல்பவளை பார்த்தபடியே, “யாரு சீனியர் அது?” என்றாள்.
ஆதி, “இதான் இன்னைக்கு உன் டவுட்டா?” என நக்கலாய் கேட்க, அதன் பின்னே பாடத்தை மட்டுமே கையில் எடுத்தாள் அவள்.
சிறிது நேரம் பாடம் செல்ல, ஆதி நினைவு வந்தவன் போல, “ஹே சொல்ல மறந்துட்டேன்! நெக்ஸ்ட் வீக்ல இருந்து நான் இங்க வர மாட்டேன்! நீ பாட்டுக்கு புக்கை தூக்கிட்டு வந்து வெயிட் பண்ணாத சரியா?” என்றான்.
“ஏன் சீனியர்?”
“மியூசிக் பியஸ்டா வருதுல இன்னும் டென் டேஸ்ல? அதுக்கு நம்ம காலேஜ் டீமுக்கு ட்ரெயினிங் குடுக்கணும்… சோ, லஞ்ச் ப்ரேக் அண்ட் எவனிங் ஆடிட்டோரியம்ல தான் இருப்பேன்” என்றான் ஆதி.
அவன் சொன்னதை ‘ம்ம்ம்’ என மௌனமாய் கிரகித்துக்கொண்டாள் தன்யா.
பைக் கீயை விரலில் சுற்றிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் ஆதி. மணி ஒன்பதரை தாண்டி சென்றுக்கொண்டிருந்தது.
உள்ளே நுழைந்தவனை கண்டதுமே, “இதோ வந்துட்டான் பாரு, இந்தியா பிரதமரு!” என ஹாலில் காத்திருந்த ஜெயதேவ் தன் மனைவியிடம் கோவம் கலந்த நக்கலுடன் சொல்ல,
ஆதியும் பதிலுக்கு, “கண்டுபிடிச்சுட்டாரு, அயல்நாட்டு அதிபரு!” என்றான். அவர் அங்கே இருப்பதையே பொருட்படுத்தாது தனது அறைக்கு போக அவன் மாடியேற,
“நான் பேசணும், அவனை நிக்க சொல்லு தெய்வா!” என்றார் ஜெயதேவ்.
ஆதி தெய்வாவிடம், “அவர் வாய் என்ன என் காலுலையா இருக்கு? நான் நின்னா தான் பேச முடியுமோ?” என்றான் படுநக்கலாய்.
ஜெயதேவ் கர்ஜிக்கும்முன், மகனை நெருங்கிய தெய்வா, “இன்னைக்கு உக்கிரம் கொஞ்சம் அதிகமா இருக்கு! பார்த்து பேசு” என்றார் மெல்லிய குரலில்.
“வெயில்ல வெளில போவாதன்னா கேட்டா தானே?” ஆதியும் மெல்லிய குரலில் கவுண்டர் கொடுக்க, தெய்வா அதற்கு கிளுக்கி சிரிக்க, ஜெயதேவின் ‘பிபி’ எகிறும் முன், கையில் மடிக்கணினியுடன் வந்தாள் மதுதேவா.
“ரெடி!” என அவள் சொன்னதும் தான் ஆதி பார்த்தான், வீடியோ காலில் கிருஷ்ணா இருப்பதை!!!
‘அய்யய்யய்ய!!! ஆ’னா வூ’ன்னா வீடியோ கால்ல போட்டுடுறானுங்கப்பா! முதல்ல இந்த வீட்டுக்கு நெட் கனக்ஷனை கட் பண்ணணும்’ என அவன் மனதில் நினைக்க,
தொடர்ப்பில் இருந்த கிருஷ்ணாவோ, ‘வேலைக்கு போனும், மேனேஜர் வைவான், சீக்கிரம் முடிங்கப்பா’ என மனதுக்குள்ளே கெஞ்சிக்கொண்டிருந்தான்.
[the_ad id=”6605″]
ஜெயதேவ், “எப்போ கல்யாணத்தை வச்சுக்கலாம்ன்னு கேட்டு சொல்லு தெய்வா” என்றார் எடுத்ததும்.
தெய்வா ஆதியின் முகம் பார்க்க, அவனோ “யார் கல்யாணத்தை?” என்றான் புதியதாய் விஷயம் கேட்பவன் போல, இடுப்பில் கைவைத்தபடி முறைத்துக்கொண்டு.
“எல்லாம் அவன் கல்யாணத்தை தான்!!!” என ஜெயதேவ் சொன்னதும், “என்ன பார்த்தா எப்படி இருக்கு உங்களுக்கெல்லாம்?” என எகிற ஆரம்பித்தான் ஆதி.
மதுதேவா சிப்ஸை கொறித்துக்கொண்டே சின்சியராய் வேடிக்கைப்பார்க்க, கிருஷ்ணாவும் ‘சீக்கிரம் சீக்கிரம்’ என மௌனமாய் பரபரத்துக்கொண்டிருந்தான்.
பின்னே, வாக்குவாதம் தொடங்கி, முற்றினால் தானே அவனுக்கு ‘டாட்டா’ சொல்லுவர்!
ஜெயதேவ் நேரிடையாகவே, “இங்க பாரு, நம்ம இந்த ஊருக்கு வந்து பல வருஷம் ஆகிப்போச்சு! தமிழ் குடும்பத்தை பாக்குறதே அரிதா இருக்குற இடத்துல ஒரு தமிழ் குடும்பம், அதுவும் நம்ம அந்தஸ்துக்கு ஏத்த குடும்பம், அவங்க வீட்டு ரெண்டு பொண்ணுங்களையும் நம்ம வீட்டுக்கு தான் அனுப்பி வைப்பேன்னு வம்படியா கேட்கும்போது எப்படிடா மறுக்க முடியும்?” என்றார்.
“இதென்னப்பா லூசுத்தனமா இருக்கு? நம்ம என்ன காய்கறி கடையா வச்சுருக்கோம்? நாட்டு தக்காளியா, பெங்களூரு தக்காளியான்னு சரிப்பார்த்து நாலு கிலோ வாங்குறதுக்கு?” என அவன் கேட்க,
ஜெயதேவ், “அவங்க மூத்த பொண்ணு திவ்யாவை கிருஷ்ணாவுக்கு பிடிச்சுப்போச்சு!” என்றதும், பட்டென திரும்பி கிருஷ்ணாவை முறைத்தான் ஆதி.
கிருஷ்ணா அவசரமாய் எங்கோ வேடிக்கைப்பார்க்க, “அவனை எதுக்கு முறைக்குற? அவன் என் பேச்சு கேட்டு நடக்குறப்புள்ள! அவனும் உன்னை மாறியே இருப்பான்னு நினைக்காத!” என்றார் ஜெயதேவ்.
ஆதியின் முறைப்பு இன்னும் கூடியது. கிருஷ்ணா, ‘ஐயோ! முறைக்குறானே!’ என பதட்டமானான்.
ஆதி, “அவனுக்கு பிடிச்சுருக்குன்னா அவனுக்கு மட்டும் கல்யாணம் பண்ணுங்க! எனக்கு மூத்தவன் தானே அவன்? இப்ப எனக்கு எதுக்கு கல்யாணம்?”
“உனக்கு கல்யாணம் பண்ணணும்ன்னு எனக்கும் ஒன்னும் வேண்டுதல் இல்லை! ஆனா பாரு, சம்பந்தி வீட்ல ரெண்டு பொண்ணுக்கும் ஒன்னா கல்யாணம் செஞ்சு பார்க்கனும்ன்னு பிரியப்படுறாங்க! அதான் நானும் ஒரேயிதா முடிச்சுடலாம்ன்னு பாக்குறேன்” என்றார் ஜெயதேவ்.
“வேலை பார்த்துட்டு இருந்தவனை படிக்க போன்னு அனுப்புனீங்க! படிக்க போய் முழுசா ஒரு மாசம் கூட ஆகலை, அதுக்குள்ள கல்யாணம் பண்ணுன்னு சொல்றீங்க! கொஞ்சமாச்சும் சுயநினைவோட தான் பேசுறீங்களா நீங்க? இல்ல மண்டை எதுவும் குழம்பிடுச்சா?” என ஆதி கேட்க, ஜெயதேவுக்கு புசுபுசுவென கோவம் வந்தது.
“உன் நல்லதுக்கு பார்த்து பார்த்து பண்ற இந்த அப்பனை பார்த்தா கிறுக்கன் மாறி தான்டா தெரியும் உனக்கு!” என அவர் ஆவேசப்பட,
“அந்த வார்த்தையை நானே சொல்லக்கூடாதுன்னு பார்த்தேன்! தேங்க்ஸ்” என்ற ஆதி, அதற்க்கு மேல் அங்கே நிற்காமல் தன் அறை நோக்கி போக,
“முடிவா என்னடா சொல்ற நீ?” என கத்தினார் ஜெயதேவ்.
திரும்பிக்கூட பார்க்காத ஆதி, “என்னால கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்றேன்! அதனால அந்த பொண்ணை நான் இருக்குற இடத்துக்கு அனுப்பி என் கூட பழக வைக்குற முயற்சியை வாபஸ் வாங்கிக்கோங்க!” என்றான்.
“நீ கல்யாணம் செய்யுற அவ்ளோதான்!” என்றார் ஜெயதேவும் விடாப்பிடியாய்.
“ரொம்ப கட்டாயப்படுத்துனா நான் ‘குடும்பக்கட்டுப்பாடு’ ஆப்பரேஷன் பண்ணிக்குவேன்” என்றவன் போய்விட, அவனது புதுவித மிரட்டலில் ஆடி போய் நின்றுவிட்டார் அவர்.
அருகே நின்ற தெய்வாவிடம், “என்னடி சொல்லிட்டு போறான் இவன்?” என அவர் ஆதங்கமாய் கேட்க, அவர் ஆதங்கத்தை ஆத்திரமாய் மாற்றும் படி,
“டேய், நீ சொன்னது சரியா கேட்கலையாம்டா!!! திரும்ப சொல்லு” என்றார் தெய்வானை.
மதுதேவா, வாயை மூடி சிரித்துக்கொண்டிருந்தாள். கிருஷ்ணா கிடைத்த கேப்பில் தொடர்பை துண்டித்துவிட்டு வேலைக்கு ஓடியே விட்டான்.
ஆதி பதிலே சொல்லாது இருக்க, “கேட்க கேட்க பதில் சொல்றானா பாருங்களேன்!” என அவரிடமே மகனை பற்றி புகார் கொண்டு வந்த தெய்வாவை ஜெயதேவ் முறைத்த முறைப்பில்,
“அடியே மது, அந்த சிப்ஸ் பாக்கெட் எங்க?” என நைசாக நழுவிவிட்டார் தெய்வா.
-கலாட்டா தொடரும்…